நமது NT FAnS அமைப்பின் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற நவராத்திரி திரையிடலுக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வருகை புரிந்தார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகை புரிந்தனர். காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் மறைந்த திரு W R சுப்பாராவ் அவர்களின் புதல்வர்களும் புதல்வியரும் வருகை தந்து சிறப்பு செய்தனர்.
வந்தவர்களில் மூத்தவர் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி. அவர்தான் அன்று பேசினார். எவரும் எதிர்பார்க்காத வகையில் மிக மிக அழகாக, தெளிவாக அவர் பேசியது அனைவர் கருத்தையும் கவர்ந்தது,
இந்தப் படம் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு மாணவியாக இருந்தது பற்றி குறிப்பிட்ட அவர் படப்பிடிப்பு காண சென்றதை விவரித்தார். அவரின் தந்தையார் சாதாரணமாக படப்பிடிப்புத் தளங்களுக்கு அழைத்து செல்ல மாட்டார் என்றும் அன்றைய தினம் அபூர்வமாகவே தன்னையும் தன மூத்த சகோதரியையும் அழைத்து சென்றதை பற்றி குறிப்பிட்ட அவர் தன தந்தையார் தங்கள் இருவரையும் நடிகர் திலகத்திடம் அறிமுகப்படுத்தி வைத்ததையும் தன் மூத்த சகோதரியை நடிகர் திலகம் கிண்டல் செய்ததையும் பிறகு அவரே மிகுந்த அன்புடன் பேசியதையும் நினைவு கூர்ந்த திருமதி ரேவதி அன்றைய தினம்தான் நடிகர் திலகம் Dr கருணாகரன் வேடத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன என்ற தகவலையும் சொன்னவர் அதன் பிறகு மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
தங்களோடு வெகு ஜாலியாக பேசிவிட்டு சென்றவர் கேமரா ஓட ஆரம்பித்தவுடன் அப்படியே மாறிப் போனதை ஒரு மாஜிக் போல உணர்ந்தோம் என்றார். குரலில் நடையில் உடல் மொழியில் அவர் கொண்டு வந்த மாற்றம் அப்படியே கண் முன்னரே நிகழ்ந்ததை இன்று விவரிக்கும்போதும் அன்று இருந்த அதே மாஜிக் இப்போதும் மனதை விட்டு நீங்கவில்லை என்றார்.
படம் வெளிவந்தவுடன் தன் கூட படித்தவர்கள் இறுதிக் காட்சியில் எப்படி ஒரு ஷாட்டில் 4 சிவாஜியையும் அடுத்த ஷாட்டில் 3 சிவாஜியையும் உங்கள் அப்பா காட்டினார் என்று கேட்க கேட்டுச் சொல்கிறேன் என்று வீட்டில் வந்து தந்தையிடம் கேட்டதையும் அவர் மாஸ்க் ஷாட் மூலமாக என்று விளக்கியது அன்றைய வயதில் டெக்னிகலாக புரியாவிட்டாலும் கூட மறுநாள் பள்ளி தோழியரிடம் அது மாஸ்க் ஷாட்டில் எடுத்தார்களாம் என்று பெருமையாக சொல்லிக் கொண்டதை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார் திருமதி ரேவதி.
இந்தப் படம் வெளிவந்த பிறகு ஒரு பத்திரிக்கை நிருபர் தன் தந்தையாரை பேட்டி எடுக்க வந்தபோது இந்த மாஸ்க் ஷாட்டை குறிப்பிட்டு நன்றாக செய்திருப்பதாக பாராட்ட அதற்கு தன் தந்தையார் அந்த மாஸ்க் ஷாட் இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு நடிகர் திலகம்தான் காரணம் என்றாராம். போலீஸ் ஆபீசர் ரோலில் இருக்கும் சிவாஜியை பார்த்து நாடக நடிகன் சிங்காரம் வணக்கம் சொல்ல அதை முதல் முறை கவனிக்காமல் இரண்டாம் முறை மீண்டும் சிங்காரம் கை கூப்பும்போது கவனித்து தலையை மட்டும் லேசாக அசைத்து அதை acknowledge செய்யும் போலீஸ் ஆபீசர் அந்த டைமிங்கை பாருங்கள். அதுதான் சிவாஜியின் திறமை என்று தன் தந்தை சொன்னதை திருமதி ரேவதி நினைவு கூர்ந்தபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.
தமிழ் சினிமாவில் சில முக்கிய மைல்கல்கள் என்று சொல்லபப்டுகின்ற முதல் கேவா கலர் படம் [அலிபாபா] முதல் டெக்னிக் கலர் படம் கட்டபொம்மன் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் ஆகிய அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் பாக்கியம் பெற்றவர் தங்கள் தந்தையார் என்று சொல்லி மகிழ்ந்த திருமதி ரேவதி இந்த நேரத்தில் தன் தந்தைக்கு ஒளிப்பதிவு தொழிலில் உதவியாளராக இருந்து பணியாற்றிய கர்ணன் அவர்களையும் நினைவு கூர்ந்தார்.
தங்கள் தந்தையார் தங்களை படப்பிடிப்புதளத்திற்கு அழைத்து செல்ல மாட்டார் என்பதனால் படத்தின் இயக்குனர் அருட்செல்வர் ஏ பி நாகராஜன் அவர்களிடம் அனுமதி பெற்று ஷூட்டிங் பார்த்ததையும் நன்றியோடு நினவு கூர்ந்தார்.
படத்தின் ஒளிப்பதிவாளரின் மகள், மகன் என்ற முறையில் படம் பார்க்க வரவில்லையென்றும் சிவாஜி ரசிகர்களாக இந்த படத்தை பார்க்க தங்கள் குடும்பத்தினர் வந்திருப்பதை பெருமையுடன் குறிப்பிட்ட திருமதி ரேவதி தங்களை அழைத்ததற்கும் நினவு பரிசு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.
அனைவரையும் அற்புதப்படுத்திய அவரின் சரளமான உரைக்கு நன்றி தெரிவித்து படத்தை திரையிட்டோம்.
http://i1146.photobucket.com/albums/...ps0bda3d45.jpg
http://i1146.photobucket.com/albums/...ps0dabf220.jpg
வெளிச்சம் சரியாக இல்லாதிருந்த காரணத்தினால் புகைப்படங்கள் சற்றே மங்கலாக தெரிகின்றது
அன்புடன்