Originally Posted by
chinnakkannan
பூமாலை தொடுத்த பாமாலையின் மீள் பதிவு..
**
திடீரென்று மனது குதூகலிக்கிறது. உணர்வுகள் பொங்கி எழுகின்றன. எதையாவது எழுதத் தோன்றுகிறது. பேனா எடுக்கிறோம்.. எழுதுகிறோம்..
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்து
நேற்றுப் பார்த்ததை
நினைத்துப் பார்க்கையில்
நேற்றுப் பார்த்தது
நிழற்கனவாகி
நாளை வந்திட..,
மறுபடி நேற்று!
என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறோம். நவீன கவிதை என அது பிரசுரமாகி விடுகிறது! பத்திரிகையைத் தடவித் தடவிப் பார்க்கிறோம். நாம் எழுதியதை மறுபடி மறுபடி படித்துப் பார்க்கிறோம். நமக்கே அப்போது தான் ஏதோ புரிய ஆரம்பிக்கிறது! நம் மனது மகிழ்கிறது. உடனே மறுபடி
மனம் மகிழ்ந்திட
மனம் மகிழ்ந்திட
கண்ட மகிழ்ச்சியில்
மனம் மடிந்திட,
அந்தரத்தில் நிற்பதென்னவோ
உடல்!
என்று இன்னொன்று எழுதிவிடுகிறோம்!
மஹா விஷ்ணுவிற்கும் ஆசை வந்தது. தானே வேறு உருவில் இருப்பதைப் பார்ப்பதற்கு. என்ன செய்தார்?
துவாரகாபுரியில் ஒரு அந்தணன் இருந்தான். அவனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தே பிறந்தன. ஒவ்வொரு முறையும் அரசவைக்குச் சென்று ‘அரசன் ஒழுங்காக ஆட்சி செய்தால் பிரஜைகளுக்கு இவ்விதம் நேரா” எனச் சொல்லி இறந்த குழந்தைகளை எரித்து வந்தான். ஒன்பதாம் முறையும் குழந்தை இறந்தே பிறக்கவே – அந்தணன் அரண்மனைக்குச் சென்று நிந்தித்தான். “என் குழந்தைகளைக் காப்பதற்கு யாரும் இல்லையா?” எனக் கதறினான்.
கண்ணன் அப்போது துவாரகையில் இல்லை. அர்ச்சுனன் மட்டும் இருந்தான். அவன் அந்தணனிடம் “ நீர் கவலைப் படாதீர். உமதுஅடுத்த குழந்தைக்கு எதுவும் நேராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என வாக்குக் கொடுத்தான். பத்தாவது குழந்தையின் பிரசவத்தின் போது வில்லேந்தி, எமன் எப்படி வருகிறான் என்று பார்க்கும் வண்ணம் நின்றான் அர்ச்சுனன்.
குழந்தை பிறந்தது; இறந்தது; மறைந்தது. அந்தணன் அழுகையுடன் கேலி செய்தான். “ முன்பாவது உடல் இருக்கும், இப்பொது அதுவும் இல்லை. நல்ல காவல்!” அர்ஜூனன் வெட்கப் பட்டு உயிரை விட யத்தனிக்கையில், கண்ணன் வந்தான்.
‘வா, நாம் போய் மீட்டு வருவோம்” என இருவரும் வாயு ரதத்தில் ஏறித் தேடினார்கள். சக்கிர வளாகிரி என்ற இடத்தில் ஒரே இருள். தனது திருவாழியால் இருளைக் கிழித்து ரதத்தைச் செலுத்த கடைசியில் கண்டது என்ன?
ஒளிமயமாக விளங்கும் நகரில் பரப்பிரம்மரான நாராயணன் ஆதி சேடன் மீது பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தனர். விஷ்ணு “ உங்கள் இருவரையும் காண வேண்டும் என்று இங்குள்ள முனிவர்களும் முக்தர்களும் விரும்பினர். அதானாலேயே அந்தணனின் குழந்தைகளை மறைத்தேன். அவர்கள் இங்கே உயிருடன் இருக்கின்றனர். அவர்களை அழைத்துச் செல்லலாம்” என்றார். கிருஷ்ணார்ச்சுனர்கள் அந்தணனிடம் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்க அந்தணன் மகிழ்ந்தான்.
தான் எடுத்த அவதாரத்தை, தானே பார்க்க வேண்டுமென விஷ்ணுவையும் ஆசைப்பட வைத்தது கிருஷ்ணாவதாரம்.
**
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருந்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
**
*