Quote:
ஷக்தியின் `அம்மா' அவதாரம்
சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பாவனா. இவர் மேகலா தொடரில் ஷக்தி என்ற புரட்சிப்பெண் கேரக்டரில் நடிக்கிறார்.
கடந்த ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்துகொண்ட பாவனா, சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தாய் ஆனார். குழந்தை பிறந்தது முதல், கணவருடன் ஐதராபாத்தில் இருந்த பாவனா, மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு மேகலா தொடரில் நடிக்க குழந்தையுடன் சென்னை வந்திருந்தார்.
கதைப்படி அன்று அவர் நடிக்க வேண்டிய காட்சி என்ன தெரியுமா? ஒரு குழந்தைக்கு அம்மாவான ஷக்தி, தன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் விஷயத்தில் கணவன் குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கோபித்துக் கொண்டு தாய் வீடு வந்து விடுகிறாள். மகள் கணவர் குடும்பத்தாருடன் கோபித்துக் கொண்டுவந்திருப்பதை தெரிந்து கொண்ட அவள் அம்மா, மகளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். திருமணமான பெண்ணுக்கு கணவன் வீடுதான் எல்லாம் என்ற அட்வைசுடன் அப்போதைக்கு மகளை வீட்டில் அனுமதிக்கிறாள்.
ஆனால் ஷக்தியின் பாட்டி வடிவு தன் பேத்தி ஷக்தி செய்தது தான் சரி என்பது போல் பேசி பிரச்சினைக்கு மேலும் தூபம் போடுகிறாள். தங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை எப்போதுமே விரும்பாத பாட்டியின் பாச வார்த்தைகளில் ஷக்தியும் அவள் குடும்பமும் செயலற்று நிற்க, அடுத்து ஷக்தியின் கணவர் குடும்பத்திடம் இருந்து வந்த ரியாக்ஷன் என்ன என்பது இனி தொடரும் காட்சிகள் என்கிறார், தொடரை இயக்கும் விக்ரமாதித்தன்.
இந்த காட்சியை படமாக்கும்போது ஷக்தியாக நடித்த பாவனா வித்தியாசமாக எதையும் உணர்ந்தாரா? அவரிடமே கேட்டோம்.
பாவனா சொன்னார்:
வாழ்க்கை வேறு. நடிப்பு வேறு. இந்தக் கதையைப் பொறுத்தவரையில் நான் ஷக்தி. கதைப்படி ஷக்திக்கு இப்போது இப்படி ஒரு பிரச்சினை. அவ்வளவு தான்'' என்றார், மிக இயல்பாய்.
"இருக்கட்டும். உங்கள் குழந்தைக்குப் பெயர் வைத்துவிட்டீர்களா?''
"ஐந்தாவது மாதம்தான் பெயர் வைப்பதாக இருக்கிறோம். இப்போதைக்கு காயத்ரி கிருஷ்ணா என்று அழைக்கிறோம்''.