அமர தீபம் சிறப்பு செய்திகள்
1. நடிகர் திலகத்தின் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப் பட்டு முதல் படமாக விநியோகம் செய்யப் பட்ட படம் அமர தீபம். இது ஹிந்தியிலும் அமர் தீப் என்ற பெயரில் தயாரிக்கப் பட்டது.
2. சலபதி ராவ் அவர்கள் இப்படத்தின் இசையமைப்பாளர், என்றாலும் வேறு படங்களுக்காக பதியப் பட்ட பாடல்கள் இப்படத்தில் பயன் படுத்தப் பட்டன. பிரபல கர்நாக இசை மேதை ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களின் சாஹித்யமான எங்கே மறைந்தனையோ இப்படத்தில் பயன் படுத்தப் பட்டது. அதே போல் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் வேறு படத்திற்காக உருவாக்கிய பாடல்களில் ஒன்று இப்படத்தில் பயன் படுத்தப் பட்டது. நாடோடிக் கூட்டம் என்ற பாடல். இதே போல் இன்னொரு பாடல் உத்தம புத்திரன் படத்தில் பயன் படுத்தப் பட்டதாகவும் செவி வழி செய்தி அக்காலத்தில் வந்தது.
3. இப்படமும் உளவியல் ரீதியாக ஆய்வு செய்யப் பட வேண்டிய படம். பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். முன்னர் இவர் பணியாற்றிய பூங்கோதை படத்தில் தான் பிரசாத் அவர்களும் இவரும் வின்சென்ட் அவர்களும் நடிகர் திலகத்தின் கண்களில் இருந்த விசேஷ சக்தியை உணர்ந்து அவரைப் பாராட்டினர்.
4. சென்னையில் வெளியான திரையரங்குகள் - காஸினோ, கிரௌன், சயானி
5. 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
சென்னை காஸினோ, கிரௌன், திருச்சி பிரபாத் - 125 நாட்கள்
6. சாவித்திரி நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த முதல் படம்
7. சென்னை காஸினோ திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்த படம்.
8. தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப் பட்டு அதிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படம்.
9. இவையனைத்துக்கும் மேலாக கதை வசனகர்த்தா ஸ்ரீதர் அவர்களை தயாரிப்பாளராக உயர்த்திய படம். தன்னிடம் இருந்த கதையை நடிகர் திலகத்திடம் சொல்லி, தாங்கள் இதை படமாக்க விரும்புவதாகவும் அதில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகியோருடன் ஸ்ரீதர் அணுகினார். அதே சமயம் தங்களிடம் முதலீட்டிற்கான மூல தனம் போதாது என்றும் நடிகர் திலகத்தின் பெயரைச் சொல்லி படத்தின் விளம்பரம் வெளியிட்டு அதனை வைத்து பணம் ஏற்பாடு செய்து தயாரிக்க வேண்டும் எனவும் கூறி அதற்கு நடிகர் திலகமும் சம்மதித்து அதன் மூலம் ஈட்டப்பட்ட முதலீட்டை வைத்து தயாரிக்கப் பட்ட படம் தான் அமர தீபம். இதன் மூலம் வீனஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் உதயமாக நடிகர் திலகம் உந்து சக்தியாக விளங்கியது சிறப்பாகும்.