-
‘ராமன் தேடிய சீதை’-(1972)
‘மாட்டுக்கார வேலன்’ வெள்ளி விழா சித்திரத்தை தயாரித்த மதுரை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம், அந்த படத்தின் வெற்றி ஜோடியான எம்ஜிஆர், ஜெயலலிதாவை வைத்து தயாரித்த படம் ‘ராமன் தேடிய சீதை’. மிகப் பெரும் பணக்காரர் ராமு (எம்ஜிஆர்) தனக்கு மனைவியாக வரப் போகும் பெண் ஆறு சிறந்த குணங்களை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தேடுகிறார்.
.
சோப்பு, பவுடர் போன்ற பொருட்களை வீடு வீடாக சென்று விற்கும் அழகான பெண்ணான சீதாவை (ஜெயலலிதா) பார்த்த ராமு, அவரது அடக்கம் மற்றும் நல்ல குணங்களை அறிந்து அவரையே மணக்க தீர்மானிக்கிறார். ஆனால் இடையில் விதி விளையாட அந்த சீதா காணாமல் போகிறார். அவரை தேடும் ராமுவை ஏமாற்ற அவரது உறவினர்கள்அதே தோற்றத்தில் பாம்பாட்டி குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை நடிக்க வைக்க அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை ராமு சமாளித்து எப்படி சீதாவை கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.
எம்ஜிஆருக்கு அந்த படத்தில் மாறுதலான கதாபாத்திரம் வாய்த்தது. ஏதாவது ஒரு பிரச்சனையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சிரிஸாக இல்லாமல் உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அழகிய தோற்றத்தில் உற்சாகமாகவும், உல்லாசமாகவும் நடித்திருந்த எம்ஜிஆரின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சீதாவாகவும், பாம்பாட்டி பெண்ணாகவும் நடிக்கும் ஜெயலலிதா விதவிதமான வண்ண வண்ண உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் அவர் பாம்பாட்டி நடனம் முதல் கிளப் டான்ஸ் வரை பல நடனங்களை ஆடினார். இந்தப் படத்தில் ஜெயலலிதா பயன் படுத்திய ஆடை அலங்காரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
எம்ஜிஆர்-ஜெயலலிதாவுடன், நம்பியார், மனோகர், அசோகன், வி.கே.ராமசாமி, ராமதாஸ், கண்ணன், வி.எஸ்.ராகவன், வி.கோபால கிருஷ்ணன், மனோரமா உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். வாலி உள்ளிட்ட கவிஞர்களின் அருமையான பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சிறப்பான இசை அமைத்திருந்தார். எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவதற்கு சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள் அருமையாக அமைந்திருந்தன.
‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ’
‘நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியில் வா சீதா சீதா’
‘என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன்
அன்பால் உன்னை’
‘பாடாதே பாடாதே நிப்பாட்டு,
உன் பாட்டுக்கு
பாடுவேன் எதிர்பாட்டு’
ஆகியவை அதில் ஒரு சில பாடல்களாகும்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ப.நீலகண்டன் படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமான தயாரிப்பான இந்த படம், அதன் தயாரிப்பாளர்களின் முந்தைய படமான ‘மாட்டுக்கார வேலன்’ அளவுக்கு வெற்றிகரமாக ஓட வில்லை என்றாலும், தயாரிப்பாளர் களின் கையை கடிக்காமல் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
courtesy - malaisudar
-
"இதய வீணை' - 1972
பிரபல எழுத்தாளர் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் இணைந்து உதயம் புரொடக்ஷன்ஸ் என்னும் பட நிறுவனத்தை நிறுவி, "இதய வீணை' என்னும் படத்தை தயாரித்தார்கள். படத்தின் கதாநாயகனாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்தார். மணியன் ஆனந்த விகடனில் எழுதி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற "இதய வீணை' எனும் நாவலை எம்ஜிஆருக்காக சற்றே மாற்றம் செய்து அதே பெயரில் இந்த படத்தை தயாரித்தனர்.
.
முதுபெரும் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்கினார்கள். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தந்தையால் வீட்டை விட்டு சிறு வயதில் துரத்தப்பட்ட சிறுவன் காஷ்மீர் சென்று வழிகாட்டியாக பணிபுரிகிறான்.
வாலிபனான பிறகு தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற மகளிர் கல்லூரி மாணவிகள், அந்த இளைஞனை கண்டு அவன் தமிழன் என தெரிந்து நட்பு பாராட்டு கின்றனர். அதில் ஒருத்தி இளைஞனை விரும்புகிறாள். அவளது தோழி அவனது சகோதரி என்பது பின்னர் தெரிகிறது.
குடும்ப நிலைமையை அறிந்த இளைஞன் மீண்டும் ஊருக்கு திரும்பி, குடும்பத்திற்கு எதிரான சதிகாரர்களை முறியடிப்பதுதான் கதை. காஷ்மீர் வழிகாட்டியாக (கைடு) எம்ஜிஆர் தோன்றும் துவக்கக் காட்சி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
எம்ஜிஆருக்கு ஜோடியாக மஞ்சுளா, தங்கையாக லட்சுமி, அவரது கணவராக சிவக்குமார், எம்ஜிஆரின் தந்தையாக எம்ஜி சக்கரபாணி மற்றும் தேங்காய் சீனிவாசன், நம்பியார், மனோகர், ஐசரிவேலன் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
காஷ்மீரில் எழிலையெல்லாம் திரட்டி இதய வீணையை இனிக்கும் வீணையாக படமாக்கி இருந்தனர். காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர், காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர் என எம்ஜிஆர் ஆடிப்பாடும் காட்சி கண்ணுக்கும், காதுக்கும் இனிமையாக படமாக்கப்பட்டிருந்தது. அதே போல எம்ஜிஆரும், மஞ்சுளாவும் பாடும் டுயட் பாடல்களான
"பொன்னந்தி மாலை பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
அன்னத்தின் தோகை என்ன மேனியோ
அள்ளிக் கொள் என்று சொல்லும் பாவையோ
கொஞ்சி சிரித்தாள் என் நெஞ்சை பறித்தாள்'
"ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தாளென்ன இதழ் விரித்தாளென்ன'
என்ற அழகு தமிழ் பாடல்களும் காஷ்மீரின் இயற்கை காட்சிகளை ரசிகர்களுக்கு அள்ளி வழங்கும் பாடலாக அமைந்தது.
மேலும் "திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக' என்ற பாடலும் சூப்பர்ஹிட்டானது.
இந்த படத்தை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி துவக்கி வைத்தார். ஆனால் படம் வெளிவரும் போது எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டி ருந்தார். அவர் அதிமுகவை ஆரம்பித்த பின் வெளிவந்த முதல் படம் என்பதால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை இந்த படம் பெற்றது. எனினும் படத்தில் அரசியல் அதிகம் இருக்காது. சில வசனங்களில் அது வெளிப்பட்டது.
நீங்களாக வெளியேற்றும் முன்பு நானாக சென்று விடுவதுதான் நல்லது என்று எம்ஜிஆர் கூறுவது போன்ற சில மணியனின் உரையாடல்கள் அரசியலை பிரதிபலித்தது. எனினும் இந்த படத்தில் எம்ஜிஆர் பாடும் "ஒரு வாலும் இல்ல, நாலு காலும் இல்ல சில மிருகம் இருக்குது ஊருக்குள்ள' என்ற பாடலில் அப்போதைய அரசியல் நிலை வெளிப்பட்டது.
கவிஞர் வாலியின் பாடல்களுக்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் அருமையாக இசையமைத்திருந்தனர். பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்ததால் அனைவரின் பாராட்டையும் அவர்கள் பெற தவறவில்லை.
courtesy - malaisudar
-
"நான் ஏன் பிறந்தேன்' (1972)
"நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.
அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.
மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.
படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.
கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'
"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'
"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'
"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'
"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'
"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'
இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,
"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.
எனினும் திருமணம் ஆகாமல் காதலியுடன் டுயட் பாடும் காட்சிகளிலேயே நடித்து வந்த எம்ஜிஆர் இந்த படத்தில் வித்தியாச மான வேடம் படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.
courtesy - malaisudar
-
"நல்ல நேரம்' (1972)
தமிழில் பல வெற்றிப் படங்களை தயாரித்த சாண்டோ சின்னப்பா தேவர், இந்தியில் திரைப்படம் தயாரிக்க விரும்பினார். தெற்கிலிருந்து வடக்கே சென்று பல வெற்றிப் படங்களை ஜெமினி, ஏ.வி.எம்.போன்ற நிறுவனங்கள் தயாரித்தது போல, தாமும் இந்திப் படத்தை தயாரிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாக அவருக்கு இருந்து வந்தது.பா.காசி விஸ்வநாதன்
.
இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை ஒரு தோல்வி படத்தின் கதையாகும். 1967 ஆம் ஆண்டு மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக வைத்து "தெய்வச் செயல்' என்ற படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது.
அந்தப் படத்தின் கதையை தான் தயாரிக்கவிருந்த இந்திப் படத்திற்கு அவர் தேர்வு செய்தார். அந்த கதையில் சில மாற்றங்களை செய்து "ஹாத்தி மேரா சாத்தி' என்ற படத்தை இந்தியில் தேவர் தயாரித்தார். அப்போதைய இந்தி சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னா இந்த படத்தில் நடித்தார். படம் வெள்ளி விழா கண்டு சக்கைப் போடு போட்டது. படத்தில் நடித்த யானைகளுக்கு பெரும் வரவேற்பு கிட்டியது.
"ஹாத்தி மேரா சாத்தி' பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். நீண்ட காலமாக தேவர் பிலிம்ஸ் படங்களில் நடிக்காமல் இருந்த எம்ஜிஆரை இந்தப் படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு "நல்ல நேரம்' என பெயர் சூட்டப்பட்டது.
எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை தயாரித்த தேவரின், தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் அவர் நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் ஒரு சிறுத்தையிட மிருந்து யானை ஒன்று தன்னை காப்பாற்றியதை அடுத்து, யானைகள் மேல் பெரும் பாசம் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் பெரியவன் ஆனதும் யானைகள்பால் அன்பு செலுத்துகிறான்.
ஒரு கட்டத்தில் அவனது செல்வமெல்லாம் பறிபோய் விட அந்த யானைகளை கொண்டே வித்தைகள் செய்து, இழந்த செல்வத்தை மீட்கிறான். அவனது மனைவிக்கு யானைகளை பிடிக்காமல் போய் விட அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டதாக கதை அமைந்திருந்தது.
கடைசியில் குழந்தையை காப்பாற்ற யானை தன் உயிரை தியாகம் செய்கிறது. அதன் பின்னர்தான் யானையின் தியாகத்தை அந்த பெண் உணர்கிறாள். யானையை வளர்க்கும் செல்வந்தராக எம்ஜிஆர் நடித்தார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். அசோகன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சச்சு, மேஜர் சுந்தர்ராஜன், ஜஸ்டின், கண்ணன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் நான்கு யானைகளும் நடித்திருந்தன.
யானைகளின் வித்தைகள் மற்றும் எம்ஜிஆர் செய்யும் சாகசங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தன.
ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும், ஆடி, பாடி நடக்கணும், அன்பை நாளும் விதைக்கணும்.
டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்
டக்டக்டக் இது உறவுக்கு தாளம்
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என் மேனி என்னாகுமோ
ஆகட்டும்டா தம்பி ராஜா நடராஜா; மெதுவா தள்ளையா, பதமா செல்லையா என்ற பாடலும் திரையிசை திலகம் கே.வி.மகா தேவனின் இனிய இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சின்னப்பா தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் சென்னையில் நான்கு திரையரங்குகள் உட்பட பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
courtesy - malaisudar
-
-
-
-
-
-