https://scontent-sin1-1.xx.fbcdn.net...91&oe=56B5559D
என் தமிழ் என் மக்கள்
Printable View
https://scontent-sin1-1.xx.fbcdn.net...91&oe=56B5559D
என் தமிழ் என் மக்கள்
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...46800be6a42bb3
என் தமிழ் என் மக்கள்
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது.
-------------
"உன் மலர், உன் இதயம் எல்லாமே எனக்குத்தான்.
இதயத்தை நான் எடுத்துக்கிட்டு
மலரை உன்கிட்டயே
குடுத்துடறேன்."
-காதலில் ஆழ்ந்து லயித்து
விட்ட மனம், பண்டமாற்று
முறை பேசுகிறது.
அன்புக்குரியவள் தரும்
பரிசுக்காகத், தன்னை மிகவும்
பயப்படுத்தும் உயரம் நோக்கிச்
செல்லும் தைரியம் சுந்தருக்கு
எப்படி வந்தது?
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,
எங்கள் தமிழாசிரியர் ஒரு
போட்டி வைத்தார். காலாண்டுத்
தேர்வு கூட முடிந்திராத காலமது. எங்கள் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த,
பாடப் பகுதிகள் தவிர்த்த
செய்யுள் பகுதி முழுவதையும், (ஆண்டின் இறுதித் தேர்வு வரை உள்ள பகுதிகள் அனைத்தையும்)
மனப்பாடம் செய்து தங்கு
தடையின்றி ஒப்பிக்க வேண்டும். நல்ல முறையில்
ஒப்பிப்போருக்கு பரிசாக ஒரு
ஸ்கேல், ஒரு பென்சில், ஒரு
ரப்பர் மூன்றும் தரப்படும்
என்ற அறிவிப்பே அது.
ஏழெட்டுப் பேர் போட்டியில்
கலந்து கொண்டதில், மூன்று
பேருக்குப் பரிசு கிடைத்து,
அந்த மூவரில் நானும் ஒருவனாகி, பரிசு வென்ற
மகிழ்வில் அவ்வப்போது
ஸ்கேல் வைத்து பென்சிலால்
நிறையக் கோடுகள் போட்டு,
அதை ரப்பரால் அழித்துக்
கொண்டு.. அது ஒரு காலம்.
சொல்ல வரும் விஷயம்-
விருப்பத்துக்குரியது பரிசாகக்
கிடைத்தால், அந்தப் பரிசுக்காக
எதை வேண்டுமானாலும்
செய்யும் துணிச்சல் வந்து
விடுகிறது.
அப்படி ஒரு துணிச்சல்தான்
சுந்தருக்கும் வந்து விட்டது.
"அவசியம் போய்த்தான்
ஆகணுமா" என ஆரம்பத்தில்
தயங்கினாலும், அவள் தரப்
போகிற பரிசின் மீதான ஆர்வம்,
சுந்தரை ஆபத்தான பாறையை
நோக்கிச் செலுத்துகிறது.
நடை வேகம் பிடித்து, வேகம்
சூடு பிடிக்கும் வழக்கமான
நடையல்ல அது. காதலியின்
பரிசைப் பெற வேண்டும்
என்கிற அவசரமும், தனக்கு
ஒவ்வாத உயரம் நோக்கிச்
செல்கிற நடுக்கம் தரும்
தள்ளாட்டமும் கலந்த நடை.
தொலைவில் நின்றாலும் உமா,
சுந்தர் தள்ளாடி நடப்பதைக்
கண்டுபிடித்து விடுகிறாள்.
"அய்யோ.. அவர் தள்ளாடுறாரே!?" என்று அவள்
பதற, "அவன் தைரியமானவன்தான். ஆனா,
உயரம்னா ரொம்பப் பயப்படுவான். ஒரு ஏணியில
கூட ஏற மாட்டான். வேர்த்துக்கொட்டும்." என்று
தாமதமாக விவரிக்கும் சக
மாணவனைக் கடிந்து கொள்ளும் உமா, தூரத்தே
தடுமாறிச் செல்லும் சுந்தரை
நோக்கி பதற்றத்தோடு கூவுகிறாள்..
"வேண்டாம்..போகாதீங்க!
இதோ இந்த மலரைக் கூட
தர்றேன். போகாதீங்க..!"
இந்தக் காட்சியில் உமாவாக
பத்மினி கூவ, தள்ளாடிச்
சென்றாலும் நடை நிறுத்தாமல்,
முற்றிலும் முகம் திருப்பாது
மிக இலேசாய் உமாவின்
பக்கம் முகம் திருப்பி, "இரு..
கவலைப்படாதே. நான் போய்த்
திரும்புவேன்" என்பதாய்ச்
சைகை காட்டி சுந்தராகத்
தொடர்ந்து நடக்கும் நம்
நடிகர் திலகத்தைப் பார்த்து
மனம் சொல்கிறது...
அய்யா..! உங்கள் பொது
வாழ்க்கைப் பாதையும் கூட ஆபத்தை நோக்கி நீங்கள்
போகும் இந்த மலைப்பாதை
போலத்தானே? உமாவின்
கூவலைக் கேட்டு பாதிப்
பயணத்தோடு திரும்பி வந்து பரிசை வாங்கிக் கொள்ளாமல்
தொடர்ந்து தன் வழியில்
முயற்சித்து நடக்கும் சுந்தர்
போல, எந்த சலுகை மொழிக்கும் மயங்காது நீங்கள்
தன்மானப் பயணம் தொடர்ந்ததால்தானே சுந்தர்
போல் நீங்களும் மறக்க முடியாதவரானீர்கள்..?
--------------
மேலும், மேலும் தடுமாற்றம்
அதிகரித்து, தலை கிறுகிறுத்து,
ஆபத்தான பாறையின் விளிம்பில் தத்தளிக்கும்
சுந்தரைக் காணப் பொறுக்காத
உமா விரைந்து ஓடுகிறாள்.
உலகமே தலை கீழாய்ச் சுழல,
மிகப் பெரிய பள்ளத்தில் தவறி விழவிருந்தவனை உமா
தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுகிறாள்.
காப்பாற்றுவதற்காக ஒடி வந்த
பதற்றத்தை விட, தன்னால்
ஒரு நல்ல உயிர் போகவிருந்ததே எனும் குற்ற
உணர்வு அவளுக்கு.
உமா,வருந்தி அவனிடம்
மன்னிப்புக் கோருகிறாள்.
சுந்தர் மனம் திறக்கிறான்.
உயரமென்றால் பயப்படுவது
ஏனென்று விளக்குகிறான்.
நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த தன் அன்னையிடம்,
பரண் மேலிருந்த லட்டு வேண்டுமென்று அடம் பிடிக்க,
மகனுக்காக, சிரமம் பாராத
அன்னை ஏணியில் ஏறி பரண்
மேலிருக்கும் இனிப்பை எடுக்க
முனைய, ஏணி வழுக்கி விட்டு
"சுந்தர்" எனும் அலறலோடு
அவள் கீழே விழுந்து உயிர்
விட்ட கண்ணீர்ச் சரித்திரத்தை
சுருக்கமாகப் பேசுகிறான்.
இந்தக் காட்சி, எனக்கு மிகப்
பெரும் வியப்பு.
நடிகர் திலகம்,பத்மினியிடம்
சொல்வது மட்டுமே. அந்த
சுந்தருக்கு ஒரு அம்மா இருந்தது, அதற்கு முன்
காட்டப்படவில்லை.
"நான் சின்னப் புள்ளையா
இருந்தப்ப..." என்று நடிகர்
திலகம் துவங்கியவுடன்..
தடிமனான வெள்ளை நிற
வட்டங்களாய் திரை முழுக்க
வியாபித்து "ஃப்ளாஷ் பேக்"
எதுவும் காட்டப்படவில்லை.
அவர் உணர்வுப் பொங்கப்
பேசும் பாங்கிலேயே, ஒரு
நிறைமாத கர்ப்பிணி ஏணியில்
இருந்து தவறி விழுந்து இறந்து
விடுவது காட்சிப்படுத்தப்படுகிறது.
அதிலும், அவர் "அப்ப அவங்க
நிறைமாத கர்ப்பிணி" என்று
சொல்லும் போது அவர் குரலில்
கொண்டு வரும் உருக்கம்...
"ஏணி வழுக்கி விட்டுடுச்சு"
எனும் போது குரலில் காட்டும்
அழுகை கலந்த தழுதழுப்பு...
"சுந்தர்ங்கிற சத்தத்தோட கீழே
விழுந்தாங்க" எனும் போது
தன் நினைவுகளில் ஆழப்
பதிந்து விட்ட அந்த அலறல்
சத்தத்தை இன்னும் மறக்கவில்லை என்பதான
அறிவிப்பு...
-"இருமல் தாத்தா" என்று
எழுதப்பட்ட சார்த்திய அறைக்
கதவுகளைக் காட்டி, பலத்த
இருமல் சத்தத்தை ஒலிக்கச்
செய்ததன் மூலமாக, ஒரு
முடியாத கிழவர் அந்த அறைக்குள் இருப்பதாய்
இயக்குநர் சிகரம் 'எதிர் நீச்சலில்' நம்ப வைத்ததை
வியந்து, வியந்து பேசினோமே?
காட்டப்படாத ஒரு அம்மாவை
நாலே வார்த்தைகள் பேசி
நமக்குக் காட்சிப்படுத்திய
நடிகர் திலகத்தை எப்படி
வியக்கப் போகிறோம்?
எப்படி கொண்டாடப் போகிறோம்?
(...தொடரும்...)
'பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்)
http://i812.photobucket.com/albums/z...ps36911d5b.jpg
'பரதேசி' (தெலுங்கு)
வெளி வந்த நாள்: 14.01.1953
'பூங்கோதை'(தமிழ்)
http://www.iqlikmovies.com/modules/a...7_07_35_49.jpg
வெளி வந்த நாள்: 31.01.1953
உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி
இசை: ஆதிநாராயண ராவ்
ஒளிப்பதிவு: கமால் கோஷ்
தயாரிப்பு: அஞ்சலி பிக்சர்ஸ் கம்பைன்ஸ் (நடிகை அஞ்சலி தேவி மாறும் அவர் கணவர் ஆதிநாராயண ராவ்)
இயக்கம்: எல்.வி. பிரசாத்
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், 'அக்கினேனி' நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், பண்டரி பாய், வசந்தா, ரேலங்கி...
கதை:
http://www.thehindu.com/multimedia/d...v_1654969g.jpg
சந்த்ரம் (நாகேஸ்வரராவ்) ஓர் இளைஞன். ஏழையும் கூட. தன் தந்தையை விபத்தில் பறி கொடுக்கிறான். வறுமையில் வாடுகிறான். அவனுடைய நண்பன் ரகு (ஜனார்த்தன்) திடீரென மாரடைப்பால் மரணம் எய்துகிறான். இறந்த ரகுவிற்கு சுசீலா (பண்டரிபாய்) என்ற மனைவியும் மோகன் என்ற சிறு வயது மகனும் உண்டு. நண்பன் ரகு இறந்ததால் அவன் மனைவி, மகன் இருவரையும் தன் பொறுப்பில் வைத்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் சந்தத்ம். அதனால் கடுமையாக பணிபுரிந்து அதிக மணி நேரங்கள் உழைத்து நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் அவன் உடல் நிலை சீர்கெடுகிறது. அவன் உடல்நிலையைப் பரிசோதிக்கும் மருத்துவர் சந்தரமை ஒரு நல்ல மலைப் பிரதேசத்திற்கு சென்று சில காலம் அவனை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்துகிறார்.
சந்திரமும் மருத்துவர் அறிவுரையின்படி சீதகிரி என்னும் அழகிய மலைப் பிரதேசத்திற்கு ஓய்வெடுக்க செல்கிறான். அங்கு பூக்கள் விற்கும் லக்ஷ்மி (அஞ்சலிதேவி) என்ற பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அங்கிருக்கும் ஒரு கோவிலில் வைத்து அவளை திருமணமும் செய்து கொள்கிறான். சந்தரமுக்கு சொந்த ஊரிலிருந்து வேலை நிமித்தம் ஒரு அவசர அழைப்பு வருவதால் அவன் லஷ்மியிடம் சொல்லாமல் ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சந்த்ரம் தங்கியிருந்த ஓட்டலில் லஷ்மி வந்து அவனைப் பற்றி விசாரிக்கையில் சந்த்ரம் அங்கில்லை என்பது தெரிகிறது. லஷ்மி இதனால் அதிர்ச்சியடைகிறாள். சந்த்ரம் தன்னை ஏமாற்றி விட்டானோ என்று பரிதவிக்கிறாள்.
லஷ்மி இதனிடையே கர்ப்பமாகிறாள். இனியும் விஷயத்தை மறைக்க முடியாது என்று லஷ்மி தன் தந்தை ரங்கடுவிடம் தான் சந்த்ரமை திருமணம் செய்த விஷயத்தையும், அதனால் தான் கர்ப்பமுற்றிருக்கும் நிலைமையையும் சொல்லி சந்திரனை தேடிக் கண்டு பிடித்து வரும்படி மன்றாடுகிறாள். சந்த்ரமைத் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் மலைக் கிராமத்திற்கு திரும்பும் ரங்கடு தன மகள் லஷ்மியின் நிலைமையால் ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி அவமானம் தாங்காமல் தற்கொலை புரிந்து கொள்கிறான்.
இதற்கிடையில் லஷ்மியை தன்னுடன் அழைத்து செல்ல மறுபடி சீதகிரிக்கு வரும் சந்த்ரம் லஷ்மியின் வீடு தீப்பற்றி எரிந்து போய் விட்டதாகவும், அதில் சிக்கி லஷ்மி உயிரை விட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டுத் துடித்துப் போகிறான், சோகத்துடன் மறுபடி சொந்த ஊருக்கே திரும்புகிறான்.
ஆனால் தந்தையை இழந்த லஷ்மி தீ விபத்திலிருந்து தப்பி சந்த்ரம் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தாரா( வசந்தா) எனப் பெயரிட்டு அவளை மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்க்கிறாள்.
வருடங்கள் உருண்டோட சந்த்ரம் வளர்க்கும் நண்பனின் மகன் ஆனந்த் (சிவாஜி கணேசன்) இளைஞனாகிறான். ஒரு வேலையாக சீதகிரிக்கு வரும் சந்தரன் அங்கு லஷ்மியின் மகள் தாராவைப் பார்த்து காதல் கொள்கிறான். தன் வாழ்க்கை சந்த்ரமால் வீணாகப் போனதாக நினைத்து வருந்தும் லஷ்மி தன் மகள் வாழ்க்கையும் தன்னைப் போல ஆகிவிடக் கூடாதே என்று கவலை கொள்கிறாள். தாரா ஆனந்ததைக் காதலிப்பதைத் தடுத்து எதிர்க்கிறாள். அவனிடமிருந்தும் தாராவைப் பிரிக்க நினைக்கிறாள். இதற்கிடையில் சந்த்ரமும் சீதகிரிக்கு திரும்ப வருகிறான்.
சந்த்ரம் தன் மனைவி லஷ்மியை சந்தித்தானா?
ஆனந்த், தாராவின் காதல் வெற்றி பெற்றதா?
சந்தர்மும் லஷ்மியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
போன்ற கேள்விகளுக்கு சில திருப்பங்களுடன் கூடிய கிளைமாஸ் பதில் சொல்லுகிறது.
'பரதேசி' மற்றும் 'பூங்கோதை' படங்கள் பற்றிய சில சுவையான விசேஷ தகவல்கள்
1. நடிகர் திலகத்தின் முதல் நேரடித் தெலுங்குப் படம் இது.
2. தெலுங்குப் படவுலகின் முடிசூடா நாயகர் 'அக்கினேனி' நாகேஸ்வரராவ் (ANR )அவர்களுடன் நடிகர் திலகம் இணைந்த முதல் படம் இது.
3. பிரபல இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள், அஞ்சலி தேவி இவர்களுடன் சிவாஜி இணைந்த முதல் படம்.
4.' பராசக்தி' படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் புதுமையான நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து புளோரிலிருந்த நடிகை அஞ்சலி தேவி தான் நடிப்பதை நிறுத்திவிட்டு சிவாஜி நடிப்பதைப் பார்க்க 'பராசக்தி' ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்.
5. அப்போதே தெலுங்கு, மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் மிகப் பிரபலமாகி விட்ட நடிகை அஞ்சலிதேவி. (சிவாஜிக்கு மிக சீனியர்) பிரபல மியூசிக் டைரக்டர் ஆதிநாராயண ராவ் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு 'அஞ்சலி பிக்சர்ஸ்' என்ற சொந்த சினிமாத் தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து 'பரதேசி' படத்தை தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்க முடிவு செய்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் என்று முடிவாயிற்று. 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு தமிழில் 'பூங்கோதை' என்று பெயர் வைக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் வளர்ப்பு மகனாக வரும் ஆனந்த் கதாபாத்திரத்திற்கு சிவாஜி என்ற அந்த புதுப் பையன் நன்கு பொருந்துவார் என்று அஞ்சலிதேவி சிவாஜியின் 'பராசக்தி' படத்தின் நடிப்பைப் பார்த்து முடிவெடுத்தார். சிவாஜியை தனியே அழைத்து 'பூங்கோதை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். முதல் தொகையாக ஒரு நல்ல தொகையைக் கொடுத்து சிவாஜியை மகிழ்வித்தார் அஞ்சலி தேவி.
http://i872.photobucket.com/albums/a...psaa331c5f.jpg
(நடிகர் திலகம்.காம், மற்றும் திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)
6. சிவாஜியும் அற்புதமாக 'பூங்கோதை' படத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் 'பரதேசி' தெலுங்குப் படத்திற்காக அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு தெலுங்கு நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரின் நடிப்பு எல்.வி.பிரசாத்திற்கும், அஞ்சலி தேவிக்கும் பிடிக்காமல் போனதால் தெலுங்கிலும் சிவாஜியே செய்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலி தேவி சிவாஜியைக் கேட்க சிவாஜி சற்று தயங்கினார். "நான் நடிக்கப் போகும் பாத்திரத்திற்கு நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் அந்த தெலுங்கு நடிகரை எனக்காக நீக்கினால் அவர் வருத்தப் படுவாரே" என்று சிவாஜி அஞ்சலி தேவியிடம் சொல்ல, சிவாஜியின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்ட அஞ்சலிதேவி அந்த தெலுங்கு நடிகரின் மனம் புண்படாத வகையில் அவரிடம் பேசி, அவரை சமாதானப் படுத்தி, அவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து, அவரை நீக்கி, பின் சிவாஜியை 'பரதேசி'யில் 'புக்' செய்தார்.
7. அதனால்' பரதேசி' தெலுங்கு, அதன் தமிழாக்கம் 'பூங்கோதை' இரண்டு மொழிப் படங்களிலும் சிவாஜியே திறம்பட நடித்தார். சிவாஜி தெலுங்கில் வசனங்களை அருமையாக மனனம் செய்து பிரமாதமாக தெலுங்கை உச்சரித்து 'ஆனந்த்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
8. பின்னாட்களில் சிவாஜி அவர்கள் தமிழ்த் திரையலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் (அதாவது தமிழ்த் திரைப்படத் தொழிலின் மொத்த வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரம் இந்தக் காலக் கட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜியை வைத்தே நடந்தது) அஞ்சலி தேவிக்கு வயதாகி விட்டது. 1973 ஆம் ஆண்டு அஞ்சலி தேவி நாகேஸ்வரராவ் அவர்களை வைத்து' பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதில் மிக முக்கியமாக மகாரஷ்டிர 'வீர சத்ரபதி சிவாஜி' வேடம் ஒன்று முக்கியமான பாத்திரமாக, படத்தை முடித்து வைக்கும் பாத்திரமாக வரும். அந்த 'வீர சத்ரபதி சிவாஜி' பாத்திரத்திற்கு நம் சிவாஜிதான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்த அஞ்சலிதேவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க சிவாஜியை அணுகினார். சிவாஜி அவர்களும் தனக்கு ஆரம்ப காலங்களில் அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை படங்களில் சான்ஸ் கொடுத்து உதவி செய்ததை மறக்காமல் மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் 'சத்ரபதி சிவாஜி' வேடத்தில் நடித்துத் தர மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். 'பக்த துக்காராம்' படத்தில் ஒரு கால் மணி நேரமே வரும் அந்த வீர சிவாஜி பாத்திரத்தில் 'சத்ரபதி சிவாஜி'யாகவே நடிகர் திலகம் வாழ்ந்து காட்டி இன்றளவும் அந்த பாத்திரத்தைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜி அவர்கள் அஞ்சலிதேவியிடம் நன்றி உணர்ச்சியின் காரணமாக ஒரு பைசா கூட வாங்க வில்லை என்பது இன்னோர் செய்தி. 'பக்த துக்காராம்' ஆந்திராவில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது.
நடிகர் திலகம் அதன் பிறகு முதல் டெலிவிஷன் தொடராக பம்பாய் தூர்தர்ஷனுக்கு 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகத்தை நடித்துக் கொடுத்தார். அப்போது அஞ்சலிதேவி தான் தயாரித்த' பக்த துக்காராம்' படத்தில் வீர சிவாஜியாக நடிகர் திலகம் அணிந்த உடைகளே டெலிவிஷன் நாடகத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. அஞ்சலிதேவி சிவாஜி அவர்கள் மேல் கொண்ட பேரன்பினால் வீர சிவாஜி உடைகளை டெலிவிஷன் நாடகத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிக்கு தந்து உதவினார்.
8.1951 -இல் இந்தியில் வெளி வந்த 'ராஜா ராணி' படத்தின் உரிமையை வாங்கி அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை திரைப்படங்களைத் தயாரித்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் இந்திப் படத்தின் முழுக் கதையையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சினிமாக்களுக்குத் தக்கபடி கதையை மாற்றி பின் இயக்கம் செய்தார்.
9. நடிகர் திலகத்திற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அப்போது ஓரளவிற்கு பிரபலமாய் இருந்த நடிகை வசந்தா 'தாரா' பாத்திரத்தில் நடித்தார்.
10. நடிகர் திலகம் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கத்தில் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அந்தமான் காதலி' திரைப்படம் பரதேசி மற்றும் பூங்கோதை திரைப் படங்களைத் தழுவி எடுக்கப் பட்டதாகும். தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஏற்ற பாத்திரத்தை அந்தமான் காதலியில் நடிகர் திலகமும், அஞ்சலிதேவி பாத்திரத்தை நடிகை சுஜாதாவும், நடிகர் திலகத்தின் ஆனந்த் பாத்திரத்தை தெலுங்கு குணச்சித்திர நடிகர் சந்திரமோகனும், தாரா பாத்திரத்தை நடிகை கவிதாவும், ரங்குடு பாத்திரத்தை நடிகர் செந்தாமரையும் சிறு சிறு பாத்திர மாறுதல்களுடன் ஏற்று நடித்திருந்தனர்.
11. பரதேசி, பூங்கோதை இரு படங்களும் சிவாஜி அவர்களின் படங்களில் மிக மிக அபூர்வமான படங்கள். இப்படங்களை பெரும்பாலோனோர் பார்த்திருப்பதே அரிது. இப்படங்களின் வீடியோ சிடிக்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன். நானும் இப்படத்தைப் பார்த்ததில்லை. பல்வேறு பத்திரிக்கை செய்திகள், ஊடகங்கள், வீடியோ பேட்டிகள் உதவியில்தான் இக்கட்டுரையை வடித்துள்ளேன். அதனால்தான் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அப்படி இந்தப் படம் பார்க்கும் அதிர்ஷ்டம் நேர்ந்தால் (நிச்சயம் நிகழும்) இப்படத்தில் நடிகர் திலகம் அவர்களின் பங்களிப்பைப் பற்றி அவசியம் எழுதுகிறேன்.
12. தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக ஸ்லோ மோஷன் காட்சி அறிமுகமானது இந்தப் படத்தில்தான். சாகுந்தலை நாட்டிய நாடகக் காட்சியில் ஸ்லோ மோஷன் காட்சி காண்பிக்கப் பட்டதாம். பிரபல இயக்குனர் சாந்தாராம், அவருடைய ராஜ்கமல் கலாமந்திர் சார்பாக ஸ்லோ மோஷன் காட்சிகளுக்காகவே வெளிநாட்டிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்ட சிறப்புக் காமிரா தான் இந்த இரு படங்களுக்காக வாடகைக்கு வாங்கப்பட்டு உபயோகிக்கப் படுத்தப்பட்டதாம். (நன்றி: தி இந்து)
13. இயற்கை சூழல்கள் அதிகம் தேவைப்பட்ட இந்த படங்களுக்கு மொத்தம் நான்கு ஆர்ட் டைரக்டர்கள் பணி புரிந்தனராம். (T.V.S.ஷர்மா, வாலி, தோட்டா வெங்கடேஸ்வரா, ஏ.கே சேகர் என்ற 4 ஆர்ட் டைரக்டர்கள்). இயற்கை எழில் சார்ந்த மலைப் பிரதேசங்களிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
13. பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்களின் உதவியாளராக இருந்தவர்தான் பிரபல ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் அவர்கள். இவரிடம் தான் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள் நடிகர் திலகத்தின் கண்களைப் பார்த்து இவர் மிகச் சிறந்த நடிகராக வருவார் என தீர்க்கதரிசனமாக கணித்தாராம்
14. தன்னை முதன் முதல் ஆதரித்து வாய்ப்பு கொடுத்ததால் அஞ்சலி தேவி அவர்களை சிவாஜி அவர்கள் 'பாஸ்... பாஸ்' என்று தான் அழைப்பார். அவ்வளவு நன்றிப் பற்று நடிகர் திலகத்திடம் இருந்தது.
15. இந்தப் படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதுதான் சிவாஜி அவர்களின் திருமணமும் நடந்தது. ஒரு ஆறு மாத காலம் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு அஞ்சலிதேவி சிவாஜி அவர்களை திருமணத்திற்கு அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து வரும் போது சிவாஜி நன்றாக சதை போட்டிருந்தார். அதற்கு நாகேஸ்வரராவ் "என்ன சிவாஜி! மாமனார் வீட்டு சாப்பாடு பலமா! நல்லா சதை போட்டுட்டு வந்துட்டியே" என்று ஜோக் அடித்து சிரித்தாராம். அது முதற்கொண்டு சிவாஜி அவர்களின் குடும்பத்தாரோடு நெருக்கமாக இருந்து இருந்திருக்கிறார் அஞ்சலிதேவி.
16. நாகேஸ்வரராவ் இடைவேளை வரை இளவயது சந்த்ரமாகவும், இடைவேளைக்குப் பிறகு நடிகர் திலகத்துத் தந்தையாக வயதான தோற்றத்திலும் முதன் முதலாக நடித்தார். அப்போது அவரும் இளைஞர்தான். நாகேஸ்வரராவ் தந்தையாகவும், நடிகர் திலகம் மகனாகவும் நடிக்க நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா! இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இதே நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனனுடன் நடிகர் திலகம் 'அக்னி புத்ருடு' என்ற தெலுங்குப் படத்தில் கை கோர்த்தார். அதனால் அப்பா, பிள்ளை இருவருடனும் நடித்த பெருமைக்குரியவராகிறார் நடிகர் திலகம்.
17. வயதான கெட்-அப்பில் நாகேஸ்வரராவ் அவர்களை போட்டோ செக்ஷனுக்காக புகைப்படம் எடுக்கும் போது குளோஸ்-அப் ஷாட்ஸ் சரிவரவில்லை. இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. மிகவும் இரக்கப்பட்டு பார்க்க வேண்டிய வயதான வேடம் ஆகையால் பல தடவை நாகேஸ்வரராவை மேக்-அப் மாற்றி மாற்றி திருப்தி வரும் வரை புகைப்படம் எடுத்தார் இயக்குனர் எல்வி.பிரசாத். நாகேஸ்வரராவும் மிக்க பொறுமையுடன் ஒத்துழைத்தார்.
http://www.iqlikmovies.com/modules/a...6A8-09DF90.jpg
18. 'நடிகர் திலகம்' அவர்கள் நாடகங்களில் நடித்து விட்டு பின் திரைப்படங்களுக்கு வந்தவர் ஆதலால் வந்த புதிதில் நாடகங்களில் உரக்க பேசுவது, எமோஷன் காட்சிகளில் நடிப்பது போன்றே இப்படங்களில் அவர் நடிக்க, இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்கள் "தம்பி...நாடகங்களில் காட்ட வேண்டிய அதிகப்படியான முக பாவங்கள், சத்தமான உச்சரிப்புக்கள் சினிமாவுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. நீ சினிமாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்தால் போதும்" என்று நாடகங்களுக்கும், சினிமாவுக்கும் நடிப்பில் உள்ள வித்தியாசங்களை புரியவைத்து, ஒரு குரு போல நடிகர் திலகத்திற்கு சினிமா பற்றிய நடிப்பிலக்கணங்களை பற்றி சொல்லிக் கொடுத்தாராம். நடிகர் திலகமும் கற்பூரம் போல 'டக்'கென அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, சினிமாவுக்கேற்றமாதிரி பிரமாதமாக நடித்து இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்களிடமே அதிகப் பட்சமான பாராட்டுக்களைப் பெற்றாராம். தொழிலை சரியாகக் கற்றுக் கொடுத்ததனால் 'நடிகர் திலகம்' திரு. எல்.வி.பிரசாத் அவர்களை கடைசி வரை மறக்காமல் "சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்து என்னை சினிமா நடிகனாக்கிய செதுக்கிய குரு" என்று குருபக்தியோடு குறிப்பிடுவதுண்டு.
இந்த இரு படங்களைப் பற்றி என்னால் இயன்றவரை திரட்டிய தகவல்களை அளித்துள்ளேன். இப்படங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
'பூங்கோதை' திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் டி.பி.ராமச்சந்தின் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்றதாகும்.
'நான் ஏன் வரவேண்டும் ஏதுக்காகவோ
யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் முன் குயிலழைத்தாலும்
வையகம் தனிலே வருமோ
வலை கண்டும் மான் வீழ்ந்திடுமோ'
https://youtu.be/5dMdoM1PhRs
வாசு சார்
தங்கள் நெய்வேலியில் நிலைமை சகஜமாகி வருகிறதா.. மின்சாரம் நிலைமை சீராகி விட்டதா.
தங்கள் பகுதி மக்கள் அனைவரும் மழையின் பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
பரதேசி மற்றும் பூங்கோதை படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் என்பதே பலருக்கு தெரியாத விஷயம். அப்படி இருக்கும் போது இந்தப் படங்களைப் பற்றி இவ்வளவு விவரமாக தாங்கள் தந்துள்ளதை விட மேலும் யாராலும் தந்து விட முடியாது என்பதே என் கருத்து. இதற்கு மேல் என்ன விவரம் அளித்தாலும் அது "அதிக"மாகத்தான் இருக்கும்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி ராகவேந்திரன் சார்.
மழை, புயலில் அதிகம் பாதிக்கப்பட்டு நெய்வேலியில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. 5 நாட்களாக மின்சாரம், இணைய இணைப்பு, கேபிள் எதுவும் இல்லை. நேற்று ஓரளவு நிலைமை சீராகி இன்று மறுபடியும் மழை பிய்த்து உதற ஆரம்பித்து விட்டது. இணைய இணைப்பு கிடைத்த நேரத்தில் 'பூங்கோதை' பதிவை இட்டுவிட்டேன். இணைய இணைப்பு விட்டு விட்டு வருவதால் பதிவுகளை சரிவர இட முடியவில்லை.
நடிகர் திலகம் திரியில் அனைத்து நண்பர்களும் பங்களித்து சிறப்பித்து வருவதைப் பார்த்தால் துயரங்கள் மறைந்து விடுகின்றன. இணைப்பு சரியில்லாததால் அற்புதமான பதிவுகளுக்காக அனைவருக்கும் சேர்த்து என்னுடைய பாராட்டுதல்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசு சார்
இயற்கை இடர்ப்பாடுகள் குறைந்து, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
தங்களுடைய பூங்கோதை படத்தைப் பற்றிய பதிவினைப் படித்து விட்டு அருமை நண்பர் பெரியவர் தூத்துக்குடி நடராஜன் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களை மிகவும் பாராட்டியுள்ளார். பூங்கோதை படத்தை அவர் பார்த்திருக்கிறாராம். அஞ்சலி தேவியின் தந்தையாக முக்கமாலா நடித்திருப்பார். தந்தை மரணமடையும் காட்சியில் அஞ்சலி தேவியின் மிகச் சிறந்த நடிப்பு, இன்று வரை வேறு எந்த நடிகையாலும் செய்ய முடியாத அளவிற்கு உள்ளது எனக் கூறினார். அந்தக் காட்சியில் கீழே விழுந்து அப்படியே அமர்ந்தவாறே பின்னால் சென்றவாறு தந்தை இறந்த துக்கத்தில் கதறி யழும் காட்சியில் ஈடிணையற்ற நடிப்பில் கொடி கட்டிப் பறந்திருப்பார் எனக் கூறினார். தலைவரைப் பொறுத்த மட்டில் மிகவும் இளமையாக வசீகரமான தோற்றத்தில் நடித்திருப்பார் எனக் கூறினார்.
தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு உளமார்ந்த நன்றி.
இன்று 'குழந்தைகள் தினம்' முன்னிட்டு நான் முன்னம் அளித்திருந்த, தலைவர் விஞ்ஞானி வேடத்தில் அசத்தியிருந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' பட ஆய்வின் மீள்பதிவு.
http://www.koodal.com/contents_kooda...y-jpg-1193.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
http://i1087.photobucket.com/albums/...ps7e39311e.jpg
இந்த 'குழந்தைகள் தின'த்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.
B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், ('குழந்தைகள் கண்ட குடியரசு') கன்னடம், ('மக்கள ராஜ்யா' 1960) தெலுங்கு, ('பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்' 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.
மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும், தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபகசக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.
சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் 'நடிகர் திலகம்' சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடுவகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.
http://i1087.photobucket.com/albums/...ps652fe1e0.jpg
வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).
இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல... நம்மையும் மிரள வைக்கிறதே... எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.
வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் 'நடிகர் திலகம்' என்கிறீர்களா!)
மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.
அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்
"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)
http://i1087.photobucket.com/albums/...ps38ae55d5.jpg
பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.
என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.
இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
Mr Neyveliar
Meel pathivu endralum marakka mudiyatha pathivu. Even there are lot of thalaivar movies which deserves
suitable attention like Oorum Uravum,Raja Mariyadhai where the performance of NT's simply outstanding.
Do write the above movies in your unique style for the benefit of millions of NT's fans.