எல்லாமே பிடிக்கும். இன்னும் சில.
1. ரொம்பப் பிடித்தது டைட்டில். நெகடிவ் ஷேட்ஸ் மறைந்து, மறைந்து அழகாய்த் தெரியும் தலைவரின் உருவம். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் நடிகர் திலகத்தின் ஆதிக்கம் எப்படி இருந்தது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாடல்.
2. சுருள் சண்டை முடிந்ததும் "சேர்வைடா... சேர்வை" என்றபடி பின்பக்கம் முடிந்துள்ள வேட்டியை அவிழ்த்து விடும் வேகம்.
3. "ஊருக்கெல்லாம் தெரியும்படியா உனக்கு தாலி கட்டினேன். இப்ப யாருக்கும் தெரியாமே நானே உனக்கு புடவை கட்டி விடறேன்" என்ற தயக்க வழிசல்.
4. "விவாகரத்து வெங்கடசாமி! என் விவகாரத்தில தலையிடாத சாமி" மிரட்டல்.
5. எதுவும் முடியாமல் போன பட்சத்தில் தலையில் துண்டை முக்காடாகப் போட்டு தெருவில் 'தேமே' என்று நடந்து வருதல். அதை விட டாப் 'அய்யா வந்துட்டாரு' என்று வேலையாட்கள் கூக்குரலிட, அங்கிருக்கும் முக்காலியை காலால் எட்டிப் பிரட்டி உதைத்து விட்டு (அந்த நாற்காலி கூட அவர் செயலுக்கு எப்படி கட்டுப் படுகிறது!) "எல்லாம் வெளியே போங்க" என்று வெறுப்பாக கூறுதல். வெறுப்பாக கூறினாலும் கம்பீரம் எள்ளளவும் குறையாது. (மூக்கையன் பாதியாகவும் முகேஷ் பாதியாகவும் அட்டகாசமாக இருப்பார்)
6. அந்த சோக "என்னடி ராக்கம்மா". பட்டை உரித்து விடுவார். உட்கார்ந்தபடி தலையை சாய்வாகச் சாய்த்து கொடுக்கும் அற்புத போஸ். அடுத்து கதவை திறந்தபடி நிற்கும் போஸ், "என் பட்டம்... என் திட்டம்... என் சட்டம்" வரிகளின் போது குளோஸ்-அப்பில் லேசான தலையாட்டல்கள். கண்களை ஒரு தடவை இமைத்தபடி பண்ணும் அமர்க்களம். "காற்றாகப் பறந்ததடி"... வரியை இரண்டாம் முறை உச்சரிக்கையில் இடது கையை தலைக்கு மேலே வைத்தவாறு உட்கார்ந்து தரும் இணையே இல்லாத போஸ். பாடலின் முடிவில் படிக்கட்டில் அமர்ந்து பழையனவற்றை நினைத்து வெறித்துப் பார்த்தபடி தரும் போஸ். இந்தப் பாடல் முழுதும் போஸ்களிலேயே பின்னி எடுப்பார். (டிஎம்.எஸ் பண்ணும் அமர்க்களமும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியே அச்சு அசல் தலைவர் குரல்).
http://i1087.photobucket.com/albums/..._003554788.jpg
7. பஞ்சாயத்துக் கதையை அப்பத்தாளிடம் சொல்லும் ஒப்புயர்வற்ற சீன். ("நான் வந்திருக்கேனே... உயிரோட") அப்படியே திரும்பி "கேட்டானே ஒரு கேள்வி... இதுவரைக்கும் யாருமே என்னைக் கேட்காத கேள்வியைக் கேட்டான் அப்பத்தா!" (இந்த இடத்தில் அந்தக் கண்களைப் பார்க்கணுமே!) அவமானம் பிடுங்கித் தின்ன ஆத்திரமும், கோபமும் முகத்தில் நர்த்தனமாட
"கேட்டான் அப்பத்தா! பொஞ்சாதியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா பஞ்சாயத்து பண்ண வந்திருக்கேன்னு கேட்டானே ஒரு கேள்வி என்னை?" குரல் தழுதழுக்க, தொண்டை ஆத்திரத்தில் அடைக்க, கைவிரல்களை விரித்து வைத்துக் குமுறுவர் பாருங்கள்.
இந்த ஒரு காட்சி போதும்யா.
எவருக்கும் விளங்க வைக்க வேண்டிய அவசியமில்லை.