தமிழக முதல்வர் கருணாநிதி யாரை அணைத்துக் கொண்டாலும் அவர் பெரிய ஆளாகிவிடுவார். அவர் யாரையாவது தள்ளிவிட்டாலும் கூட அவர்கள் பெரிய இடத்துக்குப் போய்விடுகிறார்கள் என்றார் ரஜினி காந்த்.
சிவாஜி - தி பாஸ் படத்துக்காக 2007ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரஜினி தனது ஏற்புரையில் இப்படிப் பேசினார்:
"ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி இந்த விழாவில் நடந்தது. எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து ஒரு பரிசை கலைஞருக்கு கொடுத்து இருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பு எனக்கும், கமலுக்கும் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம்.
'உடல் நலக்குறைவாக இருந்ததால், கொஞ்சம் தூங்கி விட்டேன். சற்று தாமதமாக விழாவுக்கு வருகிறேன்' என்று எங்களிடம் கலைஞர் சொன்னார். அந்த பண்பு, அடக்கத்தை எப்படி சொல்வது?. அய்யா நீங்க நல்லாயிருக்கணும்.
கலைஞர் எத்தனை மேடுகள், சிகரங்களைப் பார்த்தவர்.. எத்தனையோ மேடுகளும், சிகரங்களும் காணாமல் போனதையும் பார்த்திருக்கிறார். அவர் யாரை அணைத்துக் கொண்டாலும் அவர் பெரிய ஆளாகி விடுவார். அதேபோல் அவர் யாரை தள்ளினாலும் பெரிய ஆளாகி விடுவார்கள். இல்லையென்றால், சாய் பாபா அவருடைய வீட்டுக்கு வந்திருக்க மாட்டார்.
என்னையும் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!:
'சிவாஜி' படத்துக்காக, கலைஞர் கையினால் பரிசு பெற்றது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த படத்தை தயாரித்த ஏவி.எம்.சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றி. படத்தை இயக்கிய ஷங்கருக்கு என் மனமார்ந்த நன்றி.
நான் திரையுலகுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதாநாயகன் ஆகி 32 வருடங்கள் ஆச்சு. என்னை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும், என்னை ஏற்றுக்கொண்டு என் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..." என்றார் ரஜினி.
http://thatstamil.oneindia.in/movies...-function.html