சின்னத்திரையில் கதாநாயகிகளின் ஆதிக்கம்தான்!
சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் அதிகம் என்றால் சின்னத்திரையில் கதாநாயகிகளின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப்பறக்கிறது. சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு குறைந்த உடன் சின்னத்திரையில் கால்பதித்து நிரந்தரமாக செட்டிலாகிவிட்ட கதாநாயகிகளின் காட்டில்தான் இப்போது பணமழை கொட்டுகிறது. கண்ணீர் விடும் இல்லத்தரசிகள் இருக்கும் வரை இவர்களுக்கு என்றைக்கும் ஓய்வு இல்லை.
சின்னத்திரை மார்க்கண்டேயி ராதிகா
குட்டிபத்மினி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ராதிகா. பின்னர் ராடான் நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக சித்தி தொடங்கி செல்லமே வரை சன் தொலைக்காட்சியில் தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்திருக்கிறார். தான் நடிக்கும் தொடர்கள் தவிர தனியாக தொடர்களும், நிகழ்ச்சிகளும் ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கி வருகிறார்.
சின்னத்திரை தேவதை தேவயானி
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த கதாநாயகிகளில் இன்றைக்கும் தேவதையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தேவயானி. சன் டிவியில் கோலங்கள் 4 வருடகாலம் ஒளிபரப்பானது. ராஜ் டிவியில் கொடிமுல்லை அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்போது மீண்டும் முத்தாரம் தொடரின் மூலம் இரட்டை வேடத்தில் களம் இறங்கியுள்ளார் தேவயானி.
கலகலப்பான ரேணுகா
பாலச்சந்தர் மூலம் சின்னத்திரைக்கு அழைத்து வரப்பட்டவர்தான் ரேணுகா ப்ரேமி தொடங்கி இப்போதைய அமுதா ஒரு ஆச்சர்யக்குறி வரை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கலகலப்பாகவும், போல்டாக சின்னத்திரையில் நடித்துவருகிறார். சின்னத்திரை மூலம் சினிமாவில் ரேணுகாவிற்கு புது எண்ட்ரி கிடைத்தது.
நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்
குட்டிபத்மினியின் கலசம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ரம்யாகிருஷ்ணன். அவர்கள் இருவருக்கு இடையே பிரச்சினை எழவே ரம்யாகிருஷ்ணன் கிரியேட்டிவ் ஹெட் ஆக மாறி தங்கம் சீரியலில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
போல்டான கல்கி ஸ்ருதி
பாலச்சந்தர் மூலம் கல்கி படத்தில் அறிமுகமாக ஸ்ருதி திருமணத்திற்குப் பின்னர் நடிப்புலகிற்கு டாடா காட்டினார். மண வாழ்க்கையில் முறிவு ஏற்படவே தொலைக்காட்சி சீரியலில் கால்பதித்துள்ளார். திருமுருகன் தயாரித்துள்ள கார்த்திகைப் பெண்கள் சீரியலில் அதே போல்டான ஸ்ருதியை பார்க்கலாம்.
அலங்கார நாயகி சுதாசந்திரன்
தமிழ் திரைப்படங்களில் நடித்துவந்த சுதாசந்திரன் திடீரென வட இந்திய சேனல்கள் பக்கம் ஒதுங்கினார். அங்கு நிகழ்ச்சி தொகுப்பு, சீரியல் என சேவை செய்து வந்த சுதாசந்திரனை நடிகை ராதிகா தமிழ் சீரியல் பக்கம் அழைத்துவந்தார். இங்கே சன்டிவி, ஜெயாடிவி சேனல்களில் அலங்கார நாயகியாக சீரியல்களில் வலம் வருகிறார்.
அழுகை பானுப்ரியா
கண்ணழகி பானுப்பிரியா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின்னர் சில ஆண்டுகளில் இவரை வாழ்க்கை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் செய்தனர் ஏ.வி.எம் நிறுவனத்தினர். அதுவே சினிமாவில் அடுத்த என்ட்ரிக்கு அடித்தளமாக அமைந்தது. தற்போது சுரேஸ் கிருஷ்ணாவின் ஆசை மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.
சுகாசினி தொடங்கி மதுபாலா வரை
இவர்கள் தவிர சிம்ரன், சுகன்யா, மதுபாலா, மீனா, சங்கீதா, சுகாசினி, ரேவதி, ரோகினி என பிரபல கதாநாயகிகளும் சின்னத்திரையில் சில சீரியல்களில் தலை காட்டியுள்ளனர். இவர்களில் சுகாசினியும், சிம்ரனும் இப்போது ஜெயாடிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக பணியை தொடர்கின்றனர். சங்கீதா விஜய் டிவியில் நடுவராகவும், மீனா, சுகன்யா ஆகியோர் சன் டிவியில் நடுவர்களாகவும் கலைச்சேவை செய்துவருகின்றனர்.
கதாநாயகர்களை காணவில்லை
சினிமாவில் எப்படி கதாநாயகர்கள் தங்களை விட வயது குறைந்த கதாநாயகிகளுடன் நடிக்கிறார்களோ அதற்கு உல்டா வாக இங்கே தங்களை விட வயது குறைவான நடிகர்களை கதாநாயகர்களாக மாற்றி பழி தீர்த்துக் கொள்கின்றனர் இந்த சீரியல் கதாநாயகிகள்.
http://cinema.dinakaran.com