நடிகர் திலகம் என்ற உலக மகா கலைஞருக்கு இன்னும் பல தலைமுறை ஆனாலும் ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருப்பார்கள். அவருடைய நடிப்பின் தாக்கம் காலம் கடந்து நிற்கும் வலிமை படைத்தது. சென்ற தலைமுறை, இன்றைய தலைமுறை, நாளைய தலைமுறை என ஒவ்வொரு கோணத்தில் அவரை மக்கள் ரசித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் சென்ற தலைமுறையைச் சேர்ந்த ரசிகனாகிய என்னைப் போன்றவர்களே இன்னும் புதிது புதிதாய் அவருடைய நடிப்பில் மயங்கி ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் அவருடைய ரசிகர் என்று தன்னைக் கூறிக் கொண்டு இங்கு அறிமுகம் ஆகும் ஒவ்வொருவரையும் வரவேற்க வேண்டியதை நான் என்னுடைய கடமையாகவே நினைக்கிறேன். அவர் யார் என்பதெல்லாம் அப்பாற்பட்டு என் கண் முன் நிற்பது ஒரு சிவாஜி ரசிகன் என்கிற கண்ணோட்டமே.
அவருடைய பதிவுகளுக்குப் பிறகு அவற்றில் தனிப்பட்ட தாக்குதல் இருந்தால் அதை நிச்சயம் ஒவ்வொருவரும் ஆட்சேபம் தெரிவித்து அதனைக் களைவதற்கு முயற்சி எடுத்து அவருடைய பார்வையில் நடிகர் திலகம் என்கிற கோணத்தில் அவருடைய கருத்தை எழுத வைப்பது தான் நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமாக இருக்கும். எனவே யாரையும் வரவேற்பது தான் நம்முடைய பண்பாடாய் இருக்க முடியும்.
அதே போல் ஒருவரை ஒருவர் ஒருமையில் விளிப்பது கண்டிப்பதும் வரவேற்கத் தக்கதல்ல.
சௌரிராஜன் சார்,
நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்குள் உள்ள அளவற்ற பக்தியினைத் தங்களுடைய பதிவுகளில் தெளிவாகக் காண்கிறேன். அதனைப் பாராட்டுகிறேன். அதே சமயம் தங்களுடைய பதிவுகளில் உள்ள குறைகளையும் தாங்கள் களைய வேண்டும். முடிந்த வரை தாங்கள் ஆங்கிலத்தில் எழுதுங்கள், அல்லது ஏதேனும் மென் பொருள் உதவியுடன் தமிழில் எழுதுங்கள். தங்கள் கருத்தை சரியான முறையில் வெளிப் படுத்த உதவும் விதம் எதுவோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
கோபால் சார் நடிகர் திலகத்தின் மேல் தங்களுக்கு எந்த அளவிற்கு பக்தியுள்ளதோ அதே அளவு கொண்டவர். அதில் ஐயமில்லை. எனக்கும் அவருக்கும் இடையே கூட சில காலங்களுக்கு முன் கருத்து மோதல்கள் ஏற்பட்டதுண்டு. இருவருமே அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதனை விலக்கி, நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் லட்சியத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறோம். தாங்களும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. எனவே இது வரை ஒருவருக்கொருவர் இருக்கும் மன வருத்தங்களை விட்டொழித்து ஒற்றுமையாய் பயணிப்போம்.
டியர் கோபால் சார்,
நான் பல முறை கூறி வந்தது போல் தங்களுடைய கட்டுரை காலத்தால் அழிக்க முடியாத பல தலைமுறைகள் கடந்து நிற்கக் கூடிய மிகச் சிறந்த படைப்பாக உருவாகி வருகிறது. ஒரு கலங்கரை விளக்கம் போல் எதிர் காலத் தலைமுறையினருக்கு நடிகர் திலகம் என்னும் கரையை சுட்டிக் காட்டும் வகையில் அது மிளிர்ந்து வருகிறது. அதனைத் தாங்கள் தொடர்ந்து செய்யுங்கள். சௌரிராஜன் என்று இல்லை, எந்த சிவாஜி ரசிகராக இருந்தாலும் இரு கரம் கூப்பி நாம் வரவேற்க வேண்டும். அது நம் கடமையும் கூட. அவர் வேண்டும் இவர் வேண்டாம் என்கிற கண்ணோட்டத்தினை நாம் முற்றிலும் விலக்குவோம். சௌரிராஜனின் பார்வையில் நடிகர் திலகத்தைப் பற்றிய கருத்துக்களில் பல புதிய விஷயங்கள் கிடைக்கலாம். எனவே நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டொழித்து அனைவரும் ஒன்று படுவோம். நம்முடைய நடிகர் திலகம் என்கிற ஆலமரத்திற்கு நாம் அனைவரும் ஒவ்வொரு விழுதாய் இருந்து துணையிருப்போம்.
இனிமேல் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே என் விருப்பம்.