-
மக்கள்ளாம் செளக்கியமா
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டுத்திண்ணையைக் கடக்கும்போதும்
வெற்றிலையை
உரலில் இடித்த படி
கேக்கும் பொன்னாயிக் கிழவி..
இடிக்கும் இசைக்குத் தக்கபடி
காதில் தண்டட்டிகள் ஆடும்..
நான் சொல்வதை
நிதானமாய்க் கேட்டு
எல்லாம் சரியாய்டும்ல
மூத்த பொண்ணு என்ன
பூரட்டாதியா அப்படித் தான்
கொஞ்சம் படுத்தும்..
பையன் ரேவதில்ல
நலல் வேலை அமஞ்சுடும்..
இன்னும் பலவிதமாய்ப் பேசும்..
ஒரு நாள் பார்த்த போது
அதே கேள்வி
நானும் பதில் சொன்னேன்
இருந்தாலும் ஏதோ
இல்லாதது போல்..
அட தண்டட்டி
கேட்டும் விட்டேன்..
அதுவா
என்ன நான் ..இந்த நட்சத்திரம்ல
கொஞ்சம் கிரகம் சரியில்லையாம்
பாங்க்ல வச்சுருக்காம் பையன்..
மோரு குடிக்கறீகளா..
ஏட்டி... மோரு கொடு..
உள்ளிருந்து மருமகள்
டம்ப்ளரில்
மோரு கொடுத்த போது
மின்னியது அவள் கைகளில்
வளையல்கள்..
-
வளையல்கள் பூட்ட ஓடி வாருங்க
வயிற்று மேட்டை வந்து பாருங்க
வெட்டவெளிச்சமானது அந்தரங்கம்
வெட்கத்தில் மின்னுது அவளங்கம்
-
அவள் அங்கத்தில் சின்னதாய்
தங்கமுலாம்
திடீரென யார் செய்தது..
ஓ
உள்ளே புகுந்து விட்ட
இளஞ்சூரியனின்
கிரணங்க்ள்
வெளிப்படுகிறதோ மெல்ல
-
மெல்ல நகரும் கடிகார முள்
காத்திருக்கையில்
கடகடவென ஓடும்
களித்திருக்கையில்
காலத்திற்கு நிலையான வேகம்
மனம் மயங்கிக் காணும் பேதம்
-
பேதம் எதில்தான் இல்லை
பிறப்பில் வளர்ப்பில் இறப்பில்
சாதியில் மதத்தில் இனத்தில்
உணவில் உடையில் உறவில்
தொழுகையில் சடங்கில் தெய்வத்தில்
நட்பில் ரசனையில் அபிப்ராயத்தில்
மொழியில் கலாச்சாரத்தில் பண்பாட்டில்
ஊரில் மாநிலத்தில் நாட்டில்
நீக்கமற நிறைந்து இருக்கிறது
மனிதமற்ற சமுதாயத்தில்
-
சமுதாயத்தில் கற்றுயர்ந்தோம்
சரித்திரத்தைப் படைத்தோம்
சார்ந்து வாழும் கலையறிந்தோம்
சகோதரர்களாய் வாழ்ந்திருந்தோம்
பார்க்கவும் பேசவும் வினையாற்றவும்
பொதுவான பல இடங்கள் காலங்கள்
பழக்கங்கள் மறந்து வருகிறோம்
பார்க்காமல் பழகி பகிர்ந்து உருகி
பொய் சமுதாயங்கள் உருவாக்கினோம்
பொழுதுக்கும் அத்தளங்களை நாடி
பறக்கிறோம் புது சமுதாய வானிலே
புரியவில்லை போக்கும் அதன் இலக்கும்
-
அதன் இலக்கும்
பாதையும் தெரியாமல் தான்
பறந்து கொண்டிருந்தது அந்தப் பறவை
எங்கு பார்த்தாலும் நீர்..
தெரிந்ததெல்லாம் தூங்கிய இடம் மட்டும் தான்
அதுவும் நகர்ந்து கொண்டிருக்கிறது..
நடுக்கடல் தான்
கரை எப்போது வரும்
யாரைக் கேட்பது
தெரியவில்லை..
திக்கித் திணறி
உறங்கிய கப்பலின் மேல்தளத்தில்
அமர்ந்து
உருகியதந்தப் பறவையில்
தெரிந்தது பாசுரம்
-
பாசுரம் பாடி
பூச்சரம் ஏந்தி
பாவை சென்றாள்
பரமனை நாடி
-
நாடி வந்தேன் உன்னை
என
குடுகுடுவென உச்சிக்கிளையில்
பூ பறித்து வந்து காதலியின்
அன்பை பெற
ப்ஹா ப்ஹாவென்
மூச்சிரைக்க
காதலன் கொடுத்தது அந்தக் காலம்..
பூங்கொத்துக் கடைக்கெல்லாம் போகமலே
பணம் கட்டி
காதலிகளுக்கு அனுப்புகிறார்கள் காதலர்கள்..
என்ன
அந்த ப்ஹா எனப்படும்
உயிர்த்துடிப்பு மட்டும்
கொஞ்சம் குறைவாய்
-
குறைவாய் கொடுக்குமாம் தெய்வம்
தன்னிடம் நலன்களை வாங்கிட
பெரிய கூடையுடன் வருபவளுக்கு
நிறைத்து அனுப்புமாம் அத்தெய்வம்
மற்றவள் கொண்டு வந்த சின்னக் கூடையை
வயக்காட்டு உரமாய் பாட்டியின் போதனைகள்
வசவோடும் பழமொழியோடும் கேட்டவள்
வளர்ந்தேன் நேராய் வாழ்கிறேன் நலமாய்
ஒழித்தேன் பேராசை பெற்றேன் அடக்கம்
திருப்தியின் அருமை அறிவீர் அனைவரும்