Originally Posted by
makkal thilagam mgr
நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த 2வது படமாகிய "இரு சகோதரர்கள்" படத்தைப் பற்றிய தகவல் :
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைச்சுருக்கம் :
மகாதேவர் என்பவர் தான் சாகும் தருவாயில், சபாபதி, பசுபதி என்கின்ற தனது இரு குமாரர்களையும் அருகிலழைத்து, தான்
காலகதியான பின், அவர்கள் மிக்க ஒற்றுமையோடும், அன்போடும் வாழ வேண்டும் என்று புத்திமதி கூறி மரித்தார்
தகப்பனார் சொன்னபடி நடக்க சகோதரர்களுக்கு தடையில்லை. ஆனால் சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும், அகம்பாவமும் கொண்டவள் அவள், பசுபதியின் மனைவியும், நற்குணம் உடையவளுமாகிய சாந்தா என்பவளையும், அவள் மக்களையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப் பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவர் நல்ல மனதை கலைத்து வந்தாள்.
பசுபதி குடும்பப் பொறுப்பும், கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத பிரியமும், நடிகத் திறமையும் உள்ளவர் ஆதலால் வீட்டுக் காரியங்களைக் கவனியாமல் அந்த ஊர் யுவ நாடக சபையொன்றின் பாலே பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சரசாவின் புருஷனோ, அவ்வூர் ஜமீன்தார் ஆபீஸ் மேனேஜராக இருந்தாலும், மிகவும் அறிவாளியாயினும், மனையாள் சொல் கேட்பவர்.
சரஸாவுக்குத் தூண்டுதல் செய்து வந்தவள் ஊர் வம்பளப்பு முதலியவற்றிக்கு பொக்கிஷமான குப்பி பாட்டி என்னும் வேலைக்க்காரி. அவள் தூண்டுதலினால், சரசா தன் கணவனை காணும் போதெல்லாம் பசுபதி, அவர் மனைவி இவர்களைப் பற்றி பொல்லாப்பு கூறி வந்தாள்.
பசுபதியோ காலக் கொடுமையால், தான் முயற்சியுடன் மூத்த நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி குறிப்பிட்ட வாய்தாவில் கொடுக்கத் தவறி விட்டார். மார்வாடி சபாபதியிடம் வந்து முறையிட்டான்.
இயற்கனவே சகோதரனை வெறுத்து வந்த சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி சண்டை வந்து பாகப்பிரிவினை ஏற்பட்டது. வீட்டின் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பகிர்ந்து கொண்டவராயினும், சாந்தாவும், மக்களும் அந்த வீட்டிலேயே குடியிருந்துகொண்டு சராசாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாயிற்று.
இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தா மீது இரக்கம் கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம் பூண்டு, சாந்தாவுக்கு சமாதனம் சொல்லிக்கொண்டு, அவளிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை எதாவது ஒரு வேலை பார்த்து வரும்படி சென்னைக்கு அனுப்பினாள்.
"பட்ட காலிலேயே படும்" என்றபடி பசுபதி, ரயிலில் தன் செலவுக்காக கொண்டு போன பணத்தை பறிகொடுத்து, சென்னை நகரில் ஆண்டியாய் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப் பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.
இப்பொழுதுதான் நல்ல காலம் வருகிறது நகைகளை களவு கொடுத்த சாம்பசிவய்யர் கார்ப்பரேஷனில் பெரிய
உத்தியோகஸ்தர். அவர், பின்னாளில் உண்மையான கள்வனை கண்டுபிடித்தார் பசுபதியை வீணாக புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்ய தலைப்பட்டார். சங்கீத ஞானமுடைய பசுபதி, சாம்பசிவய்யர் உதவியால் ரேடியோவில் பாடி சம்பாதித்தார். இவரின் சங்கீத அறிவும், நடிகத் திறமையும், வியக்க வைக்கவே, சென்னையில் ஆடி வந்த பிரபல நாடக கம்பனியில் நல்ல சம்பளத்தில் முக்கிய நடிகரானார்.
இது நிற்க - பசுபதி சென்றவுடன் சரசா தன் தாயார், தனயன் கோபாலன் முதலியவர்களை தன் வீடு வந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்க கங்கணம் கட்டினனான். பசுபதி அனுப்பி வந்த மணியார்டர்களை எல்லாம், கோபாலன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப் போல் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி, சாந்தாவிடம் ஒன்றுமே தெரியாமல், தானே சுகித்து வந்தாள்.
அந்தவூர் ஜமீன்தார் ஒரு ஸ்திரீலோலன். சுந்தரி என்ற விலை மாதுவுடன் காலங்கழித்து வந்தார் ஒரு நாள் தற்செயலாய் சாந்தாவைக் கண்ணுற்றதும், அவள் மீது மோகம் கொண்டு, அவளைக் கைப்பற்றக் கருதினான். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தவை தன் மனையாள் என்று சொல்லி ரூ. 10,000/- க்கு விற்று விட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கி, அவள் அறியாமல் அவளை ஜமீன்தார் வீட்டுக்கு அனுப்பி விட்டான் கோபாலன். சாந்தா யாருடனோ ஓடி விட்டாள் என்ற பொய் தந்தியும் பசுபதிக்கு கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பி விட்டாள்.
தந்தி கிடைத்த பசுபதி மானம் பொருக்க முடியாமல் தற்கொலை செய்ய எத்தனிக்கையில், ஒரு சந்நியாசி அவனைக் காப்பாற்றுகிறார். இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் திரும்புகின்றனர்
இதற்குள் ஜமீன்தாரின் தாசியாகிய சுந்தரி சாந்தாவின் வரவினால் தன் மீது ஜாமீன்தாருக்குள்ள பிரியம் குறைபவளாய்
பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதி உடனே போலீஸ்காரர்கள் சஹிதம் சென்று சாந்தாவை விடுவித்து,
ஜமீன்தார், கோபாலன் முதலிய கொடியோர்களைச் சிறையில் அடைப்பித்து தக்க தண்டனைக்குள்ளாக்கினாள்.
சபாபதியோ, ஐயோ பாவம், ஜமீன்தாரின் ஆபீஸ் கணக்குகளை புரக்க்ஷி செய்ததாக பொய்க் குற்றம் சாற்றப்பட்டு வேலை இழந்தான்.
ஊருக்கு திரும்பி வரும் சமயம் பசுபதியும் சாமியாரும், சாந்தா, பார்வதி இவர்களுடன் தற்செயலாய் சேர்ந்து கொண்டார்கள்.
பசுபதி உண்மையனைத்தும் அறிந்து கொண்டான் சாந்தா தன் உன்னத குணத்தால், சரசாவை மன்னித்தாள். சபாபதியாரும் மிகவும் வருந்தினார். குடும்பம் திரும்பவும் ஐக்கியமாகிறது. யாவரும் சந்தோஷம்.
பசுபதியின் பிரிவினால் வரும்படி குறைந்துபோன சென்னை முருகதாஸ் நாடக கம்பெனியார், திரும்பவும் பசுபதியை
கம்பெனியின் பங்காளியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.
தகப்பனார் மஹாதேவர் சொன்னது பழுது போகவில்லை.
பொறுமையே உயர்வு அளிக்கும். சுபம். சுபம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பசுபதியாக பி. கேசவன் அவர்களும், சபாபதியாக கே. பெருமாள் அவர்களும் நடித்துள்ளனர். கோபாலனாக டி.எஸ். பாலையா அவர்களும், சாந்தாவாக என்.கண்ணாமணி அவர்களும், சரசாவாக என். விஜயலட்சுமி அவர்களும்
நடித்துள்ளனர். நம் கலைவேந்தன் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மக்கள் திலகம் அவர்கள் முஸ்லிம் அன்பராக ரயில் பயணியாக நடித்திருப்பார். .
பரமேஸ்வரா சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வெளியான தேதி : 10-09-1936.
குறிப்பு : இந்த கதைச்சுருக்கம் அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்