Quote:
பாரதிராஜாவின் தெற்கித்திப்பொண்ணு : தொலைக்காட்சியில் மண்வாசனை
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ்சினிமாவில் பாரதிராஜா விதைத்த மண்வாசனை கமழ்ந்து கொண்டே இருக்கும். சினிமாவில் மட்டுமன்றி சீரியலிலும் இதனை சாத்தியப்படுத்த களமிறங்கிவிட்டார் இயக்குனர் இமயம்.
தெக்கித்திப்பொண்ணு பாரதிராஜா இயக்கும் நெடுந்தொடர் இது. கலைஞர் தொலைக்காட்சியில், வரும் தமிழ் புத்தாண்டு முதல் ஒளிபரபாகவுள்ள இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரத்னகுமார் கதைக்கு தேன்மொழி, சிவாஜி, ரோஸ்முகிலன் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர்.
நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர் குறித்து இன்று நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா :-
மூணு கிராமத்தைச் சேர்ந்த, மூன்று குடும்பங்களில் நடக்கும் கதைதான் இது. தலைமுறை தலைமுறையாக அந்த குடும்பத்திற்குள் நடக்கும் பாசப்பிணைப்புகள், காதல் போராட்டங்கள், பங்காளி உறவுகள் என பகையும், நேசமும். நெகிழச்சியும் கொண்டதுதான் இக்கதையின் ஆணிவேர் என்றவரிடம் கேள்விகள் தொடர்ந்தன.
திடீர்னு சீரியல் பக்கம் வந்துள்ளீர்களே?
சினிமாவில் சொல்லப்படும் முக்கியமான உணர்வுகளை சீரியல்கள் தொலைத்துவிடுகிறது என்று விமர்சித்தவன் நான். ஆனால் சினிமாவில் இரண்டே கால் மணி நேரத்தி்ல் நம் கற்பனையில் உருவான எல்லாவற்றையும் பதியவைப்பது என்பது சிரமம். ஆனால் சீரியலில் அதனை விசாலமாக சொல்லலாம் என்பதை புரிந்து கொண்டேன். தொடர்களால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.
'16 வயதினிலே', 'கிழக்கு சீமையிலே', 'மண்வாசனை', 'கருத்தம்மா', படங்களில் எப்படி கிராமத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டதை போல இந்த கதையும் கிராமத்தை களமாக கொண்டதுதான். தேனி வட்டார வழக்குகள் இருக்கும். இதுவரை சொல்லப்படாத கிராமத்து நிகழ்வுகளை இதில் சொல்லப்போகிறன்.
Bharathiraja
அழுது வடியும் சீரியல்களுக்கு மத்தியில் நீங்கள் தரும் மாற்றம் என்ன?
தேவையானபேது மட்டும் இந்த கதையில் கண்ணீர் தெறிக்கும். கிராமத்து கலாச்சாரத்தை முழுமையாக சொல்லப்போகும் இத்தொடர் சினிமா பார்பபதுபோலவே இருக்கும்.
எத்தனை எபிசோட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
ஒரு குடும்பத்தின் கதைக்கு நூறு எபிசோட்கள் என்று எடுத்துக்கொண்டாலும் மூன்று குடும்பத்து கதைக்கு முந்நூறு எபிசோட்கள் வரும். கதையின் போக்கு, நேயர்களின் எதிர்பார்ப்புகள் என்பதை பொறுத்து மூவாயிரம் எபிசோட்கள்வரை வரவும் வாய்ப்பிருக்கிறது.