-
23rd June 2016, 08:51 PM
#1641
Junior Member
Diamond Hubber
Face book
தமிழக அரசியல் வரலாற்றில் இன்றுவரை அரசியலில் நேரமையும் எளிமையும் என்பதற்கு ஒரு பெருந்தலைவர் காமராஜ் அவர்களையும், ஒரு கக்கன் அவர்களையுமே அடையாளம் காண்பிக்க முடிகிறது. அந்த அளவுக்கு பெரும் பதவிகளில் இருந்தும் சுத்தமான கைகளுடன் வாழ்ந்தவர்கள். ஒன்பதாண்டுகள் முதலமைச்சராகவும், இறக்கும் வரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்த பெருந்தலைவர் காமராஜ் மறைந்தபோது அவர் வீட்டு பீரோவில் 126 ரூபாயும், அவரது வங்கிக்கணக்கில் 4,200 ரூபாயும் இருந்ததாகச் சொன்னார்கள் (கவனிக்கவும், 4,200 கோடி அல்ல).
எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
(தங்கப்பதக்கம் நாடக இடைவேளையில், நாடகம் பார்க்க வந்திருந்த கானக்குயில் 'பாரதரத்னா' லதா மங்கேஷ்கருடன் நடிகர்திலகம்)
நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
23rd June 2016 08:51 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2016, 11:09 PM
#1642
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th June 2016, 10:29 AM
#1643
Junior Member
Newbie Hubber
எனக்கு தமிழ் படங்களின் காதல் காட்சிகளில் முதலிடத்தில் வருவது வசந்த மாளிகை பிளம் காட்சி . அடுத்து சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு,அடுத்து மடி மீது தலை வைத்து அன்னை இல்லம்,அடுத்து வைஜயந்தி-சிவாஜி இரும்புத்திரை,அடுத்து பத்மினி-சிவாஜி தில்லானா மோகனாம்பாள்,தெய்வப்பிறவி,புதையல்,அடுத்து நாலு பக்கம் அண்ணன் ஒரு கோயில்.
ஜீப்பில் அண்ணனும் அண்ணியும் ஏறி செல்லும் போதே அண்ணனின் விஷம பார்வை வார்த்தைகள்.ஆரம்பமாகி விடும்.(பறக்கறதை தடுக்க கூடாது ) அண்ணி ,அனாயசமாக ,ஓடற ஜீப்பிலே நெருப்பு பத்த வைப்பாங்க. அண்ணியை பாத்தாலே பத்திக்குமே, அந்த பச்சை வண்ண புடவையில் .(அதனாலேயே அண்ணனோட வார்த்தை ,செயல்கள் கொஞ்சம் பச்சையாகவே இருக்கும்) ஜெர்க்கின்னில் அண்ணன் அழகுன்னா அழகு .ஜோடி பார்த்தாலே ராசா- ராணிக்கு ஆதிவாசிகளை போல் நாமும் திருஷ்டி கழிப்போம்.
பிறகு ஆதிவாசிகளின் மோதிர சடங்கு. நடனம். அண்ணன் ,ஆரம்பத்தில் மிதமான பிகு பண்ணி ஆரம்பிப்பார்.அதகளம். சுறுசுறுப்பு, அழகுணர்ச்சி, பாங்கு ,தாள இசைவு அனைத்தும் கொண்ட முழுமை. ஒரு இடத்தில் அண்ணியுடன் ஆடிக்கொண்டே கண்ணை சுழற்றுவார் பாருங்கள் ,அண்ணனால் மட்டுமே முடியும். ஆதிவாசிகள் வரிசையில் குதித்து மித ஓட்டத்துடன் கைகளை புறத்தே வீசி ஒரு ஸ்டெப் பண்ணுவார் பாருங்கள் ,அடடா??? மாமாவின் பின்னணி காட்சியை எங்கோ கொண்டு வைக்கும் (அடியம்மா ராசாத்தி இந்த காட்சிக்கா?)
மழை வந்த பிறகு மனசு நனைய ஆரம்பிக்கும். ஆனால் உடனே அதை தணலாக்கும் அண்ணன். புதிய பறவையிலும் இப்படி ஒரு காட்சியில் கண்ணியமான சிட்டு குருவியாவார் அண்ணன். இந்த படத்தில் முழுசாக கெட்டு திருந்திய கேஸாச்சே?காதலுடன் காமமும் தகிக்க வேண்டாமா தனிமையில்?
ஆடும் கதவை மூடும் அண்ணன் ,பார்வையில் படும் படியா அண்ணி முந்தானையை பிழிவது? அண்ணனின் பார்வையில் அப்படியே காமம் தகிக்கும்.passion கலந்த ஒரு erotic பார்வை.இப்படி ஒரு காந்த பார்வை உலகத்தில் எவனுக்கய்யா வாய்க்கும்?(குடிமகனே பாடலின் இரண்டாவது சரணம் interlude வரும் போது அந்த ஒரு வினாடி பார்வை ஈர்ப்பு, கலைமகள் பாடலில் ஒரு விகசிப்புடன் கூறிய குழப்ப பார்வை, போங்கப்பா) பிறகு நின்று கொண்டு பசி தீர்க்கும் பிளம் கடிப்பார் பாருங்கள், கடிக்க ,சுவைக்க நினைத்ததை அவர் செய்திருந்தால் கூட நமக்கு அப்படி ஒரு கிக் ஏறுமா என்று தெரியாது. அப்படி.... அப்படி ....
பிறகுதான் அண்ணன் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை செய்வார். கொள்ளிக்கட்டை எடுத்து சிகரெட் பற்ற வைப்பது.பிறகு ஒதுங்கி போகும் அண்ணியை ஸ்ஸ் ...ஸ்ஸ்ஸ் என்று அழைக்கும் கிக்கான அழைப்பு. இங்கே வா என்ற பார்வை அழைப்பு. தூது விட்டு தன் மனதை அவிழ்ப்பது. (பாலமுருகன் வசனம் அருமை)அண்ணிக்கு இது புரிந்ததால் சங்கடம்,நாணம்,விழைவு, மெல்லிய காதல் உணர்வு, குழப்பம்,சம்மதம்(மயக்கமும்,மௌனமும்) என்று கலப்புணர்வுகளை அண்ணி ,அண்ணனின் காம காதலுக்கு தோதாக அனுசரித்து வெளியிடுவார் பாருங்கள்,ஜோடின்னா இதுதான்யா ஜோடி என கூவ தோன்றும்.
இதற்கு பின்னணி இசையில் மாமா செய்யும் ஜாலம் ,காட்சியை எங்கோ தூக்கி நிறுத்தும்.
இந்த காட்சி நம் மனதை ரசவாத வித்தை செய்து ,நமக்கும் இருக்கும் காதலுணர்வை தட்டி எழுப்பி தவிக்க விடும்.
Last edited by Gopal.s; 24th June 2016 at 02:10 PM.
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
24th June 2016, 12:10 PM
#1644
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Gopal,S.
இந்த காட்சி நம் மனதை ரசவாத வித்தை செய்து ,நமக்கும் இருக்கும் காதலுணர்வை தட்டி எழுப்பி தவிக்க விடும்.
Certified as U/A - அருமையான வர்ணனை....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th June 2016, 01:14 PM
#1645
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th June 2016, 01:16 PM
#1646
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th June 2016, 04:38 PM
#1647
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan - Definition of Style 31
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு - இரண்டாவது version Repeat
M.S.V. KANNADASAN BIRTH DAY SPECIAL
பொதுவாக ஒரு பாடல் இரண்டாம் முறை ஒரு படத்தில் இடம் பெறும் போது மேம்போக்காக நாம் சோக வடிவம் என்று குத்து மதிப்பாக சொல்லி விடுகிறோம்.
ஆனால் உண்மையில் மெல்லிசை மன்னரின் இசையில் வெளிவந்த படங்களில் இவ்வாறு மறுமுறை இடம் பெறுவதை சோகம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது.
சந்தோஷமான பாடல்களும் மறு முறையிலும் அதே உணர்வோடு வேறு சூழ்நிலைகளிலும் இடம் பெற்றதுண்டு.
கண்ணா நலமா படத்தில் நான் கேட்டேன் அவன் தந்தான் பாடல் படத்தில் இரண்டல்ல, மூன்று அல்லது நான்கு முறை வரும். ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு உணர்வுகளை சித்தரிக்கும்.
இது போன்று பல்வேறு உதாரணங்களை மெல்லிசை மன்னரின் இசையில் காட்ட முடியும்.
{ இந்த இடத்தில் மெல்லிசை மன்னரின் குருவான திரு எஸ்.எம்.எஸ். அவர்களையும் மேற்கோள் காட்டவேண்டும். மன்னிப்பு படத்தில் நீ எங்கே பாடலை மூன்று விதமான மெட்டுக்களில் அமைத்திருப்பார்}
அப்படி வித்தியாசமான சூழ்நிலைகளில் ஒரே பாடலை வெவ்வேறு வடிவங்களில் கொடுத்து, கேட்கும் போதே அதன் சூழ்நிலையை நாம் உணரும் வண்ணம் செய்வதில் மன்னர் ஏகபோக சக்கரவர்த்தியாக விளங்குகிறார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள். நாம் படத்தையோ பாடலையோ காட்சியாக பார்க்காவிட்டாலும் கூட, தனியாக கேட்கும் போதே அதை உணர்ந்து அறியலாம்.
ஆனால் இன்றைய தேர்வு சற்றே வித்தியாசமானது. இந்தப் பாடலைக் கேட்கும் போதே நம்மையும் அறியாமல் அந்தக் காட்சி நம் கண் முன் விரிகிறது. அந்த நாயகனையும் மனம் லயித்து ரசிக்கிறது.
ஒரு சின்ன கிடார் கார்டுடன் பாடல் துவங்குகிறது.
சற்றே இடைவெளி. அடுத்த கிடார். சற்றே அழுத்தமாக.
இந்த இரண்டிற்குமிடையிலான நேரத்தில் நாயகனின் நடை.
அந்த இசையில்லா இடைவெளியில் அந்த பாத்திரத்தை அந்த நடையில் சித்தரித்து விடுகிறார் நடிகர் திலகம். சரியாக எத்தனை மாத்திரை இடைவெளியோ அத்தனை ஸ்டெப் வைக்கிறார் நாயகன்.
இந்த இடத்தில் மௌனத்தை இசையாக்கிய மெல்லிசை மன்னரைப் பாராட்டுவதா, அல்லது அந்த மௌனத்தை இசையாக பாவித்து நடை போடும் நடிகர் திலகத்தைப் பாராட்டுவதா..
துவக்கமே அட்டகாசமாகி விட்டதே.
இரண்டே கிடார் கார்டுகள்.. அதற்குள் எத்தனை விஷயங்கள்..
அம்மாடி... என்று பாடல் துவங்குகிறது..
பொண்ணுக்கு தங்க மனசு... ஒலிக்க இரு முறை எதிரொலிக்கிறது...
ஆளரவமில்லா வனாந்தரத்தில் இரவு நேரத்தில் அந்த எதிரொலி நம்மை அந்த சூழ்நிலைக்கு உடனே அழைத்துச் சென்று விடுகிறது...
பாடலைக் கேட்கும் போதே நாம் இப்படிப்பட்ட பகுதியை உணர்கிறோம்..என்றால் அதன் காட்சியமைப்பின் சிறப்பையும் நாம் பாராட்ட வேண்டும்.
பல்லவியின் இந்த வரி ஒலிக்கும் போது, அப்பாவி கிராமத்தானாக தான் பாடி ஆடிய நாளை நினைக்கத் துவங்குகிறான் நாயகன். இப்போது அவன் பார் போற்றும் நடிகர் திலகம் (கதையிலேயே அவர் நடிகர் திலகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்). எல்லா வசதிகளும் அவனுக்கு உள்ளன.
ஆனால்,, அவனை திருமணம் செய்து கொள்வதாக கூறிய காதலி ஏமாற்றி விடுகிறாள். வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறாள்.
இந்த ஏமாற்றமும் விரக்தியுமே இப்பாடலின் களம்.
இந்த அடிப்படையில் இப்பாடல் படமாக்கப் பட்டிருக்கிறது.
அதிக வசதிகளற்ற அந்தக் காலத்தில் ஸ்டூடியோவிலேயே த்த்ரூபமாக செட் அமைத்து படமாக்கியுள்ள விதம் பிரமிப்பை ஊட்டுகிறது. அரங்க அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவருமே பாராட்டிற்குரியவர்கள்.
மெல்லிசை மன்னரின் பாடலை அந்த ஜீவனுடன் அப்படியே படமாக்கியிருப்பது அவருக்கு இந்தக் கலைஞர்கள் அளித்த மரியாதை என நாம் கருதலாம்.
மீண்டும் பாட்டிற்கு வருவோம்.
பல்லவியின் முதல் வரி ஒலிக்கிறது.. நாயகன் சற்றே திரும்பிப் பார்க்கிறான். நினைவுகள் பழையவற்றை அசை போடுகின்றன.
சாதாரணமாக ஆரோகண அவரோகணங்கள் மூன்று ஐந்து என ஒற்றை அடிப்படையில் அமையும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே கிடாரும் புல்லாங்குவலும் சேர்ந்து பத்து முறை மெல்லிசை மன்னர் இசைக்கிறார். இதெல்லாம் வேறு யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
இந்த பத்து கார்டுகளில் - அனைத்துமே cut notes - என்ற அடிப்படையில் அமைத்திருக்கிறார் என்று தெரிகிறது.. - அந்த பழைய நினைவுகளை கொண்டு வரும் வித்த்தில் அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். அந்த கார்டுகள் ஒலித்து முடித்த பின்னர் மீண்டும் ஒரு PAUSE.
இந்த பாஸ்... இதுவும் ஒரு மௌனமான இசை..
இந்த PAUSE - தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஈடு இணையற்ற மஹா கலைஞன் என்று மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்த PAUSE....
இந்த PAUSE - திரையரங்குகளில் இடிஇடிக்கும் அளவிற்கு கரகோஷங்களால் அதிர வைக்கும் PAUSE ...
மௌனத்தினால் அமைதியை குலைத்து ஆரவாரத்தை எழுப்ப முடியும் என்று சினிமாவில் நிரூபித்த PAUSE.
ஏமாற்றமும் விரக்தியும் சூழ்ந்தாலும் அந்த நேரத்திலும் அந்த பழைய நினைவுகள் அவனுக்குள் விரக்தி கலந்த புன்னகையை வரவழைக்கின்றன. அப்படியே அதை நம் கண்முன் கொண்டு வரும் வகையில், லேசாக சிரித்தவாறே தன் இடது கையால் தலையை நடிகர் திலகம் கோதி விடும் காட்சி இருக்கிறதே...மயங்காத மனம் யாவும் மயங்கும்...
இப்போது மீண்டும் பல்லவி ஒலிக்கிறது. அதே எதிரொலிகளுடன்...
ஒவ்வொரு எதிரொலிக்கும் நாயகன் தன் உணர்வுகளை பிரதிபலிக்கிறான்.
ஆடவில்லை ஓடவில்லை.. நிற்கிறான்., நின்று நினைக்கிறான். நினைத்தவாறே மனதிற்குள் அழுகிறான்...
இப்போது அதே கிடார் மற்றும் புல்லாங்குழலில் எட்டு கார்டுகள்.. முடிக்கும் போது அக்கார்டின்...
இப்போது அவன் மறுபடியும் நிஜத்திற்கு வருகிறான்.
இது வரை ஒலிக்காத ரிதம் இப்போது துவங்குகிறது...
தோம்தோம் திகிதிகி திகிதிகி தோம்நம் என்று பாங்கோஸ் ரிதம் ஒலிக்க
பல்லவி ஒலிக்கிறது.. அதே மெட்டு... ஆனால் தாளம் வேறு. வரிகளில் மாற்றம்..
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது இந்த மனசு...
கண்ணுக்கு ரெண்டு மனசு
சொல்லுக்கு என்ன வயசு...
கண்ணுக்கு எங்காவது மனசு இருக்குமா... கேள்வி எழுவது இயற்கை..
இதற்கான விளக்கத்தை கவிஞர் இப்படித்தான் மனதில் வைத்திருக்க்க் கூடும் என்கிற யூகத்தின் அடிப்படையில்..
பெண்களின் மனது கண்களில் தெரியும் என்று கவிஞர் யூகித்திருக்கலாம். அல்லது மனதில் ஒரு எண்ணமும் பார்வையில் வேறு எண்ணமும் பிரதிபலிக்கும் யுக்தி பெண்களுக்கே உரித்தானது என கவிஞர் நினைத்து இப்படி எழுதியிருக்கலாம். இவையெல்லாம் அந்த நாயகனின் மனோநிலையை அடிப்படையாக வைத்து அவர் எழுதியிருக்கக் கூடி வரிகளாய்த் தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி மனம் என்ன நினைக்கிறதோ அதை மறைத்து கண்களில் வேறு விதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வித்தை பெண்களுக்கே உரித்தானது என கவியரசர் கூறுகிறார். இதை மனதில் வைத்துத் தான் வாழ்க்கைப் படகு படத்தில் கூட பெண்களை நேரடியாக குற்றம் சொல்லாமல் அவர்களுடைய கண்களை குற்றம் சொல்லும் வித்த்தில், கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் எனக் கூறுகிறார். கண்களை கவிஞர் நம்பவில்லை என்பதற்கான அடையாளமாக இந்த வரிகள் அமைந்துள்ளது எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது மீண்டும் நினைவுகளைக் கிளறும் வகையில் பின்னணி இசை ஒலிக்கிறது. இப்போது மீண்டும் ரிதம் மைனஸ்... வெறும் இசை மட்டுமே...
அந்த நினைவுகளைத் திரும்ப அழைக்க வயலின் பிரயோகப் படுத்தப்படுகிறது. கூடவே மெல்லியதாக கிடாரும் அக்கார்டியனும் ஒலிக்க, அப்படியே நினைவலைகளிலிருந்து நாயகன் நிஜத்திற்கு வருகிறான்.
இப்போது சரணம்..
இப்போது மீண்டும் ரிதம் துணைவருகிறது.
எண்ணையில் எரியும் விளக்கு. அவள் என்னையே அழைத்த சிரிப்பு...
அழைத்த என்ற வார்த்தையின் மூலம் இது கடந்த காலத்தைப் பற்றியது என நினைவு என்பதை கவிஞர் கூறுகிறார்.
இந்த என்னையே அழைத்த சிரிப்பு என்ற வரியின் போது கண் இமையை மூடித் திறக்கும் அந்த நடிகர் திலகம்...
ஆஹா.. உடம்பெல்லாம் புல்லரிக்கும் அந்த இமைகளின் அசைவு...
இந்தப் படைப்பிற்கு எந்த அளவிற்கு ஜீவனளிக்க வேண்டும் என ஆழ்ந்து சிந்தித்து நடித்திருக்கிறார் என்பதற்கு ஒரு சோறு பதமாய் சான்று.
என்னமோ நடந்த்து நடப்பு அதில் ஏதோ நினைவிலும் இருக்கு..
ஒவ்வொரு வரியிலும் அந்த உணர்வை அப்படியே கொண்டு வரும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் இந்த ஏதோ நினைவிலும் இருக்கு என்பதைப் பாடும் போது முழு பரிமாணத்தையும் கொண்டு வந்து அந்த விரக்தியும் அலட்சியும் கலந்த உணர்வைக் கொண்டு வந்து விடுகிறார்.
பாடகர் திலகம் என்கிற பட்டத்திற்கு முழு சொந்தக்கார்ர் டி.எம்.எஸ். ஒருவரே என்பதற்கு இந்தப் பாட்டும் ஒரு சான்று.
இப்போது இந்த வரி காட்சியில் எப்படி..
சொல்லவா வேண்டும். டி.எம்.எஸ்.எந்த உணர்வில் பாடினாரோ அது அப்படியே பிரதிபலிக்கிறதே நடிகர் திலகத்தின் நடிப்பில்..
கம்பீரமத்தை விட்டுக்கொடுக்காமல் நிற்கிறான் நாயகன். என் மேல் தவறில்லை... நான் காதலை மறக்க வில்லை. தவறு உன்மீது தான் நீ தான் ஏமாற்றி விட்டாய். தவறு செய்யாத நான் ஏன் மனம் வருந்த வேண்டும் என்கிற மனப்பான்மையுடன் நாயகன் பாடுகிறான். அதை அப்படியே தன் அலட்சியமான பார்வையாலும் கம்பீரமாக நிற்கும் போஸிலும் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம். ஏதோ நினைவிலும் இருக்கு என்ற வரிக்கு, தன் கையில் இருக்கும் வாக்கிங் ஸ்டிக்கினால் தன் தலையின் பக்கவாட்டில் சற்றே இதமாக இடித்துக் காட்டுகிறார்.
யாருக்கு இந்தக் கதை தெரியும்,
சாமிக்கு மட்டும் இது புரியும்...
ஆம்.. இவருடைய காதலில் இவர் சந்தித்த சுவையான சம்பவங்கள் வேறு யாருக்கும் தெரியாது. அதற்கு இறைவன் மட்டுமே சாட்சி என்பதை வலியுறுத்திப் பாடுகிறார்.
இப்போது தான் உச்சக்கட்ட நடிப்பு...
ஏழைக்கு அன்று வந்த நினைவு
செல்வத்தில் வந்த பின்பு கனவு..
உணர்வு பூர்வமான குரல் நம் நெஞ்சைத் தொடும் போது கேட்கும் போதே வசப்படும் மனது காட்சியில் நடிகர் திலகத்தைப் பார்க்கும் போது எங்கோ பறந்து வேறு உலகத்திற்கே சென்று விடுகிறது..
சாமிக்கு மட்டும் இது புரியும் என மேல் நோக்கி கையைக் காட்டுகிறார். உடனே ஏழைக்கு அன்று வந்த நினைவு வரியின் போது அப்படியே அந்த பிரம்பை நெஞ்சின் அருகில் கொண்டு வந்து தான் ஏழை என்ப்தை மறக்கவில்லை என உணர்த்துகிறார்.
செல்வ்த்தில் வந்த பின்பு கனவு என்ற வரியின் மூலம் அந்த ஆசை நிராசையாகி விட்டது, கனவாய்ப் போய் விட்டதே என மனம் குமுறுகிறார். அதை அப்படியே பக்கவாட்டில் தலையை அசைத்து நமக்கு தெரிவிக்கிறார்.
இப்போது மீண்டும் மௌனம் துவங்குகிறது.
அம்மாடீ....... சங்கதியோடு குரல் ஒலிக்கிறது....
பின்னணி இசையில்லை...
மீண்டும் பொண்ணுக்கு தங்க மனசு ...ஒலிக்கிறது..
ரிதம் இணைகிறது..
அவ சொல்லுக்கு என்ன வயசு பாடும் போது கையை மேலே உயர்த்திக் காட்டி பிரம்பினால் கேள்வி கேட்கிறார். இப்போது இந்தக் கேள்வி இறைவனை நோக்கி...
ஒவ்வொரு ரித்த்திற்கும் பிரம்பினால் ஒவ்வொரு அலட்சிய விளாசல்..
மனக்குமுறல் ஒவ்வொரு விளாசலிலும் வெளிப்படுகிறது..
அம்மாடி அப்படியே இருமுறை ஒலிக்க அப்படியே பாடல் கண்களிலிருந்தும் காதுகளிலிருந்தும் Fade Out ஆகிறது..
ஆனால் மனதிலிருந்து இது எப்போதுமே FADE OUT ஆகாது...
காலத்தால் அழியாத கலைஞர்களின் கூட்டணி ... நடிகர் திலகம் - மெல்லிசை மன்னர் - கவியரசர் - பாடகர் திலகம் கூட்டணியாயிற்றே..
இது நிரந்தரமான வெற்றிக் கூட்டணியல்லவா..
இந்தக் கூட்டணியின் அகராதியில் .FADE என்ற வார்த்தையே கிடையாதே...
...
இப்போது நம் மனது என்ன செய்யும்...
மீண்டும் இந்தப் பாடலைப் பார்க்கத் தூண்டும் கேட்கத் தூண்டும் ..மெல்லிசை மன்னரின் இசையை ரசிக்கத் தூண்டும்..கவியரசரின் வரிகளைப் படிக்கத் தூண்டும்...பாடகர் திலகத்தின் குரலைக் கேட்கத் தூண்டும்..
தமிழகம் கண்ட தவப்புதல்வனின் நடிப்பை அசை போட்டுக் கொண்டே இருக்கத் தூண்டும்...
...
அதைத் தான் நீங்கள் செய்வீர்கள்.. எனக்குத் தெரியும்.
சற்று நீண்ட பதிவு... பொறுத்தருள்க..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
24th June 2016, 07:59 PM
#1648
Junior Member
Diamond Hubber
Courtesy Facebook
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
24th June 2016, 08:00 PM
#1649
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
24th June 2016, 08:01 PM
#1650
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
Bookmarks