Quote:
நட்சத்திரங்களின் ஆலயமும் - ஓவியமும்
`ஜீ' தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `நட்சத்திரங்களின் ஆலயமும் ஓவியமும்' நிகழ்ச்சி.
பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களின் குலதெய்வங்கள் இருக்கும் ஊர்களுக்குச் சென்று அந்த தெய்வங்களின் உருவங்களையும், கோவில்களையும் ஓவியங்களாக வரைகிறார் நடிகரும், ஓவியருமான `சின்னத்தம்பி' மார்த்தாண்டன். பிறகு அந்தந்த குல தெய்வங்களைப்பற்றி சம்பந்தப்பட்ட கலைஞர்கள் உணர்ச்சிபூர்வமாக அவரிடம் பேசுகிறார்கள்.
இவர் சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்தம்பி, ஒரு வீடு இரு வாசல், பாளையத்து அம்மன், வால்டர் வெற்றிவேல், பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். இப்போது பெரியதிரை, சின்னத்திரை இரண்டிலும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
இதுவரை இந்த நிகழ்ச்சியில் நடிகை மனோரமா, பிரபு, எஸ்.வி.சேகர், கே.பாக்யராஜ், சார்லி, செந்தில் என்று பலரின் குலதெய்வங்களை நடிகர் மார்த்தாண்டன் வரைவதையும், அதுபற்றிய பிரபலங்களின் வியப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான எண்ணம், எழுத்து, ஓவியம், இயக்கம் அனைத்தும் நடிகர் மார்த்தாண்டன். இவர் மன்னார்குடியில் சிவாஜிகணேசன் கோவில் கட்டி வழிபட்ட பெரியாச்சி அம்மனையும் வரைந்திருக்கிறார்.
மும்பையில் பிரபலமான ஓவியர் சி.மோகன் என்பவரிடம் முறைப்படி சினிமா சம்பந்தப்பட்ட ஓவியங்களையும் மற்றும் ஓவிய நுணுக்கங்களையும் கற்று வந்தவர் மார்த்தாண்டன்.
சிவாஜி முதல் சிம்பு வரையில் அவர்கள் ஓவிய முகத்தை அவர்களிடம் கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியவர் மார்த்தாண்டன். அந்த கலைப்பணியை இன்றும் செய்து வருகிறார். அந்த அடிப்படையில் அவர்களின் நட்பு கிடைத்தபோதுதான் இந்த குலதெய்வம் கான்செப்ட் இவருக்கு உதயமாகி தெய்வ ஓவியங்கள் வரைவது தொடர்கிறது.