-
எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
வேலாடுது”
பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
’உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக’
அன்னை மடியை விரித்தாள் எனக்காக (கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துகாட்டுவார். )
‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
COURTESY - NET
-
நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
இது தான் எங்கள் வாழ்க்கை
தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
“தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
அதே போல உற்சாகத்தையும்.
”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
“முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
‘நான் செத்துப் பிழைச்சவண்டா
எமனை பாத்து சிரிச்சவன்டா’
சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
“ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
அவளே என்றும் என் தெய்வம்’
’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
ரொமான்ஸ்
‘காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் சென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
“நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
தலைவன் வாராது காத்திருந்தாள்”
ஜேசுதாஸ் பாடல்கள்
”விழியே கதையெழுது
கண்ணீரில் எழுதாதே’
”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.
COURTESY - Rprajanayahem.
-
-
-
-
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!
சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!
எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!
இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’
என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.
அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,
‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!
இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,
‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’
என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!
இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!
மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.
வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.
வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.
அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.
எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.
தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.
மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.
Courtesy;
நர்கிஸ் ஜியா
அஜ்மான்
ஐக்கிய அரபு அமீரகம்
-
மக்களின் பாட்டாளி
மக்களின் கூட்டாளி
மகத்துவம் நிறைந்த சோக்காளி
மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி
மாறாத மனம் கொண்ட அறிவாளி
கண்ணியம் தவறாத மாமனிதன் mgr
கடமையிலே மகாமனிதன்!
பூப் போன்ற மனசு
புதையல் போன்ற உள்ளம்
புன்னகை மாறாத முகம்
ஏழைகளின் குடிசைக்கு விளக்கு ஒளி
ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக்
கை விலங்கு!
ஆட்சியில் கிடைத்த காட்சி
அழிக்க முடியாத ராச்சியம்
கடமை கண்ணியம் கட்டுப்பட்டை
உடையாக உடுத்திய கொடை வள்ளல்
உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை
மீட்டார்!
வறுமையின் பிடியில் வாடிய
மழலைகளுக்கு
மதிய உணவு திட்டத்தைக் கொடுத்தார்
வாரிச் சுருட்டி எடுக்கும் அரசியலை
வெறுத்துத்
தன் வாழ்க்கையையே அரசியலுக்காக
அர்ப்பணித்தார்!
கொள்ளை அடித்தார் சொல்லாமலே
பலஉள்ளங்களின் அன்பை!
ஒன்றே குலம் என்று கூறி வாழ்ந்தார்
ஒரு தாய் மக்களாக அரவணைத்தார்!
சாதி மதம் பாராது பணம் படிப்பு பாராது
பதவி பட்டம் ஏழை எளியோர் பாராது
அனைவரும் மனிதரே என உரைத்தார்!
இறந்தும் இறவா வரம் பெற்றார்
கோடான கோடி மக்கள் மனதிலே
ஒரு நிலையான இடம் பிடித்தார்!
கொடை வள்ளலாக
இதயக்கனியாக
மக்கள் நண்பனாகப்
புரட்சித் தலைவனாக
ஒளி விளக்காக
வாழ்ந்து மறைந்தார்!
மறக்க முடியாத அச்சகத்திலே அச்சடித்தார்
அவர் பேச்சு மொழியைக் கிளிபோல் பேசியே
மக்கள் மறக்கவோ வெறுக்கவோ விரும்பாத
நூலகத்திலே முதல் இடத்தையே
அடைந்தார்!
கலை உலகில் பல சாதனை படைத்து
ஆட்சியில் அதையே நிஜமாக்கி விட்டார்
நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர்முன்
அதில் வரும் பல காட்சிக்கு நிஜத்தில்
உயிர் கொடுத்து விட்டார் பலர் வியக்கும்
வண்ணம்!
அவர் மூச்சு போனபின்னரும் பேச்சு
மாறாமல்
பலர் குரலிலும் வாழ்விலும் இதயக்
கோயிலாக
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
எங்கள்
இதயக் கனி மக்கள் திலகம்!
COURTESY-ஆர். எஸ். கலா, மலேசியா
-
மனதில் நிறைந்தவர் எம். ஜி. ராமசந்திரன்…
அள்ளி தந்த கைகள் எங்கே ,
அரவணைத்த நெஞ்சம் எங்கே,
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல தமிழரின் நல்வாழ்விற்காய் பிறந்தாரோ நல் மாணிக்கமாக எம் ஜி ஆர். அவர் சிம்ம குரல் எடுத்து கர்ஜனை செய்ய வேண்டாம். ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் கொடுத்தால் போதும் என் இரத்தத்தின் இரத்தங்களே… என் இனிய உடன் பிறப்புகளே என்று சொன்னாலே போதும்… ஒடி வரும் மக்கள் வெள்ளத்தில் அவர் திணறிய நாட்கள் எத்தனையோ! பொன்மன செம்மலாய் பூமிதனில் இன்றும் ஒளிரும் தீபங்களாய் இருப்பவரை பற்றி எழுதுகிறேன். அவர் மீது அன்பு கொண்ட நான்.
இலங்கையில் உருவாகி தமிழகத்தில் நிலைக்கொண்ட புயலாக வந்தார். அன்பு என்ற மந்திரத்தில் அடங்கிப் போனோம் நாம்.
ஏழையின் பங்காளனாக அவர் இருந்தார். ஏட்டுக் கல்வியை ஏழைக்கும் அளித்த காமராசரின் வாரிசாக வந்து கொடுத்தார் இலவசமாய்.
தாய் சத்தியபாமாவின் கண்டிப்பான வளர்ப்பும், நேசமான உறவும், பாசமான பரிவும் உலகை ஆள வைத்தவையோ??
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.
1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற வழிவகுத்தது. 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடனில் வெளி வந்தது.
mgr“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்”
இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.
இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.
எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.
மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.
“உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.
திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல புரிந்தவர்
COURTESY
திருக்குவளை மீ.லதா
நாகை மாவட்டம்
-
மனதில் நிறைந்த மக்கள் திலகம்
நேற்று இன்று நாளை
‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்பவும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற தனது சொல்லுக்கேற்பவும் வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் நடிகராக நுழைந்து, இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர்.
‘மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்’ என்ற இயற்பெயரைச் சொன்னால் பெரும்பாலா-னோரால் புரிந்துகொள்ள இயலாது. சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்றால் இளைய தலைமுறை-யினர்கூட புரிந்து புன்முறுவல் பூக்கின்றனர்.
1917 ஜனவரி 17 அன்று கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதியருக்கு மகனாக இலங்கையில் பிறந்து, இள வயதில் கேரளாவில் வளர்ந்தார் அவர். சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும்.
உழைக்கும் கரங்கள்
தந்தையின் மறைவுக்குப்பின் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் நடிகராகச் சேர்ந்த எம்.ஜி.ஆர், சதி லீலாவதி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மந்திரிகுமாரி மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகியவை அவரைப் பிரபலமாக்கின.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகியவை அவர் இயக்கிய திரைப்படங்கள்.. இவற்றில் நாடோடி மன்னன் அவரது சொந்தத் தயாரிப்பாகும். அவர் தயாரித்த மற்றுமொரு படம் அடிமைப்பெண். சிறந்த நடிகருக்கான விருதுகள் எங்க வீட்டுப் பிள்ளைக்கும் ரிக்ஷாக்காரனுக்கும் அவருக்குக் கிடைத்தன. அடிமைப்பெண் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் அதற்கு முந்தைய எல்லா ரிக்கார்டுகளையும் முறியடித்து வசூலில் சாதனை புரிந்தது. அவர் நடித்த கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.
அவரது கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து அவரது மறைவுக்குப்பின் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
தாயின் மடியில்
பொதுமக்களின் – குறிப்பாகத் தாய்க்குலத்தின் – மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்-திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்தார், எம்.ஜி.ஆர். கன்னித்தாய், தெய்வத்தாய், தாய்க்குப்பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, என்று தாயை மையமாக வைத்தே பல படங்களில் நடித்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார்.
நினைத்ததை முடிப்பவன்
இதர கதாநாயகர்களைப் போலன்றி, எம்.ஜி.ஆர் தன் படங்களில் பாடல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தார். பாடல் பதிவின்போதும் இசையமைப்பிலும் கூடவே இருந்து உன்னிப்பாகக் கவனிப்பதுடன் சில திருத்தங்களும் சொல்வார். தான் நினைத்தபடியே பாடல் திருப்திகரமாக வரும்வரை அவர்களை விடமாட்டார். அதனாலேயே வர்த்தகரீதியாக வெற்றி பெறாத அவரது சில படங்களில்கூடப் பாடல்கள் இனிமையாக அமைந்தன.
தனிப்பிறவி
அவரது திரைப்படப் பாடல்கள் சிலவற்றில் அவரது புனைப்பெயர்கள் இடம் பெற்றதுண்டு (புரட்சித் தலைவன் நீ, பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ? வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?). திரையுலகில் அவருக்குச் செல்லமாக ‘சின்னவர்’ என்றொரு பெயர் இருந்தது. அதையும் விட்டு வைக்கவில்லை நம் பாடலாசிரியர்கள் (சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் அந்தச் சின்னவரைப் போய்க் கேளும்).
வேறு பல நடிகர்களுக்கும் பட்டப் பெயர்கள் இருந்தபோதிலும் அவை அந்த நடிகர்களின் பாடல்களில் இடம் பெறவில்லை. இந்தப் பெருமை எம்.ஜி.ஆர். ஒருவருக்கே சொந்தம்.
என் கடமை
கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு கொண்டு ‘தன் படங்களுக்கு அவர் பாடலே எழுதக்கூடாது’ என்று தீர்மானித்திருந்தார். ஆனால் பணத்தோட்டம் படத்திற்கு அவர் எழுதியிருந்த ‘பேசுவது கிளியா?” என்ற பாடலில் ‘சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?’ என்ற வரியை ரசித்தவாறே கோபம் தணிந்து அதைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பில் இருந்த சமயம் ஒருநாள் கவிஞர் வாலியிடம், “இந்தப் படத்தில் நீ கிடையாதய்யா” என்று எம்.ஜி.ஆர். சொல்ல, வாலி “அதெப்படி? என் பேரு இல்லாம இந்தப் படம் வெளியாயிடுமா?” என்று வாதிட்டார். இறுதியில் கவிஞர், “சரி, அப்படின்னா ‘வாலி’ங்கற என் பேரே இல்லாமே இந்தப் படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு மாத்தி வெளியிடுங்க, பார்ப்போம்?” என்றார். வாய்விட்டுச் சிரித்த எம்.ஜி.ஆர், அவருக்கும் அதில் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
ஒருமுறை டி.எம். சவுந்தரராஜன் மேல் கோபம் கொண்டு, தனது சொந்தப் படமான அடிமைப்பெண்ணுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை விட்டே பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார். ஆனால் ‘தாயில்லாமல் நானில்லை, ‘உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது போன்ற உணர்ச்சி கொந்தளிக்கும் பாடல்களை இந்தப் புதிய குரலில் கேட்க மக்கள் துணிவார்களா?’ என்ற சந்தேகம் தோன்றவே, தன் வைராக்கியத்தைத் தளர்த்திக்கொண்டு டி.எம்.எஸ்.ஸையே திரும்ப அழைத்துப் பாடச் செய்தார். எஸ்.பி.பி. கேட்டுக்கொண்டதன் பேரில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் (அந்தப் பாடல்தான் எஸ்.பி.பி.யின் திரையுலக வாழ்க்கைக்கே திருப்புமுனையாக அமைந்தது).
தன் எதிரிகளையும்கூட அன்புடனும் நேசத்துடனும் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தன் கடமையாகவே கருதிச் செயல்பட்டார்.
இதயக்கனி
ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணாவின் வசீகரப் பேச்சுகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார். பின்னாளில் அண்ணாவே எம்.ஜி.ஆரின் வசீகரத்தால் கவரப்பட்டு அவரைத் தன் இதயக்கனி என்று அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்குப் பின் பொருளாளரானார்.
1972யில் கருணாநிதி தன் மகன் மு.க. முத்துவைத் திரையுலகில் களமிறக்கினார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். மாதிரியே ஒப்பனைகள் செய்து நடிக்க வைத்தார். ‘திரையுலகை விட்டுத் தன்னை விரட்டவே கலைஞர் நாடகமாடு-கிறார்’ என்பதை சூசகமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, “கட்சியின் கணக்குகளைக் காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார். கோபமுற்ற கருணாநிதி அவரைக் கட்சியிலிருந்தே நீக்கினார்.
‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.. அவரது சினிமா பாப்புலாரிட்டியால் கோடிக்கணக்கான மக்கள் அதில் இணைந்தனர். 1977யில் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். திரைப்பட நடிகராக இருந்து முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல் நபர் அவர்தான். 1987யில் முதலமைச்சர் பதவியிருந்தபோதே மரணமடைந்தார்.
முகராசி
1967யில் சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தயாராகிக்கொண்டிருந்தபோது அண்ணாவிடம் எம்.ஜி.ஆர், “தேர்தல் நிதியா நான் எவ்வளவு தரணும்ண்ணா?” என்றதற்கு அண்ணா, “உன் பணம் தேவையில்லே தம்பி, உன் முகம்தான் தேவை. பிரச்சாரக் கூட்டங்கள்லே நீ வந்து முகத்தைக் காட்டு. அப்புறம் நமக்குத்தான் ஓட்டு” என்றார். அதன்படியே எம்.ஜி.ஆரின் பிரச்சாரங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதியது. அதிக வாக்குகளுடன் தி.மு.க. வென்றது.
சிரித்து வாழ வேண்டும்
எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றபோது, நடிகர் நடிகைகள் அனைவரும் பேசி முடித்தபின் கடைசியாகப் பேச வந்தார் எம்.ஜி.ஆர். அப்போது கூடுதலாக இன்னொரு மைக் வைக்கப்பட்டது. உடனே நம்பியார் வந்து, “நாங்க இத்தனை நடிகர் நடிகைங்க பேசறப்போ ஒரே ஒரு மைக்கை வச்சிட்டு இப்போ உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு?” என்றார். “படத்திலேதான் என்கூட ஒரே சண்டை போட்டீங்க, இங்கேயுமா?” என்று எம்.ஜி.ஆர். பதில் சொல்ல, கூட்டம் ஆர்ப்பரித்தது. “இப்படியெல்லாம் பிரச்னையைத் திசை திருப்பாதீங்க, உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு மைக்? அதுக்கு விளக்கம் சொன்னாலே ஆச்சு” என்றார் நம்பியார், விடாப்பிடியாக. உடனே எம்.ஜி.ஆர், “நான் படத்திலே ரண்டு வேஷத்திலே நடிச்சேனில்லையா? அதனாலேதான்” என்று ஒரு கணம்கூடத் தயங்காமல் சொல்லவும், சிரிப்பலை அடங்க வெகுநேரமாயிற்று.
நல்ல நேரம்
1967யில் ஒருநாள் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர். ராதா சென்றபோது பெற்றால்தான் பிள்ளையா படம் குறித்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது, சட்டென்று தன் கைத்துப்பாக்கியால் எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைச் சுட, இரு குண்டுகள் அவரது காதைத் துளைத்தன. இந்தச் சம்பவத்திற்குப் பின் எம்.ஜி.ஆரின் இடது காது பழுதடைந்து போய், பேசும் சக்தியும் பாதிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு குரலை மட்டும் ஓரளவு நிவர்த்தித்துக் கொண்டார். அவரது நல்ல காலம், பாதிப்பு காதுடன் நின்று போனது.
நாடோடி மன்னன்
மிகுந்த பொருட்செலவில் முதல் சொந்தப் படமாக நாடோடி மன்னனைத் தயாரித்தபின், ‘படம் நன்றாக ஓடுமா?’ என்று எம்.ஜி.ஆருக்கே கவலை பிடித்துக்கொண்டது. அண்ணாவிடம் சென்று தன் கவலையை வெளியிட்டார். அண்ணா தனக்கேயுரிய நகைச்சுவை உணர்ச்சி-யுடன் சொன்னாராம். “ஓடிட்டா நீ மன்னன், ஓடாமப் போனா நாடோடி”
தர்மம் தலை காக்கும்
வறுமையுற்ற ஏழைகளுக்கு வாரி வழங்குவதில் வள்ளலாய்த் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். புயல், வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போது தாராளமாக நிதியுதவி செய்வார். 1962யில் சீனாவுடன் போர் மூண்டபோது யுத்தநிதியாக ரூ. 75 ஆயிரம் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாதபோதிலும் கேரளாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு அரைக் கிலோ எடையுள்ள தங்க வாள் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரது தர்ம குணம்தான் பல சந்தர்ப்பங்களில் அவரது உயிரைக் காப்பாற்றியது என்பது மக்களின் திடமான நம்பிக்கை.
பாசம்
புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம் சிவாஜி கணேசன் தன் மனைவி கமலாவுடன் அமெரிக்கா சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் வெளியேறியபின் கமலாவை மட்டும் உள்ளே அழைத்த எம்.ஜி.ஆர். “கமலா, தம்பிக்கு அதிகமா கருவாடு கொடுக்காதேம்மா” என்றார். “நான் அதிகமாக் கருவாடு சாப்பிட்டதாலே உப்புச் சத்து கூடிப் போய், ஆஸ்பத்திரியிலே வந்து கிடக்கறேன். இந்தக் கதி தம்பிக்கு வந்திடக் கூடாதும்மா” என்று அவர் சொன்னதும், ‘அவர் இவ்வளவு கஷ்ட நிலையில் இருக்கும்போதும் தன் கணவர்மேல் இத்தனை பரிவும் பாசமும் காட்டுகிறாரே’ என்றெண்ணிய கமலாவுக்குக் கண்ணீரே வந்துவிட்டதாம்.
ஆயிரத்தில் ஒருவன்
‘அவரது திரைவாழ்க்கை அரசியலுக்கு உதவியதா, அல்லது அரசியல்தான் திரையுலகுக்கு ஆதரவாக இருந்ததா?’ என்று கேட்பது, ‘முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா?’ என்று கேட்பதற்கு ஒப்பாகும். அரசியலில் அவர் கால் பதித்தபின் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே இருந்தன.
‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற தன் கேள்விக்கு, தானே பதிலாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் அவர். அவரது புகழ் நீடூழி வாழ்க!
Courtesy- ஷேக் சிந்தா மதார்
-
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
என்னுரை:
“பச்சைக்கிளி முத்துச்சரம்” . . . . . .என்ற பாடலில்
“வள்ளல் குணம்” யாரோ . . . . . . . என்ற பாடல் வரிகளின் கதாநாயகர்!
காவியமாய்! நெஞ்சின் ஓவியமாய்! – காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் என்றும் துடிக்கின்ற இதயமாய் வாழ்கின்றவர் திரு. எம்.ஜி.ஆர் என்றழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார்!
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர்சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர்! இலக்கண இலக்கியமாய்த் திகழ்ந்தவர்! இவ்வாறு மக்களின் மனதில் மக்கள்திலகமாய் விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய என் மனத்துளிகள் சில!
mgrசிறியோர் நலன் சில வரிகள்:
“திருடாதே பாப்பா திருடாதே..” என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்..
“திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில் பாடினாலும் மக்கள்திலகம் மூலமே அதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதில் நிலைபெற்று இன்றளவும் பாடப்படுகின்றன!
‘சின்னப்பயலே.. சின்னப்பயலே! சேதி கேளடா..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்..
அதுதாண்டா வளர்ச்சி!” என்று இளம் குழந்தைகளை நோக்கி இனிமையாய் சொன்ன விதமும்,
தூங்காதே தம்பி தூங்காதே!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்ற பாடலில்.. பொன்னான வேலைகள் .. பணி நிறைவு செய்ய காத்திருக்கும்போது தூங்கிக் கழிக்கக்கூடாது என்கிற அறிவுரையைப் பாடலின் மூலம் நடித்துக்காட்டிய விதம் அருமை!
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி!”
என்று இளைஞர்களுக்கும் திரையிசைப் பாடல்மூலம் திகட்டாத கருத்துக்களை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்!
இளமை இனிமை என்றும் என்றென்றும்:
“ஹலோ! ஹலோ!! சுகமா..
ஆமா! நீங்க நலமா..”
என்று காதலனாய் காதலியுடன் பாடும்விதமும்…
“மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ “
என்று காதலியின் நடையை வருணித்து…
“தொட்டால் பூ மலரும்..
தொடாமல் நான் மலர்ந்தேன்”
என்ற பாடலில் காதலியைப் பார்த்து கண் சிவந்த விதமும், ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அன்றைய காலக்கட்டத்தில் “காதல்” எனும் உணர்வும், உணர்ச்சியும் எழாமல் இருந்திருந்தால் ஆச்சர்யமே! அவ்வளவு இனிமை என்றும் என்றென்றும் காணும்போது!
நாட்டின் நலனில் பற்றுகொண்ட பாடல்கள்:
“தாய் மேல் ஆணை! தமிழ்மேல் ஆணை..” என்று சத்தியம் செய்யும் பாடல்! சாத்தியமான பாடல் அது!
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
என்கிற பாடல் பயத்தை நீக்கும் பாடல் அல்லவா?
“உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல்
நீ வாழலாம்!”
என்ற பாடல் உன்னை அறிந்து கொள்! மற்றவர்களை குறை சொல்லுமுன் என்கிறது!
“நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். . . . . . . .” என்று பாடிய திரைப்படக் கதாநாயகர், பிறகு தமிழக முதல்வராய் ஆணையிட்டு மக்களின் நலன் காத்தது இறைவனின் அருளாசி!
1960களில் கொடிகட்டிப்பறந்தவர் திரைப்படங்களில்!
“அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்..” என்கிற பாடலில் வாழ்க்கைக் கடலில் துன்ப அலைகள், துயர அலைகள் வரும்.. அதை துடுப்புப்போல் தள்ளிவிட்டு இன்பமயமான வாழ்க்கை தொடர வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்!
மக்கள் பணி:
திரைப்படங்களில் முதல்வராக… கதாநாயகராக… இருந்த மக்கள்திலகம், மக்களின் முதல்வராக பணியாற்றியது அவர் வாழ்க்கையின் உச்சம்! ஏழை எளிய மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்கள் நலன் காத்த அருட்செல்வர்! சென்னையில் போரூர் செல்லும்வழியில் இராமாபுரத்தைக் கண்டால் எம்.ஜி.ஆரின் நினைவுகளில் மூழ்காதவர் எவரும் இலர்!
காலஞ்சென்ற காவியத்தலைவன்!
காரிருள் நீக்கிட வந்த கதிரவன்!
வாழ்வில் பேரொளி கொடுத்த பெருஞ்சுடர்!
இன்றளவும் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையாம் மெரீனாவிலே வங்கக்கடலோரம் மக்களின் நம்பிக்கைச் சுடராய் காட்சிதருகிறார்!
“பொதுவாக.. மண்ணைத் தோண்டி தங்கமெடுப்பதைக் அறிவோம்! முதன்முறையாக மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தையல்லவா புதைத்தோம்” என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வைர வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்!
மக்கள் திலகம் பற்றி மனம் நிறைந்தவை:
சொல்லலாம்! சொல்லிக் கொண்டே இருக்கலாம்! அன்றும் இன்றும் என்றும் … இசையும் பாடலும் இருக்கும்வரை மக்கள் திலகத்தின் படக்காட்சிகள்..மனக்காட்சியாக மனம் நிறைந்து நிலைக்கும்!
திருமதி.மீனாட்சி நாகப்பன்
புதுக்கோட்டை