ராஜா
http://i.ytimg.com/vi/fVlJn3Fs3pE/maxresdefault.jpg
அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். மதியம் ஜெயா மூவீஸில். ராஜா! இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!
இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் ராஜா ரசிகர்களுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம் இன்று வீட்டில் மனைவி பிள்ளைகளுடன். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 53. ஆனால் ராஜா மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (அதில் யாரோ சிவாஜி என்று ஒருவர் நடித்தாராம் அவருக்கு அப்போது வயது 44 ஆம்)
ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த ராஜா மட்டுமே. அவன் எடையே 50 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி.
அவன் முடி இருக்கிறதே. அதுவும் நெற்றிக்கு முன் கற்றையாக நீண்டு. பக்கவாட்டில் பார்த்தால் அந்தக் கொத்து முடியின் உள்பக்கம் சற்றே உள்ளடங்கியவாறு இருக்கும் அந்த வசீகர வதன முகம். அவன் கண்கள் துறுதுறுவென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?
லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?
இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே டபக்கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிருவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும்.
இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் ராஜாவின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! ராஜா அறிமுகமாவதே ஜெயிலில்தான்.
வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய இன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.
இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
தீராத விளையாட்டுப் பிள்ளை. கோட் , பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்க்கப்பட்டுப் போகுமாம்.
இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி. எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன். ஜோடியிடம் கூட வாயால் சொல்லாமல் நான் ஒரு போலீஸ் என்று ஜாடையில் காட்டுவான்.
தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். ராஜா என்பான் அப்புறம் இல்லை என்பான். சேகர் என்பான். கவர்ச்சிக் கள்ளன். திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே.
வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாசம் குருஷேத்திரப் போர் போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.
தன் தாயைக் கொடுமைப் படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான்.
அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம்.
இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன். அவன்தான் எங்கள்
எவர்க்ரீன் 'ராஜா'.
எங்கள் இதய 'ராஜா'
('ராஜா' சேவை தொடரும்)

