ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் பங்கு கொண்ட 4 கலைஞர்கள், பிறகு தமிழக முதல்அமைச்சர்களாக ஆனார்கள். 1946ல் ஜுபிடர் தயாரித்த ஸ்ரீமுருகன் படத்தில், சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
அவரும், கே.மாலதியும் ஆடிய சிவபார்வதி தாண்டவம் புகழ் பெற்றது. இப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடித்தார். படத்தை ஜுபிடர் சோமு டைரக்ட் செய்தார். ஏ.காசிலிங்கம், இணை டைரக்டராகப் பணியாற்றினார்.
படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜுபிடரின் "ராஜகுமாரி.'' அவருடன் கே.மாலதி இணைந்து நடித்தார். மற்றும் டி.எஸ்.பாலையா, இலங்கைக்குயில் தவமணிதேவி ஆகியோரும் நடித்தனர். கத்திச்சண்டை காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் நிறைந்த படம்.
இந்தப் படத்தை, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் முதன் முதலாக கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். எனினும், படத்தின் டைட்டிலில் "வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி. உதவி: மு.கருணாநிதி'' என்று போடப்பட்டது.
இந்தப் படத்துக்கு பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
11.4.1947ல் வெளியான "ராஜகுமாரி'', வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பயணத்துக்கு வழிவகுத்தது.
இதில் எஸ்.எம்.குமரேசன் அபிமன்ïவாக நடித்தார். அவருக்கு ஜோடி ஆர்.ஜீவரத்தினம். எம்.ஜி.ஆர். அர்ஜீனனாக நடித்தார்.
ஜுபிடர் சோமுவும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர். திரைக்கதை வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது என்றாலும், வசனத்தின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான். அவர் பெயர் போடப்படவில்லை.
படத்தில் நரசிம்மபாரதி கிருஷ்ணனாக நடித்தார். என்.டி.ராமராவ் பட உலகுக்கு வருவதற்கு முன்பே கிருஷ்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நரசிம்மபாரதி. அழகிய தோற்றம் கொண்டவர்.
மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.சந்தானலட்சுமி, கே.மாலதி ஆகியோரும் நடித்தனர்.
வசனமும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.
1948ல் ஜுபிடர் தயாரித்த மற்றொரு படம் "மோகினி.'' மாயாஜாலங்கள் நிறைந்த படம்.
இதில் எம்.ஜி.ஆர் வி.என்.ஜானகி இணைந்து நடித்தனர். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, மாலதி ஆகியோர் நடித்தனர்.
திரைக்கதையை ஏ.எஸ்.ஏ.சாமி எழுத, எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார். லங்காசத்யம் டைரக்ட் செய்தார்.
31.10.1948ல் இப்படம் வெளிவந்தது.
இதன்பின் பேரறிஞர் அண்ணாவின் கதைவசனத்தில், "வேலைக்காரி''யை ஜுபிடர் தயாரித்தது. இப்படம் 25.2.1949ல் வெளிவந்தது.
இதில் கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், வி.என்.ஜானகி, எம்.வி.ராஜம்மா ஆகியோர் நடித்தனர். பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தனர். டைரக்ஷன்: ஏ.எஸ்.ஏ.சாமி.
புரட்சிகரமான வசனங்களைக் கொண்ட "வேலைக்காரி'', மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, "சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு'' என்று வாதாடிய கட்டம் சிறப்பாக அமைந்தது.
1951ம் ஆண்டு "மர்மயோகி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. இந்த படம் மர்மம் நிறைந்த காட்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால், படத்திற்கு "ஏ'' சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் "ஏ'' படம் மர்மயோகிதான். படத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். அஞ்சலிதேவி, வில்லியாக நடித்தார்.
"மர்மயோகி'', இந்தியில் "ஏக்தராஜா'' என்ற பெயரில் வெளியானது.
1953ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் "அழகி'', "இன்ஸ்பெக்டர்'', "நாம்'' ஆகிய 3 படங்களை வெளியிட்டது. இதில் `நாம்' படத்தை, மேகலா பிக்சர்சும், ஜுபிடரும் இணைந்து தயாரித்தன. இதில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, பி.எஸ்.வீரப்பா ஆகியோர் நடித்தனர். படத்திற்கு கருணாநிதி கதை, வசனம் எழுதினார். டைரக்ஷன்: ஏ.காசிலிங்கம்.