மனசாட்சி! அரசாட்சி!
மக்கள் திலகம் மந்திரச் சொற்களுக்குக் கட்டுப்பட்ட மக்கள்தானே, பலரது மனக்கோட்டைகளுயும் தகர்த்தெறிறிந்துவிட்டு அவரை செயின்ட்ஜார்ஜ் கோட்டையிலே முதல்வர் ஆசனத்தில் அமர வைத்தனர்.
அத்தகு மாமனிதர் சொல்லக்கூடிய சொல் நயங்களை, கவியரசர் கவிநயத்தில் கேட்போமா!
“கடவுள் ஏன் கல்லானான்? – மனம்
கல்லாய்ப் போன மனதர்களாலே!”
கல்லாய்ப் போன மனித மனதைப் பார்த்துத்தான் கடவுளே கல்லாகி விட்டானா? இதுவென்ன நியாயம்? பொறுத்துப் பார்ப்போம்!
“கொடுமையைக் கண்டவன் கண்ணை இழ்ந்தான்! – அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான்!
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்! – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!”
நியாயங்களை மீறிய அநியாயப் பட்டியல் பாரீர்!
கொடுமையைக் கண்டவனுக்கோ
கண்கள் போயின!
கொடுமைகளைக் கோபித்துத் தடுத்தவனுக்கோ
பேசும் சக்தி போயின!
இரக்கத்தை இதயத்தால் நினைத்தவனுக்கோ
பொன்பொருள் போயின!
இவை கூடப் பரவாயில்லை! இந்தப் பூமியில் எல்லோர்க்கும் நல்லவனாய் இருந்தவனோ தன்னையே இழந்து போனான்!’
இத்தனைக்கும் காரணங்கள்!…..
“நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி – அது
நீதிதேவனின் அரசாட்சி!
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி – மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி!”
காரணங்கள் புரியாத புதிரானதோ?
‘நெஞ்சுக்குத் தேவை மனசாட்சிதான்! அந்த மனசாட்சியே நீதிதேவனின் அரசாட்சியாம்! உலகில் நடக்கும் அனைத்து உண்மைகளுக்கும் அவனே, ஆம்! அந்த நீதிதேவனே சாட்சி!
ஆனால் மக்கள் அரங்கத்திற்கு வராதாம் அந்த நீதிதேவனின் சாட்சி!
அப்புறம் மனசாட்சி ஏன்? நீதிதேவனின் அரசாட்சி ஏன்? அந்த நீதி தேவனின் சாட்சிதான் ஏன்? ஏன்?
இனியென்ன பாக்கியோ?
“சதிச்செயல் புரிந்தவன் புத்திசாலி – அதைச்
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்!….”
அடப் பாவமே!
‘உலகில் சதிச்செயல்களைப் புரிந்தவன் புத்திசாலி! அந்தச் சதிச் செயல்களைச் சகித்துக் கொண்டிருந்தவனோ குற்றவாளி! உண்மையைச் சொல்பவனோ சதிகாரன்!’
இதுவெல்லாம் யார்வகுத்த அதிகாரமாம்! உலகத்தில் ஆண்டவன் வகுத்த அதிகாரமாம்!
அப்படியானால் அந்த ஆண்டவனாம் கடவுள், கல்லானது சரியோ? கல்மனத்தவர் செய்த செயலுக்காக அவனை நோவதில் என்ன இலாபம்?
இத்தகு உலகநீதியைச் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்காட்சியைக் கண்டு உள்ளம் உருகியோர் ஏராளம்! ஏராளம்!
courtesy - kannadasan