நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்த நினைவுகளைத் தட்டி எழுப்பும் இத்திரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
Printable View
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்த நினைவுகளைத் தட்டி எழுப்பும் இத்திரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
Thanga Surangam banner placed at the Gemini corner. Due to Traffic jam that was caused by the onlookers, the banner was shifted to Shanti Theatre.
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...90794034_o.jpg
Newspaper cutting courtesy my 40 years Shanti Theatre friend Mr. Anand
Courtesy: Mr Karthik old post
'ரமலான் ஈத்' பண்டிகையையொட்டி தாங்கள் பதித்திருந்த பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. குறிப்பாக 'பாவமன்னிப்பு' விளம்பரங்கள் இரண்டும் அட்டகாசம். (துவக்கி விட்டீர்கள், தொடர்ந்து அப்படத்தின் 50-வது நாள், 100-வது நாள், வெள்ளிவிழா விளம்பரங்கள் வரை, தங்களிடம் இருக்கும் பட்சத்தில், பதிவிட்டு அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்).
'கப்பலோட்டிய த்மிழன்' மறு வெளியீட்டு விளம்பரங்களும் அசத்தல் ஆவணங்கள். அப்படத்துக்கு 1976-ல் எமர்ஜென்ஸி காலத்தின்போதுதான் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தை முழு கட்டணத்திலேயே அரங்கு நிறைந்த காட்சியாக கண்டுகளித்த அனுபவம் எனக்கு.
1961 தீபாவளியன்று வெளியான இக்காவியம், அதன்பின்னர் என் நினைவுக்கெட்டிய காலம் வரை மறு வெளியீட்டுக்கு வராத நேரம். அந்த ஆண்டு வெளிவந்த மூன்று 'பா' வரிசைப் படங்களும் அடிக்கடி தியேட்டர்களில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போதிலும், ஏனோ கப்பலோட்டிய தமிழன் வரவில்லை. முதல் வெளியீட்டில் கிடைத்த ரிசல்ட்டைப்பார்த்து விநியோகஸ்தர்கள் பயந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் எகிறிப்போயிருந்தது.
இந்நிலையில் எனது பள்ளிமாணவப் பருவத்தின்போது 1972-ஜூன் மாதம் திடீரென்று தினத்தந்தியின் கடைசிப்பக்கத்தில் 'வெள்ளிக்கிழமை முதல் சித்ராவில்' என்று தலைப்பிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தின் கால்பக்க விளம்பரம் வந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகள் அகன்றன. எவ்வளவு நாள் காத்துக்கிடந்த வாய்ப்பு என்று மனம் குதூகலித்தது. விளம்பரத்தில், கட்டம் போட்ட கைதி உடை மற்றும் தொப்பியுடன் நடிகர்திலகம் கீழே கிடக்க, ஒரு பெரிய பூட்ஸ் அணிந்த கால் (கால் மட்டும்தான்) அவரை மிதிக்க உயர்ந்திருப்பது போல விளம்பரமிட்டிருந்ததைப் பார்த்து மனம் எகிறியது. நண்பர்கள் கூடிப்பேசினோம். எப்படியும் முதல்நாளே பார்த்துவிட வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் கையில் காசு இல்லை. அதனால் வெள்ளிக்கிழமை போக முடியவில்லை. நண்பர்கள் சிலர் 'எப்படியும் சுற்றியடித்து நம்ம ஏரியா (வடசென்னை) தியேட்டருக்கு வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றனர். ஆனால் எனக்கு பொறுமையில்லை. இங்கே வரும் என்பது என்ன நிச்சயம்?. ஒருவேளை வராமல் போய்விட்டால்?. வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?. (அப்போதெல்லாம் படம்பார்க்க தியேட்டரை விட்டால் வேறு வழி கிடையாது).
சனிக்கிழமை காலை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் விளம்பரத்தைக்காட்டி, படம் பார்க்க பணம் கேட்டேன். (ஒரு மகன் தந்தையிடம் தைரியமாக சினிமாவுக்கு பணம் கேட்கும் அளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே வந்த தரமான படங்களில் ஒன்றல்லவா இக்காவியம்). படத்தின் விளம்பரத்தைப்பார்த்ததும் அவரும் மறுபேச்சுப் பேசாமல் மூன்று ரூபாயை எடுத்துத்தந்தார். (அப்போது முதல் வகுப்பு டிக்கட் 2.60 ). மீண்டும் விளம்பரத்தைப்பார்த்து எந்த தியேட்டர் என்று உறுதி செய்து கொண்ட அவர், 'இந்தப்படத்துக்குத்தானே போறே?. போய்ட்டு வந்ததும் என்கிட்டே டிக்கட்டைக்காட்டணும்' என்று கண்டிஷன் போட்டார். (பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை).
பிராட்வே பஸ் ஸ்டாப்பில் ஏறி மவுண்ட்ரோடு தபால் நிலையத்தில் இறங்கினால் 25 பைசா டிக்கட். அதுவே பாரீஸ் வரை நட்ந்துபோய் அங்கு ஏறி, Hindu பத்திரிகை அலுவலகம் முன்பு இறங்கினால் டிக்கட் 15 பைசா. சிறிது தூரம் நடந்தாலும் பரவாயில்லையென நாங்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தோம். மாலைக்காட்சிக்கு நேரமாகிவிட்டதால், ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்றால், சித்ரா தியேட்டரின் வாசல்கேட்டில் மாட்டியிருந்த ‘Housefull’ போர்டு எங்களை வரவேற்றது. எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நான் டிக்கட் வாங்கியபின் இந்த போர்டை மாட்டியிருந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இல்லை.
வந்ததற்கு எந்தப்படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று வந்திருந்த நண்பர்கள் உடனடி முடிவெடுத்து, 'சென்னை கங்கை'யின் மறு கரையிலிருந்த கெயிட்டி தியேட்டருக்கு ('குறத்தி மகன்' என்று நினைக்கிறேன்) பார்க்கப்போய்விட்டனர். ஆனால் கப்பலோட்டிய தமிழனைத்தான் பார்க்கவேண்டும் என்று வந்திருந்த நான் மட்டும், கேட்டுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்று, காம்பவுண்டுக்கு மேலே இருந்த தட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட போஸ்ட்டர்களையே சிறிது நேரம் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்து விட்டு மீண்டும் 15 பைசா டிக்கட்டில் வீடு திரும்பினேன்.
பெரிய வால்வு ரேடியோவில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்த அப்பா சற்று ஆச்சரியமாக தலையைத்தூக்கி, 'ஏண்டா, போகலையா?' என்று கேட்டார். 'போனேன்பா, நாங்க போகமுன்னாடியே ஃபுல் ஆயிடுச்சு' என்றதும், 'சரி அப்போ நாளைக்குப்போ' என்றவர் சட்டென்று 'வேணாம், நாளைக்கு இன்னும் கூட்டமாயிருக்கும். திங்களன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் போ' என்றார். பணத்தை திருப்பி வாங்கிக்குவாரோ என்று பயந்த எனக்கு குதூகலமாயிருந்தது. எனக்கென்னவோ, தன் மகன் எப்படியாவது இந்தப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்தது போலத்தோன்றியது.
திங்கள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தாமதிக்காமல் நான் மட்டும் தனியாக பஸ்ஸில் போனேன். பின்னே, நண்பர்கள்தான் இருந்த காசுக்கு 'குறத்திமகன்' பார்த்துவிட்டனரே. பாலத்தைக்க்டக்கும்போதே தென்பட்ட கூட்டம் மீண்டும் பயத்தைக்கிளப்பியது. இருந்தாலும் கிட்டே போய்ப் பார்த்தபோது சற்று தைரியம் வந்தது. சற்று முன்னமேயே சென்றுவிட்டதால் 2 ரூபாய் டிக்கட்டே கிடைக்கும்போல இருந்தது. சித்ரா தியேட்டரில் 2 ரூபாய் டிக்கட் எத்தனை என்று போர்டில் பார்த்து, அதில் பாதியை பெண்களுக்கு கழித்துவிட்டு, கியூவில் நின்றவர்களை தோராயமாக எண்ணிப் பார்த்ததில், டிக்கட் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. கவுண்ட்டர் திறந்ததும், வழக்கம்போல பிஸ்த்தாக்கள் ஒரு பத்துபேர் வரிசையில் நடுவில் நுழைந்தனர். அச்சத்துடன் நெருங்கிப்போக, டிக்கட் கிடைத்து விட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே உள்ளே போகாமல், எனக்குப்பின் இன்னும் எத்தனை பேருக்கு டிக்கட் கிடைக்கிறதென்று பார்த்துக்கொண்டிருக்க, ஐந்தாறு பேர் வாங்கியதும் கவுண்ட்டர் அடைக்கப்பட்டது. நல்லவேளை 'வஸ்தாதுகள்' இன்னும் ஒரு ஐந்து பேர் நுழைந்திருந்தால் என் கதி அவ்வளவுதான். உள்ளே போய் சீட்டில் கர்சீப் போட்டுவிட்டு, வெளியே வந்து முதல் வகுப்பு பக்கம் போனால், அதுவும் ஃபுல். கடைசி கிளாஸ் டிக்கட் முடிந்ததும் திங்களன்றும் ‘Housefull’ போர்டு போட்டார்கள். சந்தோஷத்துக்குக் கேட்கணுமா?. நிறையப்பேர் இந்தப்படத்தை எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.
படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.
ஆனால் ஜெமினிகணேஷ் ஏற்றிருந்த மாடசாமி ரோலுக்கு தேவையில்லாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதிக சீன்களும், ஒன்றுக்கு இரண்டாக டூயட் கொடுத்ததும் அந்த வயதில்கூட எனக்குப்பிடிக்கவில்லை. படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் போலத்தோன்றியது.
ஒரு விஷயம் சொன்னால் உங்களில் பெரும்பாலோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து விட்டு, படம் துவங்கியதும் அதை மறந்து போனேன். ஆனால் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனிக்காக கப்பலை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அந்த வரலாற்று நிகழ்வில், கரையிலிருக்கும் திரண்ட கூட்டத்தோடு, பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் பாட, வ.உ.சி. கப்பலில் கையசைத்துக்கொண்டே வரும் "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.
அதன்பிறகு இதுவரை கப்பலோட்டிய தமிழன் படத்தை குறைந்தது 25 முறையாவது பார்த்திருப்பேன். ஆனால் அந்தப்பாடலை கலரில் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அதன்பிறகு பார்த்ததபோது படம் முழுக்க கருப்புவெள்ளையில்தான். 1972-ல் முதன்முறையாக நான் பார்த்தபோது திரையிடப்பட்ட அந்த பிரிண்ட், அநேகமாக 1961-ல் படம் ரிலீஸானபோது உருவாக்கப்பட்ட பிரிண்ட்டாக இருக்கலாம். அதன்பிறகு எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்கள் அனைத்தும் கருப்புவெள்ளையில்தான் எடுக்கப்பட்டது.
வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.
(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).
படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன.
Thanks to Mr Neyveli Vasudevan
அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.
நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.
கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.
வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.
எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.
அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்டு விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....
அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன், பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.
வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை... அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம்... படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை. பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.
Thanks to Mr Karthik
'ராஜபார்ட் ரங்கதுரை'
நாடகக்கலைஞனாக நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரையின் 39-வது உதய தின இனிய நினைவலைகள் (22.12.1973 - 22.12.2011)
தயாரிப்பில் இருக்கும்போதே பலவேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்ட படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய திரைக்காவியம்.
1971 இறுதியில் துவங்கிய நடிகர்திலகத்தின் வெற்றிநடை 72-ஐக்கடந்து 73-லும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியாகி இதுவும் வெற்றிக்கனியை ஈட்டியது. (தொடர் வெற்றிப்பட்டியலை ஏற்கெனவே முரளி சார் அவர்கள் முந்தைய பக்கத்தில் அட்டகாசமாக தொகுத்தளித்துள்ளார்). இப்படம் வெளியானபோது தீபாவளி வெளியீடான கௌரவம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக 58 நாட்களைக் கடந்துகொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம் 15 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. (ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் மட்டும், வெளியிடும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் தினசரி 4 காட்சிகளாக ஓடி, இப்படத்துக்காக பக்கத்தில் மயிலை கபாலி தியேட்டருக்கு மனிதரில் மாணிக்கம் மாற்றப்பட்டது).
ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவரும் முன்பே, இது காங்கிரஸ் இயக்கத்தினரை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்று மதிஒளி, திரைவானம் போன்ற பத்திரிகைகள் சரமாரியாக செய்திகளையும் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன. அப்போது சிவாஜி ரசிகன் என்றும் பெருந்தலைவரின் தொண்டன் என்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லோரும் இரண்டுமாக திகழ்ந்த காலகட்டம். போதாக்குறைக்கு ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், பெருந்தலைவரும் நடிகர்திலகமும் மேடையில் இருக்கும்போதே, மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை, அப்போது தயாரிப்பிலிருந்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப்பற்றி வெகு சிறப்பாகப்பேசி, ‘இது காங்கிரஸ்காரர்களின் லட்சியப்படம்’ என்று கூறி விட்டார்.
அப்போது சிவாஜி மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் தமிழகத்தில் பெரும் சக்தியாக விளங்கியதால் இப்படம் பெருந்தலைவரின் பாராட்டைப்பெற்றால் நன்றாக இருக்குமே என்று கருதிய தயாரிப்பாளர் குகநாதன், பெருந்தலைவருக்கும் காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுக்கும் ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்திருந்தார். (அந்த பிரத்தியேக காட்சியைப்பற்றியும் அதில் நடந்தவற்றைப் பற்றியும் ஏற்கெனவே முன்னர் சாரதா மிக விரிவாக எழுதியிருந்தார், அதை நாமெல்லோரும் படித்திருக்கிறோம். ஆகவே அதை மீண்டும் விளக்கத்தேவையில்லை).
ராஜபார்ட் ரங்கதுரை சென்னையில் பைலட், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, முரளிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி ஆகிய ஐந்து திரையரங்குகளில் வெளியானது. அத்தனையிலும் தினசரி மூன்று காட்சிகள்தான். வடசென்னை மண்ணடிவாசியான நான் (வழக்கம்போல) மிண்ட் ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் (வழக்கம்போல) முதல்நாள் மாலைக்காட்சிக்கு ரிசர்வ் செய்திருந்தேன். முதல்நாள் மாலைக்காட்சி டிக்கட் கிடைப்பது சாதாரணம் அல்ல, ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை ஏழுமணிக்கெல்லாம் போய், 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கேட் திறந்ததும் ஓடிப்போய் கியூவில் நின்றுகொண்டு, இன்னும் போலீஸ் வரவில்லையே என்று தவமிருக்க வேண்டும். போலீஸ் வந்துவிட்டால் நமக்குத்தெம்பு. அப்பாடா, இனி நம் இடம் பறிபோகாது என்று. அப்போது பள்ளி மாணவப்பருவமாதலால் இதெல்லாம் பெரிய கஷ்ட்டமாகத் தெரியவில்லை. இன்றைய இளம்பருவத்தினர் இந்த சாகசங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.
மதியசாப்பாட்டுக்குப்பின், பவளக்காரத்தெரு நண்பன் வீட்டு வாசலில் எல்லோரும் கூடி, அங்கிருந்து புறப்பட்டோம். நடைதான். பேசிக்கொண்டே கிருஷ்ணா தியேட்டர் போய்ச்சேர்ந்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. போகும் வழியில் கிரௌனில் கௌரவம் எப்படீன்னு எட்டிப்பார்த்தோம். சனிக்கிழமையாதலால் மேட்னி ஃபுல். (ராஜபார்ட்டுக்கு மேட்னி டிக்கட் கிடைக்காதவர்களும் இங்கு வந்திருக்கக்கூடும்).
ஸ்ரீகிருஷ்ணாவை நெருங்கும்போதே சாலையில் பெரும் கூட்டம் தெரிந்தது. தியேட்டர் முழுக்க காங்கிரஸ் கொடிகள், காங்கிரஸ் பேனர்கள். நடிகர்திலகத்தின் கட்-அவுட் கையிலும் நிஜமான கொடி பறந்துகொண்டிருந்தது. ஏதோ காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் தந்தது. பேனர் முழுக்க நடிகர்திலகத்துக்கு பிரம்மாண்டமான மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. வடசென்னை மன்றங்கள் அலங்காரங்களில் அசத்தியிருந்தனர். அந்தக்கண்கொள்ளாக் காட்சிகள் இன்றைக்கும் மனதில் நிறைந்திருக்கிறது. ஏற்கென்வே மெயின்கேட் திறந்து விடப்பட்டு, கவுண்ட்டர் கேட்களும் போலீஸ் பந்தோபஸ்துடன் திறந்து விடப்பட்டு, கூட்டம் நிரம்பி வழிந்தது. கரண்ட் டிக்கட் கவுண்ட்டரில் நின்றவர்கள் கண்களில் 'டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ' என்ற பதைபதைப்பு தெரிந்தது.
போலீஸ் மட்டுமல்லாது மன்றத்தினரும் வெள்ளை சீருடையில் காங்கிரஸ் பேட்ஜும், மன்ற பேட்ஜும் அணிந்து கூட்ட்த்தினரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சீனியர் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க, நாங்கள் அவர்கள் மத்தியில் நின்று, செய்திகளை கிரகித்துக்கொண்டிருந்தோம். காம்பவுண்டுக்குள் நிற்க இடமில்லாமல் நிறையப்பேர் 'கேட்'டுக்கு வெளியிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ரிசர்வ் பண்ணியவர்களோ, அல்லது தற்போது கியூவில் நின்று டிக்கட் வாங்க வந்தவர்களோ அல்ல. (ஏனென்றால் இப்போது கவுண்ட்டரில் நிற்பவர்களுக்கே பாதிப்பேர்க்கு டிக்கட் கிடைப்பது கஷ்ட்டம். இருந்தும் நம்பிக்கையோடு நிற்கின்றனர்). மற்றவர்கள் அலப்பறையைக்காண வந்தவர்கள்.
ஐந்தேமுக்காலுக்கு அனைத்து வாசல்களும் அகலத்திறந்து வைக்கப்பட, மேட்னி முடிந்து ஜனத்திரள் வெளியே வந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப்பரவசம். 'படம் அட்டகாசம்பா', 'அண்ணன் பின்னியெடுத்துட்டார்', 'போய்ப்பாருங்க, பர்ஸ்ட் கிளாஸா இருக்கு' என்று ஒவ்வொருவரின் கமெண்ட்டும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஒரு நாற்பதுபேர் அடங்கிய சிறு கூட்டம் 'அண்ணன் சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டவாறு தியேட்டரிலிருந்து சாலைக்குச்சென்றனர். எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அப்போது பாடம் பார்த்த ஒருவர், 'படம் ஆரம்பிச்சதும் ஏமாந்துறாதீங்க, நாங்கதான் ஏமாந்துட்டோம்' என்றதும் வெளியே நின்றவர் 'என்னய்யா சொல்றீங்க?' என்று கேட்க, 'ஆமாங்க படம் துவக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட்ல கொஞ்ச நேரம் ஓடும். ஏமாந்துடாதீங்க. டைட்டில்லேருந்துதான் கலர் ஆரம்பிக்கும்' என்று சொல்லி மாலைக்காட்சி பார்க்க நின்றவர்களை உஷார் படுத்தினார்.
அப்போது பட்டுப்புடவையும் காங்கிரஸ் பேட்ஜும் அணிந்த சுமார் பத்துப்பணிரெண்டு கல்லூரி மாணவிகள் பரபரப்பாக வந்து தியேட்டர் உள்ளே சென்றனர். யார் அவர்கள், ஏன் உள்ளே போனார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது. கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியதும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பெண் நின்று கொண்டு தட்டில் இனிப்பு வைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர். தியேட்டர் சிப்பந்தி டிக்கட் கிழிக்க, மாணவி அவருக்கு எதிரில் நின்று படம் பார்க்க வந்தவர்களை இன்முகத்தோடு 'வாங்க' என்றழைத்து இனிப்பு வழங்கிய காட்சி அருமையாக இருந்தது. அருகிலிருந்த ஒருவர், 'எல்லாம் நம்ம மன்ற ஏற்பாடு' என்றார்.
பார்த்து அதிசயித்துக்கொண்டே நாங்கள் ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு பாலகனிக்குச்செல்ல, அங்கு இரண்டு பெண்கள் நின்று வரவேற்று இனிப்பு வழங்கினர். தியேட்டர் உள்ளே ஒரே ஆரவார இரைச்சல். அரங்கு நிறைந்ததும் படம் துவங்கியது. ஒருவர் உஷார் படுத்தியது போல படம் முதலில் கருப்பு வெள்ளையில் துவங்கி, ரயில் பாடல் முழுக்க அப்படியே ஓடியது. டைட்டில் துவங்கியதும் கலருக்கு மாறியது. டி.எம்.எஸ்ஸின் ஆலாபனையிலேயே டைட்டில் முடிந்து 'இயக்கம் பி.மாதவன்' என்ற எழுத்து மறைந்ததும் “மேயாத மான்” என்று தலையைத்திருப்பினார் பாருங்க. அவ்வளவுதான் தியேட்டரே அதகளமாகிவிட்டது. கைதட்டல்கள் என்ன, விசில்கள் என்ன, ஆரவாங்கள் என்ன, தியேட்டர் முழுக்க காகிதங்கள் பறந்தன. அப்போ பிடிச்ச 'டெம்போ'தான். படம் முடிகிற வரைக்கும் நிற்கவில்லையே. அதுவும் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் இத்தகைய ஆரவாரம் ஏற்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
'மதன மாளிகையில்' பாடல் துவங்கியதும் இன்னொரு அதிசயம். மன்றத்தினர் ஆங்காங்கே நின்றுகொண்டு மல்லிகை வாடையை பம்ப் மூலம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க மல்லிகை வாடை கமகமத்தது. சூழ்நிலையே மனதை மயக்குவது போல இருந்தது.
படம் வருவதற்கு முன்பே 'அம்மம்மா தம்பியென்று' பாடல் பாப்புலராயிருந்தாலும் இவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. டேபிள் டென்னிஸ் பேட்டில் தாளம்போடத்துவங்கியதிலிருந்து பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் பறந்தது. பாடல் முடிந்து பையைக்கையில் எடுத்துக்கொண்டு, துண்டால் வாயைப்பொத்தியவாறு செல்லும்போது, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க கைதட்டலால் கூரை தகர்ந்தது.
அதுபோல 'மதன மாளிகை'யும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' பாடலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 'இன்குலாப்' பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிகர்களையும் பெருந்தலைவரின் தொண்டர்களையும் உணர்ச்சி வசப்படுத்த, அந்தப்பாடலிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல். ஏனென்றால் அந்தப்பாடல் அப்போதுதான் எல்லோரும் முதன்முதலில் கேட்டனர். படம் பார்க்கும் முன் ‘இன்குலாப்’ பாடலைப்பற்றி எதுவுமே ரசிகர்களுக்குத் தெரியாது. (படம் வந்த பின்னும், வானொலியில் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப் படுகிறது)
படம் முடிந்து வெளியே வரும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 'அண்ணனுக்கு இந்தப்படமும் வெற்றிதான்' என்று ரசிகர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுச்சென்றனர். மறுபுறம் காங்கிரஸ் இயக்கப்பெரியவர்கள் 'அவர் இறந்து போற மாதிரி முடிச்சது சரிதான். இல்லேன்னா தியாகத்தை எப்படிக் காட்ட முடியும்' என்று சர்டிபிகேட் வழங்கிப்பேசியவாறு சென்றனர்.
இதே மகிழ்ச்சியுடன் வீட்டில் போய்ப்படுத்தேன். வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. எப்படி வரும்..?.
Thanks to Mr Karthik
நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'
36-வது உதய தினம் (25.12.1976 - 25.12.2011)
1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.
1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்
உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).
அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.
1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.
ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).
தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.
இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.
வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).
பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).
கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.
அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.
டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.
Thanks to Mr Karthik
'அவன் ஒரு சரித்திரம்' - இனிய நினைவுகள்
36-வது ஆண்டு உதயம் (14.01.1977 - 14.01.2012)
1976 டிசம்பர் இறுதியில் ரோஜாவின் ராஜா வெளிவருவதற்கு முன்பாகவே, 1977 பொங்கல் வெளியீடாக 'அவன் ஒரு சரித்திரம்' வரப்போகிறது என்ற விவரம் மதிஒளி, திரைவானம், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்கள் மூலமாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து விட்ட விவரத்தை முன்பே சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற்போல அந்த இதழ்களும் அவன் ஒரு சரித்திரம் பற்றிய செய்திகளையும் பல்வேறு ஸ்டில்களையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தன. படத்தின் பெயரும் ஒரு அழகான பெயராக அமைந்ததில் ரசிகர்களுக்கு திருப்தி. பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, ‘பொங்கல் வெளியீடு பைலட், ஸ்ரீகிருஷ்ணா, அபிராமி,நூர்ஜகான் தியேட்டர்களில் அவன் ஒரு சரித்திரம்’ என்ற விளம்பரம் தினத்தந்தியில் வெளியானது. ரசிகர்களுக்கு ம்கா உற்சாகம். உற்சாகத்துக்குக் காரணம் அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டிருந்த புரசைவாக்கம் 'அபிராமி a/c' தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்புத்தான். ரிசர்வேஷன் ஆரம்பிக்கட்டும், அபிராமியில் புக் பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தோம்.
அபிராமி என்றால் இப்போதிருக்கும் அபிராமி மெகாமால் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அன்னை அபிராமி, சக்தி அபிராமி தியேட்டர்கள் கூட அப்போது கட்டப்படவில்லை. அந்த வளாகத்தில் இருந்தது அபிராமி என்ற பெரிய தியேட்டரும், பால அபிராமி என்ற மினி தியேட்டரும்தான். அதுவரையில் அபிராமியில் படம் பார்த்ததில்லை. பார்த்தவர்களெல்லாம் தியேட்டரைப்பற்றி ஆகா, ஓகோவென்று புகழ்ந்ததால், சரி முதன்முதலாக அண்ணனின் புதுப்படத்தை அங்கே பார்ப்போம். ஒற்றைக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கட்டுமென்று, ரிசர்வேஷனுக்காகக் காத்திருந்தால்......
ரிசர்வேஷன் அன்று தினத்தந்தியில் வந்த விளம்பரத்தில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அபிராமி என்ற பெயர் அகற்றப்பட்டு அசோக் தியேட்டர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஷாக். 'நேரு ஸ்டேடியத்துக்கு எதிரில் இருக்கும் அசோக் தியேட்ட்ரா?. அது பராசக்தி வெளியான பழைய தியேட்டர் அல்லவா?. அதில் சமீப காலமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் வெளியாவதில்லையே. பக்கத்திலுள்ள சௌகார்பேட்டையிலிருக்கும் மார்வாரிகளுக்காகவும், பெரியமேடு பகுதியிலிருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காகவும் அங்கு வாரம் ஒரு இந்திப்படம்தானே போடுகிறார்கள்?. அந்த தியேட்டரை ஏன் புக் பண்ணியிருக்கிறார்கள்?. ஏற்கெனவே அந்த ஏரியாவில் ராக்ஸியில் ரோஜாவின் ராஜா ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரியில் குடியரசு தினத்தன்று தீபம் வெளியாகவிருக்கிறது. அட்லீஸ்ட் மேகலா அல்லது உமாவில் வெளியிட்டிருக்கலாமே. என்னய்யா இப்படி கவுத்துட்டாங்க?' என்று எல்லோரும் உற்சாகம் குன்றிப்போனார்கள்.
சரி, அபிராமி கனவுதான் போச்சு, பைலட் தியேட்டரிலாவது புக் பண்ணுவோம் என்று ஓரிருவர் யோசனை சொன்னதை மற்றவர்கள் மறுத்தனர். 'விடுங்கப்பா, நம்ம ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸாகுது அப்புறம் என்ன கிருஷ்ணாவிலேயே புக் பண்ணுவோம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்குப்போனால் எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் கூடி நின்றது. பிராட்வே போல டல்லடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கூடி நின்றனர். அங்கேயும் ரசிகர்களிடையே அபிராமி தியேட்டர் மாற்றப்பட்ட பிரச்சினையே ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போன சில நிமிடங்களிலேயே கேட் திறக்கப்பட்டு வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே போலீஸ் வந்துவிட்டிருந்தது. வரிசையில் நின்று திரும்பிப்பார்த்தால் எங்களுக்குப்பின்னால் கியூ வளைந்து நெளிந்து அனுமார் வால் போல நீண்டிருந்தது. எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.
கியூவில் நிற்கும்போதே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'அண்ணனுக்கு இதில் க்லெக்டர் ரோல். நல்லா பண்ணியிருக்காராம். ஸ்டில்ஸெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கலக்கலாகவே இருக்கிறது' என்று ரசிகர்களுக்குள் கருத்துப்பறிமாற்றங்கள். இதற்கு முன் மற்றவர்கள் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த நாங்கள், இப்படம் வந்த காலகட்டத்தில் நாங்களே படங்களைப்பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.
ஸ்ரீகிருஷ்ணாவில் எப்போதுமே ரிசர்வேஷனுக்கு, சாதாரணமாக காட்சி நேரத்தில் குறைந்த கட்டணத்துக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்ட்டரையே பயன்படுத்துவார்கள். அங்குதான் நீண்ட கியூ நிற்க இடமிருக்கும் என்பதால். அன்றைக்கும் அப்படியே. காலை ஒன்பது மணிக்கு புக்கிங் துவங்கியது. பிளாக் டிக்கட்டை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வேஷன் செய்யும்போது ஒரு ஆளுக்கு ஐந்து டிக்கட்டுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோருமே கியூவில் நின்றோம். வரிசை மளமளவென்று முன்னேறியது. எங்களுக்கு பயம். முதல்நாள் டிக்கட் கிடைக்காதோ என்று. கவுண்ட்டர் பக்கத்திலேயே ரிசர்வேஷன் சார்ட் வைத்து, காட்சி நிறைய நிறைய ‘full' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கவுண்ட்டரை நெருங்கும்போது மேட்னி full என்று ஒட்டினார்கள். எங்களுக்கு அச்சம் எழுந்தது. நல்லவேளை நாங்கள் வாங்கும்போது மாலைக்காட்சிக்கு டிக்கட் நிறையும் தறுவாயில் இருந்தது. நாங்கள் வாங்கியபின் அடுத்த ஆள் வாங்கியிருப்பார். மாலைக்காட்சியும் full என்று ஒட்டினார்கள். எங்களுக்கோ பிடிபடாத சந்தோஷம். எதையோ சாதித்துவிட்டது போலிருந்தது.
டிக்கட்தான் வாங்கிவிட்டோமே என்று வீட்டுக்குப்போய்விட்டால் எப்படி?. கவுண்ட்டர் அருகில் நிறக் விடாமல் போலீஸ் விரட்டியதால் டிக்கட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் சற்று தூரத்தில் நின்று, மீண்டும் படத்தைப்பற்றி அதுவரை வந்திருக்கும் செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். இருந்தாலும் எங்கள் கண் முழுக்க 'சார்ட்'டில்தான் இருந்தது. வரிசை நகர நகர 'full' ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டே வந்தனர். நாங்கள் புறப்படும் முன்னரே ஸ்ரீகிருஷ்ணாவில் பதினான்கு காட்சிகள் நிறைந்தன. திருப்தியாக வீடு வந்தோம்.
அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).
பொங்கல் தினமும் வந்தது. மூன்று நாட்கள் கல்லூரி விடுமுறை. (இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிட்டோமாக்கும்). பொங்கல் கொண்டாட்டம் அதுபாட்டுக்கு ஆட்டோமாட்டிக்காக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ, 'ராஜா' படத்தில் கேரள ஆற்றுப்பாலத்தின் அருகில் உட்கார்ந்து நடிகர்திலகம் ஜெயலலிதாவிடம் சொல்வது போல, 'எப்படா மாலைவரும், மாலைவரும்'னு காத்துக்கிட்டிருந்தோம். மதிய உணவு முடிந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. மூணு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பொங்கல் தினமல்லவா?. பிராட்வேயில் 'ரோஜாவின் ராஜா' FULL. பக்கத்தில் பிரபாத்திலும் ஏதோ ஒரு படம் FULL. ஸ்ரீகிருஷ்ணாவை அடைந்தபோது மணி மூணரை இருக்கும். வெளியில் மேட்னி ‘HOUSE FULL’ போர்டு பளிச்சென்று தொங்கியது. (இடைவேளைவரை போர்டு தொங்கும். பின்னர் எடுத்து விடுவார்கள்). மெயின்கேட்டுக்கு வெளியே அந்த நேரத்திலும் அடுத்த காட்சிக்காக திரளான கூட்டம். எங்களுக்கு ஏதோ 76-இன் தேக்க நிலை மாறி, மீண்டும் 72, 73 திரும்பிவிட்டது போலிருந்தது. நல்ல அறிகுறியாகத்தெரிந்தது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியிலும் அதுவே பேச்சாக இருந்தது.
தியேட்டர் அலங்காரங்களைப் பார்த்தோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், ராஜபார்ட் ரங்கதுரைக்கு செய்யப்பட்டிருந்தது போல அதே காங்கிரஸ் கொடிகள், பேனர்கள். கட் அவுட்களுக்கு மூவண்ண நிறத்தில் மாலைகள் என கோலாகலமாக இருந்தது. ஆனால் 73 டிசம்பருக்கும் 77 ஜனவரிக்கும் அரசியலில் பெரிய மாற்றம். அப்போது (73ல்) பெருந்தலைவர் உயிருடன் இருந்தார். ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் என்ற துடிப்போடு செயல்பட்டு வந்தது. 1975 அக்டோபரில் தலைவர் மறைந்ததும், நிலைமை மாறிப்போனது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப்பிரிந்து, ஒரு அணி மகாதேவன்பிள்ளை தலைமையில் நடிகர்திலகம், மூப்பனார், மற்றும் சிவாஜி மன்றத்தினர் அனைவரும் இ.காங்கிரஸில் இணைந்தோம். இன்னொரு பிரிவினர் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் தலைமையில், அப்போது உதயமாகியிருந்த ஜனதா கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்தது. நாடெங்கும் இந்திராவின் 'இருபது அம்சத்திட்டம்' பற்றிய பிரச்சாரம் வலுப்பெற்று வந்தது. நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த எமர்ஜென்ஸி, வடநாட்டில் எதிர்ப்பையும், தென்னாட்டில் வரவேற்பையும் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது.
வடசென்னை ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரை அலங்கரித்திருந்தனர். ரசிகர்மன்றங்களின் பெரிய பெரிய பேனர்களும் சிறப்புத்தட்டிகளும், நாலாபுறமும் நடிகர்திலகத்தின் பல்வேறு வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட ராட்சத ஸ்டார்களுமாக தியேட்டரே களைகட்டியிருந்தது. மிண்ட் பகுதியைச்சேர்ந்த 'கர்ணன் கணேசன் கலைமன்றத்தினர்' மூன்று அடுக்கு பந்தல் அமைத்திருக்க, ராயபுரம் 'மாடிப்பூங்கா' ரசிகர்மன்றத்தினர் நடிகர்திலகத்தின் சாதனைகளை விளக்கி, பல பக்கங்கள் அடங்கிய சிறப்புமலர் வெளியிட்டிருந்தனர் (விலை 1 ரூபாய்). இவைபோக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதி ரசிகர்மன்றத்தினரும் தனித்தனி நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தனர்.
வழக்கமாக கிரௌனில்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணாவில் நடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மூத்த ரசிகர் ஒருவர் சொன்ன காரணம், 'ஒருகாலத்துல பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, புதிய பறவைன்னு கிருஷ்ணா நம்ம கோட்டையாகத்தான் இருந்தது. இடையில் நாம கிரௌன் பக்கம் போனதால் 'அவங்க' பிடிச்சிக்கிட்டாங்க. இப்போ மீண்டும் நாம பிடிக்கணும்னுதான் இந்த ஏற்பாடுகள்'’ அப்படீன்னார். யோசித்ததில் அவர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. (இடைப்பட்ட காலத்தில் One in Thousand, Resided Temple, Slavery Girl, Our Country, Rickshawala என்று ‘அவர்’தான் பிடித்து வைத்திருந்தார்).
நீண்ட இடைவெளிக்குப்பின் காஞ்சனா நடித்திருக்கிறார், அத்துடன் மஞ்சுளா எட்டாவது படமாக ஜோடியாக நடித்திருக்கிறார் (இடையில் ஒன்பதாவது படமாக சத்யம் படத்தில் ஜோடியில்லாமலும் நடித்தார்). இரண்டு கதாநாயகிகள் என்பதால் யார் ஜோடி, அல்லது இருவருமே ஜோடியா என்பது போன்ற கேள்விகள் அங்கே உலா வந்தன. படம் வருவதற்கு முன்பே நான்கு பாடல்கள் வெளியாகி பிரபலமாகியிருந்தன. அவற்றில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் பயங்கர HIT . அடுத்து 'என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்' மற்றும் 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடல்களும் பிரபலமடைந்திருந்தன. 'நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்' பாடல் அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
'அது என்னப்பா, அந்தப்பாடலை இப்படி துவக்கியிருக்கார்?' என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர், 'தெரியலையா, அவருக்காக வாலி 'நாளை நமதே' அப்படீன்னு பாட்டு எழுதியிருக்காரே அதுக்குப் போட்டியா இவருக்காக கண்ணதாசன் 'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்' அப்படீன்னு எழுதியிருக்கார்'னு சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அந்தப்பாடல் காட்சி படத்தில் எப்படியிருக்குமென்று பார்க்க எல்லோருக்கும் ஆவலாக இருந்தது.
ஏற்கெனவே இடைவேளை முடிந்து, படம் துவங்கியபின் மெயின் கேட் திறந்துவிடப்பட்டு, காம்பவுண்டுக்குள்தான் இவ்வளவு பேச்சுக்களும் நடந்து வந்தன. கரண்ட் புக்கிங் கவுண்ட்டர்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு போலீஸ் உதவியுடன் வரிசை நீண்டிருந்தது. ரொம்ப நாளைக்குப்பிறகு கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
மேட்னிஷோ முடிந்து மக்கள் வெளியே வரத்துவங்கினர். அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு கூட்டம் ஒதுங்கிக்கொண்டதுடன், வந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்டனர். பொதுமக்கள் அனைவருமே 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லியவண்ணம் வெளியே செல்ல, படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே நின்றவர்களோடு கலந்து நின்று படம் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள். ஒருவர் 'மஞ்சுளாதான் ஜோடி, காஞ்சனா ஜோடியில்லை' என்றார். இன்னொருவர், 'என்மனது ஒன்றுதான் பாட்டு இல்லேப்பா. அதுக்கு பதிலா அம்மானை என்ற பாட்டை சேர்த்திருக்காங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு' என்றார். இன்னும் சிலர், 'பெருந்தலைவருக்கு மாலை போட்டுவிட்டு தலைவர் ஊர்வலம் போற பாட்டு சூப்பர்பா' என்றார். தியேட்டருக்குள் பதினைந்து நிமிடங்களில் பாப்கார்ன் குப்பைகள் வாரப்பட்டு, மாலைக்காட்சிக்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை காங்கிரஸ் மகளிர் அணியினர் வாசலில் நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள்.
உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத்துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.
டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.
அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......
வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.
படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். அதற்குப்பின் ‘அவரது’ நான்கு படங்கள் வெளிவந்தன. அனைத்தும் மகாராணியிலேயே. 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது. பக்கத்தில் கிரௌன் திரையரங்கில் 'தீபம்' வெளியாகி பட்டையைக்கிளப்பியபோதும், அது இப்படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கவில்லை.
நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்.......
Thanks to Mr Karthik
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)
இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.
நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.
சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).
ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).
ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.
கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.
குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.
பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.
இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.
Thanks to Mr Raghavendar
சித்ரா தியேட்டர் என்றைக்குமே நம் தியேட்டராகவே இருந்தது. சாந்தி தியேட்டருக்கு முன் அது தான் நம் ரசிகர்களை வளர்த்தது என்றால் மிகையில்லை. பாசமலர் உள்பட பல முக்கியமான படங்களை வெளியிட்ட தியேட்டர். அங்கே மோகன புன்னகை வெளியான அன்று பழைய நினைவுகளுடனும் படத்தின் ரிசல்ட்டுடனும் உரையாடிக்கொண்டிருந்த நாட்கள் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன என்றால், நீங்கள் அதையும் தாண்டி அடியேன் வைத்திருந்த சின்ன பேனருக்கே போய் விட்டீர்கள். எனக்கு ஞாபகம் உள்ள வரையில் உத்தமன் படத்திலிருந்து சின்னச் சின்ன சார்ட்டுகளை வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முதல் நாள் தியேட்டரே கதி என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது. இதற்கெல்லாம் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த வேகம், அந்த ஆர்வம், அந்த வெறி, நடிகர் திலகத்தின் ஆகர்ஷண சக்தி நம் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது. படிப்படியாக முன்னேறினேன்.. எதில் வாழ்க்கையிலா.. இல்லை.. சார்ட்டின் டிசைனை மெருகேற்றுவதில்... அதற்காக பிளாசா தியேட்டர் வாசிலில் இருந்த முதியவர் தான் ஆபத் பாந்தவர்.. வரும் ஸ்டில்களையெல்லாம் வாங்கி விடுவோம்.. அநைத்தும் சார்ட்டில் ஏறி விடும் (இப்போது மிகவும் மனம் வருந்துகிறேன். அவற்றையெல்லாம் இன்னொரு காப்பி எடுத்திருக்கலாமே என்று ). [அடியேன் ஆரம்பித்து சில வருடங்களில் கிரிஜா அவர்களும் துவங்கி விட்டார். அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. அவருடைய உழைப்பைப் பாராட்டத் தனித்திரியே துவங்க வேண்டும்]. அப்படிப்பட்ட ஒரு சார்ட்டைத் தான் மோகனப் புன்னகைக்காக வடிவமைத்து அதைப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது. தங்களுக்கும் தங்கள் நினைவாற்றலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
மோகனப் புன்னகைக்கு வருவோம். நானும் பைலட்டில் தான் பார்த்தேன். அதற்கு முன்பாகவே சிறப்புக் காட்சியில் பார்த்து விட்டோம். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு படம் முடிந்ததும் உடனே கிளம்ப முடியாமல் உணர்ச்சி மயமாய் அமர்ந்திருந்தோம்.
இப்போது பேசப் படும் Shuttle Acting, Method Acting, போன்றவற்றையெல்லாம் தன் முதல் படத்திலேயே ஊதித்தள்ளி விட்ட நடிகர் திலகம், மீண்டும் இப்படத்தில் அதற்கான பொருளை உணர்த்தினார். குறிப்பாக தலைவன் தலைவி பாடல் simply class.
சற்றே வித்தியாசமான கதையமைப்பு, புதிய ஜோடி, சிறந்த இசை, நல்ல ஒளிப்பதிவு என பல்வேறு சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தன.
இவற்றையெல்லாம் மீறி படம் ஓடவில்லை என்றால்..
ஒரே காரணம்...
துர்ப்பிரச்சாரம்...
நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரது உடலமைப்பைப் பற்றியும் கிளப்பப் பட்ட ஏச்சுக்களும் பேச்சுக்களும் பரவலாகப் பரப்பப்பட்டதாலும் அவரது படங்களைப் பற்றி கிண்டலும் கேலியும் மிகப் பரவலாக செயற்கையாக உருவாக்கப் பட்டதாலும் பல நல்ல படங்கள் சரியான முறையில் சென்றடைய விடாமல் தடுக்கப் பட்டதாலும் தான் 80 களில் அவரது படங்கள் பாதிக்கப் பட்டன. அப்படிப் பட்ட படங்களில் ஒன்று தான் மோகன புன்னகை. குறை சொல்லுமில்லாத சிறந்த படம். 80களில் மிகச் சோதனையான காலங்களில் அவருடனேயே இருந்த பல கோடி ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் அந்த ஏளனங்களுக்கும் ஏகடியங்களுக்கும் பதில் கொடுத்து நின்ற ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் பல முறை இப்படிப்பட்ட நல்ல படங்கள் தோல்வியடைந்த போது மனம் வேதனை யடைந்திருக்கிறேன். அதே போல் தான் கார்த்திக்கும் உணர்ந்திருப்பார் என்பதை அவருடைய பதிவுகளில் அனைவரும் உணர முடியும்.
நம்மையெல்லாம் அந்த அளவிற்கு உணர்ச்சி மயமாக்கிய மோகனப் புன்னகை பாடலைப் பார்த்து நினைவுகளை அசை போடுவோமே..
Chithoor Vasudevan,
Your recent recap article of Mr. Karthik about Justice Gopinath is already re-published in the same thread HERE by Mr. Karthik himself in previous pages.
I think now you took it from Nadigarthilagam General thread. You also recap it twice.
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
தர்மம் எங்கே ரிலீஸ் நேரம் பார்த்த அனுபவம் தொடர்கிறது
கடந்த பதிவின் இறுதி பகுதி
சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
இடைவேளை நேரத்திலும் ஒரே ஆரவாரம் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அதே நேரத்தில் படம் தொடங்கவதற்கு முன்பு நடந்த ஒரு விஷயம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். படத்திற்கு வந்திருந்த ஒரு ரசிகரின் கைகெடிகாரம் காணாமல் போனது பற்றியும் அதன் காரணமாக அனைவரும் சோதனை செய்யப்பட்டதையும் சொல்லியிருந்தேன். இடைவேளை நேரத்திலும் அது தொடர்ந்தது. இதை பார்த்தவுடன் என் கஸின் நீ தனியாக உட்கார வேண்டாம். எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடு என்று சொல்லி கூட்டி போய்விட்டான். ஸ்ரீதேவியில் கீழே 90 பைசா டிக்கெட் சேர்கள் அதற்கு முந்தைய வகுப்புகளை விட சற்றே உயரமாக அமைந்திருக்கும். 90 பைசா சேரில் முதல் வரிசையில் அமர்ந்தால் முன்னால் அமரிந்திருப்ப்பவரின் தலை மறைக்கிறது என்ற பிரச்சனைக்கே இடமில்லை. இடைவேளைவரை அப்படி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த நான் இடைவேளைக்கு பிறகு பின் வரிசைக்கு சென்று கஷ்டப்பட்டு விட்டேன். 12 வயது சிறுவன் என்கின்றபோது இந்த பிரச்சனை அதிகமாகவே இருந்தது. இனி படத்திற்கு வருவோம்.
நடிகர் திலகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கூடி நிற்கும் போராளிகள் கோஷம் எழுப்புவார்கள். நாட்டை காத்த உத்தமன் வாழ்க! கொடுங்கோல் ஆட்சியை வேரறுத்த தலைவன் வாழ்க என்று வசனங்கள் வரும்போது இடைவேளையில் கிடைத்த நேரத்தில் மீண்டும் எனர்ஜி கிடைத்த மக்கள் இடைவேளைக்கு பிறகு வந்த இந்த முதல் காட்சியிலே மீண்டும் அலப்பரையை ஆரம்பித்து விட்டனர். இந்தக் காட்சி முடிந்தவுடன் ஜெஜெ பாடி ஆடும் நான்கு காலமும் உனதாக பாடல் வந்தது. [இந்தப் பாடல் காட்சி சில நாட்கள் இருக்கும். சில நாட்கள் இருக்காது. ஏன் என்று யாருக்கும் காரணம் தெரியாது] அழகாக படமாக்கப்பட்டிருந்த இந்த பாடல் காட்சியைப் பற்றி எங்களுக்கு ஒரு குறை. இந்த பாடலில் ஜெஜெ மற்றும் ஆண் வேடத்தில் குமாரி பத்மினியும் ஆடுவார்கள். குமாரி பத்மினியை ஆண் வேடத்தில் ஆட வைக்காமல் அந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் நடித்திருந்தால் மிகப் பிரமாதமாக அமைத்திருக்கும் என்பது எங்கள் எண்ணம்.
அதன் பிறகு முத்துராமன் தனக்கு பதவி கிடைக்கும் என நினைத்து சபைக்கு வருவது, அங்கே நான்கு திசைகளுக்கும் மார்த்தாண்ட நாயகர்களாக வேறு நபர்களை நடிகர் திலகம் அறிவித்து விட முத்துராமன் கோபமுற்று வெளியேறும் காட்சி. [இந்த காட்சியில் மார்த்தாண்ட நாயகர்களை நியமிக்கும்போது அவர்களை காட்டக் கூட மாட்டார்கள் என்று ஒரு முறை கோபால் எழுதியிருந்தார். ஆனால் அது தவறு. நான்கு பேர்களும் காண்பிக்கப்பட்டு அவர்கள் சுற்றி நிற்பவர்களின் கையொலியை ஏற்றுக் கொள்வதாகவே காண்பிக்கப்படும்]
முத்துராமன் தன கோபத்தை குமாரி பத்மினியிடம் காண்பித்து மெதுவாக நடிகர் திலகத்திற்கு எதிராக மாறும் காட்சிகள். அதற்கு நம்பியாரின் படையில் சிப்பாயாக இருந்த செந்தாமரை அவரிடம் சேர்ந்து அவரை மெதுவாக மாற்றுவது போன்ற காட்சிகள் வரும். இதற்கு நடுவில் நடிகர் திலகம் -ஜெஜெ இடையிலான ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி நன்றாக workout ஆகியிருக்கும். ஒவ்வொரு முறையும் நடிகர் திலகம் ஜெஜெவிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்ல விழைய அவரும் என்ன என்று ஒரு ஹஸ்கி குரலில் கேட்பது நன்றாக ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று அவர்களை நெருங்க விடாமல் தடுக்க ஜெஜெ ஏமாற்றத்துடன் செல்வது எல்லாம் மக்கள் ரசித்துப் பார்த்தனர்.
குமாரி பத்மினி முத்துராமனை கூட்டிக் கொண்டு மாளிகைக்கு வரும் காட்சி. தங்கையை பார்த்தவுடன் பரவசமடையும் நடிகர் திலகம், முத்துராமன் ஏதோ ஒன்றை பேச விரும்புவதை உணர்ந்து என்ன என்பதை முகபாவத்திலே கேள்வியாக மாற்றும் அந்த லாவகம் படபடவென கைதட்டல்கள் விழுகிறது. முத்துராமன் எதிர்பார்ப்பது பதவி என்று தெரிந்ததும் நடிகர் திலகம் கேமராவைப் பார்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களே பதவியில் இருப்பது நாட்டிற்கு நல்லதில்லே என்பார். கைதட்டல் இடியாய் இறங்கியது. நான் பதவியில் இருந்தாலென்ன நீ இருந்தாலென்ன என்று நடிகர் திலகம் முத்துராமனிடம் சொல்லும்போது அதற்கு முத்துராமன் "சேகர் முன்னாடியெல்லாம் உனக்கு பேசவே தெரியாதுன்னு சொல்வாங்க! இப்போ எவ்வளவு அழகா பேசறே" என்றவுடன் ஒரு சிறு புன்னகையுடன் நடிகர் திலகம் "இப்போலாம் மக்கள் நான் பேசுவதை கவனித்து ஏற்றுக் கொள்கிறார்கள்" என்பார். தியேட்டரே இரண்டுபட்ட கட்டம் அது.
இதற்கு பின் முத்துராமன் மேலும் கொதிப்படைந்து போவது, நம்பியார் படை தலைவனாக இருந்த எஸ்வி ராமதாஸ் மற்றும் செந்தாமரையும் ஒரு கூட்டதை சேர்த்து முத்துராமனை தலைவராக்குவது என்று காட்சிகள் விரிந்தன.
இதன் பின் மக்கள் சிலர் ஒரு குழுவாக வந்து முத்துராமனின் அராஜகம் பற்றி சொல்ல முதலில் அவர்கள் சொல்வதை நம்ப மறுக்கும் நடிகர் திலகம் அவர்களை சத்தம் போட சட்டென்று அவருக்கே முன்னொரு நாளில் இதே போல் தானும் நம்பியாரிடம் மோதியது நினைவிற்கு வர, அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி அனுப்பி விட்டு உள்ளே சென்று துப்பாக்கியை எடுப்பார். தடுக்கும் ஜெஜெவை தள்ளி விட்டு விட்டு போவார். உங்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் என்று கேட்கும் ஜெஜெவிடம் தனி மனிதன் போகலாம். ஆனால் என் கொள்கை தொடரும். அதை உயர்த்திப் பிடிக்க மனிதர்கள் வருவார்கள் என்பார் நடிகர் திலகம். மக்களுக்கு வேறொரு தலைவன் கிடைக்கலாம் ஆனால் எனக்கு என்று ஜெஜெ கேட்கும்போது இங்கே ஒரே ஆரவாரம்.
முறை தவறி நடக்கும் முத்துராமனை தட்டிக் கேட்டு [அப்போதும் ஒரு சண்டை உண்டு. நீளமாக இல்லாமல் உடனே முடிந்து விடும். இருந்தாலென்ன நமது ரசிகர்களுக்கு அலப்பரை செய்ய சொல்லியா கொடுக்க வேண்டும்?] அவரை கொல்லாமல் பிழைத்துப் போ என்று பார்வையாலே மிரட்டி விட்டு போவார் நடிகர் திலகம். கேட்கணுமா?
இதற்கு நடுவே நடிகர் திலகம் ஜெஜெவிடம் தன காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் வரும் பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே பாடல் காட்சி. மீண்டும் தியேட்டர் அதகளமானது. ஒரு காட்சியில் நடிகர் திலகம் ஜெஜெயிடையே நடக்கும் ஒரு உரையாடலின்போது ஜெஜெ நடிகர் திலகத்தைப் பார்த்து பெருந்தலைவரே என்பார். தியேட்டர் மீண்டும் அலறியது.
சூழ்ச்சிகாரர்களின் சதி புரியாமல் நடிகர் திலகத்தை ஊருக்கு வெளியே உள்ள பாழடைந்த கோட்டைக்கு தனியே வர சொல்லும் முத்துராமன், தனியே வரும் நடிகர் திலகத்தை கொல்ல ஆணையிடும் ராமதாஸ், திகைத்து போய் என்ன சொல்கிறாய் என்று முத்துராமன் கேட்க அதுவரை கூட்டத்திலே ஒரு ஆளாக மறைந்து நிற்கும் நம்பியார் தன்னை வெளிபடுத்திக் கொள்ள அந்த சஸ்பென்சை மக்கள் ரசித்தார்கள். துரோகி என்று நம்பியாரை பார்த்து முத்துராமன் சீற " நீதான் துரோகி. நாளை வரலாறு உன்னைத்தான் பழிக்கும்" என்று பதிலடி கொடுக்கும் வசனமெல்லாம் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இறுதிக் காட்சி. துப்பாக்கிகள் முழங்க கோட்டையின் திறந்த வெளி மைதானத்தில் நடிகர் திலகம் ஓடி தப்பிக்கும் காட்சி [இந்த காட்சியின் படமாக்கம் சற்றே சொதப்பியிருக்கும். சற்று மெனக்கெட்டிருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்] கோட்டைக்கு உள்ளே ஒரு ஹாலில் தொட்டி போன்ற அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில விஷப்பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்க மேலிருந்து ஜெஜெவை தொங்கவிட கயிறு மெதுவாக அறுந்து கீழே வர நடிகர் திலகம் நம்பியாரிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் த்ரில்லாகவே மக்கள் பார்த்தனர். இறுதியில் நம்பியார் தொட்டிலில் விழுந்து பாம்புக்கடி ஏற்று உயிர் துறப்பார். தர்மம் எங்கேன்னு கேட்டவங்களுக்கெல்லாம் தர்மம் இங்கேன்னு சொல்ல வச்சுட்டே சேகர் என்று முத்துராமன் சொல்ல கரகோஷம்தான்.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போதும் ஒரே ஆரவாரம்தான். படம் பெரும் வெற்றி பெறும் என்ற கணிப்பே எனக்கு இருந்தது. அதற்கேற்றார்போல முதல் வாரத்தில் தியேட்டர் பக்கமே போக முடியவில்லை, அப்படி கூட்டம் என்று கஸின் வந்து சொல்லிக் கொண்டேயிருந்தான். முதல் பத்து நாளைக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அதன் பிறகு படத்திற்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது என்ற பேச்சு வந்தது. படத்தின் கதை இடைவேளையோடு முடிந்து விட்டது. அதன் பிறகு வந்தவற்றை பொது மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. 1972-ஐ பொறுத்தவரை 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொடும் வாய்ப்பை இழந்த ஒரே படம் என்ற பட்டதை தர்மம் எங்கே பெற்றது. 8 வார படமாக ஆனாலும் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் படம் தர்மம் எங்கே!
படம் வெளிவந்து 36 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் AC திருலோக்சந்தரிடம் பேசிக் கொண்டிருந்தபோது எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்தப் படம் 100 நாட்கள் ஒடவிலையே என்ற வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். ஒரு ஆங்கிலப் படத்தின் inspiration-ஐ வைத்துதான் தர்மம் எங்கே படத்திற்கு திரைக்கதை அமைத்தோம். அதில் இறுதியில் கதாநாயகன் [Lawrence Oliver தான் நாயகன் என்று அவர் சொன்ன ஞாபகம்] துப்பாக்கி குண்டுகளால் சல்லடை கற்களாய் துளைக்கப்பட்டு உயிர் விடுவான். அவனின் நல்ல மனதை புரிந்துக் கொள்ளாமல் அவனை பழி வாங்க துணை போன அவன் மைத்துனன் தன தவறை உணர்ந்து திருந்துவதுதான் கிளைமாக்ஸ். ஆனால் நாங்கள் நாயகனை சாகடிக்க விரும்பவில்லை. அவன் தப்பிப்பதாக மாற்றி அமைத்தோம். ஒரு வேளை சோக முடிவாக அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ என்றார் ACT.
எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.
(தொடரும்)
அன்புடன்
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...5a15cdbb5775fe
கல்தூண் நூறாவது நாள் விழா..
மூப்பனாரின் பின்புறம் இருப்பவர் கொண்டல்தாசன். அவருக்கு இடப்புறம் இருக்கும் என் நண்பர் ரமணி... 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி...கொண்டல்தாசனுக்கு வலப்புறம் இருப்பவர் எம்.எல்.கான்.
முகநூல் நண்பரின் இணையப் பக்கத்திலிருந்து
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி
எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தர்மம் எங்கே இப்படி அலப்பரை கொடுத்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் இதன் பாதிப்பு சிறிது கூட இல்லாமல் பட்டிக்காடா பட்டணமா தன வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதன் வசூல் சூறாவளியில் சிக்கி முன்னர் நிறுவப்பட்டிருந்த அனைத்து வசூல் மைல் கற்களும் தகர்ந்து வீழ்ந்தன.
இதனிடையில் 1971-ம் ஆண்டு திரைப்பட தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பின்னணியில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை துக்ளக் இதழ் தொடர்ந்து எழுதியது. அப்போது மாதமிருமுறையாக வெளிவந்துக் கொண்டிருந்த துக்ளக் [1972 ஜூலை 1,15 மற்றும் ஆகஸ்ட் 1 என்று நினைவு] மூன்று இதழ்களில் இது பற்றிய விவாதங்களும் பேட்டிகளும் இடம் பெற்றன. 1972 மே முதல் வாரத்திலேயே விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும் துக்ளக் இந்த விஷயத்தை கையிலெடுத்ததும் ஒரு பரபரப்பு நிலவியது. நடிகர் திலகத்திற்கு சவாலே சமாளி திரைப்படத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய சிறந்த நடிகர் விருது கிடைக்காமல் போனதில் ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்தம் இருந்தாலும் இவற்றையெல்லாம் என்றுமே ஒரு பொருட்டாக கருதாத நடிகர் திலகம் தான் தலைவராக இருந்த தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் சார்பாக சிறந்த நடிகர் விருது பெற்ற எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். ஜூலை 30 ஞாயிறன்று மாலை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவின் மூலமாக தன் பெருந்தன்மையை நிறுவினார்.
விவசாயிகள் போராட்டம் அதன் காரணமாக நடந்த உயிரிழப்பு போன்றவற்றால் அந்த வருடம் ஜூலை 15 தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று பெருந்தலைவர் முடிவெடுத்தார், வந்தது ஜூலை 23. அதற்கு சரியாக ஒரு வருடம் முன்பு அதே நாளில்தான் [1971 ஜூலை 23] ஒரு வருங்கால தூண் வெட்டி சாய்க்கப்பட்டது. மாணவர் திலகமாக திகழ்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தலைவர் உதயகுமார் அரசியல் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நாள். 1971-ல் ரஷ்ய மையால் கிடைத்த வாழ்வை வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்தினர் மாற்று அரசியல் கட்சியினரை தங்கள் அரசியல் எதிரிகளாக பாவித்து அவர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.
அரசு நிர்வாகத்தை செவ்வனே நடத்துவதை விட தங்களுக்கு தாங்களே பட்டங்கள் கொடுத்துக் கொள்வதிலும் பட்டங்களை தேடி சென்று வாங்குவதிலும் மிகுந்த விருப்பம் கொண்ட அன்றைய ஆளும் கட்சியினர் அன்றைய முதல்வருக்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தனர். அரசின் தயவை வேண்டி நின்ற தனியார் பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகம் அதற்கு இசைவு தந்து பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. ஜனநாயக முறைப்படி கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த உதயகுமார் கொடூரமாக தாக்கப்பட்டு அங்கேயிருந்த குளத்தில் தூக்கி எறியப்பட்டு மறுநாள் காலை பிணமாக மிதந்தார். இறந்து போனது தங்கள் மகன்தான் என்று சொல்லி கதறி அழும் உரிமை கூட அந்த மாணவனின் பெற்றோருக்கு மறுக்கப்பட்டது. இறந்து போனது தங்கள் மகனே அல்ல என்று சொல்ல வைக்கப்பட்டார்கள். இப்படி பிணத்தின் மீது பட்டமளிப்பு விழா நடத்தி முடிந்தபின் மாணவர்கள், ஸ்தாபன காங்கிரஸ் மாணவர் அணி மற்றும் பொதுமக்கள் மற்றும் ஒரு சில நடுநிலை ஏடுகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பிக்க அரசு எந்திரம் பணிந்து ஒரு விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் என்றில்லை. தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் அனைவருக்கும் எதிராக வன்முறை அடக்குமுறை கட்டவிழுத்து விடப்பட்டது சேலத்திலே ராமர் முதலான இந்து கடவுள்கள் படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்திய வீரமணி கூட்டத்தின் மேல் எந்த நடவடிக்கையும் கிடையாது. அந்த ஊர்வலத்தை புகைப்படம் எடுத்து போட்ட துக்ளக் பத்திரிக்கை பறிமுதல் செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியையும் கட்சியையும் விமர்சிக்கும் படம் என்பதனால் முகமது பின் துக்ளக் படம் வெளிவர எத்தனை தடைகள் உண்டோ அத்தனையும் செய்யப்பட்டது. படத்தை வெளியிடாமல் இருக்க சோ அவர்கள் மீது சாம தான பேத தண்ட முறைகள் பயன்படுத்தப்பட்டது. திரையுலகை சேர்ந்த சிலரே சோவை அழைத்து படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் சொன்னார்கள். பின்னர் அதே நிலைக்கு தாங்களும் ஆளானார்கள் என்பது வரலாறு.
சிம்சன் தொழிற்சாலையில் தங்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவை தொடங்க முடியாமல் போனபோது அங்கே தொழிற்சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த குருமூர்த்தியை நீக்குவதற்கு சதி செய்து தங்களது ஆளான காட்டூர் கோபால் அங்கே திணிக்கப்பட்டு தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் வண்ணம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு பிறகு அந்த நிறுவனத்திற்கு எதிராக ஸ்ட்ரைக் வந்தபோது வளாகத்திற்கு உள்ளே கொலைவெறி தாக்குதல் நடத்தி அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு நிறுவனம் லாக் அவுட் செய்ய 450 தொழிலாளிகள் வேலை இழந்த சாதனையை செய்த பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். இவையெல்லாம் கூட 1972 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடந்த சம்பவங்கள்தான். இந்த பிரச்சனை நீண்ட காலம் தொடர்ந்து 1976 வரை போனது. 1974-ல் தொழிலாளிகளின் ரகசிய வாக்கெடுப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த குசேலர் தலைவரானது அதன் பின் நடந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் எல்லாம் நீண்ட வரலாறு. அதையெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது.
இதையெல்லாம் நடிகர் திலகத்தின் கலைப் பயணத்தில் குறிப்பிட காரணம் எப்படிப்பட்ட எதிர்மறை சூழலில் நடிகர் திலகம் சாதித்தார் என்பதையும் தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியினரால் உருவாக்கப்பட்ட வன்முறை நெருப்பாற்றில் எப்படி நீந்தி கரையேறினார் நடிகர் திலகம் எனபதையும் வாசகர்கள் உணரவே இந்த விஷயங்களையெல்லாம் கோடிட்டுக் காட்டுகிறேன். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விஷயங்களும் எப்படி பாதிக்கப்பட்டன என்பதற்கு உதாரணம் 1970 அக்டோபர் 25 அன்று சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டதும் தாக்கியவர்களை விட்டு விட்டு அப்போது தியேட்டர் வளாகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் கூற வேண்டும்.
ஒரு அரசாங்கத்தை தன் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சி அரசு நிர்வாகத்தை எந்தளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு மீகப் பெரிய உதாரணம் மதுரையில் ஆகஸ்ட் 4,5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற திமுக மாநாடு. அன்றைய மதுரை மேயர் முத்து மாநகராட்சி நிர்வாகத்தையும், மாநகராட்சி ஊழியர்களையும் கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்தியதை மக்கள் திகைத்துப் போய் பார்த்தனர். அங்கே மாநாட்டிற்காக விளையாடிய பணம் அன்றாடம்காய்ச்சிகளாக இருந்த ஆளும்கட்சியினர் எப்படி கோடிஸ்வரர்களாக மாறி விட்டனர் என்று பெருந்தலைவர் குற்றம் சாட்டுவது முழுக்க முழுக்க உண்மை என்பதையும் மக்கள் புரிந்துக் கொண்டனர்.
இந்த மாநாட்டில் அன்றைய ஆளும் கட்சியில் இருந்த உட்கட்சி பூசலும் பகிரங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. மாநாட்டு ஊர்வலத்தை முதல் நாள் முக முத்து தொடங்கி வைத்தபோதே ஆரம்பித்த பிரச்சனை ஊர்வலத்தை விளக்குத்தூண் அருகே நின்று பார்வையிட்ட அன்றைய முதல்வர், அவர் நின்றிருந்த மேடைக்கு முன்னால் சென்று நின்றுக் கொண்டு நகராமல் ஒரு குழுவினர் எம்ஜிஆர் அவர்களை வாழ்த்தி கோஷம் போட்டது, முதல் நாள் ஊர்வலத்தை துவக்கி வைக்க வருவதாக இருந்த எம்ஜிஆர் அவர்கள் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மட்டும் வந்துவிட்டு மேடையில் பேசி விட்டு புறப்பட்டு போய்விட அவருக்காக வந்த கூட்டம் அவர் சென்றவுடன் மாநாட்டு பந்தலை விட்டு வெளியேறி விட முதல்வர் திமுக தலைவர் மு.க. மேடையில் மயங்கி விழ அரசியல் பார்வையாளர்களுக்கு நடப்பது நன்றாகவே புரிந்தது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு [அக்டோபர் 72-ல்] திமுகவின் முக்கிய தலைவர்கள் முதல்வர் உட்பட பல அமைச்சர்களும் ஊழல் செய்து விட்டனர் என்று சொல்லி வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த மாநாட்டில் பேசும்போது வெளியேறியபோது அவர் யாரையெல்லாம் ஊழல் வாந்திகள் என்று சொன்னாரோ அவர்கள் அனைவரும் மேடையில் வீற்றிருக்க " இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என்று காமராஜர் கூறுகிறார். நீங்கள் சொல்லுங்கள் இவர்கள் ஊழல் செய்தவர்களா" என்று கூட்டத்தை பார்த்து கேட்க கூட்டம் இல்லையென்று சொல்ல " காமராஜர் வேண்டுமென்றே சொல்கிறார்" என்று ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். [மாநில சுயாட்சி கிடைக்காவிட்டால் ராணுவத்தை சந்திப்பேன் என்று சொன்னதெல்லாம் தனி கதை].
இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.
(தொடரும்)
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
சென்ற பதிவில் தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் என்று குறிப்பிட்டிருந்தேன். மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.
இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.
அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் உயரிழந்தது பற்றி பேசினோம். அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.
தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,
இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் சுட்டிக் காட்டியது என்னவென்றால் தர்மம் எங்கே மூலமாக நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.
தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.
இந்த விழாவின் புகைப்படங்கள் 9 மாதங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன அந்த படங்களை மீண்டும் நான் இப்போது பதிவு
செய்திருக்கிறேன். இந்த புகைப்படங்களை 9 மாதத்திற்கு முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவிறக்கம் செய்த வினோத் சாருக்கு நன்றி.
இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
http://i61.tinypic.com/1zlrkpd.jpg
(தொடரும்)
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தவப்புதல்வன் - முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு. முக்தா ஸ்ரீனிவாசன் அதிகமாக பள்ளிப்படிப்பு படிக்காதவர். சிறு வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போக நேர்ந்தவர். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்திலே இருந்தவர். பின் காங்கிரசின் தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனதில் வேலை பார்த்து பின் எஸ். பாலச்சந்தர் போன்றவர்களிடம் assistant இயக்குனராக அந்த நாள் போன்ற படங்களில் பணியாற்றி முதன் முதலாக முதலாளி படத்தை இயக்கினார். பின் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களான நினைவில் நின்றவள், தேன் மழை, போன்றவற்றை இயக்கிய பிறகு நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்தார். முதலில் நிறை குடம் அதன் பிறகு அருணோதயம். இதற்கு இடையில் ஜெய்சங்கரை வைத்து பொம்மலாட்டம், ஆயிரம் பொய் போன்ற படங்களையும் எடுத்தார். மிக மிக சாதாரண நிலைமையிலிருந்து முன்னேறி வந்தவர் என்பதால் படத்தயாரிப்பில் மிக கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இவருக்குண்டு. அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் பட்ஜெட் போட்டு படத்தை சிக்கனமாக முடிக்கக் கூடியவர் என்ற பெயர் இவருக்கு திரையுலகில் உண்டு. இவரும் இவரது மூத்த சகோதரர் முக்தா ராமசாமியும் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எந்த சூழலிலும் சரியாக பிரதி மாதம் 1-ந் தேதி சம்பளம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவர்களின் கட்டுப்பாடான இந்த நடைமுறைதான் விசி சண்முகத்தை கவர்ந்தது என்று சொல்லுவார்கள். ஒரு முறை பிலிமாலயா மாத இதழில் ஜீனியஸ் கேள்வி பதிலில் சிவாஜியை வைத்து படமெடுக்க என்ன தகுதி வேண்டும் என்ற கேள்விக்கு "ஒன்று பாலாஜியை போல் இருக்க வேண்டும். இல்லை முக்தா ஸ்ரீநிவாசன் போல் நடக்க வேண்டும்" என்று பதில் சொல்லியிருந்தார்கள்.
முதலில் சொன்னது போல் முக்தா நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான அருணோதயம் 1971 மார்ச் 5-ந் தேதி வெளியானது. மிக சரியாக இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் பொது தேர்தல் நடைபெற்ற நேரத்தில் வெளியானதால் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த 1971 ஜனவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் வெளியான தகவலை பார்த்தோம். 90 நாட்களில் இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா பிராப்தம் சுமதி என் சுந்தரி என்று ஆறு படங்கள் ரிலீஸ் ஆன நிலையிலும் பெருவாரியான ஊர்களில் 8 வாரங்களை கடந்து ஓடிய அருணோதயம் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றது. உடனே தனது அடுத்த படத்திற்கு date வாங்கிவிட்டார் முக்தா.
முக்தா எடுத்த ஆரம்ப கால நடிகர் திலகம் படங்களிலெல்லாம் ஒரு நோயை அடிப்படையாக கொண்ட நாயகன் அல்லது நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லியிருப்பார்கள். எனவே தவப்புதல்வன் படத்திற்கும் அப்படி ஒரு நோயை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருந்தார் தூயவன். மாலைக் கண் நோய் என்று தமிழில் சொல்லப்படும் Night Blindness தான் இங்கு மெயின் விஷயம். தன் குடும்பத்தில் பாரம்பரியமாக வரும் இந்த நோய் தன் ஒரே மகனுக்கும் வந்துவிடக் கூடாது என தவிக்கும் தாய், தனக்கு ஏற்கனவே அந்த நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் தாய் அதை தாங்க மாட்டாள் என்பதனால் தாயிடம் மறைக்கும் மகன், டாக்டராக பணிபுரியும் நாயகனின் முறைப்பெண், நாயகனின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவனின் இந்த நோயைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு அவனை பிளாக்மெயில் செய்யும் மற்றொரு பெண் என்று சுவையாக பின்னப்பட்டிருந்த கதை.
படம் வெளிவருவதற்கு முன் முழு கதையும் தெரியாது என்ற போதிலும் படத்தைப் பற்றிய ஒரு outline பல பத்திரிக்கைகள் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. அன்றைய நாளில் நடிகர் திலகத்தை வைத்து ஆரம்பிக்கப்படும் புதிய படங்கள் அனைத்தும் வண்ணப் படங்களாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த படம் கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும் அன்றைய நாட்களில் பத்திரிக்கைகளில் வெளிவந்த நடிகர் திலகத்தின் ஸ்டில்ஸ் அட்டகாசமாக இருந்தது. பல ஸ்டில்களில் ஜிப்பா அணிந்து காட்சியளித்த நடிகர் திலகம் நிச்சயமாக திராவிட மன்மதனாகவே தோன்றினார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் கூட ஒரு நம்பிக்கை இருந்தது.
சென்ற பதிவில் பார்த்தது போல் இந்த படம் 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு வெளிவரும் நேரம்தான் நடிகர் திலகத்தின் அன்னையார் ராஜாமணி அம்மையார் ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.என்பதையும் பார்த்தோம். இதன் காரணமாக படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஒரு சில ரசிகர்களுக்கு ஐயம் ஏற்பட்டபோதிலும் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் வெகு தெளிவாக இருந்த நடிகர் திலகமும் விசி சண்முகமும் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுமாறு சொல்லிவிட்டார்கள். அதன்படி 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி சனிக்கிழமை தவப்புதல்வன் வெளியானது.
மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களான காத்தவராயன், பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாசமலர், புதிய பறவை, தில்லானா என்று தொடர்ந்து வெளியான சிந்தாமணியில் நடுவில் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. 1968 ஜூலையில் வெளியாகி 132 நாட்கள் ஓடிய தில்லானாவிற்கு பிறகு சிந்தாமணியில் வெளியான நடிகர் திலகத்தின் படம் என்றால் அது தவப்புதல்வன்தான். இடையில் 1971 ஜூலையில் நடிகர் திலகத்தின் தேனும் பாலும் வெளியானது என்ற போதிலும் அது நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த காரணத்தினால் அதை பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆகவே வெகு நாட்களுக்கு பிறகு சிந்தாமணியில் வெளியாகும் நடிகர் திலகம் படம் என்ற பெருமையையும் தவப்புதல்வன் பெற்றது.
ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். அந்த 1972-ம் வருடத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் சனிக்கிழமையன்றே வெளியானது. 1972 மார்ச் 11 சனியன்று ஞான ஒளி, மே 6 சனிக்கிழமை பட்டிக்காடா பட்டணமா, ஜூலை 15 சனிக்கிழமை தர்மம் எங்கே, ஆகஸ்ட் 26 சனிக்கிழமை தவப்புதல்வன் என்று வெளியானது. என் நினைவிற்கு எட்டியவரை வேறு எந்த வருடத்திலும் இது போல் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியானதாக தெரியவில்லை.
(தொடரும்)
அன்புடன்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
படம் வெளியான அன்று எனக்கு ஸ்கூல் இருந்ததால் எனக்கு ஓபனிங் ஷோ போக முடியவில்லை. வழக்கம் போல் என் கஸின் போய் விட்டான். மதியம் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் படம் எப்படி என்று அவனிடம் கேட்க அதற்குள் மார்னிங் ஒபனிங் ஷோ பார்த்து விட்டு வந்திருந்த அவன் படம் நன்றாக இருப்பதாக சொன்னான்.நான் அதற்கு முன்பு வந்த படத்தின் ரிசல்ட்டை மீண்டும் அந்த கேள்வியை கேட்க அவன் புரிந்துக் கொண்டு முந்தைய படமான தர்மம் எங்கே படத்தை மனதில் வைத்து இதை கேட்கிறாய். அந்த படம் சரியில்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ சில காரணங்களினால் படம் சரியாக போகவில்லை. அனால் இது அப்படி ஆகாது என்றான். அன்று மாலையே படம் பார்த்த வேறு சில நபர்களிடம் கேட்க அனைவருமே நல்ல ரிப்போர்ட் சொன்னார்கள். மனதில் நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் தர்மம் எங்கே படத்திற்கு வந்த கூட்டம் அன்று டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது அரசால் புரசலாக வீட்டிற்கு செய்தி போய் விட்டதால் முதல் இரண்டு நாட்களான சனி ஞாயிறு படத்திற்கு போக அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் திங்களன்று ஸ்கூல். வருத்தமாகவும் கடுப்பாகவும் இருந்தது. முதல் வாரத்தில் ஆறாவது நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமையன்று ஸ்கூல் லீவ். அன்று பிள்ளையார் சதுர்த்தியா அல்லது கோகுலாஷ்டமியா என்பது நினைவில்லை. ஆனால் ஸ்கூல் லீவ். நினைவிருக்கிறது. அன்று போக வேண்டும் என்று வீட்டில் கேட்க ஓகே சொல்லி விட்டார்கள். எப்போதும் கஸினுடன் போகும் நான் இந்த முறை வித்தியாசமாக என் தந்தையுடன் சென்றேன். அன்று விடுமுறை என்பதனால் அவர் கூட்டி சென்றார். முதலில் கூட வருவதாக சொன்ன கஸின் வேறு வேலை வந்துவிட்டதால் எங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போய்விட்டான். நான் கூட படத்திற்கு கூட்டம் எப்படி இருக்குமோ என்று யோசனையாக் போனேன். ஆனால் என் எதிர்பார்ப்பையும் மீறிய கூட்டம் . கீழ வெளி வீதியில் அமைந்திருக்கும் சிந்தாமணி டாக்கீஸின் இரண்டு பக்கவாட்டு சந்துகளில் மிக நீண்ட queue நிற்கிறது. கஸின் டிக்கெட் வாங்கி கொடுத்து விட்டதால் queueவில் நிற்காமல் நேரே உள்ளே போய் விட்டோம்.
அந்த வருடம் அது வரை வெளியான நான்கு படங்களுமே பெரிய அலப்பரையில் பார்த்த எனக்கு தவப்புதல்வன் படம் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவத்தை தந்தது. அன்றைய மாட்னி ஹவுஸ் புல். அதில் பெருவாரியான நபர்கள் பொது மக்களே. ரசிகர்கள் என்ற வகையில் பார்த்தால் அந்த எண்ணிக்கை குறைவுதான். அமைதியாக ரசிக முடிந்தது என்று சொன்னாலும் கைதட்டல்களுக்கும் ஆரவாரத்திற்கும் குறைவில்லை. நடிகர் திலகத்தின் பெயர் போடும்போது, அவரை முதலில் திரையில் காட்டும்போது அது போன்ற இடங்களில் பலமான கைதட்டல்கள் விழுந்தன. அதே போல் பாடல் காட்சிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் அனைத்து பாடல்களுக்கும் நல்ல response.
முதல் பாடல் Love is fine darling பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் சில நடக்கும், ஸ்டெப் வைக்கும், trumpet வாசிக்கும் அந்த போஸ் இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. அடுத்தது இசை கேட்டால் பாடல். ஹிந்துஸ்தானி பாடகர் அக்தர் கானுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் விஜயாவிடம் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பிறகு அக்தர் கானை போட்டியில் சந்திக்கிறேன் என்று சொல்லும் நடிகர் திலகத்திடம் அக்தர் கான் என்ன இப்போ உங்களை தான்சேன் கூட ஜெயிக்க முடியாது என்பார் விஜயா. யார் அது தான்சேன் என கேட்கும் நடிகர் திலகத்திடம் தான்சேன் கூறுவார் விஜயா. அப்போது கனவு பாடலாக விரியும் அற்புத பாடல் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல். [இது தீப் எனும் ஹிந்துஸ்தானி ராகத்தை அடிப்படையாக கொண்டது என்று சொல்லுவார்கள்]. முதலில் சிதார் வாசித்துக் கொண்டே பாட ஆரம்பிக்கும் நடிகர் திலகம் பல்லவி முடிந்ததும் எழுந்து விஜயா படுத்திருக்கும் படுக்கைக்கு அருகில் வந்து அங்கே நிற்கும் அரண்மனை வைத்தியரை பார்த்து கண்ணாலேயே எப்படி இருக்கிறது என்று கேட்க அவர் முன்னேற்றம் இல்லை என்ற வகையில் தலையசைக்க என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் என்று சரணத்தை ஆரம்பிக்கும் நடிகர் திலகம் அப்போது காட்டும் சில கை அசைவுகள், அந்த சரணத்தை முடித்து விட்டு ஏழாம் கடலும் வானும் நிலவும் என்றவாறே ஸ்டைலிஷ் நடை போடும் நடிகர் திலகத்திற்கு விழுந்தது அப்ளாஸ். அது அடங்குவதற்குள்ளாகவே அங்கே சாத்தி வைத்திருக்கும் கம்பிக்களை வளைத்து இசை என்னிடம் உருவாகும் என்ற வரியில் நாணேற்றுவது போல் காண்பித்து இசை என்னிடம் உருவாகும் என்று கையை மேலே உயர்த்துவார். அதற்கும் செம அப்ளாஸ்,
உலகின் முதல் இசை தமிழிசையே பாடலில் வெள்ளை ஜிப்பா அணிந்து வேட்டி கட்டி இருப்பார். உண்மையிலே அந்த தோற்றத்தில் அவரை வெல்லக்கூடிய அழகு யாருக்குமே கிடையாது என்றே தோன்றும். இந்த போட்டி பாடலில் சரணத்தில் பாடும்போது இரண்டு வரி வரும்
மானிட ஜாதியும் மயங்கி வரும்; அந்த
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
அந்த இரண்டாவது வரியை அவர் இரண்டாவது முறை பாடும்போது ட்ராலியில் வரும் காமிராவைப் பார்த்து தலையை சாய்த்து கன்ன கதுப்பும் கண்களும் ஒரு போல அசைந்து ஒரு சின்ன மந்தகாச புன்னகையை உதிர்ப்பார். அதற்கும் பலமான கைதட்டல்கள்.
நான் எப்போதும் சொல்வதுண்டு. வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட வசீகரம் அவரது கை அசைவில் உண்டு என்று. அது பார்வையாளர்களை அப்படியே ஆகர்ஷித்து விடும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றபோதினும் ஒரு விஷயம் எனக்கு நினைவிற்கு வருகிறது.
1980-களின் நடுப் பகுதி. நான் கேரளத்தில் வேலை நிமித்தமாக இருக்கும் காலம். கோட்டயம் நகரத்திற்கு சற்று வெளியே எர்ணாகுளம் போகும் பாதையில் நிர்மலா என்றொரு தியேட்டர் அமைந்திருந்தது. அங்கே முழுக்க முழுக்க தமிழ் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். நகரில் மொத்தமே ஐந்து திரையரங்குகள்தான் என்பதனாலும் அந்த ஐந்தில்தான் மலையாளம், தமிழ், ஹிந்தி சில நேரம் ஆங்கில படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பதனால் நகருக்குள் தியேட்டர் கிடைக்காத தமிழ் படங்கள் இந்த தியேட்டரில் வெளியாகும். அவை இல்லாத போது இந்த நிர்மலா தியேட்டரில் பழைய தமிழ்ப் படங்களும் திரையிடுவார்கள். அப்படி அங்கே தங்க சுரங்கம், ரத்த திலகம், மூன்று தெய்வங்கள் போன்ற பல நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்திருக்கிறேன். மூன்று தெய்வங்கள் போட்டிருந்தபோது ஒரு சாதாரண வேலை நாளன்று மாலைக்காட்சிக்கு போயிருந்தேன். ஓரளவிற்கு நல்ல கூட்டம். 99% பொது மக்கள். நடிகர் திலகத்தை முதன் முதலில் காட்டும்போது கூட வெகு சிலரே கைதட்டினார்கள். வசந்தத்தில் ஓர் நாள் பாடல் வந்தது. அதில் விஷ்ணுவாக வரும் நடிகர் திலகம் வலது கையை உயர்த்தி ஆசி கூறுவதாக வரும் அந்த ஷாட் திரையில் வந்தபோது படபடவென்ற பலமான கைதட்டல். அதுவும் spontaneous ஆக விழுந்த கைதட்டல்கள். ஜாதி,மத,இன, மொழி மாநில, நாடு போன்ற அனைத்து வித்தியாசங்களையும் தாண்டியவர் நடிகர் திலகம் என்பதற்கு அன்று நானே நேரிடை சாட்சியாக இருந்தேன்.
மீண்டும் தவப்புதல்வனுக்கு வருவோம். படத்தின் மற்றொரு பாடலான கிண்கிணி கிங்கிணி மாதா கோவில் மணியோசை பாடல் சற்றே உணர்சிகரமாக இருக்கும். சோகத்தை நகைசுவை போல் வெளிகாட்டி மற்றவர்களை சிரிக்க வைத்து தான் அழுவார். பெண்கள் பகுதியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு. பாடல்கள் தவிர தன் நோயை விஜயாவிடம் மறைக்கும் போதும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கும்போதும், விஜயாவிடம் உண்மையை சொல்கிறோம் என்று நினைத்து பேச அங்கே ஏ. சகுந்தலா நின்று கொண்டு இவரை கிண்டல் செய்து கோவமூட்ட சகுந்தலாவை அடிக்க பாய்ந்து எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் விழுந்து விடுவது போன்றவை தியேட்டரில் அனுதாபத்தை பெற்று தந்தது. அது போலவே டிஸ்பன்சரியை மூடப் போகிறேன் என்று சொல்லும் விஜயாவிடம் வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்ல பழிக்கு பழியாய் கோவத்தோடு அனைத்தையும் விஜயா நொறுக்க ஒன்றுமே பேசாமல் நடிகர் திலகம் திரும்பி நடக்கும் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் ரசிக்கப்பட்டது. [சண்டையின்போது அங்கே வைக்கோல்போரில் தீ பற்றிக் கொள்ள கண் ஆபரேஷன் செய்துக் கொண்டிருக்கும் சிவாஜி அந்த வெளிச்சத்தில் எதிரிகளை இனம் கண்டு சண்டை போடுவதையும் மக்கள் ரசித்தனர்].
படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என்ற திருப்தி அனைவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. படம் வெற்றிபெறும், நூறு நாட்களை கடக்கும் என்று ரசிகர்கள் சொன்னது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அது போலவே சென்னை பைலட்டில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் வெற்றிகரமாக 70 நாட்களை நிறைவு செய்யும்போது வழக்கம் போல் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் வில்லனாக வந்து தேவர் படமான தெய்வம் படத்தை நவம்பர் 4 தீபாவளி முதல் திரையிட்டனர். ஆனால் தவப்புதல்வன் மதுரை விஜயலட்சுமி தியேட்டருக்கு ஷிப்ட் ஆகி 100 நாட்களை நிறைவு செய்தது.
வெகு எளிதாக 100 நாட்களை கடந்தது என்று சொல்கிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தோமென்றால் தவப்புதல்வனின் சாதனை சாதாரண விஷயமில்லை. ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா என்ற இமயம் மற்றொரு பக்கம் தவப்புதல்வன் வெளியாகி ஐந்தே வார இடைவெளியில் செப் 29-ந் தேதி வெளியான வசந்த மாளிகை என்ற மற்றொரு பிரம்மாண்ட இமயம், இந்த இரண்டு இமயங்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கி விடாமல் வெற்றிகரமாக முன்னேறிய தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. மேலும் 45 நாட்களிலேயே அதாவது 1972 அக்டோபர் 10-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், எந்த நேரத்தில் எங்கு வன்முறை வெடிக்குமோ என்ற பயங்கர சூழல் இப்படிப்பட்ட காலகட்டத்தையும் கடந்து, தீபாவளிக்கு வெளியான படங்களின் போட்டியையும் சமாளித்து தவப்புதல்வன் பெற்ற வெற்றி நிச்சயமாக பெரிய வெற்றி என்பதில் சந்தேகமேயில்லை.
(தொடரும்)
அன்புடன்
தவப்புதல்வன் படத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. காரணம் என் தந்தையோடு சென்றிருந்தேன் என்று சொன்னேன். என் வாழ்க்கையில் என் தந்தையோடு சேர்ந்து பார்த்த கடைசிப் படம் தவபுதல்வன்தான். எப்போதுமே ஒரு நிகழ்வு நடைபெறும்போது அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியாமல் போய் விடும். அதன் பிறகு நமக்கு நஷ்டமானதை நினைத்துப் பார்க்கும்போதுதான் இழந்ததன் magnitude புரியும். அந்த வகையில் தவப்புதல்வன் எனக்கு எப்போதும் மறக்க முடியாத மனதுக்கு நெருக்கமான படம்.
இந்த திரியில் நமது நடிகர் திலகத்தின் திரைக் காவியங்களை அவை முதன் முதலில் வெளியான காலகட்டத்தில் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், அன்றைய நிகழ்வுகள் போன்றவற்றை மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் ஒரு nostalgic திரியாக விளங்குவதால் இன்று முதல் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இந்த திரியின் பெயர் அந்த நாள் ஞாபகம் என்று மாற்றப்படுகிறது. நாம் இங்கே பதிவிடும் விஷயங்களுக்கு இந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்பதனால் இந்த முடிவு.
திரியை துவக்கிய ராகவேந்தர் சாரின் அனுமதியோடு நடந்த இந்த பெயர் மாற்றத்தை நிறைவேற்றிக் கொடுத்த NOV அவர்களுக்கு நன்றி. அனைவரின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடும்
அன்புடன்
http://i1146.photobucket.com/albums/...psj20xi2xv.jpg
சென்னை சாந்தி திரையரங்கில் அவன் தான் மனிதன் திரையிடப் பட்ட போது...
காட்சி இடம் பெற்ற திரைப்படம் அன்பே ஆருயிரே...
இந்நிழற்படம் முன்பே நம் நடிகர் திலகம் திரியின் வேறோர் பாகத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம். இருந்தாலும் ஓர் நினைவூட்டலாக, இங்கே மீள்பதிவு..
அந்த நாள் ஞாபகம்
தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
தவப்புதல்வன் வெற்றி பெற்றதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்! 1972 பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடியதைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் விளம்பரம் இதோ. மதுரையில் சிந்தாமணியிலிருந்து விஜயலட்சுமி அரங்கிற்கு ஷிப்ட் செய்யப்பட்ட தவப்புதல்வன் அங்கே 100 நாட்களை நிறைவு செய்தது. சென்னையில் பைலட் அரங்கிலும் 100 நாட்கள்.
http://i1094.photobucket.com/albums/...EDC4425a-1.jpg
[மதுரை 04.12.1972 தேதியிட்ட தினத்தந்தி விளம்பரம் -நன்றி சுவாமி]
அன்பு தாயார் ராஜாமணி அம்மையார் மறைந்து நான்கே நாட்களில் காங்கிரஸ் மாணவர் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்து கொண்டதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக உடனே வசந்த மாளிகை படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் நடிகர் திலகம். முன்பே சொன்னது போல் தீபாவளிக்கு வருவதாக இருந்த வசந்த மாளிகை அதற்கு சற்று முன்னரே செப்டம்பர் 29 அன்று வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு விரைவாக நடந்து வந்தது, மயக்கமென்ன பாடல் காட்சியும் ஒரு சில patch up காட்சிகளுமே பாக்கி என்ற சூழலில் அதற்காக போடப்பட்ட set-ம் ரெடியாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் உடனே ஷூட்டிங்-ல் கலந்து கொண்டு அதை விரைவாக முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். பல்வேறு படங்களின் சின்ன சின்ன படப்பிடிப்பு schedules முடித்துவிட்டு ஒய்வு எடுத்தார்.எப்படி என்றால் 1972 செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை பாலாஜியின் நீதி படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் நடிகர் திலகம். மைசூருக்கு அருகேயுள்ள கிராமப் பிரதேசங்களில் படப்பிடிப்பு பிளான் செய்திருந்தார்கள்.
நீதி ஷூட்டிங் தேதிகளுக்கும் அதற்கு முன் முடித்துக் கொடுத்த ஷூட்டிங் தேதிகளுக்கும் நடுவே கிடைத்த 5,6 நாட்கள் இடைவெளியைத்தான் சூரக்கோட்டை சென்று ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திக் கொண்டார். அதை ஒய்வு என்று சொல்லுவதை விட தாயாரின் மறைவு அவருக்குள் ஏற்படுத்திய வெறுமையையும் சோகத்தையும் மறக்கவே பண்ணைக்கு சென்றார். ஓய்விற்கு என்று சொல்லி சென்றாலும் அங்கும் அவரை காண ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வந்துக் கொண்டேயிருந்தனர் ஆக ஒய்வு எடுக்கப் போனாலும் அங்கேயும் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்துக் கொண்டுதானிருந்தார்.
இதற்கிடையே பட்டிக்காடா பட்டணமா வெற்றி சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மதுரையை பொறுத்தவரை 100 நாட்களில் 4,19,000/- வசூலைப் பெற்று புதிய சரித்திரம் படைத்தது. 16 வாரத்தில் சுமார் 4,40,000/- ரூபாய் வசூல் செய்து அன்று வரை மதுரையில் அனைத்துப் படங்கள் [பணமா பாசமா நீங்கலாக] வெள்ளி விழா நாட்கள் ஓடி பெற்ற வசூலையெல்லாம் இந்த கருப்பு வெள்ளை காவியம் முறியடித்தது. அது மட்டுமா ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் வெளியான படங்களிலேயே அதிகபட்சமாக 140 நாட்கள் ஓடி ரூபாய் 4,75,000/- சொச்சம் வசூல் பெற்ற கேஎஸ்ஜியின் பணமா பாசமா படத்தின் வசூலை தங்கம் தியேட்டரை ஒப்பிட்டு நோக்கினால் அதன் பாதி அளவே capacity உடைய சென்ட்ரல் திரையரங்கில் வெறும் 125 நாட்களுக்குள்ளாகவே கடந்தது பட்டிக்காடா பட்டணமா, [பணமா பாசமா வெளிவந்த 1968-ம் வருடத்தில் இருந்ததை விட டிக்கெட் கட்டணத்தில் 5 பைசா மட்டுமே 1972-ல் பட்டிக்காடா பட்டணமா வெளியானபோது அதிகமாக்கப்பட்டிருந்தது]. 19 வாரத்தில் ரூபாய் 4,90,000/- வசூலித்த இந்தப் படம் 20 வாரத்தில் மதுரையில் மற்றொரு வரலாற்று சாதனை புரிந்தது. மதுரையில் சினிமா திரையரங்குகள் தொடங்கிய காலம் முதல் அன்றுவரை மொத்த வசூலில் எந்தப் படமும் தொடாத 5 லட்சம் ரூபாயை தாண்டியது பட்டிக்காடா பட்டணமா. மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் 139வது நாள் இரவுக் காட்சியோடு 5 லட்சத்தை தொட்டது. அதாவது 1972-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வியாழனன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
ஆம் நண்பர்களே! எந்த ஒரு மனிதன் அந்த நாளில் பிறந்து பின்னாட்களில் நடிகர் திலகத்தின் சாதனை பொன்னேடுகளையெல்லாம் அகில உலகமும் அறிந்துக் கொள்ளும்வண்ணம் தரவேற்றினானோ அந்த மனிதன் பிறந்த நாளன்றுதான் அதற்கு முன்பும் சரி அதற்கு பின்னும் சரி மதுரையில் எந்த கருப்பு வெள்ளை படமும் தொடாத 5 லட்சம் வசூல் என்ற வெற்றிக் கோட்டை கடந்து இன்று வரை ஏன் இனி எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. காண கிடைக்காமல் இருந்த நடிகர் திலகத்தின் பல்வேறு சாதனை ஆவணங்களை தேடி பிடித்து வெளிக் கொண்டுவந்து நமக்கு வழங்கிய இரா. சுவாமிநாதனுக்கு இந்த மதுரைக்காரன் dedicate செய்யும் ஒரு சாதனை துளி இது.
(தொடரும்)
அன்புடன்
Dear murali sir,
i felt very happy by reading your first nostalgic post of this year after a gap of nearly 6 months(5 months 8 days to be precise),please continue.
கருப்பு வெள்ளையில் யாரும் நினைத்து பார்க்க முடியாத சாதனை செய்த ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் பிரம்மாண்டமான வெற்றி பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
பட்டிக்காடா பட்டணமா சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தது. வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை 1972 ஜனவரியில் தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.
படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது
நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.
நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது. இதற்கிடையில் எம்ஜிஆரின் கடைசி கருப்பு வெள்ளைப் படமான அன்னமிட்ட கை செப்டம்பர் 15 அன்று வெளியானது
செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
(தொடரும்)
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை முதல் நாள் ஓபனிங் ஷோ பார்பதற்காக டிக்கெட்டிற்கு அலைந்தது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
இந்த தொடரில் பலமுறை நான் மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் ஒரு காட்சியை மட்டும் ஒதுக்கி அந்த ஷோவிற்குண்டான அனைத்து டிக்கெட்டுகளும் மன்றத்திடம் கொடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவது அனைவரும் அறிந்திருக்க கூடும். அன்றைய நாட்களில் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட்டுகள் மன்றத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவை ரசிகர்களுக்கு அல்லது கேட்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். நான் முன்பே குறிப்பிட்டிருப்பது போல் எங்களைப் போன்றவர்களுக்கு இதில் உள்ள மிகப் பெரிய advantage என்னவென்றால் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டாம். அதுவும் தவிர மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. என் கஸினுக்கு மன்ற ஆட்களை தெரியும் என்பதனால் வாங்கி விடுவோம். இந்த டிக்கெட்டுகள் ரீலிசிற்கு ஒரு வாரம் முன்னதாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் 1972-ல் முதன்முறையாக வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். 72-ல் முதல் படமான ராஜா ஜனவரி 26 ரிலீஸ். அது புதன்கிழமை. அதன் பிறகு வெளியான நான்கு படங்களும் [ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே மற்றும் தவப்புதல்வன்] சனிக்கிழமை வெளியானதால் தானாகவே முதல் நாள் 4 காட்சிகள் என்று ஆகிவிட்டது. ஆனால் இது வெள்ளிக்கிழமை என்பதனால் 3 காட்சிகள்தான் இருக்குமா அல்லது காலைக்காட்சி போடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அன்று 4 காட்சிகள் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட மார்னிங் ஷோதான் ஓபனிங் ஷோ என்பது confirm ஆனது.
ஸ்கூல் வேறு லீவ் ஆகவே ஓபனிங் ஷோ டோக்கன் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தோம் நமக்குதான் அனைவரையும் தெரியுமே அது மட்டுமல்ல இரண்டு டிக்கெட்டுகள்தானே என்ற நினைப்பில் என் கஸின் சற்று தாமதமாக போய் விட ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் எல்லாம் விற்று விட்டன. அன்றைய நாட்களில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஓபனிங் ஷோவாக இருக்கும். அதற்கு அடுத்த சாய்ஸ் நைட் ஷோ. பிறகு ஈவினிங் ஷோ. கடைசி சாய்ஸ்தான் மாட்னி ஷோ. எவ்வளவு முயற்சித்தும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. மாட்னி ஷோ டிக்கெட் மட்டும்தான் இருந்தது என்பதனால் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். எப்படியாவது ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் தேற்றி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் மார்னிங் ஷோ டிக்கெட் கிடைக்கவேயில்லை. வீட்டருகே நியூசினிமா தியேட்டர் என்பதனால் காலையில் தியேட்டர் பக்கம் போய் பார்த்தோம். பயங்கரமான கூட்டம். தெரிந்தவர்கள் யாரைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கை விரித்து விட்டார்கள். ராஜா, பட்டிக்காடா பட்டணமா தர்மம் எங்கே போன்ற படங்களுக்கு எங்களுக்கு உதவி செய்த அதிர்ஷ்டம் இந்த முறை கை கொடுக்கவில்லை.
எப்படா 1 மணி ஆகும் என்று காத்திருந்து வீட்டை விட்டு கிளம்பி தியேட்டருக்கு போய் விட்டோம். 1.15 மணி வாக்கில் தியேட்டரின் மெயின் கேட் திறந்து வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க திடீரென்று ஒரு பெரிய கூட்டம் வெளியே வந்து சந்தோஷக் கூச்சலிட பட்டாஸ் வாலாக்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெளியே வருபவர்கள் அப்படியே உற்சாகமும் சந்தோஷமும் துள்ள படம் டாப் என்று ரிசல்ட் சொல்ல (நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல சூப்பர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை) அந்த ஏரியாவே ஜெகஜோதியானது.
தெரிந்தவர்கள் முகம் தென்பட அவர்களிடம் படம் பற்றி கேட்கிறோம். அந்நேரம் கஸினின் நண்பர்கள் குழாம் ஒன்று படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறது. அதில் ஒருவர் என் கஸினிடம் " காலையிலே எங்கடா போனே? டிக்கெட் எக்ஸ்ட்ரா இருந்தது. சரி உனக்கு கொடுக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ வெளியே போயிட்டேன்னு சொன்னாங்க. தியேட்டருக்கு வந்து பார்த்தேன். உன்னை காணோம். நம்ம பசங்க அவன் (என் கஸின் பெயர் சொல்லி) எப்படியாவது டிக்கெட் வாங்கியிருப்பான்னு சொன்னதனாலே அதை வேற ஆட்களுக்கு கொடுத்துட்டேன்" என்று சொல்ல எத்தனை டிக்கெட்-னு என் கஸின் கேட்க இரண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததுனு நண்பர் சொல்ல எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது நான் விளக்காமலே அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நாங்கள் காலையில் தியேட்டர் போய் டிக்கெட்டுகளுக்காக அலைந்த நேரத்தில் அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரமாகி விட்ட காரணத்தினால் நாங்கள் உள்ளே செல்வதற்கு மெயின் கேட் பக்கத்தில் இருக்கும் சைடு கேட் அருகே சென்றோம். மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் அந்த கேட் வழியாகதான் போக வேண்டும் என்று சொல்லி விட்டதால் அங்கே போய் நின்றோம். கையில் டிக்கெட் இருந்தும் உள்ளே போவதற்கு நாங்கள் பட்ட பாடு?
(தொடரும்)
அன்புடன்
திரு முரளி சார்,
ஆவலை அடக்க முடியவில்லை அதிக இடைவெளி தராமல் கூடிய சீக்கிரம் அடுத்த பதிவை இடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் கையில் இருந்தும் உள்ளே போவதற்கு சிரமப்பட்ட அன்றைய சூழல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.
டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 43 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -
(தொடரும்)
அன்புடன்
Yesterday, 17th July, 2015, I was fortunate to chat with my long time ... nearly 40 years friend... Kudanthai Sadagopan Srinivasagopalan. What a time we had recollecting our golden period spending our times for Nadigar Thilagam. Ours was "THENNAGA SIVAJI KOLGAI PARAPPUM KUZHU" that was a group of pen friends & sivaji fans, who would share all the information regarding the release of Sivaji films in his / her respective town / village, how it performed at the box office, share collection details, etc. Pollachi Kirubakaran, Umaithurai Palanisamy, Madurai Jaihindpuram Kannan, Kovilpatti Rajasekaran, Ugene Rayan, Rajapalayam Engal Sivaji Vijayan, Bangalore Ulsoor Jeyakumar of Neethi Sivaji Ganesan Kalai Kuzhu, Mayavaram Sekar, Mukunthan of Ilaiya Thalaimurai Sivaji Ganesan Rasikar Mandram, Kandi Kathirkaman who used to send copies of Simmakural magazine from Sri Lanka, Haji Mohamad (now in Arab country I learn), His handwriting was exemplary and would be very catchy to the eyes...
Oh God, we can't get those days. We will write the matter that would normally run to 5 to 6 pages in a postcard. தபால் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதுவோம். வெளிநாட்டு நண்பர் ஏர்மெயில் கடிதத்தில் எழுதுவார். அந்தக் காலங்கள் வராதா என மனம் நிச்சயம் ஏங்கும். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு 1970 களின் மத்தியிலிருந்து 1980களின் மத்தி வரை மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில். இதில் பம்பாயிலிருந்து நண்பர் ஆறுமுகம் அவர்களும் எழுதுவார்கள். மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊரிலிருந்து நாங்கள் அஞ்சல் மூலம் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் விவரங்கள், மக்களிடம் வரவேற்பு, போஸ்டர்கள், நோட்டீஸ்கள் என அவரவரிடமிருக்கக் கூடியவற்றை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.
நடிகர் திலகத்திற்கு ரசிகனாய் இருந்தது மட்டுமின்றி இவ்வளவு பெரிய நட்பு வட்டாரத்தை அந்த காலத்திலேயே எங்களால் உருவாக்கி இன்று வரை அதைப் பேண முடிகிறது என்றால் அதுவே நடிகர் திலகத்தின் மகிமை எனலாம்.
தங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி சீனிவாச கோபாலன் அவர்களே. இது போன்று நம்முடைய மற்ற நண்பர்களும் இணைந்து விரைவில் சந்தித்து மகிழ வேண்டும் என்பது என் ஆவல்.
My memories roll back to late sixties and eaely seventies when i too maintained penfriends by name radha and uma from coimbaore LMW by exchangingall releae details collection details papercuttings etc every week. originally radha alia radhakrrishnn baically madurai naive settled in cbe simultaneously give madurai details, those days cycle tokens were issued in the morning later with that tickets can be obtained. it was the pracice follwed and SIVANTAMANN accounted for the maximum numbers in the coimbatore area first time they displayed CYCLE TOKENS FULL. IN KOVAI ROYAL THEATRE.
What a a pleasnt memories. now iam not able to conact my friends eventhough they are in chennai TI groups.
thanks raghavendran for taking me to my penfriends sivaji rasigargal.upcorse.
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சி பார்த்த அனுபவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? ஒரு முறை 2007-ல் இங்கே சென்னை அபிராமியில் வசந்த மாளிகை பார்த்தபோது ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஆரவாரத்தை விவரித்தது நினைவிற்கு வருகிறது. அது போன்றே முதன் முதலில் பார்த்தபோதும் நிகழ்ந்தது.
பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.
ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல் புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.
ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்துவது, ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் குறிப்பாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது,
இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.
படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.
நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.
அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் ம்தார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. பால்கனி வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.
(தொடரும்)
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை படத்திற்கு வந்த கூட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட ம்தார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.
வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.
மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.
ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.
இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.
ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.
அன்றைய தினம் நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு அன்றைய [முதல் நாள்] இரவுக் காட்சி சமயத்தில் மழை பெய்ததையும் அப்படி இருந்தும் மக்கள் அந்த அடாத மழையிலும் விடாது வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த விவரத்தையும் நமது திரியிலே பல வருடங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தேன்.
ஒரு நாள் நமது அருமை நண்பர் பம்மல் சுவாமியோடு பேசிக் கொண்டிருக்கும்போது "சார் நான் செக் பண்ணினேன் சார். நீங்கள் சொன்னது கரெக்ட்தான்" என்றார். என்ன சுவாமி? எதைப் பற்றி சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். இல்லை சார். வசந்த மாளிகை வெளியான அன்று இரவு மழை பெய்தது என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். பழைய தினமணி பேப்பர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் குறிப்பிட்டது போல் அன்று மதுரையில் மழை பெய்த விவரம் பேப்பரில் வந்திருக்கிறது என்றார்.
அவரிடம் மேலதிக விவரங்கள் கேட்க அதற்கு அவர் சொன்ன பதிலிலிருந்து அவர் எப்படி இந்த தகவலை தேடிப் பிடித்தார் என புரிந்தது.
விஷயம் என்னவென்றால் வசந்த மாளிகை படம் வெளியானது செப்டம்பர் 29 வெள்ளி. மூன்றாவது நாள் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை நடிகர் திலகத்தின் பிறந்த நாள். பழைய தினமணி நாளிதழ்களை [மதுரை பதிப்பு] பார்வையிடும் வாய்ப்பு சுவாமிக்கு கிடைத்தபோது அன்றைய தினம் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை மதுரை பதிப்பு தினமணியில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் என்பதனால் ஏதேனும் விளம்பரமோ அல்லது செய்திகளோ வந்திருக்குமா என பார்த்திருக்கிறார். அப்போது ஒரு பெட்டி செய்தியாக வெள்ளிக்கிழமை இரவு மதுரை நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் பலத்த மழை பெய்தது என்று வந்திருக்கிறது. அதை பார்த்துவிட்டுத்தான் சுவாமி இதை கூறியிருக்கிறார்.
நான் அவரிடம் சொன்னேன். சுவாமி எப்போதும் நடந்தவற்றை பற்றி மட்டும் எழுதுவதுதான் என் பாணி. பொய்யாக நடக்காத ஒன்றை நடந்தது போல் அள்ளிவிட மாட்டேன். எழுதும் செய்தி நமக்கு இனிப்பாக இல்லாவிட்டாலும் கூட அதை பதிவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டேன் என்று சொன்னேன்.
.
அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் புலர்ந்தது
(தொடரும்)
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை வெளியான முதல் நாள் அன்று நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
நாம் கடந்து வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றில் சிலவற்றில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருப்பதால் அவைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
1970 முதல் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவும் அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 2 மகாத்மாவின் பிறந்த நாளையும் சேர்த்து கலை அரசியல விழாவாக அகில இந்திய சிகர மன்றம் கொண்டாடிக் கொண்டிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். சென்னையை தாண்டியும் அதை நடத்த வேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க அந்த வருடம் (1972) அந்த விழாவை கோவையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த ஸ்தாபன காங்கிரஸில் ஒரு பிரிவினர் குறிப்பாக நெடுமாறனின் ஆதரவாளர்கள் மதுரையில் காங்கிரஸ் மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கு பலத்த அழுத்தமும் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த நேரம் என்று சொன்னால் செப்டம்பர் முதல் வாரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்டில் மதுரையில் நடந்த திமுக மாநாட்டிற்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று அந்த கோரிக்கைக்கு காரணம் சொன்னார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தேதிகள் அதே அக்டோபர் 1,2.
பொதுவாகவே அகில இந்திய சிகர மன்றமோ அல்லது நடிகர் திலகமோ சிகர மன்றத்தின் சார்பில் இது போல் ஒரு மாநாடு அல்லது விழா நடத்துகிறோம் என்று அழைத்தால் உடனே மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தலைவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார். 1970,71 பிறந்த நாள் மாநாடுகளும் சரி 1970 ஜூலையில் கயத்தாறில் நடைபெற்ற கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவும் சரி அதற்கு உதாரணங்கள். .அது போன்றே பெருந்தலைவர் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அழைத்தால் அந்த விழாக்களில் நடிகர் திலகமும் கலந்துக் கொள்வார். அன்னை ராஜாமணி அம்மையார் மறைந்தபோது நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்துக் கொண்டது பற்றி ஏற்கனவே பேசினோம்.
இதற்கு உதாரணமாய் மற்றொரு நிகழ்வையும் இங்கே சொல்ல வேண்டும். 1970 செப்டெம்பரில் மயிலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மயிலாப்பூர் சித்ரகுளம் அருகே மகாத்மாவின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதை திறந்து வைப்பதற்காக பெருந்தலைவரை அணுகியபோது அவர் நான் வருகிறேன், அதே நேரத்தில் நீ சிவாஜியை போய் பார்த்து இந்த விழாவிற்கு கூப்பிடு என்று அன்றைய தினம் மயிலை வட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மயிலை பெரியசாமியிடம் சொல்ல அவர் சென்று நடிகர் திலகத்தை அழைக்க பெருந்தலைவர் சொல்லி இவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் தனக்கு இருந்த படப்பிடிப்பை அட்ஜஸ்ட் செய்து அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார். இப்போது மறைந்து விட்ட திரு பெரியசாமி இரண்டு வருடங்களுக்கு முன்னால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடிகர் திலகத்தின் நினைவுநாள் அன்று நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்தபோது இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டார். .
எதற்கு இதையெல்லாம் சொல்கிறோம் என்றால் நடிகர் திலகம் விழா என்றால் பெருந்தலைவர் நிச்சயம் கலந்துக் கொள்வார். ஆகவே கோவையில் சிகர மன்றம் சார்பாக நடக்கவிருந்த விழாவிலும் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் அதே தேதிகளிலேயே ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு மதுரையில் என்றவுடன் ஒரு குழப்பம் ஏற்பட்டது. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் அது மேலும் குழப்பத்தை உருவாக்கலாம் என்பதனால் நடிகர் திலகம் தன்னாலோ அல்லது தனது பெயரால் இயங்கும் மன்றதினாலோ அப்படி ஒரு நிலைமை உருவாவதை விரும்பாத காரணத்தினால் மன்ற விழாவை ஒரு வாரம் தள்ளி வைக்க உத்தரவிட்டார்.
சிகர மன்ற மாநாடு தேதி மாற்றப்பட்டதால் நெடுமாறன் தலைமையேற்று நடத்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நடிகர் திலகத்திற்கு முறையான அழைப்பு இல்லை. எப்போதும் நடிகர் திலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய நெடுமாறன் தஞ்சை ராமமூர்த்தி அணி அன்றும் அதே போல் நடந்துக் கொண்டது.
ஆனால் நமது ரசிகர்கள் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் பெருந்திரளாக மாநாட்டில் கலந்துக் கொண்டனர். ஆட்சியையும் அதிகாரத்தையும் பண பலத்தையும் படோபத்தையும் பயன்படுத்தி திமுக மாநாடு நடைபெற்றது என்று சொன்னால் அந்த பின்புலங்கள் ஏதுமின்றி தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவோடு காங்கிரஸ் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. மிகுந்த பொருட்செலவில் அலங்கார வளைவுகள் திமுக மாநாட்டிற்கு அமைக்கப்பட்டபோது வெறும் மூவர்ண துணியில் இங்கே வளைவுகள் அமைக்கப்பட்டன.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன். மேலமாசி வீதியில் ராஜேந்திரா காப்பி கடைக்கு எதிராக பொன்.முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று இருந்தது. திமுக மாநாட்டிற்கு அந்த இடத்தில ஒரு பிரமாண்டமான ஆர்ச் அமைக்கப்பட்டு ஒரு பெரிய உலக உருண்டை தொங்கவிடப்பட்டிருந்தது. அப்படி எதுவும் செய்யாமல் அதே மேலமாசி வீதியில் நான் குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்றால் வரக்கூடிய ஐயப்பன் கோவில் அருகே நெடுமாறனின் அலுவலகம் அமைந்திருந்த இடத்தில அமைக்கப்பட்ட மூவர்ண துணியில் எழுதப்பட்ட "தென்பாண்டி மதுரை இது நெடுமாறன் கோட்டை இது" என்ற வளைவு பெரிதும் பாராட்டப்பட்டது.
மாநாட்டின் முதல் நாள் மாலை அக்டோபர் 1 ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தை தெற்கு மாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்ட மேடையிலிருந்து பெருந்தலைவர் பார்வையிட்டார். அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நானும் என் கசினும் அந்த இடத்திற்கு அருகில் போக முயற்சித்தோம். ஆனால் அந்த கூட்டத்தை தாண்டி எங்களால் போகவே முடியவில்லை. மேலமாசி வீதியில் அமைந்திருந்த உடுப்பி ஹோட்டல் வரைதான் [இப்போது அந்த இடத்தில போத்தீஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இருக்கிறது] போக முடிந்தது. கூட்டம் நெருக்கி தள்ள மூச்சு திணறி விட்டது. அதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து திரும்பி விட்டோம். நடிகர் திலகம் வரவில்லை என்ற ஒரு குறையை தவிர்த்தால் மற்றபடி மாநாடு சிறப்பாகவே நடைபெற்று முடிந்தது.
(தொடரும்)
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
1972 அக்டோபர் 1,2 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு பற்றி பார்த்தோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
மதுரையில் ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு நடந்த நாட்களில் நடிகர் திலகம் மைசூர் அருகே நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அன்று காலையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு மதிய உணவு இடைவேளையோடு pack up ஆனது. மைசூரில் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் மிகப் பெரிய கேக் வரவழைக்கப்பட்டு நடிகர் திலகம் கேக் வெட்ட பிறந்த விழாவும் அதை தொடர்ந்து விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. நீதி தயாரிப்பாளர் பாலாஜி அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஏராளமான தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை காண வந்திருந்தார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
சில பகுதிகளுக்கு முன்பு நீதி படத்திற்கு 15 நாட்கள் கால்ஷீட் என்றும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை ஷூட்டிங் என்பதையும் சொல்லியிருந்தோம். அக்டோபர் 6 வெள்ளியன்று மைசூரிலிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தார் நடிகர் திலகம். ஏற்கனவே சொல்லியிருந்தபடி அக்டோபர் 7,8 கோவையில் சிகர மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தார். அன்றைக்கு அவர் செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் போல் கூடுவார். கோவையில் அன்றைய நாட்களில் மிக பிரபலமான ஹோட்டல் குருவில் தங்கியிருந்தார். ஹோட்டல் வாசலில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்ததை புகைப்படமாகவும் செய்தியாகவும் பத்திரிக்கைகள் வெளியிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. .
எப்போதும் போல் இரண்டு நாட்கள் மாநாடு. முதல் நாள் கலைஞர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் இரண்டாம் நாள் அரசியல் மாநாடாகவும் நடைபெற்றது. முதல் நாள் பிரமாண்டமான ஊர்வலம் ஆரம்பித்து மாநாட்டு பந்தல் வரை சென்று முடிவடைந்தது. நடிகர் திலகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டு கை அசைத்து ரசிகர்களிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களோ சாதரணமாகவே கேட்கவே வேண்டாம். வெற்றி மேல் வெற்றியாக வந்துக் கொண்டிருந்த நேரம் எனும்போது மகிழ்ச்சி துள்ளல் அதிகமாகவே இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஆனது என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. கடலலை போன்ற அந்த பிரமாண்ட கூட்டத்தை புகைப்படமாக பார்த்து பிரமித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ஊர்வலத்தையும் பின் நடைபெற்ற விழாவையும் ராமாநாயுடு தன் குழுவினரை வைத்து படமாக்கினார்.
முதன் முதலாக 1970-ம் ஆண்டு அகில இந்திய சிகர மன்றம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு ஒரு சில மாதங்களுக்கு பின் தமிழகமெங்கும் அப்போது ஓடிக் கொண்டிருந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. 1971-ம் வருடம் ஜூலையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி பட விழாவின் செய்தி தொகுப்பு சவாலே சமாளி திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு பாபு திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. ஆனால் 1972-ல் கோவையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழா வசந்த மாளிகையோடு காண்பிக்கப்பட்டதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த செய்தி தொகுப்பை நான் பார்த்த நினைவில்லை. ராகவேந்தர் சார் அல்லது வாசு போன்றவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறேன்.
முதல் நாள் கலை விழாவில் அன்றைய முன்னணி நாயக நாயகியர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மிக அதிகமான தயாரிப்பாளர்கள் விழாவிற்கு வந்திருந்தது குறிப்பிட்டத்தக்க விஷயம். அன்றைக்கு நடிகர் திலகத்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று அனைவரும் காத்துக் கிடந்த நிலை. அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால் மேடையிலிருந்த இசைக்குழுவினரின் வாத்திய பின்னணியோடு நடிகர் முத்துராமன் அவர்கள் என்னடி ராக்கமா பாடலை பாடியதுதான். மாநாட்டு பந்தலே திமிலோகப்பட்டது என்று சொல்வார்கள்.
மறுநாள் அரசியல் மாநாடு. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். அன்றைய அரசியல் நிலைமைக்கேற்ப பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெருந்தலைவரின் பேச்சை கேட்க லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இறுதியாக நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தினார். தானும் தனது ரசிகர் படையும் எந்நாளும் காங்கிரஸ் இயக்கத்திற்காக உழைப்போம் என்று சூளுரைத்தார். கொங்கு மண்டலமே குலுங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அதே நாளில் (அக்டோபர் 8 ஞாயிறு) தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பதை ஏற்படுத்திய பொதுக்கூட்டம் ஒன்று சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் ஊரில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் அன்றைய ஆளும்கட்சியான திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 10 செவ்வாயன்று கூட்டப்பட்டு அந்த கூட்டத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயற்குழுவில் பேச வேண்டியதை பொதுக்கூட்டத்தில் பேசினார் என்ற காரணத்தை சொல்லி திமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எம்ஜிஆர் அவர்கள் இடை நீக்கம் [suspend] செய்யபட்டார். தமிழகமெங்கும் பதட்ட நிலை ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறின. . .
(தொடரும்)
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
அக்டோபர் மாத துவக்கத்தில் கோவையில் நடந்த நடிகர் திலகத்தின் சிகர மன்ற மாநாடு பற்றியும் தொடர்ந்து தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது
1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது.
அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்காடா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
http://i501.photobucket.com/albums/e...psb4bfba7b.jpg
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார். இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை,
இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
(தொடரும்)
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
மதுரையில் பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் மற்றும் வசந்த மாளிகை ஆகிய படங்களின் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .
(தொடரும்)
அன்புடன்
Dear murali sir,
we are waiting........................
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல்
ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள்.
எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னான். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும்.
அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றான். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
(தொடரும்)
அன்புடன்