Originally Posted by
mr_karthik
என் விருப்பம் (5)
'பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)
1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்).
ரிக்ஷாக்காரனுக்கு அடுத்து எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா நடித்து வெளியான இரண்டாவது படம். இதற்கு முன் மஞ்சுளா நடித்து படப்பிடிப்பு நடந்த உலகம் சுற்றும் வாலிபன் மேற்கொண்டு வேலைகள் நடைபெறாததால், அதற்குப்பின் துவங்கப்பட்ட இதயவீணை வெளியீட்டில் முந்திக்கொண்டது. இதற்கு அடுத்த படமாக உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.
இதயவீணையில் இன்றைய என் விருப்பமாக வருவது 'பொன் அந்தி மாலைப்பொழுது' என்ற மனதை மயக்கும் ரம்மியமான பாடல். பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் அருமையான டூயட்டாக அமைந்தது. அழகிய வண்ணத்தில் எழிலான காஷ்மீர் பின்னணியில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்துக்கே ஹைலைட் பாடலாக அமைந்தது. குடியிருந்த கோயில் படத்தில் 'நான்யார் நான்யார் நீ யார்' பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல் இது.
பாடகர்திலகம் மற்றும் இசையரசியின் அருமையான ஹம்மிங்கோடு துவங்கும் இப்பாடலுக்கு மூன்று சரணங்களுக்கும் மூன்று வித்தியாசமான மெட்டைத்தந்து அசத்தியிருந்தார்கள் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ். அவர்களது இசைப்பயணத்தில் இந்தப்படமும், இந்தப்பாடலும் மைல்கல் என்றால் மிகையில்லை.
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
(முதல் சரணம் ஒரு மெட்டில்)
மலைமகள் மலருடை அணிந்தாள் - வெள்ளிப்
பனிவிழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலின்
இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக்காலையில் விழிக்கின்ற வேளையில்
மலர்களும் சிரிக்கட்டுமே
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
(அடுத்த சரணம் வேறொரு மெட்டில்)
கட்டுக்கூந்தல் தொட்டுத்தாவி என்னைத்தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடிவர
சொல்லிசொல்லி வழங்கட்டும் கவிதை
எண்ணி எண்ணி மயங்கட்டும் இளமை
எந்நேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
(மூன்றாவது சரணம் பிறிதொரு மெட்டில்)
ஆடைமூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
ஆசைகொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
கண்ணோடு கண் பண்பாடுமோ
என் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
இந்தப்பாடலில் மக்கள்திலகம் மற்றும் மஞ்சுளாவுக்கு அருமையான கண்ணைக்கவரும் உடைகள். மக்கள்திலகம் முதலில் மஞ்சள், அடுத்து ஆரஞ்சு, இறுதியில் சிவப்பு வண்ணங்களில் பேண்ட் கோட், அணிந்து கூடவே விதவிதமான கூலிங்க் கிளாசும் அணிந்து அசத்த, மஞ்சுளாவும் அதற்கேற்றார்போல வண்ண உடைகளணிந்து நம்மை கிறங்கடிப்பார்.
பாடல் வரிகள், சிறப்பான இசை, அருமையான வெளிப்புறப் படப்பிடிப்பு, பொருத்தமான நாயகன், நாயகி என எப்போது பார்த்தாலும் மனதைக்கவரும் பாடல் 'பொன் அந்தி மாலைப்பொழுது...