Nadigar Thilaagm's 82nd Birthday Celebrations - 01.10.2010
நடிகர் திலகத்தின் 82-வது பிறந்த நாள் விழா - Part I
நடிகர் திலகத்தின் 82-வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று மாலை [01.01.2010] நடைபெற்றது. வழக்கம் போல் மவுண்ட் ரோடு தேனாம்பேட்டை சிக்னலில் ஆரம்பித்து காமராஜர் அரங்கம் வரை வழியெங்கும் விருந்தினர்களை வரவேற்று போஸ்டர் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அரங்கத்தின் வாயிலிலும் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. 2000 பேருக்கு மேல் அமரக் கூடிய அரங்கம் கிட்டத்தட்ட நிறைந்திருந்தது என்று சொன்னால், அதுவும் ஒரு வேலை நாளில் மாலை 5.45 மணிக்கே ஆரம்பித்த விழாவிற்கு இந்தளவிற்கு கூட்டம் வருகிறது என்றால் அது நடிகர் திலகத்தின் ரசிகர் படை எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை உணர்த்துவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க செய்தி ஏராளமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வருகை தந்திருந்தது.
மேடையில் அஞ்சல் துறை தலைவர் ராமனுஜம், ராம்குமார், ஜி.கே.வாசன், பிரபு மற்றும் குகநாதன் அமர்ந்திருந்தனர். சிவாஜி விருது பெறும் கலைஞர்கள் நான்கு பேரும் மேடையில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். பின்புலத்தில் நடிகர் திலகத்தின் 82 -வது பிறந்த நாள் விழா என்று எழுதப்பட்ட திரைசீலை,அதில் புதிய பறவை சிவாஜியின் முகம்.
சரியாக 5.45 மணிக்கு இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது. இம்முறை ரசிகர்கள் ஆவேச மிகுதியுடன் காணப்பட்டதாகவே தோன்றியது. சாதாரணமாக ராம்குமார் அல்லது பிரபுவின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு அமைதியாகி விடும் ரசிகர்களை இம்முறை சாந்தப்படுத்த சற்று கூடுதல் முயற்சி தேவைப்பட்டது.
இறை வணக்கத்திற்கு பிறகு தொகுத்து வழங்கிய நண்பர் ஹப்பர் மோகன்ராம் அவர்கள் சிவாஜி பிரபு அறக்கட்டளை ஆற்றி வரும் பணிகள் பற்றி சொல்லி விட்டு மறைந்த திரையுலக கலைஞர்களுக்கு நினைவு அஞ்சல் உறை வெளியிடும் முயற்சியைப் பற்றி குறிப்பிட்டார். பாகவதர் தொடங்கி கடந்த வருடம் வெளியிடப்பட்ட கே.வி.மகாதேவன் வரை பட்டியலிட்ட மோகன்ராம் இம்முறை மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நினைவு அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது என்று சொல்லி விட்டு ராம்குமாரை வரவேற்புரையாற்ற அழைத்தார். அதற்கிடையில் சிவாஜி மன்றத்தின் சார்பில் விருந்தினர்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.
முதலில் வாசனுக்கு நன்றி தெரிவித்து ஆரம்பித்தார் ராம்குமார். நிகழ்ச்சியைப் பற்றி சொன்னவுடன் சிவாஜி சாருக்காகவும் அவர் குடும்பத்தினருக்காகவும் எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக சொன்னதாகவும் விழாவிற்கு வர ஒப்புக் கொண்டதற்கும் நன்றி தெரிவித்தார் ராம்குமார். தொடர்ந்து அனைவரையும் வரவேற்று பேசிய ராம்குமார் விருது பெற்றவர்களை பற்றி சிலவற்றை குறிப்பிட்டார். ஜெய் அவர்களைப் பற்றி சொல்லும் போது பிரபு நடிக்க வந்த புதிதில் நடிகர் வி.கே.ராமசாமி மூலமாக ஜெய் சொல்லி விட்ட செய்தியைப் பற்றி சொன்னார். நடிகர் திலகத்தின் மகனாக அல்ல, அவரது தனி திறமையிலே பிரபு ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்பதே ஜெய் சொல்லி அனுப்பிய செய்தி. முதன் முதலாக பிரபுவிற்கு கிடைத்த இந்த பாராட்டை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்றார் ராமு. விருது பெற்றவர்களில் ஒருவரான மேக்கப்மான் பீதாம்பரத்தைப் பற்றி சொல்லும் போது நடிகர் திலகத்துடன் அவருக்கு இருந்த நட்பைப் பற்றி சொன்னார். விருது பெற்ற மற்றொரு ஒப்பனையாளர் பாண்டியன் நடிகர் திலகத்துடனும் பிரபுவுடனும் இணைந்து பணியாற்றியதையும் குறிப்பிட்டார். அடுத்து பாடகர் நடிகர் ஏ.எல். ராகவன் பற்றி சொல்லும் போது 1953 முதல் 1960 வரை சிவாஜி நாடக மன்றத்தில் அவர் பின்னணி பாடகராக இருந்ததை சுட்டிக் காட்டினார். ராஜசுலோச்சனா பற்றி சொல்லும் போது அற்புதமான டான்சர் மற்றும் நடிகை,எந்த வேடத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் என்று சொல்லி அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் வரவேற்று ராம்குமார் அமர, ஒப்பனையாளர் சங்கம் சார்பில் ராம்குமாருக்கும் பிரபுவிற்கும் மரியாதை செய்யப்பட்டது.
அடுத்து ஜெய்சங்கர் நினைவு அஞ்சல் உறை வெளியிடு. ஜெய் அவர்களைப் பற்றி ஒரு சிறிய குறிப்பை படித்த மோகன்ராம் ஜெய் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய படங்களிருந்து ஒரு கிளிப்பிங் என்று அறிவிக்க மேடையின் இரு புறத்திலும் வைக்கப்பட்டிருந்த திரையில் கீழ்வானம் சிவக்கும் படத்தில் ஜெய் முதலில் நடிகர் திலகத்தை சந்திக்கும் காட்சி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அன்பளிப்பு படத்தில் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு விவரம் சொல்லுடா தம்பி பாடலில் நடிகர் திலகம் ஜெய்சங்கரை அப்படியே அலேக்காக தூக்கும் காட்சி திரையிடப்பட்டது. திரை அணைய, சிறப்பு அஞ்சல் உரையை சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராமானுஜன் வெளியிட வாசன் முதலில் பெற்றுக் கொண்டார். மேடைக்கு அழைக்கப்பட்ட ஜெய்சங்கரின் மகன்கள் விஜய்சங்கர் மற்றும் சஞ்சய்சங்கர் அடுத்து அந்த அஞ்சல் உரையைப் பெற்றுக் கொண்டனர்.
அடுத்து சிவாஜி விருது வழங்கும் விழா. முதலில் ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரன். அவரை பற்றிய சில செய்திகளை சொல்லிய மோகன்ராம் அவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். அவர்களுக்கும், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் பர்சனல் மேக்கப்மானாக பணியாற்றியதைக் குறிப்பிடும் போது அரங்கில் ஒரே சலசலப்பு, கூச்சல். இதை எதிர்பார்த்திருந்தவர் போல் மோகன்ராம் சமயோசிதமாக கலையுலகின் நிரந்த முதல்வர் நடிகர் திலகத்திற்கும் பணிப் புரிந்திருக்கிறார் என்று சொல்ல அந்த வார்த்தை பிரயோகத்தில் கூட்டம் சந்தோஷப்பட்டு அமர்க்களம் செய்தனர். தொடர்ந்து திரையில் வந்த காட்சி ரங்கனான நடிகர் திலகம் கண்ண பரமாத்மாவாக காட்சி அளிக்கும் எங்கிருந்தோ வந்தான் பாடல். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு கேட்கவும் வேண்டுமோ? தொடர்ந்து பீதாம்பரத்திற்கு சால்வை, நினைவு பரிசு மற்றும் பணமுடிப்பை வாசன் மற்றும் பிரபு வழங்கினார்கள்.
அடுத்ததாக விருது பெற்றவர் ஒப்பனையாளர் பாண்டியன். இவர் நடிகர் திலகத்துடன் பணி புரிந்திருந்தாலும் இளைய திலகத்துடன் பணியாற்றியதே அதிகம் என்பதால் பிரபுவின் பல்வேறு படங்களின் ஸ்டில்கள் காண்பிக்கப்பட்டு, பாண்டியனுக்கு விருது வழங்கப்பட்டது.
மூன்றாவது நபர் ஏ.எல்.ராகவன். இவர் நடிகர் திலகத்திற்கு நேரிடையாக பாடாவிட்டாலும் அவர் படங்களில் பாடியிருக்கிறார். அவ்வகையில் இருவர் உள்ளம் படத்தில் புத்திசிகாமணி பெற்ற பிள்ளை பாடல் காட்சி திரையிடப்பட்டது. ராகவன் விருதை பெற்றுக் கொண்டார்.
ராம்குமாரின் வார்த்தைகளிலே சொல்ல வேண்டுமென்றால் last but not the least ராஜசுலோச்சனா. அம்பிகாபதி, சாரங்கதாரா மற்றும் படித்தால் மட்டும் போதுமா போன்ற இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களைப் பற்றி குறிப்பிட்ட மோகன்ராம் அடுத்து கிளிப்பிங் என்று சொன்னவுடன் பெரும்பாலோர் எதிர்பார்த்தது போல நான் கவிஞனுமில்லை பாடல் காட்சி ஓட ஆரம்பித்தது. நேற்றைய நிகழ்ச்சியிலே இரண்டே இரண்டு இடங்களில்தான் உச்சக்கட்ட ஆரவாரம். அதில் ஒன்று இந்த பாடல் காட்சியின் போது நடந்தது. படுக்கையில் சாய்ந்து பாடும் நடிகர் திலகம் சட்டென்று காலை மாற்றிப் போட்டு சரணம் பாட ஆரம்பிப்பார். அப்போதும் சரணத்தின் இடையில் ஓஹோ ஹோ என்ற ஹம்மிங்கின் போதும் எழுந்த ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது. காட்சி முடிய ராஜசுலோச்சனாவிற்கு விருது அளிக்கப்பட்டது.
விருதுகள் வழங்கிய பின் பேச அழைக்கப்பட்டவர் குகநாதன். வழக்கம் போல் பாசமலரையும் கட்டபொம்மனையும் வசந்த மாளிகையையும் பற்றி குறிப்பிட்டு அது போல இப்போது பார்த்தோமே பாடல் காட்சி, இது போல யாரும் இப்போது நடிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியவர் திடீரென்று 1967 பொது தேர்தலில் பெருந்தலைவர் தோற்றதைக் குறிப்பிட்டு தமிழ் மக்கள் செய்த மன்னிக்க முடியாத குற்றம் என்று சொல்லி விட்டு அது போல சிவாஜி அவர்களையும் மறந்து விட்டார்கள் என்று வருத்தப்பட்டார். பின்னால் திரும்பி இந்த வாரிசுகள் இத்தனை காலம் ஏன் பிரிந்திருந்தனர் என்று கேள்வி எழுப்பியவர் இவர்களின் தந்தையர்கள் திருமலைப் பிள்ளை ரோடில் பெருந்தலைவரின் வீட்டில் ஒன்றாக அரசியல் பணியாற்றியதைக் குறிப்பிட்ட குகநாதன் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்றி தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். தான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்றாலும் கூட தமிழகத்தின் நலனுக்காக இவர்கள் இணைந்து பாடுபட வேண்டும் என்பது தன் விருப்பம் மட்டுமல்ல தமிழக மக்கள் பெரும்பாலோரின் விருப்பமும் அதுதான் என்பதையும் சொல்லி தன் உரையை நிறைவு செய்தார் குகநாதன்.
(தொடரும்)
அன்புடன்