Originally Posted by
balaajee
யான் 'சுட்ட' கதை: ரவி.கே.சந்திரன் மீது தயாரிப்பாளர் சாடல்
ஜீவா, துளசி உள்ளிட்ட பலர் நடித்த 'யான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். எல்ரெட் குமார் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருந்தார். மக்களிடம், விமர்சகர்களிடமும் இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது மட்டுமன்றி, வசூல் ரீதியாக சுமார் ரூ.20 கோடி நஷ்டமடைந்து, தயாரிப்பாளின் கையைச் சுட்டது. சில நாட்களாக, ஹாலிவுட் படமான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் அப்பட்டமான காப்பிதான் 'யான்' என்று இணையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர்.
தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரவி.கே.சந்திரன் இது குறித்து பதில் கூற மறுக்கிறார் என்றும், கடும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ரவி.கே.சந்திரன் குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "கொலம்பியா பிக்சர்ஸ் என் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு செய்தால், அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?
யான் தனது சொந்த படைப்பு என்று ரவி.கே.சந்திரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே அத்துமீறல். காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள்கூட 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரவி.கே.சந்திரனே பொறுப்பேற்க வேண்டும். அவரைப் போன்ற புகழ்பெற்ற ஒரு ஒளிப்பதிவாளரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.