-
வியாதி வர்றதுக்குக் காரணமே
இந்த திருஷ்டி தான்’
மடியில் தம்பியை வைத்து
சூட்த்தை மூன்றுமுறை சுற்றுவதற்கு முன்
அம்மா சொன்னதும்;
வளர்ந்த பின்
‘எட்டு மிளகாய் போட்டு
சுத்திப் போட்டு அடுப்பில போட்டேங்க..
கமறவே இல்லை..
பாருங்க பசங்களுக்கு..ரொம்ப திருஷ்டி’
என்று பதறிச் சொன்னதும்;
காதலித்துக் கடிமணம் புரிந்த
வடக்கத்திய மனைவி என்னிடம்
‘நஸர் உத்தார்னேகேலியே
இந்த கட் பண்ணின நிம்புவை
மூணு டைம் சுத்தி பாஹர் போடு’
என்று மழலைத் தமிழில் சொன்னதும்;
எனக்கு திருஷ்டிக்கு
முற்றுப் புள்ளி வைப்பதை விட.
அவர்களது அன்பின்
’கமா’ வாகத்தான் தோன்றியது...
-
தோன்றியது மனதில் துணிவு
மறைந்தது மருகும் தயக்கம்
நடை பழக அருகில் இடமில்லை
சாலையில் போக்குவரத்துத் தொல்லை
கொழுப்பை குறைத்தே ஆக வேண்டும்
கை நீட்டி வரவேற்றது அருகிருக்கும்
மகளிர் உடற்பயிற்சி மையம் ஆகா
இனி அழகும் ஆரோக்கியமும் எனதே
-
எனதே என்றிராது நமதே என்றிருப்பின்
எளிதே பிறக்கும் நன்மை.
-
கிறுக்கன்
-
நன்மை -குவியும் கோடிகள்
உலகளாவிய ஒளிக்குளியல்
நீல நிறம் வெல்ல வேண்டி
விரதம் இருக்காத குறை
முட்டாள் பெட்டி முன்னமர்ந்து
முழு முனைப்போடு ஆதரித்து
நடுநிசியில் இனிப்பு வழங்கி
தீபாவளி கொண்டாடி வெடித்து
மதுவை பீச்சியடித்து மகிழும்
முகங்களைக் கண்டு பசி மறக்கும்
பாமரப் பக்குவம் வாய்க்கலையே
-
"வாய்க்கலையே..
ஒனக்கு வாச்ச மாதிரி புருஷன்,
புள்ளைங்க, மாட்டுப் பொண் எனக்கு...’
அம்மாவிடம் அவ்வப்போது புலம்புவாள்
பக்கத்துவீட்டு ’பபுள்கம்’ ரங்கம் மாமி..
என்னம்மா இது எனக் கேட்டால்
அம்மா புன்னகைப்பாள்..
சும்மா இருடீ.. ஏதோ சொல்லிட்டுப் போறாள்..
வாழ்க்கைல ரொம்ப கஷ்டப் ப்ட்டுட்டாள்.. என்பாள்..
காலப் போக்கில்
கம் மாமியின் கணவர் மறைய
தொடர்ந்த சில வருடங்களில்
அம்மா மரித்த சமயத்தில்
கேட்டது குரல்..
‘வாய்க்கலையே..
ஒன்னமாதிரி எனக்கு
சுமங்கலியாப் போறதுக்கு..”
**
திருத்தவே முடியாது
சில ஜென்மங்களை..
-
ஜென்மங்களைத் தாண்டிய பந்தமிது
சலீம் அனார்கலியாய் பிறந்தோம்
அம்பிகாபதி அமராவதியானோம்
ரோமியோ ஜூலியட் நாம்தானே
பெயர் பொறிக்காமல் போனாலும்
காவிய காதலர்களாய் நாமென
அழகான கற்பனையுடன் தீட்டிய
காவியங்களுக்கு முடிவேயில்லை
முதுகைக் காட்டி படுத்துறங்கும்
முகத்தைப் பார்க்க வெறுக்கும்
பட்டாசாய் பொறியும் பகைவராய்
வீட்டுக்கு வீடு காண்பது நிதர்சனம்
-
நிதர்சனம் என்றால்..’
‘தெளிவு, உண்மை எனலாம்..”
‘அதாவது நம் காதல் நிதர்சனம்..”
இல்லை.. நம்காதல் உண்மை என்பது நிதர்சனம்..
வேகமாக வந்த பையன்
அம்மா புரியவே இல்லம்மா..
ஏன் திடீர்னு வேற பாஷைல்ல பேசறாங்க என்றபடி
தொலைக்காட்சியில் விளையாட்டிற்கு மாற்றியபோது
நிதர்சனமாய்ப் புரிந்த்து
விளையாட்டில் அவனுடைய ஆர்வம்..
-
ஆர்வம் அடிக்கடி கோளாறாகுது
அத்து மீறிப் போக துடிக்குது
மூடிய அறைக்குள் எட்டிப்பாக்குது
தடை செய்யப்பட்டதை நோங்குது
ஆப்பிளைக் கடித்த ஆரம்பமே
விபரீதமாய் இன்றும் தொடருது
-
இன்றும் தொடருது போராட்டம்
இன்னும் சேறுது பெருங்கூட்டம்
இன்னல் நீக்கும் தொடராட்டம்
இனியேனும் வீழுமா லஞ்ச வெறியாட்டம்.....
-
கிறுக்கன்
-
வெறியாட்டம் போடும் சூறாவளி காற்று
வேரோடு மரங்களை பிடுங்கும் மதயானை
ஊவென ஊளையிடும் ராட்சத ஓநாய்
வெட்டும் மின்னலோடு கொட்டும் மழை
இயற்கையின் ஊர்த்தவ தாண்டவமோ
அழித்து கழித்து துடைக்கும் பணியோ
-
பணிவில்; அவளது பார்வை வீச்சில்..
..பிணிகள் எல்லாம் பறந்து போகும்..
துணிவாய் வாயைத் திறக்கச் சொல்லித்
..திணிப்பாள் கசப்பு ம்ருந்தை நன்றாய்..
இனிதாய் அழகாய்க் கேட்பாள் தினமும்....
..இப்போ வலிதான் எப்படி இருக்கு..
மனித னாகப் பிறந்தே விட்டோம்..
..மறக்குமா வலிகள் என்றால் சிரிப்பாள்..
காலப் போக்கில் குணமாய் ஆகி
.மருத்துவ மனையை விட்டே சென்று
மறுபடி வேலை மறுபடி குடும்பம்
என்றே நாட்கள் சென்ற போதில்
ஒருநாள் சென்றே பார்த்தேன் அவளை..
சிரித்தால் ஒன்றும் பதிலும் வரலை..
அழகிய பெண்ணே.மறந்து விட்டாயா..
இங்கே இருக்கும் நாட்களில் எல்லாம்
ஈன்ற தாயாய்; இனிய தோழியாய்
இருந்தவள் தானே நீயும் என்றால்..
ஐயா நோய்கள் தாக்கும் பொழுதில்
தீர்க்க நடக்கும் மருந்தாய் நாங்கள்..
அதுவே எம்தொழில் அதற்கு மேலும்
பெரிதாய் எதுவும் செய்யவு மில்லை..
பிணியுடன் வந்தால் மருந்தாய் இருப்போம்.
நோய்கள் மறைந்து நீவிர் சென்றால்..
நீங்கள் வேறு நாங்களும் வேறு...
மன்னிக்க வேண்டும் வேலை நிறைய..
பிறிதொரு பொழுதில் முடிந்தால் பார்ப்போம்..
வெள்ளை மன்ந்தான் உடையில் தெரிய
சிரித்தே மறைந்த்து அழகிய தேவதை..
-
தேவதைகள் பெரியவர்க்கு பரிச்சயமில்லை
சிறுமிகளுக்கோ நெருங்கிய தோழிகளன்றோ
மாற்றாந்தாயும் அவள் மகள்களும் தடுக்க
அதைத்தாண்டி மன்னர் அளித்த விருந்துக்கு
எலிகள் பரிகளாகி பூசணி சாரட்டை இழுக்க
அழகிய பதுமையாய் அதிலமர்ந்து சென்று
சின்டிரல்லா இளவரசன் மனம் கவர்ந்தாடி
கண்ணாடி செருப்பின் துப்பிலே இறுதியில்
மணம் முடித்து அரண்மனை புகுந்த கதை
அறியாத சின்னச் செல்லங்கள் உண்டோ
-
உண்டோ இலையோ என்றே தோன்றும்
உடுக்கை போன்றே குறுகிய இடையும்..
கண்டால் உள்ளம் களிவெறி கொள்ளும்
கனிச்சுவை கொண்ட கொவ்வை இதழும்
வண்டைப் போல குறுகுறு வென்றே
விழிகள் சுழலும் பார்வையும் கொண்டே
திண்டைப் பற்றிச் சிரித்தாள் அவளும்..
திகைத்தவன் மனமும் விழுந்த்து அங்கே..
மதுரை அழகைத் தெரிந்தவந்தான்..
மனதைத் தொடுமெனப் புரிந்தவன் தான்
வதுவை கொண்ட கண்ணகியை
வீட்டில் இருத்தி வந்தவன் தான்..
மதுரச் சிரிப்பைக் கேட்ட தனால்
மதியில் மயக்கம் கொண்டுவிட்டான்..
புதுமைச் சிரிப்பா அதுஇல்லை..
பாழும் விதியின் சிரிப்பன்றோ..
-
சிரிப்பன்றோ விதை போட்டது
திரௌபதி சிரித்தாள் முன்னம்
பாரதப் போரில் அது முடிந்தது
ஏளனம் எள்ளல் பரிகாசமில்லாமல்
கள்ளம் கலக்காமல் சிரித்தால்
பிள்ளைகள் போல் குதூகலந்தான்
-
குதூகலம்தான் கொண்டாட்டந்தேன்..
எல்லாமே இங்கே எலவசந்தேன்..
பையனுக்குக் கேர்ள்பெரண்ட் இலவசம்..
பொண்ணுக்கு புருஷன் இலவசம்..
புருஷனுக்குத் தொப்பை இலவசம்..
மாமியாருக்கு மாட்டுப் பொண் எலவசம்..
மாட்டுப்பொண்ணுக்கு சீரியல் எலவசம்..
சீரியலுக்கு நாயகி இலவசம்..
நாயகிக்கு வில்லி இலவசம்..!
வில்லிக்கு விளம்பரம் இலவசம்..
விளம்பரத்துக்கு விற்பனை இலவசம்..
விற்பனைக்கு ஹீரோஇலவசம்
ஹீரோவிற்குக் கோடிகள் இலவசம்
கோடிகளுக்கு வேட்பாளர் இலவசம்
வேட்பாளருக்குத் தொகுதி இலவசம்
தொகுதிக்குக் கட்சி இலவசம்
கட்சிக்கு ஆட்சி இலவசம்
ஆட்சிக்கு இலவசமே இலவசம்
ஆகக் கூடி
வாழ்க்கையே எலவசமாப் போச்சு...!
**
-
போச்சு போயே போச்சு
பூவும் பொட்டும் புருவமும்
பட்டு பாவாடை புடவையும்
கருநாகம் போல் சடையும்
நளினமான நடை அழகும்
பெண் அடையாளமத்தனையும்
-
அத்தனையும் உனக்கு அப்புறம் தர்றேன்
அம்மா சொல்வாள் ஆனால் மறுபடி
அழகாய் வைத்தே இருப்பதைப் பார்க்க
ஆவல் தோன்றும்; நாவில் ஊறும்
மெல்ல நைசாய் அருகில் சென்று
வெல்லச் சீடை எடுத்தால் வந்தே
வள்ளென விழுவாள் படவா ராஸ்கல்
பொறுமை என்பது கொஞ்சமும் இல்லை
எல்லாம் அந்த கண்ண ஒம்மாச்சிக்கு
அப்பா வந்து ஆரா திப்பார்
அப்புறம் தருவேன் கொஞ்சம் பொறேண்டா..
**
அவளைச் சொல்லிக் குற்றமும் இல்லை..
காலை வெள்ளென எழுந்து குளித்து
பக்தியுடனே எல்லாம் எடுத்து
முதல்நாள் ஊறப் போட்ட்தை உரலில்
இட்டு அரைத்து, பின்னர் எல்லாம்
பரபரவென்றே பலப்பலவாக
சீடை முறுக்கு, தட்டை மிக்சர்,
அதிரசம் மற்றும் பலவித பட்சணம்
ஒண்டி ஆளாய்ச் செய்து முடிக்க
மாலை ஆறு மணிதான் ஆகும்
இதனின் நடுவே அம்மா அழகாய்
வீடுமுழுக்கக் குட்டிக் காலகள்
இட்டு முடித்துக் காய்ந்தும் இருக்கும்
பின்னர் அப்பா கடையை மூடி
வந்தே குளித்து ஒருமணி நேரம்
கிருஷ்ணா என்றே பூஜைகள் செய்வார்
அதற்குப் பிறகு தீர்த்தம் திருத்துழாய்
சுக்கு வெல்லம் வெண்ணெய்; சீடை
மற்றும் அனைத்தும் உண்ணத் தந்தால்
அப்பா செய்த பூஜையின் அழகில்
அம்மா செய்த பட்சண வரிசையில்
பசிதான் எங்கோ மறைந்தே போகும்....
**
கடிக்க முடியா உப்புச் சீடை
கன்ன்ங்கரேலென வெல்லச் சீடை..
எண்ணெய் கொட்டும் அதிரசம் மற்றும்
எல்லாம் பக்கக் கடையில் வாங்கி
பூஜை செய்து மருமகள் தந்த தில்
வந்த்து நெஞ்சில் அந்தநாள் நினைவு..!
**
-
நினைவுத் திரையில் நிழலாடிய உருவமோ
தவழும் அழகிய கொழுக் மொழுக் குழந்தை
நேரில் நிற்கிறான் மீசையுடன் ஆறடியில்
நம்ப முடியவில்லை நான் கிழவியானதை
-
கிழவியானாதையோ குமரியானதையோ
சொன்னால் மறுப்பார்கள் இந்தப் பெண்கள்
வேகாத வெயில்ல வயசான காலத்தில
இப்படி உழைக்கணுமா என்றால்
என்ன இப்படிக் கேட்டுட்ட
வைகாசி வந்தால் அம்பத்தெட்டுதான் ஆகுது..
எனக்கொண்ணும் வயசாகலை
என்கிறாள் பக்கத்து வீட்டுப் பாட்டி..
அதையே என் பெண்ணிடம்
ஏண்டி வயசுப் பொண்ணா லட்சணமா
வீட்டுவேலை கத்துக்கயேன் என்றால்
அதுக்கின்னும் எனக்கு வயசாகலை
நா சின்னப் பொண்ணுதான்..
என வருகிறது பதில்..
ம்ம்..பெண்ணே உன் மறு பெயர் புதிரா..
-
புதிரா இருக்கேன்னு
புத்திசாலி நினைச்சான்
பழம் ஏன் கீழே விழுது
புவி ஈர்ப்புன்னு புரிநது
பார்வையின் கோணம் தருது
பதிலை பொருளை பூரணத்தை
-
பூரணத்தை முழுதாய்க் கொண்டே
இருந்த தா இளையவன் சிரித்த சிரிப்பும்..?
*
அரியணை மேலே அண்ணலுமே
அருகில் சீதை அமர்ந்திருக்க
அனுமனும் பணிவாய்த் தரையினிலே
அழகாய்த் தொழுதே அமர்ந்திருக்க
பின்னால் கொற்றக் குடையைத்தான்
பிடித்தே நின்ற இளயவனின்
அருகில் வந்தாள் நித்ராவும்
வ்ரவா நண்பா எனக்கேட்டாள்..
லஷ்மணன் நினைவோ முன்னால்போய்
லட்சியம் அடைய அவளிடமே
ஈரேழ் ஆண்டுகள் முன்னாலே
கேட்ட்தை நினைத்தே பார்த்ததுவே..
*
’நித்ரா தேவி உந்தனைத் தான்
நெஞ்சினில் பதித்து வணங்கிடுவேன்
இன்றுத் தொடங்கி ஈரெழு
ஆண்டுகள் எந்தன் அருகினிலே
வராமல் இருந்தால் நான் மகிழ்வேன்
அண்ணல் அண்ணி இவர்களுக்கு
பணிவிடை செய்தே மகிழ்ந்திடுவேன்..”
இளையவன் பணிவாய்க் கேட்டிடவும்
மெல்ல்ச் சிரித்தே தான் சொன்னாள்
’ ஈரே ழாண்டுகள் நானுந்தன்
அருகிலே என்றும் வரமாட்டேன்..
ஆண்டுப் பொழுது கழிந்தவுடன்
உடனே வருவேன் விடமாட்டேன்..
இளைய லஷ்மணப் பெருமாளே..
இனிதாய்ப் போய்வா’ என்றவள் தான்
இன்று பட்டா பிஷேகம் என்றே
நன்றாய் உணர்ந்தும் தான் கூட
நல்ல சமயம் பார்த்தே தான்
வருகிறேன் என்கிறாள் என்செய்ய
என்றே மனதுள் நினைத்தபடி
இளையவன் மெல்லச் சிரித்தனன்தான்..
*
பலரும் அங்கே பலவிதமாய்
இளையவன் சிரிப்பைத் தான் நினைத்தார்..
**
நாட்கள் கோள்கள் எல்லாம் தான்
முன்பே பார்த்தே தான் குறித்தீர்..
அண்ணல் அரியணை ஏறத்தான்
இவ்வளவு ஆண்டுகள் ஆனதையா..
என்றே சிரிக்கிறான் என நினைத்தார்
பிரம்ம ரிஷியான வஷிஷ்டரும் தான்..
*
எவ்வளவு கஷ்டம் தான்பட்டாய்
இனிய சித்தி நீயும்தான்
பரதன் அம்ர முடிந்த்துவோ..
பாதுகை தானே ஆண்ட்து..
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் கைகேயி..
*
கோட்டைக் கிழித்தே தான்சொன்னேன்
அண்ணி தாண்டாதே என்று..
என்னைச் சொற்களி னால்கிழித்தே
அனுப்பித் தாண்டினீர் என்னாச்சு..
கஷ்டம் இல்லாதிருந்திருக்கும்..
கனிவாய் என்சொல் கேட்டிருந்தால்’
என்றே நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தாள் சீதையும் தான்..
*
தம்பி உடம்பைப் பார்த்துக்கொள்
ஒழுங்காய் உணவை உண்டாயா
உறக்கம் நன்றாய்க் கொண்டாயா...
ஈரேழாண்டுகள் உடன் இருந்தும்
ஒருவார்த்தை இவனைக் கேட்ட்தில்லை..
அதைத்தான் நினைத்துச் சிரிக்கின்றான்
என்றே நினைத்தார் அண்ணலும்தான்..
*
லஷ்மணப் பெருமாள் யாரென்றால்
அண்ணலின் அம்சம் தானன்றோ..
பூரணம் என்ற பரம்பொருளைக்
கிள்ளியே அங்கே நின்றதன்றோ..
பூரண்ந்தன்னைக் கிள்ளினாலும்
பூரணத்தைத் தான் அடையும்..
அதுவே இறையின் விதியன்றோ..
**
பூத்த்து என்னவோ ஒருசிரிப்பு
பலரது நினைவில் பல பூக்கள்..
மலரச்செய்த லஷ்மணனை
மயங்க வைத்தாள் நித்ராவும்
சற்றே லஷ்மணன் கண்மூடக்
குடையும் சற்றே சாய்ந்த துவே..
*
-
சாய்ந்ததுவே சாம்ராஜ்யம்
சாகச ராணியின் சிரிப்பில்
பெண்பால் கவர்ச்சி வீழ்ச்சியா
பலியானார் விசுவாமித்திரரும்
சுட்டுவிரலில் ஆட்டி வைக்க
சுண்டெலியாய் ஆணை மாற்ற
வரம் வாங்கி வந்தவள்தான்
வரலாறு உரைக்கும் உண்மை
மோகினியே அமுதினைத் தா
மோகத்தால் ஆணை அழிக்காதே
-
அழிக்காதே..
அழி..
எதிர்ச்சொல் நேர்ச்சொல் விளையாட்டு
சின்ன வயதில்
அப்பாவிடம் விளையாடுவது பிடிக்கும்..
கற்றுக்கொண்ட்தும் நிறைய..
வளர்ந்த பின்னர் ஒரு நாள்.
மனதிலிருப்பதைச் சொல்வதற்காக....
எதிர்ச்சொல் விளையாடலாமா..டாட்...
‘காதலிக்காதே’ இதற்கு என்ன..
’சரி’ என்றார் அப்பா..!
-
அப்பாவுக்கு இன்று தாய் வேஷம்
வக்கணையாய் சமைத்து ஊட்டி
விளையாடிக் களித்துப் பின்னே
கதை சொல்லி தூங்கவைத்து
முழு நேர பிள்ளை வளர்ப்பு
பொறுப்பான வீட்டு பராமரிப்பு
இதுவும் புருஷ லட்சணமென்று
இன்றைய அம்மா காட்டுகிறாள்
-
காட்டுகிறாள் இயற்கை அன்னை
தனது மனதிற்குள்
பொங்கும் சீற்றத்தை..
கடலைப் பொங்க வைக்கிறாள்
பூமியை ஆட வைக்கிறாள்
ஒரு நாள் அழித்தும் விடுவாள்..
இது தெரியாமல்
இன்னும்
மண்ணின் மைந்தர்கள் என சொல்பவர்கள்
போடுகின்றனர் ஆட்டம்..
-
ஆட்டம் போட்டோம்
அன்று பாட்டி வீட்டில்
கோடை விடுமுறையில்
கூட்டமாய் உறவினர்
கற்றோம் பல விஷயம்
கூட்டமில்லை இன்று
கலையும் திறனும் கற்பிக்க
களமிறங்கும் மையங்கள்
காசினை குவித்திட
காலம் இது புதிது
குழந்தைகள் வளரும்
களமும் சவாலானது
-
சவாலானது எனச் சொல்ல முடியாது..
வரிசையாய் அடுக்கியிருக்கும் புத்தகங்கள்..
இடமும் சின்னதாக இருக்கும்..
கொஞ்சமாய் எடுத்துப் பார்த்து
கீழே வைத்து
அடுத்த்தைப் பார்க்க வேண்டும்..
அடுக்கிலிருந்து தவறிவிழும்
புத்தகங்கள் தூசு கிளப்பும்..
சற்றே தும்மல் வரச் செய்யும்..
இருந்தாலும்..
பொறுமையாய்த் தேடினால்
பொக்கிஷம் கிடைக்கும்..
கல்கியின் அமரதாரா மணியத்தின் படங்களுடன்..
சாண்டில்யனின் கடல்புறா பழைய லதாவின் ஓவியத்தில்..
ஏர்போர்ட் ராகிர தமிழாக்கம்..
கொஞ்சம் பழுப்படைந்த ஆங்கிலப் புத்தகங்கள்..
தேர்ந்தெடுத்த்தைக்
கடைக்கர் ர ரிடம் சொன்னால்..
ஆர்வத்திற்கேற்ப விலை சொல்வார்..
பேரம் பேசவேண்டும்..
எனில் அப்போது கைச்செலவுப்பணம் குறைவு..
முழுதும் வாங்க முடியாமல்
சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும்...
வாங்கியதை வீட்டில் எடுத்து
ஒவ்வொன்றாய்
படிக்கும் சுகம் இருக்கிறதே..அட்டா..
இப்போது
புதியவைகளையே வாங்க முடிகிறது..
இருப்பினும்
அன்று அப்படி வாங்கிய சந்தோஷம் இல்லை....
வாங்கலாம் என்றால்
பழைய புத்தக்க் கடைகளும்
அவ்வளவாய் இல்லை..
-
இல்லை இன்று இலக்கணம்
இயல்பாய் மலர்ந்து காய்த்து
இனிப்பாய் கனிந்த காட்சி
பொருத்தமான பருவத்தில்
பூக்காத மணக்காத சூல்கொள்ளா
பொருள் தேடும் பெண்பூவில்
இருக்கிறதா ஈர்க்கும் அழகோ
இனம் வளர்க்கும் சாரமோ
-
சாரம் எல்லாம் அவிழ்த்து,
எல்லா வேலைகளும் முடிந்து,
வண்ணமயமாய்...
புதியதாய் நடிக்கும் வெகு இளைய கதானாயகி போலப்
பளிச்சென இருந்த்து..
ம்ம்.இரண்டு வருடப் பழக்கம்..
இனி அவ்வளவு தான்..
கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு...
-
வீடு போ போங்குது
காடு வா வாங்குது
பெருசுகள் சொல்லில் அலுப்பு
பொழுதுக்கும் பேசும் புரணி
மனம் முழுக்க வினை வம்பு
மரியாதை தகும் வயது
அதனால் தப்பிக்கும் தவறு
இப்படியும் இருக்கு சில கிழடு
-
கிழடுகள் இன்னும் வரலை போலும்..
ஒருசிலர் வேகமாய் நடை பயின்றிருக் க
ஒருசில இளைஞர் கைகால் நீட்டி
உடற்பயிற்சியைச் செய்தபடி இருக்க
பூங்கா முழுதும் மெளனம் மெளனம்.
அவர்கள் இருந்தால் சிரிப்பின் அலையால்
பூங்காச் செடிகள் மரங்கள் எல்லாம்
புன்முறுவலுடன் தான் ஆடி மகிழும்..
வண்டியை மெல்ல நிறுத்திக் கொஞ்சம்
மூச்சை விட்டு களைப்பைப் போக்கினால்
என்ன ஆச்சு இந்தக் கிழஙகளுக்கு..
என்றும் காலை நேரம் நன்றாய்
சிரித்தே முடித்து அருகில் வந்தால்
பதினைந்து காய்கள் அழகாய் விற்கும்..
அதுவும் அந்த சோமுக் கிழவர்
சிவந்த நிறத்தில் வெண்மை முடியுடன்
வேர்வை நெற்றியில் வழிந்தே இருக்க
‘முருகா.. ஒன்னைப் போன்றே இளசாய்
ஒன்றை வெட்டு’ என்பார்; பலர்போல்
‘எளனி’ ‘இந்தாப்பா’ ஏய்தான் என்று
மரியாதைக் குறைவாய் அழைக்க மாட்டார்..
குறைந்த பட்சம் தென்ன ந்தோப்பை
குத்தகை எடுக்கணும் கூடிய விரைவில்
என்பார்; சாமி அதெல்லாம் கஷ்டம்
அதற்கு நானும் அரசியல் பண்ணனும்
என்றால் சிரிப்பார் வெள்ளைச் சிரிப்பாய்...
என்ன இன்னும் இவர்கள் வரலை..
ஒரேஒரு ஆள்மட்டும் வந்தே எளனி
வாங்கிக் குடித்து நடந்தே செல்ல
தொலைவில் அட டே ராமுக் கிழவர்
வா சார் இன்னிக்கு ஏந்தான் லேட்சார்..’
மத்தவங்க இனிமேல் வருவாங்களாசார்..
இல்லை இன்னும் சிலநாள் ஆகும்..
ஒனக்குத் தெரியுமா சோம சுந்தரம்
போய்ட்டான் நேத்து நெஞ்சுல வலியாம்..’
சோகையாய்ச் சிரித்து அவ்ரும் நடக்க
‘அட டே பாவம் நல்ல மனுஷன்..
இப்போ நாமும் என்ன செய்யலாம்..
முக்கில் இருக்கும் பஸ்ஸ்டாண்ட் சென்றால்
கொஞ்சம் விக்கும் போய்த்தான் வருவோம்’
மனதில் நினைத்த்தை செயலும் படுத்த
கொஞ்சம் விரைவாய்ச் சென்றது இளநீர்...
-
இளநீர் தண்ணி இளைய மகள்
ஏழாவதாய் பிறந்த என் அன்னை
மகிழ்ந்து சொல்வது செல்லமாய்
தந்தையிடம் சீராடியதை எண்ணி
-
எண்ணிப் பார்ப்பதும் சுகம் தான்**
**
அன்றும் இதே நிலவு
ஆனால் அது மரத்தடி
இடமோ ஆத்தங்கரை ஓரம்..
மரக்கிளைகளில் தென்றல்கொஞ்ச
கீழே நீ
கிள்ளை மொழியில்
ஏதேதோ பேசினாய்..
பேச்செல்லாம் எங்கே புரிந்த்து..
இருளில்
இலைமறைகாயாய்த் தெரிந்த அழகு..
ப்ட்டும் படாமலும் தொட்ட வெளிச்சம்..
சுற்றிலும் பார்த்தபடி கன்னத்தில் கொடுத்த
மெல்லிய மின்சாரம்..
பின்னும் பேச்சு..
சற்றே கொஞ்சம் ஊடி
.அதனால் உனக்கு வந்த கோபம்
சிரித்தபடி நான் எழ
பின் நீ சென்றது..
**
இன்றும் அதே நிலவு..
அதே இரவு..
இருப்பது என்னவோ
நம்வீட்டு மொட்டை மாடி
தென்ற்ல் மெல்ல வீச
வா என ஜாடை காட்டினால்
முறைக்கிறாய்..
உனக்கும் எனக்கும்
ஏன் இந்தப் பிரிவு..
நடுவில் மூன்று குழந்தைகள்..
சுகமாய்த் தூங்கிக்கொண்டிருக்க..
ம்ம்
நான் இந்த மூலையில்
மறுபடி
எண்ணப் பார்க்கிறேன்..!
-
பார்க்கிறேன் பாரெங்கும்
பகைவரிடம் நட்பு
பளீரென்ற சிரிப்பு
பொதுவிடத்து நடிப்பு
பரிவான விசாரிப்பு
போலியான பூச்சு
பொய்யான பேச்சு
பழகும் பாங்கு
பெயர் நாகரிகம்
போற்றலாம் இதை
-
இதை இப்படியே விடக்கூடாது..
ஒவ்வொருமுறையும்
இப்படித் தான் நடக்கிறது..
நானும் மயங்கிக் கொண்டே இருக்கிறேன்
அழகன் தான்...
நன்றாக உடற்பயிற்சி எல்லாம் செய்து
அழகாய்த் தான் இருக்கிறான்..
பேச்சும் அபாரம்..
சொல்கின்ற கவிதைகள்,
செய்த சாதனைகள் என
கொஞ்சம் கூட கர்வமிலாமல் சொல்கிறான்..
ஆனால்
இப்படிச் செய்வது வெகு அநியாயம்..
எதிர்காலம் பற்றிச்
சொல்ல மாட்டேன் என்கிறான்..
வருவான் கடற்கரைக்குச் சொன்னபடி..
என் சாயம்பூசி மின்னும் நகங்களை
வருடிய படி பேசுவான்..
நானும் மயங்குவேன்..
மயங்கிய பின்
மனசில்லாமல் பிரிவோம்..
ம்ம்.. இன்று அப்படி விடக் கூடாது..
இதோ வந்து விட்டான்
மெல்லிய சிரிப்புப் பரிமாறல்...
ஏன் முகமழிக்கவில்லை..
கண்கள் குறுகுறுவெனப் பார்க்க
வழக்கமாய் அமரும் இட த்தில் அமர்ந்தால்...
வழக்கமாய்ப் பார்க்கும் தெரிந்த அலைகள்
அருகில் வந்து ஹாய் சொல்லிச் செல்ல..
பேச்சு சுவாரஸ்யத்தில் மெலிதாய்
அவன் கைபிடிக்க...
காணாமல் போனது வைராக்கியம்..
-
வைராக்கியம் தொலத்த ஓர் இனம்
வெக்கமில்லாமல் குடிக்குது
மகிழ்ந்தாலும் குடிக்குது
துக்கத்திற்கும் குடிக்குது
உளருது உருளுது பிறழுது
குடும்பஸ்தன் குடிக்கிறான்
எத்தனை நாள் அடி வாங்குவாள்
தனியே பாரம் சுமக்கிறாள்
தந்தை நிழலில்லா குழந்தைகள்
கல்லூரி வாலிபன் குடிக்கிறான்
புதிய கலாசாரம் படைக்கிறான்
பள்ளிச் சிறுவன் ருசிக்கிறான்
என்ன மிஞ்சும் சாதனை களத்தில்
சோதனை இது கொடியது
குடியை வளர்த்த ஓர் அரசு
தொடர்ந்து காக்கும் அடுத்த அரசு
வற்றாத ஊற்றாக வருமானம்
கோடிகளில் கொட்டிக் கொடுக்க
இலவசங்கள் அள்ளி வழங்க
பெருகியோடும் மதுக் கடலில்
பாழாய் போகும் தலைமுறைகள்
யாருக்கு இங்கு அதில் அக்கரை
யாவரும் அறிந்ததே இச்சீர்கேடுகள்
ஆற்றை கண்டேனா அழகரைச் சேவித்தேனா
என்றிருக்க முடியாத மதுரைக்காரி
ஊரெங்கும் திருவிழா விமரிசையாய்
-
விமரிசையாய்த்தான் நடந்து முடிந்தது
எல்லாரையும்
கவர் கொண்டு கவர்ந்த,
பேச்சால்,பொய்களால் மயக்கிய
தேர்தல் திருவிழா..
அடுத்த மாதம் முடிவாம்..
இந்த முடிவிலும்
ஆரம்பம் வருமா என்ன...
-
என்ன என்று தெரியாத வரை ஆர்வம் இருக்கும்
ஆராய்ச்சி தொடர்ந்திருக்கும் சுவையிருக்கும்
அதனால்தானோ அளவற்ற மர்மங்கள் புதிர்கள்
இயற்கையில் வாழ்கையில் மனதின் மாற்றங்களில்
-
மாற்றங்களில் தான்
உலகம் சுழல்கிறதாம்..
ஆங்கில ‘மாட்டுச் சாணம்..”
சரி..
இருந்தாலும்
எனக்கு நிகழ் ந்த து அநியாயம்..
ஊரெங்கும் என் குரல்
எப்பொழுதும் ஒலிக்கும்
ஆனால் நான் ஈன்ற குரலை
இப்போதிலிருந்து கேட்க முடியாது..
ஒன்றா இரண்டா
பதினைந்து வருஷம்....
தவமும்..மருந்தும் பலன் தர..
குறிஞ்சிப்பூ ஒன்று பெற்றேன்..
சின்னச் சிரிப்பும் கொள்ளை அழகுமாய்
எட்டு வருடம் வளர்ந்து
இதோ நீரில் மூழ்கிப் போனது..
எனது சுருதிப்பெட்டி
இனி முகாரி தான் இசைக்கும்..
கடவுள் என்பது
இல்லை..இல்லவே இல்லை..
எதற்குத் தர வேண்டும்..
எதற்குத் திருப்பிப் பெற வேண்டும்...
வாழ்வில் இதெல்லாம்
இயற்கை,தேற்றிக்கொள் என
மற்றவர்களுக்குச் சொல்ல
சுலபமாய் இருக்கிறது..
மற்றவர்கள் சொல்லும் போது
கண்ணீர்தான்...
*
ஒருவேளை இறைவனுக்குப் பொறாமையா..
எல்லோரும்
இனிமைக் குரல் கொண்ட
குயில் என்று சொல்வதை..
நினைத்திருப்பானோ..
இது இனி இசைக்கட்டும்
சோக கீதமென.......
மெல்ல மெல்ல
காலம் செல்லச்செல்ல
மாறத்தான் செய்வேன் நான்..
அது உலக நியதி..
ஆனால்
மாறாத ரணத்துடன்..
-
ரணத்துடன் கைகோர்த்திருக்கும் வலி
ஆறிய பின்னும் மிச்சமிருக்கும் வடு
ஆற மறுக்கும் ஒரு சில காயங்கள்
பச்சைப் புண்ணாய் பல கசப்புகள்
உள்ளிருந்து வாட்டும் வேதனைகள்
ஏமாற்றும் முகத்தின் புன்சிரிப்புகள்