http://i1065.photobucket.com/albums/...psr17309fn.jpg
Printable View
நடிகர்திலகம் சிவாஜி சிலை விவகாரம் :
சென்னை கடற்கரையில் காமராசர் சாலை – இராதாகிருட்டிணன் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதென்று கூறி தனிநபர் ஒருவர் தொடுத்த வழக்கில் , தமிழ்நாடு அரசு, சிவாஜி சிலையை எடுத்து அடையாற்றில் புதிதாக கட்ட இருக்கும், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அதை வைத்திட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.. மணி மண்டபம் கட்ட அவகாசம் தேவை என்றும், 2017க்குள் மணிமண்டபம் கட்டப்பட்டுவிடும் அதில் அப்பொழுது சிவாஜி சிலையை அகற்றி அங்கு வைத்துவிடலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் கூறினார். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ்குமார் அக்னிகோத்திரி மற்றும் கே.கே. சசிதரன் ஆகியோர் வரும் நவம்பர் 16ஆம் நாளுக்குள், சிவாஜி சிலையை அப்புறப்படுத்திடும் முடிவை எடுத்திடவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்கள்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு அவசரப்பட்டு உடனடியாக நடிகர் திலகம் சிலையை அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளது ஏன் என்பதுதான் தெரியவில்லை. நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்களை பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, பிற்பகலில் அவர் வந்த போது பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் இரண்டு மணி நேரத்தில் அகற்றிவிடுகிறார்கள், உங்களால் இத்தனை மாதங்களில் சிவாஜி சிலையை அப்புறப்படுத்த முடியவில்லையா என நீதிபதிகள் கேட்டார்கள்.
இவ்வாறு, நீதிபதி கேட்கும்போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கோடான கோடி தமிழ் மக்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் தமிழர்களின் கலைச்சின்னம் என்பதையோ, தமிழர்களின் கடந்த கால கலைப்படைப்பின் அடையாளம் என்பதையோ அவர் சிறிதும் சட்டை செய்யவில்லை.
இரண்டு மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அப்புறப்படுத்திவிடலாம் என்று அவர் சொல்வதில், நடிகர் திலகம் சிவாஜி சிலையை வெறும் கட்டுமானமாக மட்டுமே பார்க்கிறார் என்று புரிகிறது.
தமிழ்நாடு அரசு, நடிகர் திலகம் சிவாஜி சிலை சிக்கலில் உறுதியான நிலையெடுக்காமல், சிலையை அகற்ற ஒப்புக் கொண்டது சரியான நடவடிக்கையல்ல.
நடிகர் திலகம் சிவாஜி சிலையை இப்பொழுதுள்ள இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது, தமிழினத்தின் பெருமைக்குரிய கலைச் சின்னத்தை இழிவுபடுத்துவதாக அமையும். உண்மையில், இப்பொழுதுள்ள இடத்தில் நடிகர் திலகம் சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு எதுவும் கிடையாது.
ஒருவேளை, வாதத்திற்காக ஓரளவு இடையூறு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், தங்கள் இனத்தின் மாபெரும் அடையாளச் சின்னத்தை தகுந்த இடத்தில் மக்கள் முன் வைத்திருப்பதற்காக அந்த இடையூறைப் பொறுத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும். அப்படித்தான், இந்தியா உட்பட உலகெங்கும் பழம்பெரும் கலைச் சின்னங்களை மக்களும் அரசுகளும் பாதுகாக்கின்றனர்.
அண்ணா, பசும்பொன் தேவர், பெரியார், எம்.ஜி.ஆர் என்று இவர்களுடைய பிறந்தநாட்களுக்கெல்லாம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எல்லாக் கட்சிகளும், சமுதாய அமைப்புகளுமாகச் சேர்ந்து மாலையிட வரும்போதெல்லாம், கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் சில நேரங்களில் போக்குவரத்தையே வேறு சாலையில் மாற்றம் செய்வது நடக்கிறது. அதெல்லாம் யாருக்கும் யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
தமிழ்நாடு அரசு நடிகர்திலகத்திற்கு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்கிறோம். அதற்காக இப்பொழுதுள்ள இடத்திலிருந்து நடிகர் திலகம் சிலையை அப்புறப்படுத்த வேண்டியதில்லை.
இச்சிலையால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்று தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தையே நீதிபதிகள் கருத்தில் கொண்டுள்ளனர். தமிழக அரசும் தாங்களாக சிலையை அகற்றவில்லை, கோர்ட் உத்தரவினால்தான் அகற்றவேண்டியதாயிற்று என்று சொல்லிக்கொள்ளும் விதத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவையும் நீதிபதிகள் எடுத்துக்கொள்ளவில்லை. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கலையின் சின்னமாக விளங்கும் நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்படாமலிருக்க, என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.