Quote:
. நடிகர்-நடிகை தேர்வில் மோசடி
சிறந்த நடிகை விருதை திருப்பி அனுப்பினார் நடிகை ராதிகா
சென்னை, நவ.19-
சிறந்த டி.வி. நடிகர்-நடிகைகள் தேர்வில் மோசடி நடந்து இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட விருதை நடிகை ராதிகா திருப்பி அனுப்பினார்.
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சீரியலில் சிறந்த நடிகர்- நடிகை மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அரசி சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை ராதிகாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கப்பட்ட பின்னணியில் இருந்த அணுகுமுறை தனக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்று கருதிய ராதிகா, அந்த விருதை சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கே திருப்பி அனுப்பி விட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனதை பாதித்த விருது
கடந்த 14-ந் தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு (பெஸ்ட்) சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், கதை, வசனகர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன என்பதும் தெரியவில்லை.
தகுதியும் திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து, அதை படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.
திருப்பி அனுப்புகிறேன்
எனவே, தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும், இதேபோல் திறமை வாய்ந்த பல பேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி இடம் தரவில்லை. இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடம் திருப்பி ஒப்படைக்கிறேன்.
மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்ளிட்ட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ராதிகா கூறியிருக்கிறார்.
Quote:
[html:46fbca4972]<div align="center"><img src="
http://www.dinamani.com/Images/article/2009/11/18/19tv.jpg"></div>[/html:46fbca4972]
சிறந்த சின்னத்திரை நடிகையாக ராதிகா தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்புடன் விஷன் புரோ மற்றும் காஸ்மிக் டவுன் நிறுவனங்கள் இணைந்து 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை கடந்த சனிக்கிழமை வழங்கியது.
இதில் சிறந்த நடிகைக்கான விருது "அரசி' தொடருக்காக ராதிகாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது "திருமதி செல்வம்' தொடருக்காக சஞ்சய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக குமரன் தேர்வு செய்யப்பட்டார். "திருமதி செல்வம்' தொடருக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை "கோலங்கள்' திருச்செல்வம் பெற்றார். இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த வில்லி நடிகைக்கான விருது நடிகை வடிவுக்கரசிக்கும், வசனகர்த்தாவுக்கான விருது பாஸ்கர் சக்திக்கும், நகைச்சுவை நடிகருக்கான விருது ஜெயமணிக்கும், ஒளிப்பதிவாளருக்கான விருது வசீகரனுக்கும் வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் நடிகை எஸ்.என்.வரலட்சுமிக்கு வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர்கள் ஜீவா, பாக்யராஜ், டெல்லி கணேஷ், நடிகைகள் குஷ்பு, தேவயானி, சங்கீதா, அபிதா, இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள