May 6th
_______
அசோக் தனக்கு வீட்டில் இருப்பதே ஹிம்சையாக இருப்பதாகவும், நாளை shock treatment கொடுக்கவிருப்பது தனக்கு விருப்பமில்லை என்பதால் தான் சாம்புவின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்க அனுமதி கேட்கிறான். மிகுந்த குழப்பத்துடன் சாம்பு தம்பதியர் ஒப்புக்கொள்கின்றனர்.
மார்கபந்து அடிக்கடி அஷோக்கைப் பார்ப்பது நாதனுக்கும் அவர் மனைவிக்கும் பிடிக்கவில்லை. அஷோக்கிடம் யோகத்தை பற்றி விளக்கம் கேட்கிறார் மார்கபந்து. இன்றைக்கு யோகா வகுப்புக்களில் பயிற்றுவிக்கும் சீரான மூச்சு என்பது யோகத்தின் அடிப்படை மட்டுமே. அதனால் மனம் சற்றே சாந்தப்பட்டு இருக்க முடியும். மேலும் உடலுக்கும் ஆரோக்கியம். மற்றபடி இவற்றை செய்வதால் ஒருவன் யோகி ஆகிவிட முடியாது.
யோகம் என்பது பெரியதாக பேசப்படும் ஒன்று.
தபஸ்வியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஞானியைக் காட்டிலும் சிறந்தவன் யோகி
ஆகவே அர்ஜுனா நீ யோகியாக இரு
என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். அப்படிப்பட்டவன் யோகி. இரட்டை நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். ஸ்திதப்ரக்ஞன். இன்பம்-துன்பம், மானம்-அவமானம், துக்கம்-மகிழ்ச்சி என எல்லா நிலையிலும் அசங்காது ஆடாது நிற்பவன்.
துளசிதாசர் பற்றி கூறவரும்போது துளசிதாசர் சிறந்த பக்தர், ஆனால் அவர் வால்மீகியைப் போல் முதலில் வேறு பாதையில் சென்றுகொண்டிருந்தவர், திடீரென பாதை மாறியவர். துளசிதாஸருக்கு மனைவியின் மேல் மிகுந்த அன்பு, காதல் தாண்டிய மோஹம் உண்டு. அவள் துணையே கதி என்றிருந்தார். அவள் எங்கு சென்றாலும், அவள் பிரிவைத் தாங்காது பின் சென்றுவிடுவார். ஒரு முறை அவள் "என்னிடம் வைத்திருக்கும் மோஹத்தில் ஒரு பகுதியேனும் இறைவனிடம் செலுத்தி இரமனை தியானியுங்கள்" என்கிறாள். உடனே அவருள் மாற்றம் ஏற்படுகிறது. சிவபெருமான் அருள் புரிந்து அவரை "ராம சரித மானஸ்" எழுதுமாறு பணிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு இராமனின் பால் பிராட்டி சீதையின் பால் மிகுந்த பக்தியிருப்பதால், இராவணன் சீதையின் கூந்தலைப்பிடித்து அழைத்துப் போனதை எழுத மனமின்றி, அவள் சீதையே அல்ல, அது மாயா-சீதா எனக் கதையை சற்றே கதையை திரித்து எழுதியதாய் கேள்வி.
ஹனுமனைத் துதித்து அவர் எழுதிய "ஹனுமான் சாலிசா" நாற்பது ஸ்லோகங்களைக் கொண்டது (வடமொழி ஹிந்தியில் உள்ளது). அதை 21 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் 7 முறை கூறி வந்தால், நினைத்த காரியம் ஜெயம், வியாதிகள் அற்றுவிடும் என்பது நம்பிக்கை. அப்பேற்பட்ட மஹான் அவர் எழுதியதால் அந்த ஸ்லோகத்தின் மகிமையும் பலனும் அதிகம். நிச்சயம் சித்திக்கும்.
(வளரும்)