பார்த்துக் கொண்டே இருப்போம்.
கண்களில்
பக்தியும், பண்பும் நீந்த,
கந்தக் கடவுளுக்கு முன்
கைகூப்பி நிற்கிற
கம்பீரத்தை..
மக்களின் குறை கேட்க
ஓட்டமும், நடையுமாய்
விரைந்தோடும் எழிலை..
தம்பி மகள்
வாள் சுழற்றும்
அழகை ரசிக்கையில்,
வாளோடு வாளாகச்
சுழலும் அந்தக் கண்களை..
திருடனைப் பிடித்து
விட்டால்
அவன் குடும்பம் என்னாகும்?
என குழந்தை வினவ,
அந்த அக்கறையை வியக்கும்
அய்யாவின் பாவனையை..
சிறு தொகையாவது
வரியாகச் செலுத்தக் கோரும்
ஆங்கில அதிகாரியிடம்,
மறுத்து அவர்
நியாயம் உரைக்கும்
தோரணையை..
வேறு வேடத்தில் வந்த
எட்டப்பனைப் புரிந்து கொண்டு
மடக்கும் வீராவேசத்தை..
அவனைப் புரிந்து
கொண்டாலும், காட்டிக்
கொள்ளாமல்
கிண்டலாகச்சொல்லும்
'அதாவது'களை..
பாம்பிடமிருந்து
காதலர்களைக் காப்பாற்றி,
"நான்கு நாட்கள்
பொறுக்க முடியுமா?"
எனக் கேட்டுச் சிரிக்கும்
தெய்வீகச் சிரிப்பை..
வந்து பேட்டி காணும்படி
கர்வமாய் w.c.ஜாக்ஸன் எழுதிய
கடிதம்
வாசிக்கப்படும் போது,
"பார்த்தீர்களா?"என்பது போல்
அய்யா முகம் கேட்கும்
கேள்வியை..
அளிக்கப்படாத ஆசனத்தை
தனதாக்கிக் கொள்கிற
ஆண்மையை..
அமர்ந்த ஆசனத்தின்
கைப்பிடியில் இடக்கை ஊன்றி
விரல் நுனிகளைத்
தொட்டு உருட்டும் அழகை..
கொள்ளையையும்,
கொலையையும்
தடுக்க வேண்டிய மந்திரியே
கொள்ளைக்கும்,கொலைக்கும்
காரணமானது கண்டு
வெகுண்டு,
ஆத்திரமும், ஆவேசமும்,
அர்த்தமுள்ள
உள்ளப் பொருமலுமாய்
அவரை வாங்கு, வாங்கென்று
வாங்குவதை..
முருகக் கடவுளை
வணங்கி நிற்கையில்,
எட்டப்பர் உளவு சொல்லி,
அன்றிரவே ஆங்கிலேயர்
படையெடுத்து வரப் போகும்
தகவல் வர,
உடல் திருகி, விழி உருட்டி,
கை பிசைந்து
அடி வயிற்றிலிருந்து
சொல்லும்
வெற்றி வேல்..வீரவேலை..
வெள்ளையத் தேவனும்,
ஊமைத்துரையும்
அவரவர் மனைவியரிடம்
பக்கம்,பக்கமாய்ப் பேசும்
வசனத்திலிருக்கும் வீரத்தை,
உருவிய குறுவாளை
மீண்டும் உறைக்குள்ளிடும்
ஒரே விஷயத்தில்
காட்டுகிற திறமையை..
நாடு விட்டு
வந்திருக்கலாகாது
எனக் காட்டும்
குற்ற உணர்வுக்கான
குரல் கரகரப்பை..
பிடிக்க ஆளனுப்பிய
புதுக்கோட்டை மன்னருக்கு
எள்ளலுடன் போடும்
"ராஜ..ராஜ.."-வை..
கொக்கரிக்கும்
இரும்புத் தலையருக்கு,
கோபத் தமிழால் கொடுக்கும்
வசனச் சாட்டையடிகளை..
அணிவகுத்து நின்று
அழுது கதறும்
மனிதப் பெருங்கூட்டத்தின்
நடுவே,
ஒரு சிங்கமென
நடந்து செல்லும்
பேரழகை..
நான் போவது
வருத்தமெனினும்
நாடு காக்க
ஒரு கூட்டம் வருமென்று,
தூக்குக் கயிறை
முத்தமிட்டுத் தரும்
கடைசி நம்பிக்கையை..
விழிகளிளெல்லாம்..
மனங்களிலெல்லாம்..
நீக்கமற நிறைந்திருக்கிற
நம் நடிகர் திலகத்தின்,
"வீரபாண்டிய கட்டபொம்மன்"
எனும்
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குப்
பிறகு புதிய தொழில் நுட்பம்
அணிந்து வந்த
புரட்சிக் காவியத்தை..
பார்த்தேன்.
பார்த்தீர்கள்.
பார்ப்போம்..!
பார்ப்போம்..!
பார்ப்போம்..!
-ஆதவன் ரவி-