-
வாழ்க்கை
யாராவது டப்பா கார் வச்சுகிட்டு ரொம்ப அவஸ்தைப்படுகிறீர்களா?.
ரிப்பேர் ஆன காரை வச்சுகிட்டு அதை சரி செய்ய தகுந்த கார் மெக்கானிக் கிடைக்காம அலையறீங்களா?கவலைய விடுங்க. ராஜா கிட்ட போங்க.ராஜான்னா ராஜாதான்.அவர் கை வெச்சா நீங்க ரிப்பேர் பண்ண கொடுத்த கார் உங்களுக்கே புதுசா இருக்கும்.தொழில்ல நேர்த்தி. தொழில்ல கடின உழைப்பு.அவர்தான் ராஜசேகர். சுருக்கமா ராஜா. ராஜாவுக்கு செய்யற வேலையில நாணயத்தை தவிர உண்மையிலேயே வேறெதுவும் தெரியாது. அதுதான் ராஜா.அதனாலதான் ராஜா..
ராஜா யார்.?ராஜாவையும் அவரோடகுடும்பத்தையும் இப்ப பார்ப்போம்.ராஜா ஒரு கை தேர்ந்த கார் மெக்கானிக்குன்னு எல்லாரும் புரிஞ்சிருப்பீங்க.ராஜாவுக்கு அன்பான அழகான மனைவி.பேர் ராதா.காதல் மனைவி. ராஜாவுக்காக தன் பெரும்சொத்து உறவு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வந்தவங்க அவங்க.அந்த அன்பான கணவன் மனைவிக்கு ரெண்டு பிள்ளைங்க.ஒரு வளர்ப்பு பையன்.பெரியவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.வேலைக்கு அலைஞ்சுகிட்டு இருக்கான்.சின்னவன் காலேஜ் போய்கிட்டு இருக்கான்.வளர்ப்பு பையன் ராஜாவுக்கு ஒத்தாசையா இருக்கான்.இது தான் ராஜாவோட குடும்பம்.
மெக்கானிக் வேலையில சம்பாதிச்சு ஒரு குடும்பத்த காப்பாத்துறதுன்னா சும்மாவா?சின்ன சின்ன பண கஷ்டங்களாகவும் நிறைய நிறைய சந்தோசமாகவும் அவுக வாழ்க்கை நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு.
ஒரு நாள் பெரிய பையன் வந்தான்.பேங்க் வேலை கிடைச்சுருச்சுன்னுசொன்னான்.ஆனா வேலையில சேர பணம் டெபாசிட் பண்ணணும் சொல்றான்.ராஜா கிட்ட பணம் இல்ல..ராஜாவோட அம்மாவோட நினைவா மனைவி போட்டிருந்த நகை அது ஒண்ணுதான் பாக்கி.அதுவும் வித்து பையனோட பேங்க் உத்தியோகத்துக்கு வழி பண்ணியாச்சு.
ராஜாவோட ஹவுஸ் ஓனர் ராஜா குடியிருக்கிற வீட்டை ராஜாவுக்கே கம்மி விலைக்கு வித்துடறதா சொல்றார்.ராஜா பணத்துக்காக அல்லும் பகலும் பாடு படுறார்..பழைய காரை எடுத்து சரி பண்ணி வித்துரலாம்னு அதுக்கு வேண்டி ராப்பகலா வேலை செய்யறாரு.அப்படி ஒரு நாள் ராவுல வேலை செய்யறப்ப
காரோட பானட்டுக்குள்ள இருக்கிற பேன்ல கை சிக்கி நரம்பு கட்டாகி கை விளங்காம போயிடுது.ஓடி ஓடி ஒழச்ச உடம்பு,இப்படி ஆயிடுச்சேன்னு கலங்கிப் போகிறார்.அந்த டயத்துல முதலாளி வந்து ராஜாவோட பி.எப்.பணம்.,ரிப்பேர் பார்த்த கார வித்த பணம்னு 40000 ரூபாய் தர ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி.அந்தப்பணத்த வாங்கி அப்படியே மூத்தவன்கிட்ட கொடுத்து குடியிருக்கிற வீட்டைவிலைக்கு வாங்கி ராதா பேர்ல ரிஜிஸ்டர் பண்ணச் சொல்லிடுறார்.அவனும் மண்டைய ஆட்டிகிட்டு சரின்னு போயிடுறான்.
ராஜாவும் ராதாவும் ராமேஸ்வரம் போயிட்டு வரலாம்னுமுடிவு செஞ்சு மூத்தவன் கிட்ட டிக்கெட் புக் பண்ணி தான்னு கேட்கறார்.அவனும் முதல்ல சரின்னுட்டுபின்னால அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு மனசு மாத்திக்கிறான்.சும்மா வீட்டுல வெட்டியா உக்காந்து இருக்கறவங்களுக்கு எதுக்கு வெட்டியா செலவு பண்ணனும்னு அவ தூண்டி விடுறா. மூத்தவனும் மூளைய வச்சிக்கிட்டு யோசிக்காம பொண்டாட்டி பேச்சைக் கேட்டுகிட்டு மறுநா,அப்பன்கிட்ட எதுக்குவெட்டிச் செலவுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிர்றான்.ராஜா அந்த சமயத்துல ஓரளவு தாங்கிக்கிட்டாலும் மனசுக்குள்ள சின்ன சுணக்கம் வந்து விழுந்துர்றது.
ஆனா அந்தப் பேச்சு... வாழ்க்கையில் ராஜாவுக்கு
பசங்களால கிடச்ச மொத அடி அது.
சின்னவன் அவன் பங்குக்கு கொஞ்சம் செய்யறான்.படிக்கற காலத்துலயே ஒரு பொண்ண லவ்வு பண்றான்.அந்த பொண்ணோட அப்பன் பேரு சீதாராமன்.பெரிய பணக்காரன்.சின்னவனோட குணமும் படிப்பும் சீதாராமனுக்கு புடிச்சுருச்சு.அதனால லவ்வுக்கு தடை பண்ணல.பொண்ணோட சந்தோசமும் அவருக்கு முக்கியம்கறதால.ராஜாவும் லவ்வை எதுக்கல. ஏன்னா ராஜா பண்ணிக்கிட்டதே காதல் கல்யாணம்தானே.பின்ன என்ன பிரச்சினை?
சீதாராமன் தன் பொண்ண சின்னவனுக்கு கட்டிக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்கிடலாம்னு எண்ணத்துல சின்னவன்கிட்ட பணக்கார ஆச காட்டி மயக்கிடறாரு.ராஜா சின்னவன் கல்யாணம் பண்ணிகிறதுலஎந்த வித மறுப்பும் சொல்லலை.ஆனா வீட்டோட மாப்பிள்ளையா போறதத்தான் எதிர்க்குறாரு.ஏன்னா சுத்த ஆம்பளக்கு அது அழகில்ல.தன்மானத்தை விட்டுக்கொடுத்து தானே அப்படி வாழ முடியும்.அத ரோசமுள்ள அப்பன் யாராவது ஏத்துக்குவாங்களாய்யா.ராஜா யாரு?.சீதாராமன் மாதிரி பலமடங்கு பணக்காரானான ராதாவோட அப்பனேயே எதுத்து ராதாவ கல்யாணம் பண்ணி கவுரமா வாழ்ந்து வர்றவராச்சே.
சின்னவனுக்கு சீதாராமன் செஞ்ச மூளைச்சலவையே மண்டைக்குள்ள உட்காந்துகிட்டு தன்மானம் வெளில வரமாட்டேங்குது.
அந்த ஓட்டு வீட்டுல உட்காந்துகிட்டு பொழப்ப ஓட்டணுமான்னுஅவன் கவலப்படறான்.கடசில நான் சீதாராமன்கிட்டயே போறேன்னு போயிடறான்.
ராஜாவுக்கு வாழ்க்கையில கிடச்சரெண்டாவது அடி.
சின்னமகன் போயிட்ட பின்னாடி அதயே நினச்சு ராதாவுக்குஉடம்புக்கு முடியாம போயிடுது. சின்னவன போயி கூட்டிகிட்டி வந்தா ராதாவுக்கு ஆறுதலா இருக்கும் நெனச்சு ராஜா , சீதாராமன் வீட்டுக்கு போறாரு.சீதாராமன்!என் புள்ளய எங்கிட்டேயே திருப்பிக் கொடுத்துருங்க.நீங்க ஆச காட்டி அவன் மனச கலச்சிட்டீங்க.எம் புள்ளய அனுப்புங்க, அப்படின்னுகேட்குறாரு.
சீதாராமன் அதுக்கு உங்க புள்ள வந்தா கூட்டகிட்டு போங்க.நான் அதுக்கு குறுக்க நிக்கல.,அப்பிடீங்கறாரு.
சின்னமகன் வந்து, அந்த நரகத்துல வந்து மறுபடி நான் கஷ்டப்பட விரும்புல, அப்பிடின்னு சொல்லி வர மாட்டேங்கறான்.
சீதாராமன் அப்ப சொல்றாரு :
சிலரோட லாபம்
சிலருக்கு நஷ்டம்
சிலரோட அழுகை
சிலருக்கு சிரிப்பு
சிலரோட தோல்வி
சிலரோட வெற்றி
இதுதான் வாழ்க்கை.
அப்படின்னு அவரோட பாணில வாழ்க்கை தத்துவத்தை சொல்றாரு.
தான் பெத்த மகனேபிறந்து வளந்த வீட்டை அப்பன் முன்னாடியே நரகம்னு சொன்னா எந்த அப்பனாலத்தான் அத தாங்கமுடியும்.
இது அந்த தகப்பனுக்கு இன்னொருஅடி.
சின்னவனுக்கும் சீதாராமன் பொண்ணுக்கும் கல்யாணம் கல்யாணம் முடியுது.
ராதாவுக்கு உடம்பு ரொம்ப முடியாம போகுது.வைத்திய செலவுக்கு வளர்ப்புமகன் கண்ணன் ,மூத்தவன் மனைவி வச்சுருக்கிற உண்டியலை உடச்சு பணம் எடுத்து ராதாவுக்கு வைத்திய செலவு செஞ்சிடுறான்.
மூத்தவன் சம்சாரத்திற்கு கோபம் வந்து கண்ணனை அடிக்கிறா.ராஜா அத கண்டிக்க, வாக்குவாதம் முத்தி(முற்றி) தப்பான வார்த்தைகளா அவ வாயில இருந்து விழுகுது.அதுல ஒண்ணு:
அப்படி என்ன உடம்புக்கு.அப்படியே கஷ்டமா இருந்தாலும் செத்தா போயிருவீங்க?அப்படீன்னு கேக்கறா.அவ கேட்டது பெரிய அதிர்ச்சின்னா அதக் கேட்டும் ஒண்ணுஞ் சொல்லாம கல்லா நின்னுட்டு இருக்கானேமூத்த பையன் அது அதுக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குது ராஜாவுக்கு.
ஏண்டா.பெத்த அம்மாவ இப்படிக் கேட்கறாளே உன் சம்சாரம்.அத தப்புன்னு கேட்கத் தோணலையா உனக்கு,இத வளரவிட்டா தினம் தினம் இந்த மாதிரி பிரச்சனைக தான் வரும்.அதனால உம் பொண்டாட்டியக் கூப்புடுக்கிட்டுஇந்த வீட்டை விட்டு வெளியல போ.ராஜா கட் அண்ட் ரைட்டா சொல்லிப்புடுறாரு.
அப்பத்தான் தெரியுது விஷயமே..அந்த வீடே அவன் பொண்டாட்டி பேர்ல இல்ல இருக்குன்னு..இது அவன் சம்சாரமேஅப்ப சொல்லி ,இது எங்க வீடு நாங்க எதுக்கு வெளியில
போகணும்னு பதிலுக்கு கேட்கறா.
இதுக்கு முன்னாடி விழுந்தது எல்லாம் அடின்னா இது இடியால்ல இருக்கு.திகச்சு போயிடுறாரு மனுஷன்.மத்த எவனாவது இந்த நிலமையில இருந்தான்னா வாய பொத்திகிட்டு பேசாம குடுக்கறத சாப்பிட்டுகிட்டு செத்த பொணம் மாதிரி இருந்துக்குவாங்க.
ஆனா,
ராஜசேகர் யாரு?.உழச்சு உழச்சு வயிரம் பாஞ்ச உடம்பும்,தன்மானம் நிறஞ்ச மனசும் கொண்டவராச்சே.
ராதா,கண்ணன் ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு அந்த வீட்ட விட்டு ராஜா வெளியில்
போய் விடுகிறார்.
?
இதுதான் வாழ்க்கை என்றால்
இல்லை இதற்கு முடிவென்றால்
அவர் காட்டிய பாசத்திற்கும்
ஆளாக்கிய அன்பிற்கும்
அவர்கள் கொண்ட அர்த்தம்தான் என்ன?
----------------------------------------------------------------இனி மேல்தான் இருக்கிறது...
தொடரும்...
-
சிவகாமியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழா
சென்னையை தாண்டி ஒரு சினிமா விழாவை சிறப்பாக நடத்த முடியுமா?
சென்னையை தாண்டி ஒரு பழைய படத்தின் விழாவை நடத்த முடியுமா?
சினிமாக்காரர்களே கலந்துக் கொள்ளாமல் ஒரு சினிமா விழாவை நடத்த முடியுமா?
இவை அனைத்தையும் மீறி ஒரு விழா நடத்தும் நேரத்தில் பொது மக்கள் ஆதரவு கிடைக்குமா?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் முடியும் என்ற ஆணித்தரமான பதிலை அளித்தது மதுரை மாநகரம்.
பிப்ரவரி 28, சென்ற ஞாயிறன்று காலை ஒன்பது மணிக்கு மதுரை சினிப்ரியா திரையரங்கம் விழாக்கோலம் பூண்டது. நடிகர் திலகம் இரு வேடங்களில் வாழ்ந்து காட்டிய காவியமாம் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு தமிழகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அதன் ட்ரைலர் வெளியீடு விழாதான் மதுரையில் நடைபெற்றது.
முதலில் மினிப்ரியா அரங்கில் நடத்துவதாக இருந்து பின் ஏராளமான மக்கள் வருவதாக தெரிந்தவுடன் பெரிய அரங்கமான சினிப்ரியா அரங்கிற்கு மாற்றப்பட்டது. சினிப்ரியா 1000 பேர் அமரக்கூடிய அரங்கு. அதில் கால்வாசியாவது நிறையுமா என்று அரங்க உரிமையாளர்களே சந்தேகம் தெரிவித்தபோது வந்த கூட்டமோ அரங்கத்தின் அனைத்து இருக்கைகளையும் நிரப்பியது மட்டுமல்லாமல் ஏராளமான பேர் நின்று கொண்டும் விழாவை ரசித்தனர். ஆக முதல் வெற்றி அங்கேயே தொடங்கி விட்டது.
அகில இந்திய சிகர மன்ற பொது செயலாளர் நாகராஜன் அவர்கள் வரவேற்று பேசினார். பின்னர் சிவா மூவீஸ் பார்ட்னர் திரு பன்னீர் அவர்கள் வரவேற்றார்.
உத்தரகாண்ட் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றும் நேரத்தில் மோசமான வானிலையால் விபத்துக்குள்ளாகி தன்னுயிரை இழந்த IAF பைலட் பிரவீன் என்ற மதுரையை சேர்ந்த இளைஞனின் நினைவை போற்றும் வகையில் இந்த திரைப்படம் dedicate செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து அவ்விளைஞனின் தாயார் திருமதி மஞ்சுளா அவர்கள் குத்துவிளக்கேற்றினார். அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ள போகிறோம் என்று தெரிந்தவுடன் அந்த குடும்பத்திற்கு ஒரு சிறிய நினைவுப் பரிசை வழங்க இந்த படத்தின் இயக்குனர் சிவிஆர் அவர்கள் நம்மிடம் கொடுத்து விட்டிருந்தார். அதை மேடையில் வைத்து திருமதி மஞ்சுளா அவர்களிடம் ராகவேந்தர் சார் வழங்கினார்.
அதன் பிறகு திருமதி மஞ்சுளா பேசினார். தன மகனைப் பற்றி, அவனின் படிப்பு திறமையைப் பற்றி, பல்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்தது பற்றி ஆனால் விமானப் படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற அவனின் ஆவலைப் பற்றி இறுதியாக தன்னிடம் பேசியது பற்றி என்று அவர் பேச பேச அரங்கமே அவரின் சோகத்தையும் பெருமிதத்தையும் உணர்ந்தது. தனக்கு ஆதரவாக நின்று உங்களுக்கு எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மகன்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொன்ன காமராஜ் சிவாஜி அறக்கட்டளை பற்றியும் அந்நேரம் அங்கே இருந்த சிவா மூவீஸ் நிறுவனத்தினர் சிவகாமியின் செல்வன் படத்தை டிஜிட்டலில் மறு வெளியீடு செய்வது பற்றி சொல்லியதையும் அதை தன் மகன் ப்ரவீனுக்கு dedicate செய்வது பற்றியும் சொல்லியதை நினைவு கூர்ந்த அவர் எப்போது படம் வெளிவரப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் படம் ட்ரைலர் விழாவிற்கே தன் மகனின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் நகரம் எங்கும் ஒட்டப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய அவர் சிவாஜி ரசிகர்கள் சொன்ன சொல் தவற மாட்டார்கள் என்ற உண்மையை புரிந்துக் கொண்டேன் என்றார். இந்த செய்கையால் நெகிழ்ந்து போன விமானப் படையை சேர்ந்த பல குடும்பங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர்களில் சிலரும் தன்னுடன் வந்திருப்பதாகவும் பெருமையுடன் கூறினார். இந்த படம் மக்களிடையே போய் சேர வேண்டும் என்ற தன் ஆசையை தெரிவித்துக் கொண்ட அவர் படம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார்.
தொடர்ந்து நமது அருமை நண்பர் கவிஞர் ஆதவன் ரவி அவர்கள் அற்புதமான கவிதை ஒன்றை மேடையிலே வடிக்க அரங்கம் ஆர்ப்பரித்தது.
அடுத்து பேசிய நீதியரசர் பொன்னுசாமி நடிகர் திலகத்தின் நடிப்பு திறமையை பற்றி சிலாகித்தார். பின் விழாவிற்கும் படத்தின் வெளியீட்டிற்கும் வாழ்த்து கூறி முடித்தார்.
அடுத்து வந்தவர் கமலா சினிமாஸ் உரிமையாளரும் மறைந்த திரு வி.என். சிதம்பரம் அவர்களின் புதல்வருமான திரு வள்ளியப்பன். நடிகர் திலகத்துடனான தங்கள் குடும்ப உறவை பற்றி சொல்லிய அவர் தனது தந்தை எப்படி சிவாஜி படங்களுக்கு மட்டுமே கூட்டி செல்வார் என்பதையும் திருவிளையாடல் படதிற்கு தன் தாயார் மற்றும் தந்தையுடன் போனதையும் நினைவு கூர்ந்தவர், சிவனாக நடிகர் திலகம் தோன்றியவுடன் தன் தாயார் கைகளை கூப்பியதையும் இறுதி வரை எடுக்காமலே இருந்ததையும் இடைவேளையின்போது தன்னிடமும் சிவனை கும்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தியதையும் நகைச்சுவை ததும்ப பேசினார். இப்போது வரும் படங்களை பார்க்கவே முடியவில்லை என்பதை சுட்டிக் காட்டிய அவர் தன் நண்பர் ஒருவர் குடும்ப சமேதம் வந்திருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை ஜாலியாக பகிர்ந்துக் கொண்டார். இடைவேளைக்கு பிறகு மகன் சிவாஜி அறிமுகமாகும் காட்சியைப் பற்றி குறிப்பிட்டு அப்போது நடிகர் திலகம் நடந்து வரும் ஸ்டைல் பற்றி சொன்ன அவர் உலகத்தில் எந்த நடிகனாலும் முடியாத ஸ்டைல் அது என்றார். நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களைப் பற்றி பேச ஆவலாக இருக்கிறது என்றும் ஆனால் நேரமின்மையால் பிறிதொரு சமயம் பேசுகிறேன் என்று சொல்லி வாழ்த்து தெரிவித்து விடை பெற்றார் வள்ளியப்பன்.
அடுத்தபடியாக விழா வெகு சிறப்பாக நடைபெற வாழ்த்தி தளபதி ராம்குமார் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தி மேடையில் படிக்கப்பட்டது.
மதுரை ராமநாதபுரம் ஒருங்கிணைந்த விநியோகஸ்தர் கூட்டமைப்பின் தலைவர் திரு செல்வின் படம் 1974-ல் வெளியானபோது பெற்ற வெற்றியை விட மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கு பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும் என்றும் அதன் மூலமே இது போன்ற பழைய படங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவர்களுக்கு ஒரு உற்சாகம் கிடைக்கும் என்றார்.
அடுத்து பேசியவர் மதுரை அன்னபூர்ணா ஹோட்டல்ஸ் உரிமையாளரும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவருமான தங்கராஜ். காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தவர் நடிகர் திலகம் என்றும் அதற்கு உரிய மரியாதையை காங்கிரஸ் நடிகர் திலகத்திற்கு செய்ய தவறி விட்டதையும் மேடையிலே ஒப்புக் கொண்ட அவர் இப்போது ஈவிகேஎஸ் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் அதற்கு பிராயச்சித்தம் செய்யும் என்றார். எங்களுக்கு காலம் வரும் என்ற பாசமலர் பாட்டை நினைவு கூர்ந்த அவர் தங்களுக்கு வாழ்வு வரும்போது நடிகர் திலகத்திற்கு செய்ய வேண்டிய மரியாதையை செய்வோம் என்றார். இந்த தேர்தலுக்கு பிறகு அந்த நிகழ்வு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக பேசியவர் ஜனதாதள மாநில பொது செயலாளர் ஜான் மோசஸ். உணர்ச்சிபூர்வமாக உரையை தொடங்கிய அவர் சிவகாமியின் செல்வன் என்றாலே நம்முடைய பெருந்தலைவர் அவர்களை நினைவுப்படுத்தும் பெயர். அந்த பெயரில் வெளிவந்த இனியும் வெளிவரப் போகின்ற இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். வள்ளியப்பன் போலவே நடிகர் திலகம் நடந்து வரும் அந்த ஸ்டைல் நடையை குறிப்பிட்ட அவர் அது போல் செய்வதற்கு யாருண்டு என்று கேள்வி எழுப்பினார். சாதாரண தொண்டனாக மதுரையில் இருந்த தன்னை மாநில பொது செயலாளராக கொண்டு வந்தவர் நடிகர் திலகம் என்றார். அவர் மட்டும் இல்லையென்றால் இந்த ஜான் மோசஸ் இல்லை என்று உணர்ச்சிவசப்பட்டார். பல வருடங்கள் கட்சியில் இருந்தபோதும் தன் உழைப்பை அங்கீகரித்தவர் நடிகர் திலகம் மட்டும்தான் என்றார். இந்த படத்தில் ஒரு பாடல் வாலி எழுதியிருப்பார். எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே என்ற பல்லவியை சொன்ன அவர் சிவாஜி ரசிகர்கள் பொறுமையாக இத்தனை வருடம் இருந்து விட்டனர். இனிமேல் உங்களுக்குத்தான் காலம் என்று சொன்ன அவர் சிவாஜிக்கு மணி மண்டபம் அமைப்பதே அடுத்த அரசாங்கத்தின் முதல் பணியாக இருக்க வேண்டும். அதை செய்ய போகும் அரசாங்கம் உருவாவதற்கு சிவாஜி ரசிகன் முக்கிய பங்கு வகிப்பான் என்று முழக்கமிட்டார். சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ என்ற வரி உண்மையாகும் என்று கூறி உரையை முடித்தார்.
பின் ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திற்க்கிடையில் ட்ரைலர் திரையிடப்பட்டது. பின் இனியவளே பாடலும் திரையிடப்பட்டது. நேரமின்மை காரணமாக திரையிடுவதற்காக தயார் செய்திருந்த .ஆடிக்கு பின்னே பாடல் காண்பிக்கப்படவில்லை.
விழா முடிந்து மக்கள் கூட்டம் வெளி வருவதை பார்த்தவர்கள் அசந்து போய் நின்றனர் என்பதுதான் உண்மை. 10.30 மணிக்கு விழா நிறைவு பெற்றது என்றால் தியேட்டர் வளாகத்தில் பகல் 1 மணி வரை மக்கள் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர் என்றால் அதை விட விழாவின் வெற்றிக்கும் சிறப்புக்கும் சாட்சி வேண்டுமா என்ன?
அன்புடன்
-
-
-
-
-
-
-
-