-
நினைவலைகள்...எம்ஜிஆரின் விடியோவால் வெற்றி!
"எம்ஜிஆரிடம் ரூ.60 ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்து, அவரை வைத்தே 6 திரைப்படங்கள் எடுத்து, அவருக்கு லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாகக் கொடுத்தேன். அவர் கட்சி தொடங்கிய போது, பிரசார வியூகம் வகுத்துக் கொடுத்தேன். அவருடனான எனது அரசியல் பயணத்தில் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்திருந்தாலும், தொகுதிக்கு பிரசாரத்துக்கே போகாமல், எம்ஜிஆர் வெற்றி பெற்ற தேர்தல்கள்தான் என்னால் மறக்க முடியாதவை' என்று நினைவு கூர்கிறார் மூத்த அரசியல்வாதியான இராம.வீரப்பன் (90).
41 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், அண்ணா, எம்ஜிஆர், மு.கருணாநிதி, ஜெயலலிதா என 4 முதல்வர்களுடன் நட்பு பாராட்டியவர்
ஆர்.எம்.வீ.என்று அழைக்கப்படும் இராம. வீரப்பன். 1963-இல் "சத்யா மூவிஸ்" திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், இரு முறை மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும், இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1995-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தன்னுடைய தேர்தல் அனுபவம் குறித்து இராம.வீரப்பன் கூறியதாவது:
எனது வாழ்வில் மறக்க முடியாத இரண்டு தேர்தல்களிலுமே வேட்பாளரான எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தார். 1967-ஆம் ஆண்டு
நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அண்ணா தலைமையில் திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டார். ஆனால், அவரால் பிரசாரத்துக்கு போக முடியவில்லை. ஏனெனில், அப்போது நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தார். மிகப்பெரிய தொகுதியான பரங்கிமலை காங்கிரஸ் கட்சியின் கோட்டை. பல இடங்களில் பிரசாரத்துக்கு போக முடியாமல் கலவரம் வெடித்தது.
ஆனால், அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பொதுவாக, எம்ஜிஆர் தனது அழகான புகைப்படம் மட்டுமே வெளிவர வேண்டும் என்று நினைப்பார். ஆனால், மருத்துவமனையில் கட்டுடன் இருந்த அவரின் புகைப்படத்தை வெளியிடப் போராடி அனுமதி பெற்று வெளியிட்டபோது தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
அதன்பிறகு, 1984-ஆம் ஆண்டில், எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார் எம்ஜிஆர். அப்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் போட்டியிட்டார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பிறகு இங்கு வந்த சில நாள்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே ஜப்பான் டாக்டர் கானு அளித்த சிகிச்சைக்குப் பிறகு எம்ஜிஆர் குணமடைந்தார். ஆனால், "அதற்குள் எம்ஜிஆர் இறந்துவிட்டார், அவரைக் கண்ணாடிக் கூண்டுக்குள் வைத்திருக்கிறார்கள்' என்று எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்தனர். உடனே நாங்கள், எம்ஜிஆர் நலத்துடன் இருக்கும் புகைப்படங்களை நாளிதழ்களில் வெளியிட்டோம். ஆனாலும், யாரும் எதிர்பார்க்காத விதமாக புதிய உத்தியை அந்தத் தேர்தலில் பயன்படுத்தத் திட்டமிட்டேன்.
எம்ஜிஆர் சாப்பிடுவது, ஜானகி அம்மாள், டாக்டர் பெரியசாமியுடன் பேசுவது, நடப்பது ஆகியவற்றை விடியோ எடுத்தோம். பலரின் உதவியுடன், வலம்புரி ஜான் வர்ணனையுடன், ஒரே நாளில் 100 திரையரங்குகளில் அந்த விடியோ பதிவு வெளியானது. இந்தியாவிலேயே தேர்தலுக்காக விடியோ பயன்படுத்தப்பட்டது அதுவே முதலாவதாகும்.
அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்பதில் சிக்கல் எழுந்தது. அப்போதைய ஆளுநர் குரானா, முதல்வராகப் பதவியேற்க எம்ஜிஆர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்ற சான்றிதழைப் பெற்றுத் தரச் சொன்னார்.
அதை எம்ஜிஆரே கொண்டு வருவார் என்று கூறிவிட்டு வந்தேன். அதன்படி பிரம்மாண்ட விழா எடுத்து, அவர் பயன்படுத்திய அம்பாஸிடர் காரிலேயே அவரை மேடை ஏற்றினோம். லட்சக்கணக்கான மக்களின் கரகோஷத்துக்கு இடையே எம்ஜிஆர் மேடையில் தோன்றினார். அதைத் தொடர்ந்து, மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற எம்ஜிஆர், 3 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருக்காகப் பணியாற்றிய அந்த நாள்கள் மறக்க முடியாதவை என்றார் இராம. வீரப்பன்.
-
அதிகாலையிலும் பிரசாரம்! எம்ஜிஆரை காண அலைமோதிய கூட்டம்
நினைவலைகள்...
1977 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கடையநல்லூர் தொகுதியில் களம் கண்டு பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர் எம்.எம்.ஏ. ரசாக். இவர், எம்எல்ஏவாக இல்லாத நிலையிலும் தொடர்ந்து இன்றுவரை மக்களுக்குச் சேவைகள் செய்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள வடகரையில் வசித்து வரும் அவர், 29 வயதில் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற போது இருந்த அதே உற்சாகத்துடன் தனது கடந்தகால நினைவலைகள் குறித்து கூறியதாவது:
1977 பேரவைத் தேர்தலின் போது கடையநல்லூர் தொகுதிக்கு நான் அறிமுகம் இல்லாத புதிய வேட்பாளர். ஆனால், அன்றைய காலகட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.கே.டி. ராமச்சந்திரன், ஜனதா தலைவர்களில் ஒருவரான லெட்சுமண நாடார் ஆகியோர் எனக்கு எதிராகப் போட்டியிட்டனர். திமுக சார்பில் கட்டாரிப்பாண்டியன் களம் இறக்கப்பட்டார்.
எனக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர். கடையநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் அதிகாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதிகாலை கூட்டம் என்றாலும், எம்ஜிஆரை காண்பதற்கும், அவரது பேச்சைக் கேட்பதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்றைய காலகட்டத்தில் காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் வாக்கு சேகரிக்கலாம் என்ற நிலை இருந்தது.
அப்பொதெல்லாம், வாக்குச் சாவடிக்கு இவ்வளவு பணம் என கட்சித் தலைமை சார்பில் தொண்டர்களுக்கு நிதி எதுவும் வழங்கும் வழக்கம் இல்லை. வேட்பாளர்கள் அவர்களின் சொந்தப் பணத்தைக் கொண்டே செலவழிப்பர். வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய கட்சித் தொண்டர்களுக்கு ஒரு வாக்குச் சாவடிக்கு ரூ. 50 முதல் 100 வரை கொடுத்ததாக ஞாபகம். தேர்தல் ஆணையம் வரையறுத்துக் கூறியதைவிட பாதியளவுக்குத்தான் செலவு செய்தேன்.
கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில்தான் வாக்குகளை எண்ணினார்கள். இரவு 10 மணியளவில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டேன்.
அந்தத் தேர்தலில் நான் 29,347 வாக்குகள் பெற்றேன். எஸ்.கே.டி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்) 23,686 வாக்குகளும், கட்டாரிப்பாண்டியன் (திமுக) 16,329 வாக்குகளும், லட்சுமணநாடார் (ஜனதா) 5,623 வாக்குகளும் பெற்றனர்.
எம்ஜிஆரை எளிதில் அணுகலாம்: எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரை எளிதில் சந்திக்க முடியும். காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அவரது தோட்டத்துக்குச் சென்று, பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் அமர்ந்து கொள்ளலாம். எம்.ஜி.ஆர். அறைக்கு வந்த பின்னர் சந்தித்துப் பேசலாம்.
பொதுமக்கள் தினமும் அவரைச் சந்திக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் முதல்வரின் உதவியாளர்களான பரமசிவம், லட்சுமிநாராயணன் ஆகியோரைச் சந்தித்து பிரச்னைகள் குறித்து தெரிவித்துவிட்டால் போதும். அவர்கள் முதல்வர் எம்ஜிஆரிடம் தெரிவித்து பிரச்னைக்கு தீர்வு காண்பர்.
எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு செல்பவர்களுக்கு அவரே உணவைப் பரிமாறுவார். சாப்பிடாமல் அனுப்பமாட்டார்.
1989-இல் அதிமுக (ஜா) அணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
-
எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!
m.g.r. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்
‘நவரத்தினம்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் குன்னக்குடி வைத்தியநாதன். தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!
கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.
ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.
அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.
எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.
1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.
இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!
.
இந்தத் தலைமுறையினர் பலர் அறிந் திராத செய்தி இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் ‘நவரத்தினம்’.
-
-
-
-
-
-
-