நடிகர் திலகத்தின் நடையழகு (என்னைக் கவர்ந்தவை)
*
2. உருவான செந்தமிழில் மூன்றானவன்!
*
• அவள் கொஞ்சம் அழகி..
*
என்ன..பொன்னிறமாய் எண்ணெயில் பொரித்தெடுக்கப் பட்டு வென்னீரில் போட்டு பின் ரசத்தில் போடப்பட்ட மாதிரி இல்லாமல், பொரித்தவுடன் நேரடியாய் ரசத்தில் போட்டு நன்கு ஊறிய ரச வடை போல கொஞ்சம் பூசினாற்போன்ற உடல் வாகு..
பின் என்ன..படிப்பு இருக்கிறது..அழகு இருக்கிறது..ஓ யெஸ்..காதலும் இருக்கிறது..ஆனால் அந்தக் காதல் தோல்வி அடைகிறது..இல்லை அடைந்துவிட்டதாக நினைத்து மகாதுயர் மனதில் கொண்டு ஒரு கிணற்றைப் பார்க்கிறாள்..குதித்து விடலாமா என யோசிக்கிறாள்..கிணறும் நடுங்குகிறது! ம்ம்..கொஞ்சம் ஏறப் பார்க்கையில் தடுக்கிறது ஒரு கரம்..திரும்பினால்….
• *
ஆஹா..என்ன தேஜஸ் மிக்க உருவம்.. கண்களில் ஆழ்ந்த கனவு..உடை மிகப் பணக்காரத் தனமாய் இருக்கிறது..ஆள் இளமையாகவும் இருக்கிறார்..
*
கொஞ்சம் யோசித்து வார்த்தைகளை விடுகிறது அந்த உருவம்..நமது உயிரை நாமே எடுத்துக் கொள்ளக் கூடாது..வா..என்னுடன்..திரும்பி வெகு வெகுமிடுக்காய் அந்த உருவம் நடக்கும் நடை..வாவ்
*
ஒரு அரண்மனை பங்களாவுக்குள் கூட்டிச் செல்கிறார்..அங்கிருக்கும் புகைப்படத்தில் ஒரு அழகிய பெண் சித்திரம். இது என் மனைவி எனச் சொல்கையிலே அப்பா என ஓடி வருகிறது சிறு பூப்பந்து..ஒரு சிறுமி.. இது என் மகள் என அறிமுகப் படுத்துகிறார்..காலை வரை இரு..உன் வீட்டில் சேர்க்கிறேன் என வெகு நயமாய்ச் சொல்லி தங்க வைக்கிறார்.. ஆனால் இடையில் நிகழ்ந்த நிகழ்வுகளால் அவள் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுகிறாள்..ஓஹ்.. என நளினமாக வருத்தப் படுகிறது அந்த அபூர்வ உருவம்..
*
தெரிந்திருக்குமே.. நவராத்திரியில் ந.தி யின் அற்புத ராஜ் வேடம்.. அந்தப் பாத்திரத்தில் நடந்த நடையை வேறு எந்தப் படத்திலும் அவர் திரும்பச் செய்யவில்லை என்பேன் (என் சிற்றறிவை எட்டிய வரை)..
*
அதே படத்தில் கருணை மனம் மிக்க பைத்தியக்கார ஆஸ்பத்திரி டாக்டர், அவரது மிருதுவான பேச்சு, சாவித்திரியுடன் நடக்கும் நடை, அவர் கதை சொல்ல கருணையுடன் பார்க்கும் முகபாவம் எல்லாம் அழகு தான்..ஆனால் இன்னொரு படத்திலும் திரும்ப வந்திருக்கிறதே..ஆனால் அந்தப் படத்தில் நடை மாற்றியிருப்பார்!
*
அதே நவராத்திரி- வீரக் காவல் துறை அதிகாரி..புலிபோல் கர்ஜித்தல், கம்பீர நடை ம்ம் இதுவும் மறுபடி வந்திருக்கிறது..! (பின்ன அத்தியாயங்கள் எழுதுவதற்கு எனக்கு நடை வேண்டாமா..!)
*
இந்தப் படம் பார்த்து விட்டு வந்து புரியாமல் “அது என்ன ஒன்பது சிவாஜிக்கா” என சகோதரியிடம் கேட்க அவர் ஒரு புரியாத முழி முழித்து “நாளைக்குச் சொல்றேன்..இப்ப தூங்கு” என்றதும் மறு நாள் “உலகத்துல ஒரே மாதிரி ஒன்பது பேர் இருப்பாங்களாம்..அதைத் தான் சிவாஜி செஞ்சுருக்கார்” எனச் சொல்லி விளக்கியதும் இன்னும் நினைவில்..
*
அது சரி..ஒரு சக்கரவர்த்தியை எதிர்த்த குறு நில மன்னனின் நடை..ம்ம் அது அடுத்த அத்தியாயம் (இந்த பில்டப் தானே வேணாங்கறது) :)
(தொடரும்)