-
செல்வம் - Part I
தயாரிப்பு: வி.கே.ஆர். பிக்சர்ஸ்
திரைக்கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
வெளியான நாள்: 11.11.1966
[இந்தப் படத்தைப் பற்றி NOV ஏற்கனவே ஒரு விமர்சனம் எழுதியிருப்பதால் இங்கே சுருக்கமாக கதை. NOV எழுதியதன் லிங்க் http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=675].
ஊரில் பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு செல்வம். தந்தை இல்லை. தாய் மட்டுமே. தாய் ஜாதகத்திலும் ஜோஸ்யத்திலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். ஜோஸ்யர் கிழிக்கும் கோட்டை தாண்டாதவர். வெளிநாடு சென்று படித்து விட்டு வரும் செல்வம் சொந்த ஊரில் ஒரு உர தொழிற்சாலையை நிறுவி வெளிநாட்டு நிபுணரை வரவழைத்து தொழிலாளிகளுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்கிறான்.
செல்வத்திற்கு இரண்டு மாமன்கள். ஒருவர் செல்வம் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு ஒரு மகள். அடுத்த மாமா அதே ஊரில் தனியாக வசிக்கிறார். அவர் மகள் வள்ளி. செல்வமும் வள்ளியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். அது அனைவருக்கும் தெரியும். செல்வத்தின் அம்மா இவர்கள் இரண்டு பேரின் ஜாதகங்களை ஜோஸ்யரிடம் காண்பிக்க இந்த திருமணம் நடந்தால் ஒரு வருடத்தில் செல்வம் இறந்து விடுவான் என்று சொல்லி விடுகிறார். செல்வத்தின் தாய் வள்ளியிடம் சென்று தன் மகனை மறந்து விடும்படி சொல்கிறாள். செல்வம் வந்து கேட்டால் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்கிறாள். அவளும் அப்படியே சொல்ல செல்வம் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைக்கிறான்.
ஆனால் செல்வத்தால் வள்ளியை மறக்க முடியவில்லை. ஒரு வேகத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்ல அங்கே வள்ளி திருமணம் நடைபெறப் போகும் நேரம். முருகன் வள்ளி திருமாங்கல்யத்தை எடுத்து செல்வம் வள்ளி கழுத்தில் கட்டி விடுகிறான். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் செல்வத்தின் தாய் அவர்களை ஏற்றுக் கொள்கிறாள். மீண்டும் ஜோஸ்யரை நாட அவர் ஒரு பரிகாரம் சொல்கிறார். அதாவது கணவன் மனைவி ஒரு வருடம் சேராமல் இருந்தால் இந்த தோஷம் நீங்கி விடும் என்று சொல்ல செல்வமும் வள்ளியும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். வள்ளி அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.
ஜோஸ்யர் மேலும் ஒரு விஷயம் சொல்கிறார். செல்வத்திற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தால் இந்த தோஷம் நிரந்தரமாக விலகி விடும் என்று. செல்வத்தின் தாய் வீட்டோடு இருக்கும் தன் தம்பியிடம் வெளியூரிலிருக்கும் அவன் மகளை வரவழைக்க சொல்கிறாள். உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத அந்த மாமன் மகளின் அருகாமை செல்வத்தை சற்றே சலனப்படுத்த அவன் அதிலிருந்து மீள்கிறான். செல்வத்தை பார்த்துக் கொள்ள ஊரிலியே ஒரு பெரிய டாக்டர் ஏற்பாடு செய்யப்படுகிறார். இளமை உணர்வுகளால் தூண்டப்படும் செல்வம் வள்ளியை காண அவள் வீட்டிற்கு செல்ல அவள் அவன் செய்துக் கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தி அவனை திருப்பி அனுப்பி விடுகிறாள்.
வீட்டில் இருக்க பிடிக்காமல் தொழிற்சாலை கெஸ்ட் ஹௌசில் டாக்டருடன் போய் தங்குகிறான் செல்வம். அங்கே டாக்டரிடம் தன் நிலைமையைப் பற்றி விவாதிக்கிறான். மூட நம்பிக்கைகள வேண்டாம் என்றும் நேர் வழியில் சென்றால் நிச்சயம் நன்மைகளே விளையும் என்கிறார் டாக்டர். அடுத்த அறையில் வெளிநாட்டு நிபுணரும் அவர் மனைவியும் நெருக்கமாக ஆடும் நடனம் செல்வத்தின் உணர்வுகளை தூண்டி விட தன் மனைவியை தேடி போகிறான். முதலில் தடுக்கும் வள்ளி பின் செல்வத்தின் நிர்பந்தத்தினால் உடன்படுகிறாள். செல்வத்தை தேடி வரும் டாக்டர் மட்டும் விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார். செல்வத்தின் வீட்டில் இருக்கும் பெண்மணி வள்ளி வீட்டு வாசலில் கார் நிற்பதையும் செல்வமும் டாக்டரும் வள்ளி வீட்டிலிருந்து வெளியே வந்து கார் ஏறி செல்வதை பார்த்துவிட்டு செல்வத்தின் தாயிடம் போய் சொல்கிறாள். செல்வத்தின் தாய் வள்ளியை மீண்டும் அவர்கள் வீட்டிற்கே கூட்டி செல்கிறாள்.
இதற்கிடையில் வள்ளி கர்ப்பமடைக்கிறாள். இதை செல்வத்தின் தாய்க்கு தெரியாமல் மறைக்கும் பொறுப்பு டாக்டரின் தலையில் விழுகிறது. ஜோஸ்யர் கொடுத்த ஒரு வருட கெடு முடியும் நாள் நெருங்க நெருங்க செல்வத்திற்கும் பயம் தோன்ற ஆரம்பிக்கிறது. ஜாதகத்தில் நம்பிக்கை என்பதை விட தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று மனதளவில் குழம்ப குழம்ப, பரிகாரங்களும் பூஜைகளும் முழு வீச்சில் நடைபெற அந்த கெடுவின் கடைசி நாளும் வர அந்த இறுதி நிமிடங்கள், அந்நேரம் அரேங்கேறும் புதிய திருப்பங்கள், ஜோசியம் பலித்ததா, செல்வத்தின் நிலைமை என்ன வள்ளியின் நிலை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.
அன்புடன்
(தொடரும்)
-
செல்வம் - Part II
இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் படங்களின் generic nature என்று சொல்வோமே அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்த படம் என்று சொல்லலாம். அதுவரை அவர் படங்கள் என்றாலே சீரியஸ் கதைகள் அழுத்தமான காட்சியமைப்புகள் என்ற நிலையிலிருந்து ஒரு light hearted படம் என்ற மாறுதலை கொண்டு வந்த படம். இதற்கு முன்னரே அவர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா போன்ற இவ்வகைப் படங்கள் செய்திருக்கிறார் என்றால் கூட அவை அழுத்தமான படங்களுக்கு நடு நடுவே வந்தவை. அது மட்டுமல்ல இவை மூன்றும் முறையே 1954,58,62 -ம் ஆண்டுகளில் வந்தவை. அவற்றை தொடர்ந்து அது போன்ற படங்கள் வரவில்லை. ஆனால் செல்வம் வெளிவந்த பிறகு இந்த light hearted படங்கள் வரிசையில் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி என்று வரிசையாக வெளியாக ஆரம்பித்தன.
நடிகர் திலகம் இந்த செல்வம் பாத்திரத்தை ப்பூ என்று ஊதியிருப்பார். தாயை மிகவும் நேசிக்கிற தாயின் உணர்வுகள் புண்படக் கூடாது என்று நினைக்கிற மகன், அதே நேரத்தில் சின்ன வயதிலிருந்தே தான் நேசித்த கல்யாணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்ட முறைப்பெண், ஜாதக தோஷம் காரணமாக அந்த முறைப்பெண் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்கின்ற போது என்னமாய் அதை வெளிப்படுத்துகிறார்! அவரின் அறிமுக காட்சியிலே முறை பெண்ணின் மீது உள்ள ஆசை வெளிப்பட்டு விடும். காரின் ஜன்னல் வழியாக தலையை எட்டிப் பார்த்துக் கொண்டே வரும் செல்வம், அவள் இருக்கும் இடம் வந்தவுடன் இறங்கி ஓடிவந்து பேசும் இடம், மாமா வீட்டிற்கு போகும் இவரைப் பார்த்தவுடன் கதவை திறக்காமல் விஜயா நிற்க, இவர் ஒளிந்துக் கொண்டு விஜயா கதவை திறந்தவுடன் சட்டென்று உள்ளே நுழைந்து விஜயாவிடம் வம்பு
பண்ணுவது இங்கேயெல்லாம் இளமை துள்ளும் நடிகர் திலகத்தை பார்க்கலாம். சின்ன சின்ன கிண்டல் வசனங்களை ஒரு comic sense கலந்து பேசுவதில் எப்பவுமே நடிகர் திலகம் பிரமாதப்படுத்துவார். இதிலும் அதை நிறைய பார்க்கலாம். அம்மாவின் ஜோஸ்ய மற்றும் சாஸ்திர சம்பிரதாய அதீத நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாகட்டும் [குளிப்பதற்கு நல்ல நேரம் போய்விடப் போகிறது என்று சொல்லும் அம்மாவிடம் இரண்டு வருஷத்திலே நிறைய improvement], கல்யாணத்தைப் பற்றி விஜயாவிடம் பேச அவர் பத்துக்குள்ளே ஒரு நம்பர் சொல்லுங்க என்று கேட்க நாசமாப் போச்சு என்று சலிப்பதாகட்டும், அந்த கிண்டல் வெளிப்படும் இடங்களை ஜாலியாக பண்ணியிருப்பார். வெளிநாட்டிலே என்ன படிச்சிட்டு வந்தே, என்ன செய்யப் போறே என்று கேட்கும் மாமனிடம் என்ன செய்யப் போறேன் என்பதை அவர் விவரிக்கும் இடம் வெகு வெகு இயல்பு.
தன் அத்தையின் சொல்படி வீடு தேடி வரும் சிவாஜியை பிடிக்கவில்லை என்று கதவை திறக்காமலே விஜயா சொல்லிவிட அதுவரை அமைதியாக இருக்கும் நடிகர் திலகத்தின் முகம் அப்படியே மாற, என்னை ஏன் வெறுக்கிறே என்று கேள்வி கேட்டு பதில் இல்லாமல் திரும்பி போக எத்தனிக்கும் போது, விஜயா கதவை திறக்க சிவாஜி கோவத்தில் காரணம் சொல்லு என்று அவள் கழுத்தைப் பிடிக்க மாமா நாகையா அவர் வேறொருவருக்கு மனைவியாக போகிறவ, அவளை தொட்டு பேசாதே என்று சொல்ல கோவத்தில் வார்த்தை வராமல் ஓஹோ! வேறொருவனுக்கு மனைவியா, பாக்கிறேன் எவன்னு பாக்கிறேன் என்று விருட்டென்று திரும்பி போவதில் ஆரம்பித்து அந்த கோவம் சற்றும் குறையாமல் வீட்டிற்கு சென்று தன் தாயிடம் அவ மனசை யாரோ கலைச்சிருங்காங்க அவங்க மட்டும் என் கையில் கிடைச்சா-னு ஆத்திரத்தை கொட்டுவது, உடனே மாமா வீட்டிலே போய் பேசணும்-னு அம்மாவை வற்புறுத்துவது, அம்மா இப்போது வேண்டாம் என்று சொன்னவுடன் சரி என்று அரைகுறை மனசுடன் மாடிப்படி ஏறுவது, திடீரென்று சடசடவென்று இறங்கி வந்து அவ எப்படிமா இப்படி சொன்னா என்று குமுறுவது மீண்டும் அம்மா சொல்படி படியேறி விட்டு ஆற்ற முடியாமல் இறங்கி வந்து குலுங்குவது - இந்த இடங்களில் ஒரு நடிப்பு சாம்ராஜ்யத்தையே நடத்தியிருப்பார். தனக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைப்பதற்கு ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு மாமன் மகளின் அருகாமை தன்னை எப்படி சலனப்படுத்துகிறது என்பதை அவர் ரங்காராவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி தயங்கி சொல்லும் இடம் இன்னொரு class act.
தன்னை அலைகழிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் மனைவியை தேடி போக அங்கே எங்க வந்தீங்க என்ற மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் அஷ்டகோணலாக மாற, உங்களை சின்ன வயசிலிருந்து பார்த்திட்டு இருக்கேன், ஆனா இன்னிக்கு உங்க முகத்திலே இருக்கிறதை மாதிரி பார்த்ததேயில்லை என்று மனைவி சொல்ல என் மனசிலே இருக்கிறதை எப்படி சொல்லுவேன்-னு கேட்கும் அந்த இடம், கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்-ல் நெருக்கமாக இருக்கும் வெளிநாட்டு தம்பதியினரைப் பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் அந்த தவிப்பு, உடனே மீண்டும் மனைவியை நாடி செல்ல, மனைவி தடுக்க எதையுமே அனுபவிக்காம நான் போயிட்டேனா என்று சுய இரக்கம் கொள்ளும் இடம், இவை எல்லாமே எந்த கதையானாலும் தன் நடிப்பு என்றுமே சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதை நடிகர் திலகம் உணர்த்தும் இடங்கள். தன் உணர்வுகளுக்கு வடிகால் கிடைத்தவுடன் உண்மை நிலை உறைக்க தாய்க்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஆபத்து வந்து விடுமோ என பயப்படும் இடங்கள் எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம். கிளைமாக்ஸ் காட்சி அவர் மேல் இன்னும் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தால் அவர் நடிப்பின் சிறப்பை இன்னமும் ரசித்திருக்கலாம்.
கே.ஆர்.விஜயா நாயகி. நடிகர் திலகத்தோடு புன்னகை அரசி ஜோடியாக நடித்த முதல் படம். இதற்கு முன்பு கை கொடுத்த தெய்வம், சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் ஜோடியாக நடிப்பது இந்தப் படத்தில்தான் ஆரம்பித்தது. பின்னாளில் நடிகர் திலகத்தோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெறுவதற்கு இந்த படமே தொடக்கமாக இருந்தது.
சில நேரங்களில் வெகு இயல்பாக இருக்கும் விஜயாவின் நடிப்பு சில நேரங்களில் melodrama-வாக இருக்கும். உன் அத்தானை நீ கல்யாணம் செய்துக் கொள்ள கூடாது என தன் அத்தை சொல்லும் போது அந்த அதிர்ச்சியை இயல்பாக வெளிப்படுத்தும் அவர், சில வசனங்கள் முடிந்த பிறகு சொல்றது நீங்கதானா, கேட்கறது நான்தானா என்று பேசும் இடம் ஒரு உதாரணம். கதைப்படி இப்படிப்பட்ட ஒரு இருதலைக் கொள்ளி காரக்டர் என்பது ஒரு சவாலான பாத்திரம் படம் வெளிவந்த காலக்கட்டத்தின் தன்மையை மனதில் கொண்டு பார்த்தால் பெரிதாக குறை சொல்ல முடியாதபடி நடித்திருப்பார்.
ஜோஸ்யத்தின் மீதும் ஜாதகத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட தாயாக எம்.வி.ராஜம்மா அதை நன்றாக செய்திருப்பார். கே.எஸ்.ஜி.யின் படங்களில் தவறாமல் இடம் பெறும் இருவர் இதிலும் உண்டு. ரங்காராவ் மற்றும் சகஸ்ரநாமம். இருவருமே தங்களின் இயல்பான நடிப்பிற்கு புகழ் பெற்றவர்கள். இதில் ரங்காராவிற்கு டாக்டர் வேடம், நகைச்சுவை கலந்த அந்த வேடத்தில் கலக்கியிருப்பார் SVR. எல்லாவற்றையும் விளக்கிவிட்டு ஒவ்வொரு முறையும் புரியுதா என்று கேட்டுவிட்டு வரும் பதிலில் திருப்தி இல்லாமல் என்ன புரிஞ்சுதோ என்று கேட்டு விட்டு போவது அவரின் முத்திரை. காமடியும் கை வந்த கலை என்று சொல்லாமல் சொல்கிறார்.
சகஸ்ரநாமத்திற்கு சிவாஜியின் தாய் மாமன் வேடம். அதை எப்போதும் போல் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரியே அவருடைய பாதி வேலையை செய்துவிடும். வீட்டில் இருந்துக் கொண்டே கூனி வேலை பார்க்கும் பெண்மணியாக சுந்தரிபாய். அவருக்கேற்ற ரோல். ரமாபிரபா நடிகர் திலகத்தின் மற்றொரு முறைப் பெண்ணாக மேகலா என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் படத்தின் surprise நாகையாதான். நாகையா என்றாலே நம் நினைவிற்கு வரும் அந்த மனம் தளர்ந்த பயம் நிறைந்த நடுங்கும் குரலில் பேசும் உருவத்திற்கு மாறாக ஒரு ரோல். கே.ஆர்.விஜயாவின் தந்தையாக தன் சகோதரியின் மூட நம்பிக்கைகளைப் பார்த்து அதற்கு எதிராக வாதிடும் அந்த கதாபாத்திரத்தை சில காட்சிகளே வந்தாலும் பளிச்சென்று செய்திருக்கிறார் நாகையா. நாகேஷ் கதாகாலட்சேபம் செய்பவராக கிளைமாக்ஸ்-ல் மட்டும் தலை காட்டுகிறார். படத்தை தயாரித்தது வி.கே.ராமசாமி என்றாலும் அவர் படத்தில் இல்லை.
பி.எஸ்.ராமையாவின் கதைக்கு திரைக்கதை வசனம் இயக்கம் கே.எஸ்.ஜி. கைகொடுத்த தெய்வம் என்ற அற்புதமான படத்திற்கு பிறகு நடிகர் திலகத்துடன் மீண்டும் இணைந்த படம். உறவு கொள்ள முடியாத கணவன் மனைவி என்ற விஷயத்தின் மேல் கேஎஸ்ஜிக்கு ஒரு அலாதி விருப்பம் இருந்ததோ என்று தோன்றுகிறது. சாரதா, கற்பகம் பிறகு செல்வம் என்ற மூன்று படங்களையும் பார்க்கும்போது அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. காரணங்கள்தான் ஒவ்வொன்றிலும் வேறு. ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை வைப்பது சரியா தவறா என்பதே கதையின் முடிச்சு. அதை ஒரு முழு நீள திரைப்படமாக்குவது என்பது சற்று கடினமான காரியமே. அதை முடிந்தவரையில் தொய்வில்லாமல் நகர்த்தி செல்ல கே.எஸ்.ஜி. முயன்றிருப்பார். கே.எஸ்.ஜியின் படங்கள் பெண்களை குறி வைத்தே எடுக்கப்பட்டவையாய் இருக்கும். இந்த படத்திலும் அதைத்தான் செய்திருப்பார். வசனங்கள் வெகு இயல்பாக வந்து விழும். ஜோஸ்யதையும் ஜாதகத்தையும் நம்புவதுதான் சரியானது என்று சொல்லுகிறாரோ என நினைக்கும் போது கிளைமாக்ஸ்-ல் வரும் அந்த ட்விஸ்ட் முதல் முறை பார்பவர்களுக்கு ஒரு சின்ன ஷாக்.[வெளிவந்த காலகட்டத்தில் நடந்ததை சொல்கிறேன்].
அன்புடன்
(தொடரும்)
-
செல்வம் - Part III
அன்றைய காலக்கட்டத்தில் [60-களின் மத்தியில் மன்னர்கள் பிரிந்த பிறகு] இசையமைப்பாளரைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அல்லது கே,வி.எம், பாடல்களுக்கு கண்ணதாசன் அல்லது வாலி என்று இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த ட்ரெண்டை சற்றே மாற்றியவர் கே.எஸ்.ஜி. கற்பகத்தில் பாடல்கள் அனைத்தையும் வாலிக்கு கொடுத்தவர் கை கொடுத்த தெய்வம் மற்றும் சித்தி படங்களில் கண்ணதாசனை எழுத வைத்தார். 1966 ல் சித்தி படத்திற்கு கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி என்றால் அதே 1966 ல் வெளியான செல்வம் படத்திற்கு திரை இசை திலகத்தையும் வாலியையும் பயன்படுத்தினார். படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் ஆலங்குடி சோமு எழுதினார்.
இசையமைப்பாளராக மாமா வந்ததன் காரணம் தயாரிப்பாளர் வி.கே.ஆர். அவர் ஏ.பி.என்னுடன் சேர்ந்து தயாரிப்பில் பங்கு கொண்ட மக்களைப் பெற்ற மகராசி, வடிவுக்கு வளைக்காப்பு போன்ற படங்களில் மாமாதான் இசை. எனவே தனியாக சொந்த படம் எடுத்தபோது அதே அடிப்படையில் கே.வி.எம் இசை அமைத்தார்.
1. என்னடி இத்தனை வேகம் - ஆலங்குடி சோமு எழுதிய பாடல் படத்தின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் வருகையை எதிர்பார்த்து கே.ஆர். விஜயா பாடும் பாடல். நடுவில் வந்து நடிகர் திலகம் சேர்ந்து கொள்வார். டி.எம்.எஸ்-சுசீலா பாடியிருப்பார்கள். இருவரும் சேர்ந்து இருந்தாலும் தனி தனியே பாடுவது போல் காட்சி அமைப்பு. இரண்டும் வெவ்வேறு டியூன் போல தோன்றும்.
2. அவளா சொன்னாள் இருக்காது - மிக மிக பிரபலமான பாடல். எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று விஜயா சொல்லிவிட நடிகர் திலகம் மனம் வெறுத்து பாடுவது. வாலியின் வார்த்தைகள் வலுவாக வந்து விழும்.
உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம்
முப்பது நாளும் நிலவை பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.
என்ற சரணத்தையும் மிஞ்சும் வண்ணம் அடுத்த சரணம்.
அன்னை தந்த பால் விஷமுமாகலாம்
என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
என்று பாடிவிட்டு வலது கையை மேலே உயர்த்தி
நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் என்று வெடிக்கும் போது இங்கே தியேட்டர் அதிரும். கொள்ளிடம் ஆற்றங்கரையில் வைத்து படமாக்கப்பட்டிருக்கும்.
3. லில்லி லல்லி ஜிம்மி பப்பி - ரமாபிரபா நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பாடும் பாடல் - ஈஸ்வரி பாடியிருப்பார்.
4. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல - விஜயாவை தேடி வரும் நடிகர் திலகம் தன் உள்ளக்கிடக்கையை பாடலாய் வெளிப்படுத்த விஜயா பாடலிலே பதில் சொல்வார். இந்துஸ்தானி ராகமான தேஷ் எனப்படும் ராகத்தில் அமைந்த பாடல் என்று சொல்வார்கள். மிக பிரபலமான பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை. டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் அழகாய் மெருகு படுத்தியிருப்பார்கள். பாடலின் இறுதியில் சிவாஜியிடம் சத்தியத்தை நினைவுபடுத்தும் செயற்கையான அந்த இடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் படமாக்கமும் நன்றாய் இருக்கும்.
5. எனக்காகவா நான் உனக்காகவா - தாராபுரம் சுந்தரராஜன் ஜமுனா ராணி பாடிய, படத்தில் montage ஆக இடம் பெறும் பாடல். முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் வரும். தாராபுரம் சுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் பின்னாளில் இசையமைப்பாளராகி ராமண்ணாவின் நீச்சல் குளம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தாலும் கூட அவர் பேர் சொல்லும் பாடலாக இன்றும் விளங்குவது இந்தப் பாடல்தான். மெலடி என்பதன் அர்த்தத்தை இதில் தெரிந்துக் கொள்ளலாம்.
மலர் மீது பனி தூங்க
மரம் மீது கனி தூங்க
மலை மீது முகில் தூங்க
மடி மீது நீ தூங்க
நீராட நதியா இல்லை?
இளைப்பாற நிழலா இல்லை?
பசியாற உணவா இல்லை?
பகிர்ந்துண்ண துணையா இல்லை?
கதையின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வாலியின் வரிகள்.
திரையுலகில் பல வருடம் நடிப்பிலும் தயாரிப்பிலும் அனுபவமுள்ள வி.கே.ஆர். சற்று சிரம திசையில் இருந்தபோது நடிகர் திலகத்தை அணுக அவர் உதவி செய்வதற்காக உடனே செய்த படமே செல்வம். குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படம் 1966 நவம்பர் 11 தீபாவளியன்று வெளியானது. சென்னை சித்ரா,மதுரை சென்ட்ரல், கோவை, சேலம் போன்ற நகரங்களில் இந்தப்படம் 1967 பொங்கல் வரை ஓடியது. அதாவது 64 நாட்கள். சென்னையில் மற்ற இரண்டு அரங்குகளிலும் திருச்சி போன்ற நகரங்களிலும் 57 நாட்கள். வழக்கம் போல் நடிகர் திலகத்தின் இன்னொரு படமே போட்டியாக வரும் காட்சியும் சென்னை சித்ராவில் அரங்கேறியது. கந்தன் கருணை படத்திற்காக செல்வம் மாறிக் கொடுத்தது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் அதே தீபாவளிக்கு வெளிவந்த எந்த பிரம்மாண்ட கலர் படங்களும் செல்வம் ஓடிய நாட்களை தாண்ட முடியவில்லை.
படம் வெளிவந்த பிறகு சிரம திசையிலிருந்து மீண்டார் வி.கே.ஆர். மறு வெளியீடுகளில் மிக நன்றாக போன படங்களில் செல்வமும் உண்டு. அப்போதும் வி.கே.ஆருக்கு லாபமே.
நடிகர்திலகத்திற்காகவே பார்க்கலாம்.
அன்புடன்
-
Lovely post as always :clap:
It's been a long long time since I saw this film. When reading I found I remember next to nothing about the film. The only thing I recall now is Rangarao in the climax :lol:
-
selvam was a very different movie. yes KSG's aasthanam MVRajamma, SVR & Sahasranama. All were mind blowing as usual.
NT - sollave vendam .. padu jor
-
Murali Anna,
Thanks for the wonderful post. Around 10 years back i saw that movie. After reading your post, i feel like seeing it again.
-
கலையுலகின் நிரந்தர 'செல்வம்' ஆகிய நமது நடிப்பு 'செல்வ'த்தின் "செல்வம்" திரைக்காவியத்தினுடைய செழிப்பான திறனாய்வை, நமது திரியின் / இந்த ஹப்பின் நிரந்தர 'செல்வம்' ஆன முரளி சார் வழக்கம் போல் மிக அருமையாக வழங்கியுள்ளார்.
திறனாய்வுத் திலகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வளமான வாழ்த்துக்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
பழனி தாலுகாவில் உள்ள புதுஆயக்குடி என்கின்ற சிற்றூரில் இருக்கும் கோமதி டூரிங் டாக்கீஸில், நேற்று 13.12.2010 திங்கள் முதல், தினசரி 2 காட்சிகளாக, கலையுலக மன்னர்மன்னனின் 286வது திரைக்காவியமான "மன்னவரு சின்னவரு" திரையிடப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பப்ளிசிடிக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், அர்ஜுனும், சௌந்தர்யாவும் வட்டங்களுக்குள் சிறிதாக இருக்கிறார்கள். அதே சமயம் அந்த போஸ்டர்களில் நமது நடிகர் திலகம் Full Standingல் பெரிதாக, பிரதானமாக காட்சியளிக்கிறார்.
இனிக்கும் இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
Murali-ji: Its been years since I watched selvam. With your writing I almost watched the movie again :) Excellent write up!
-
Selvam
Thanks Murali, what a writeup, excellent and thanks a lot. I have watched this moive in Madurai Shanthi theatre nearly 23 years ago, after that I have not got chance to watch it again, you have fullfilled it. I should get this movie DVD to enjoy it again.
Our NT is young and very smart.
Cheers,
Sathish