http://s4.postimg.org/ssaaqaj7h/bbb.jpg
Printable View
" நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.
நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.
எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.
அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.
அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார்.
- புலவர் புலமைப்பித்தன் ( நன்றி : நக்கீரன் )
அப்புறம் தலைவரே!
தினமலர் வாரமலர் செய்திகள்:
எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!
டிச., 24, எம்ஜிஆர்., நினைவு நாள்
http://i60.tinypic.com/2n9aja0.jpg
எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!
சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று...
ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள்.
'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது.
இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.
உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.
அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.
எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.
பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!
எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.
— எஸ்.ஆர்.சாந்தி
சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு "
ஞாயிறு மாலை காட்சி HOUSEFULL . ஆகியது
http://i61.tinypic.com/2ptdsbd.jpg