பக்ரீத் நினைவுகள்
நண்பர்களுக்கு, பக்ரீத் வாழ்த்துக்கள்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர் முஸ்லிம் வேடத்தில் நடித்த படங்களின் பட்டியலை திரு.எஸ்.வி.சார் பதிவிட்டிருந்தது மகிழ்ச்சி. அந்தப் படங்களைப் பற்றிய சில காட்சிகள் மனதில் மின்னலாய் தோன்றின.
*குலேபகாவலி படத்தில் காட்டுவாசிகளிடம் பிடிபட்டு அவர்கள் தலைவரை பலி கொடுப்பதற்காக, பலி பீடத்தில் தலையை வைத்து கத்தியை ஓங்கும்போது, பலி பீடத்தில் தலை இருக்கும் நிலையில், கண்களை இறுக மூடி, பல்லைக் கடித்து முகத்தை சுருக்கி ஒரு expression கொடுப்பார் பாருங்கள். நிச்சயம் உண்மையாகவே வெட்டப் போவதில்லை என்பது நமக்கும் தெரியும். தலைவருக்கும் தெரியும். இருந்தாலும் மரண பயத்தை வெளிப்படுத்தி நமக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறாரே அதுதான் நுட்பமான நடிப்பு. இதில், தலைவர் கில்லாடி.
*ராஜா தேசிங்கு படத்தில் தம்பி தேசிங்கு (அதுவும் தலைவர்தான்) சண்டை போடும் அழகை பார்த்து அவரை கொல்ல மனமின்றி அவரை தாக்க எடுத்த ஈட்டியிலேயே சாய்ந்து கொண்டு தாவூத்கான் (இதுவும் தலைவர்தான்) ரசிக்கும் அழகு.
*பாக்தாத் திருடன் படத்தில் ‘சொக்குதே மனம், சுத்துதே ஜகம்’ பாடலில் குடிபோதையில் இருக்கும் நம்பியார் முன் வைஜெயந்தி மாலா பம்பரமாய் ஆட, சரோடு வாத்தியத்தை வாசித்துக் கொண்டே தலைவர் காட்டும் முகபாவங்கள்.
*சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் அப்துல் ரகுமானாக தலைவர் வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பு. இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் நடிப்பு, சாயல் முஸ்லிம் பாத்திரத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். ஒரு கடமை தவறாத முஸ்லிமைப் போல நேர்த்தியாக தொழுகை செய்யும் அற்புதம். இன்ஸ்பெக்டர் வேடத்தில் வரும் தலைவரை விட, அப்துல் ரகுமான் பாத்திரத்தில் சற்று குண்டாக தெரிவார். குரலை கரகரப்பாக்கி பேசியிருப்பார். லுங்கியை பின்னால் லேசாக தூக்கிப் பிடித்தபடி காலை அகட்டி வைத்து நடந்து அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார். (நடிகன்டா!)
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ஜன்ஜீர் படத்தின் தழுவலே சிரித்து வாழ வேண்டும். ஜஸ்டினுடன் பாத்ரூம் சண்டைக் காட்சியில் வேகமாக ஓடி சுவற்றில் காலைப் பதித்து பந்து போல எழும்பி ஜஸ்டின் மீது மோதி விழச் செய்வார். (இந்த சண்டைக் காட்சியை நேரம் கிடைக்கும்போது விரிவாக அலசலாம். இந்த உத்தியை பின்னர், பல படங்களில் விஜயகாந்த் பயன்படுத்தி இருப்பார்)
VIDEO COURTESY- VINOD SIR
http://youtu.be/itKYMs58pHE?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
இந்த சண்டைக்கு முன் எலக்ட்ரிகல் ஷேவர் மூலம் தலைவர் ஷேவ் செய்து கொண்டிருப்பார். நவீன கண்டுபிடிப்புகளை புதுமையை தலைவர் தனது படங்களில் காட்டுவார். 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் படங்களில் முதல் முதலில் எலக்ட்ரிகல் ஷேவரை அறிமுகப்படுத்தியது தலைவர்தான். நீதிக்கு தலைவணங்கு படத்திலும் எலக்ட்ரிகல் ஷேவரை பயன்படுத்தும் காட்சி வரும். மேலும், கடைசி சண்டை காட்சியில் ஒரு புதுமையாக ஸ்லோ மோஷனில் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ‘ஆடுவது கடமையின் நினைவாக’ பாடலில் எந்தப் படத்திலும் இல்லாத புதுமையாக ஒரு பாடல் காட்சியில் ஒரு நடிகருக்கு இரண்டு பாடகர்கள் பாடியிருப்பதும் இதில்தான். டிஎம்எஸ் பாடலை பாடியிருந்தாலும், முஸ்லிம் குரல் effect-க்காக ‘மண்ணுக்குள் மறைவாக என்ன விதை போட்டாலும், போட்ட விதை என்னவென்று மரம் வளர்ந்து காட்டாதோ... கண்ணை மறைத்தென்ன காரியத்தை செய்தாலும் காலக் கணக்கனவன் சாட்சி வைக்க மாட்டானோ?’ வரிகளை பாடகர் ஷேக் முகமது பாடியிருப்பார். அபூர்வ ராகங்கள் படத்தில் ‘கைகொட்டி சிரிப்பார்கள்’ பாடலை பாடியது இவர்தான்.
தலைவர் mass நடிகராகவே முன்னிறுத்தப்பட்டதால் அவரது class நடிப்பு பெரிதும் கவனிக்கப்படவில்லை என்பது என் கருத்து. பெரிதும் கவனிக்கப்படவில்லை என்றுதான் சொல்கிறேன். கவனிக்கப்படவே இல்லை என்று கூறவில்லை. அப்படி ஓரளவு கவனிக்கப்பட்டதற்கே அவரது இயற்கையான நடிப்பின் நுட்பத்தையும் திறமையையும் பாராட்டி அவருக்கு, இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்ததென்றால், பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால்... திரு. லோகநாதன் சார் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் உள்ளபடி, நடிக்கத் தெரியாது என்று கேலி பேசப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜான் வெயினுக்கு மற்றவர்கள் வாயை அடைக்கும் வகையில் ஆஸ்கர் விருது கிடைத்ததுபோல, தலைவருக்கும் கிடைத்திருக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்