எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்
‘ஆடவாங்க அண்ணாத்தே… அஞ்சா தீங்க அண்ணாத்தே… அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே…’
என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.
அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.
விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.
அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.
அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்….
‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது…”
