-
20th August 2016, 09:28 PM
#1861
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் என் ஹீரோ
வின்னி
இன்று எப்படியாவது முதலாவது காட்சிக்கு டிக்கெட் எடுத்துவிட வேண்டும் என்ற திடகாத்திரம்!
எம்.ஜி.ஆரின் காஞ்சி தலைவன் படம் வெளிவரும் நாள் அது. வியாழக்கிழமை! மதிய சாப்பாட்டை அவசர,அவசரமாக சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திலிருந்து விண்ட்சர் தியேட்டரை நோக்கி நடக்கிறேன். பாக்கெட்டில் கவனமாக சேர்த்து வைத்த அறுபத்து ஐந்து சதங்கள்! ஆமாம்,கலரிதான்! பழைய படம் என்றால் முப்பத்தைந்து சதங்கள்மாத்திரமே! யாருக்கு வேண்டும் தியாகராஜ பாகவதர் படங்கள்? அடிக்கடி பாக்கெட்டைத் தடவி காசு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறேன். ஒரு சதம் குறைந்தால்கூட அன்று படம் பார்க்க முடியாது!
தியேட்டரின் முன்னால் சரியான சனம். யாரோ முதுகில் தட்டுவது போன்ற பிரமை திரும்பிப் பார்க்கிறேன். அப்பா! "எங்கே போகிறாய்?" என்று கேட்கிறார். "படத்துக்கு" என்று சொல்கிறேன். சினிமா தியேட்டரின் முன்னால் நின்றுகொண்டு வேற என்ன சொல்ல முடியும்? "காசு இருக்கிறதா" என்று கேட்கிறார் . " ஆம் " என்றேன். சரி படத்தைப் பார்த்து விட்டு வா என்று கூறி வேலைக்குப் போய் விட்டார்.
அவர் வேலை செய்யாவிட்டால் எட்டு பிள்ளைகள் உள்ள குடும்பத்தை எப்படிக் கொண்டு நடத்துவது? வகுப்புக்குப் போகாமல் சினிமா பார்க்கப்போவது அதுதான் முதல்முறை. என்ன தண்டனையோ தெரியாது? வீட்டுக்குப் போனால்தான் தெரியும். அப்பா ஒரு கணக்காளர் எப்பவும் வேலைதான். படம் பார்க்கப்போகக் கூட அவருக்கு நேரம் இல்லை. அப்படிப் போனாலும் குடும்பத்தோடு பத்துப்பேரும் சேர்ந்து போவோம். அதுவும் முதலாவது வகுப்பில் சாக்லேட், குளிர்பானம் எல்லாம் கிடைக்கும். அதுவும் வருசத்தில் ஒருமுறை,
"ப" வரிசையில் தொடங்கும் கருத்துள்ள சிவாஜி கணேஷன் படங்கள் அல்லது கடவுள் படங்கள். எனக்கு எம்ஜிஆர் படம் அப்பாவுடன் போய்ப் பார்க்கவேண்டும் என்றஒரு ஏக்கம்! அப்பா மகனுக்கிடையே இருக்கும் பல விடயங்கள் கதைக்கலாம். அவருடன் போனால் வசதியாக முதலாம் வகுப்பில் இருந்தும் பார்க்கலாம்!
வரிசையில் இடிபட்டு ஒரு மாதிரி உள்ளே நுழைந்து விட்டேன். எம்ஜிஆர் படமல்லவா!. கூட்டமோ கூட்டம்!. பலருக்கு டிக்கெட் கிடைத்திருக்காது. கலரியில் திரைக்கு முன்னால் இன்னும் ஒரு வரிசைதான் இருக்கிறது. ஊழியர்கள் இருவர் வாங்கு ஒன்றை கொண்டு வந்தார்கள். ரசிகர்கள் அவர்களைத் தள்ளி அடித்து இருக்க வரும்போது வாங்கை நிலத்தில் தலை கீழாக போடுவார்கள். இருக்க ஓடி வரும் எல்லோரும் விழுந்து எழும்புவார்கள். இப்படி பல தடவைக ள் செய்து கடைசியில் வாஙகை வைத்து விட்டுப் போய்விடுவார்கள். காசையும் கொடுத்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட வேணுமா?
முதல் நாள் கலரியில் எம்ஜீஆர் படம் பார்க்க வேண்டுமென்றால், அதுதான் நியதி! முதல் மணி அடிக்க நான் கூட்டத்தோடு, நெரிபட்டு ஒரு மாதிரி வாங்கில் இருந்து விட்டேன். பக்கத் தில் இருந்தவர் சிவப்பு சேர்ட்டும் கருத்த லுங்கியும் அணிந்திருந்தார்.
கருப்பும், சிவப்பும் கலந்ததுதான் திமுக வின் கொடி! எல்லாம் வாத்தியார் மேலே இருக்கும் பக்திதான். அத்தோடு தலைவர் கருணாநிதி கதை எழுதிய படமல்லவா! அவர் வேர்க்க வேர்க்க விசிலடித்துக் கொண்டிருந்தார். அ டிக்கடி கழுத்தில் இருந்த திமுக கொடியை எடுத்து வேர்வையைத் துடைத்துக் கொண்டார். எனக்கு அவர் பக்கத்தில் இருக்க அருவருப்பாக இருந்தது! கலரியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவை எல்லாம் இல்லாவிட்டால் அது தலைவர் படமாக இருக்க முடியாது! அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் சிரித்தேன்.
இடைவேளை! பக்கத்தில் இருந்தவரின் விசில் சத்தத்தால் காதெல்லாம் அடைத்து விட்டது. அங்கெ பெரிய சத்தத்தில் ஒலிபரப்பான பாட்டுக்களைக் கேட்க முடியவில்லை. ஒரேன்ச் பார்லி, ஐஸ் கிரீம், ஐஸ் பழம், கடலை, சாக்லேட் என்று எல்லாரும் வாங்கித் சாப்பிடுகிறார்கள். என்னிடம் காசில்லை! என் வெள்ளை உடுப்பெல்லாம் வேர்வை.
நான் வாங்கிலிருந்து எழும்பினேன். என் வலது சேர்ட் கை சிவப்பாக மாறி இருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்தவரின் சேர்டில் இருந்து வந்தது என்று ஊகிக்க எனக்குப் பல வினாடிகள் செல்லவில்லை. அந்த சாயம் சன்லயிட் சோப் போட்டு தோய்க்கப் போகுமா என்ற சந்தேகம்! சேர்ட் எல்லாம் சிகரெட் மணம். சகிக்க முடியவில்லை. மாமா லண்டனிலிருந்து அனுப்பிய மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் வாங்கிய விலைஉயர்ந்த செயின்ட் மைக்கேல்ஸ் சேர்ட் அது. யாழ்பாணத்தில் அந்த சேர்ட் வாங்க முடியாது.
"தம்பி குடிக்க ஏதாவது வேணுமா"?பக்கத்தில் இருந்தவர் ஒரேன்ச் பார்லி குடித்தபடி என்னைக் கேட்கிறார். நான் வேணாம் என்றேன்! அவருக்கு எம்.ஜி.ஆர் போல தானும் ஒரு கொடை வள்ளல் என்ற நினைப்போ? என்னிடம் ஒரேன்ச் பார்லி வாங்கக் காசில்லை என்று அவருக்கு எப்படித் தெரியும்? அவருடைய பெருந்தன்மையை நினைத்துப் பெருமைப்பட்டேன். வலக் கையில் வலி. டிக்கெட் வாங்க அறுபத் தைது சதத்தை இறுகக் கையில் பிடித்துக்கொண்டு, டிக்கெட் கவுண்டரில் கை விட்டபோது மற்றவர்களின் கைகளால் அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட வலி.
நான் கையை வலியால் அழுத்துவதை அவர் கண்டுவிட்டார்." என்ன நடந்தது?" "கை நோகிறதா?" என்று கேட்கிறார். நான் "ஆம்" என்று கூறி விட்டுத் திரையைப் பார்க்கிறேன். "தம்பி எனக்கும் உன்னைப்போல ஒரு மகன் இருந்தான் அவன் கார் விபத்தில் இறந்து விட்டான்" என்று கவலையாகச் சொன்னார். "நானும் அவனும்தான் ஒன்றாக படம் பார்க்க வருவோம்". "இப்ப நான் தனிய, மனைவியோ பிள்ளைகளோ ஒருவரும் எனக்கு இல்லை அவர் கண்களில் கண்ணீர் கசிவதைக் காண்கிறேன். அவன் பள்ளிகூடத் தில் நன்றாகப் படிப்பான். எம்.ஜி.ஆர் படம் என்றால் அவனுக்கு உயிர்". "நான் முன்பு படம் பார்க்க வந்ததே அவனுக்காகத்தான் . ஆனால் இப்ப வருவது அவன் நினைவை மறக்க". அவர் சோகம் என்னை வருத்தியது. அவருடைய தந்தைப் பாசம் என்னைக் கவர்ந்தது.
இடைவேளை முடிவதற்கு பெல் அடிக்கிறது. வாங்கில் அமருகிறேன், பக்கத்தில் இருந்தவர் கையில் இருந்த கச்சான்கடலைப் பொதியை எனக்குத் தருகிறார். மறுக்க மனமில்லாமல் வாங்குகிறேன். படம் காஞ்சித் தலைவன்! மன்னர் எம்.ஜி.ஆர், குத்துச்சண்டையில் வெற்றிபெறுகிறார்! மறுபடியும் திரை அரங்கே அதிர்கிறது.
ஆனால் பக்கத்தில் இருந்தவர் சோகத்தில் மௌனமாகி விட்டார். சந்தோசமாக விசிலடித்தும், கத்திக் கொண்டும் இருந்தவருக்கு என்ன நடந்தது? மகனின் நினைப்போ? அவன் பிரிவு அவரை வாட்டுகிறதோ? அவரது கதையைக் கேட்டதும் எனக்கு படத்தில் இருந்த ஆர்வம் போய்விட்டது! படம் முடிந்ததே தெரியவில்லை!
வீட்டுக்கு மூன்று மைல் நடக்க வேண்டும். விரைவாக நடக்கிறேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் என்னை பைசிகிளில் வருவது தெரிகிறது. "தம்பி எங்க போகிறாய்? வா,உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன்" என்றார். நான் வேண்டாம், எனக்கு நடக்க விருப்பம் என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர்கிறேன். அவரும் போய் விட்டார். அரைவாசித் தூரம் போயிருப்பேன் எதிரில் நடு ரோட்டில் ஒரே கூட்டம். யாரோ ஒருவர் பைசிக்கிளோடு கீழை விழுந்திருந்தார்! அவரைக் கார் அடித்து விட்டது!. அவர் பிழைக்க மாட்டார் என்று எல்லாரும் கதைத்தார்கள். நானும் எட்டி அவர் முகத்தைப் பார்க்கிறேன். அவர் வேறு யாருமல்ல. எனக்குப் பக்கத்தில் இருந்தவர்தான்! முகமெல்லாம் இரத்தம்!. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது. மகனுக்கு நடந்தது அவருக்கும் நடக்கக் கூடாது என்று நல்லூர் கந்தனை வேண்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். நசிஞ்ச சைக்கிளுக்குக் கீழே இருந்த அவரது சிவப்பு நிற உடம்புதான் என் கண்ணெதிரில். நானும் அவருடன் சென்றிருந்தால் எனக்கும் அதே கதிதான்!
மாலை பள்ளிக்கூடம் போகாமல் படம் பார்க்கப் போனது பற்றி அப்பா ஒன்றுமே கேட்கவில்லை. அடிக்கப்போகிறார் என்று நினைத்தவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. "எல்லா உடுப்புகளையும் தோய்க்கப் போடு" அம்மா கத்தினாள்.அவளுக்கு சிகரெட் மணம் அறவே பிடிக்காது.
எனது தியேட்டர் அனுபவம் ஒருத்தருக்கும் தெரியாது! யாருக்கும் சொல்லவேணும் போல இருக்கிறது ஆனால் பயம். சேர்டில் இருந்த சிவத்த நிறத்தைப் பற்றியோ அல்லது அதிலிருந்து வரும் சிகரெட் நாற்றத்தைப் பற்றியோ ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை. அதுதான் என் மனதுக்கு பெரிய சங்கடமாக இருந்தது!. எனது அனுபவங்களை ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று கவலை.
இரவு அப்பா என்னிடம் "நீ படத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே?" என்றார்.நான் அவருக்கு படத்தின் கதையை யும்,எனது அனுபவங்களையும் ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டேன். என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சனிக்கிழமை நானும் அப்பாவும் மருத்துவ மனைக்கு அந்த எம்.ஜி.ஆர் ரசிகரைப் பார்க்கச் செல்கிறோம்!.
அப்பாவின் அந்த முடிவை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை! அவர் உயிர் பிழைத்து விட்டார்! கையில் இருந்த மகனின் போட்டோவை எங்களிடம் காட்டினார். தம்பி உனது கை நோ எப்படி இருக்கிறது? என்று கேட்கிறார். நானே வலியை மறந்து விட்டேன். அப்பா என்னைக் குற்ற உணர்வோடு பார்க்கிறார் ! என்னைப் பார்த்ததும் அவருக்கு தனது மகனைக் கண்டது போல் ஒரு உணர்வு. மகனிடம் அவர் வைத்திருந்த பாசத்தை என்னால் நம்ப முடியவில்லை. சுகமாகி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும், அவருக்கு நாங்கள்தான் குடும்பம்! அவர் மகனுக்கு எம்.ஜிஆர் ஹீரோ! ஆனால் எனக்கோ அவர்தான் ஹீரோ!
Courtesy - net
tamilkoodal
Last edited by esvee; 20th August 2016 at 09:31 PM.
-
20th August 2016 09:28 PM
# ADS
Circuit advertisement
-
20th August 2016, 09:34 PM
#1862
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திர
எம்ஜிஆரின் படங்களில் டாப் டென் பட்டியலிட சொன்னால் எனது தேர்வு இதுதான்
1. அன்பே வா
2 குடியிருந்த கோவில்
3 உலகம் சுற்றும் வாலிபன்
4. நம்நாடு
5. நான் ஏன் பிறந்தேன்
6.எங்க வீட்டுப் பிள்ளை
7 இதயக்கனி
8.பணம் படைத்தவன்
9. படகோட்டி
10.ஆயிரத்தில் ஒருவன்
இதில் முதல் படத்தைத் தவிர மற்ற படங்களை விருப்பம் போல நம்பர்களை மாற்றிக் கொள்ளலாம்.
எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை சொன்னவர் எம்ஜிஆர்.
தவறு செய்தால் தட்டிக் கேட்பதும், குழந்தைகள், பெண்களை நேசிப்பதும் எம்ஜிஆரின் பார்முலா.இன்றுவரை ரஜினி, கமல், விஜய் வரை இந்த பார்முலாதான் நீடிக்கிறது. எவ்வளவு நாளைக்கு நல்லவனாவே இருப்பது போரடிக்குது என்று அஜித் பேசும் வசனமும் இதன் நீட்சிதான்.
மனிதன் தவறுகளை செய்பவன்தான் .ஆனால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எம்ஜிஆரின் அவதானிப்பு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பணம் படைத்தவன் படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள் பசுமரத்தாணி போல சிறுவயதில் என் மனதுக்குள் பதிந்து விட்டன. இன்று வரை அதன் தடயம் அழியவே இல்லை.
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.
Courtesy - net
-
20th August 2016, 09:36 PM
#1863
Junior Member
Platinum Hubber
Mgr மூன்றெழுத்து மந்திரம்
செந்தூரம் ஜெகதீஷ்
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்றால் யார் என்று யோசிக்க வைக்கும் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொன்னால் சின்னக் குழந்தை கூட அடையாளம் தெரிந்துக் கொள்ளும். இந்த மூன்றெழுத்து மந்திரம் மறைந்து 28ஆண்டுகளாகியும் இன்றும் தமிழக அரசியலின் முக்கிய சக்தியாக விளங்குகிறது.
நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். திமுகவில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கைக்கான பாதையமைத்துக் கொண்டார். அவருடைய திரைப்படப் புகழால் கட்சியும் வளர்ந்தது. அண்ணாதுரையின் இதயக்கனியாக இடம் பிடித்தார்.
அன்பே வா போன்ற படங்களில் அந்தக்காலத்து இந்திப்பட நாயகர்கள் போல ரொமாண்டிக்காக தோன்றினார் எம்.ஜி.ஆர்.நடனம், நடிப்பு , சண்டை காட்சிகளால் அவரது திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர்.அன்பு, அறம், நேர்மை, உழைப்பு ஆகிய குணங்களை போற்றியே அவரது பாத்திரங்கள் உருவாகின.தாய்ப்பாசம், குழந்தைகளுடன் நேசம் ஆகிய குணங்களையும் ரசிகர்கள் ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். தமிழக மீனவர்களின் துயர வாழ்க்கையை அன்றே படகோட்டி படம் மூலம் பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர்.விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், மீனவர், நரிக்குறவர் என அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக சினிமாவில் முத்திரை பதித்து தன்னிகரில்லாத நடிகராக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.
எங்க வீட்டுப் பிள்ளையில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியவர் எம்ஜிஆர். அப்படத்தில் அவர் பாடிய நான் ஆணையிட்டால் பாடல் அவரது கொள்கை விளக்கப் பாடலாகவே அமைந்துவிட்டது.
நடிகராக மட்டுமின்றி மிகச்சிறந்த இயக்குனராகவும் எம்ஜிஆர் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் பெயரெடுத்தார்.
திமுகவில் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இயக்கத்திற்கு எதிராக அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆருக்கு கடுமையான எதிர்ப்புகளை திமுக ஏற்படுத்தியது. அவரது நேற்று இன்று நாளை படத்தின் அரசியல் வசனங்கள், பாடலுக்காக அந்தப் படத்தை திரையிட விடாமல் திமுகவினர் ஏவிய ரவுடிகள் வன்முறையில் ஈடுபட்டனர். சென்னை அயனாவரம் திரையரங்கில் இப்படம் வெளியான போது இருக்கைகளின் கீழே ஏராளமான சாராய பாட்டில்கள் உடைந்து கிடந்த்தைப் பார்த்திருக்கிறேன்.திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றதை தெரிவித்து, ஒரு மாறுதலை சொல்வதற்கு தேர்தல்உண்டு என அப்படத்தில் தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று பாடலில் பாடுவார் எம்ஜிஆர். இரட்டை இலையும் அதிமுக கொடியும் அதில் காட்டப்படும். அதுமட்டுமின்றி மக்கள் நலம் மக்கள் நலம் என்றே கூறுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனத்தில் கொள்ளுவார் என்ற வரிகளும் வாலியின் தீர்க்கதரிசனம்தான்.
எம்ஜிஆர் மூன்று முறை முதலமைச்சராக மாறியதும் அவர் ஆணையிட்டதெல்லாம் நடந்ததும் ஏழைகள் வேதனைப்பட்டதும் தொடரத்தான் செய்தது. எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடல்களை எழுதிய வாலியே எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு அடித்த ஜால்ரா சத்தம் அறிவாலயத்தையே அதிர வைத்தது தனிக்கதை.
உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்ஜிஆர், முதலமைச்சராக வெற்றிவாகை சூடினாலும் 1987ம் ஆண்டில் டிசம்பர் மாதம் காலமானார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இரண்டாக பிளந்த அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று வரை அதன் தலைவியாக திகழ்கிறார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் என்ற திரைப்பட ஆளுமையையும் அரசியல் சக்தியையும் அழிக்கும் ஆற்றல் எழுதிச் செல்லும் விதியின் கைகளுக்குக் கூட இல்லை.
-
20th August 2016, 09:37 PM
#1864
Junior Member
Platinum Hubber
நினைத்ததை முடிப்பவன்
இந்தியில் இருந்து தமிழுக்கு எம்ஜிஆர் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் படங்கள் எவை...? திடீரென இந்த ஆராய்ச்சியில் இறங்கியதற்கு காரணம் நான் சந்தித்த ஒரு மனிதர். அதிமுகவைச் சேர்ந்த தபா கான் என்பவரை ஒருமுறை ஆழ்வார்ப்பேட்டை சரஸ்வதி ஸ்டோர்ஸ் சிடி கடையில் சந்தித்தேன். திரைப்படங்களைப் பற்றி நுட்பமான அறிவு கொண்ட விற்பனையாளர் கருணாகரன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தம்பி எம்ஜிஆர் நடித்த படங்களில் இந்தியிலிருந்து தமிழுக்கு வந்த படங்கள் எவை என அவர் மிகுந்த அன்புடன் கேட்டார். நாளைக்கே விமானத்தில் டெல்லிக்குப் போய் பாலிகா பஜாரில் உள்ள நண்பர் கடையிலிருந்து அத்தனை படங்களையும் வாங்கி வருகிறேன் என கூறிய அவர் ஆர்வம் மலைக்க வைத்த்து..திண்டிவனத்தில் உள்ள தமது திரையரங்கில் இந்திப் படங்களையும் எம்ஜிஆர் நடித்த தமிழ்ப் படங்களையும் திரையிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. உடனடியாக நினைவைக் கூர் தீட்டி படங்களை நான் பட்டியலிட்டேன்.
தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்திப்படம் மகத்தான படைப்பு அதை தமிழில் எம்ஜிஆர் பல்லாண்டு வாழ்க என மாற்றினார்.
சச்சா ஜூட்டா இந்தியில் ரொமான்டிக் ஹூரோவாக இருந்த ராஜேஷ் கன்னா முதன்முறையாக ஆக்சன் படத்தில் நடித்தார்.இரட்டை வேடம் கொண்ட இப்படத்தை எம்ஜிஆர் நினைத்ததை முடிப்பவன் என்று தமிழில் மாற்றினார். பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாடலில் ராஜேஷ்கன்னாவின் உருக்கமான நடிப்பை எம்ஜிஆர் தமிழில் மெருகேற்றியிருந்தார். உருக்கத்தை முழுவதுமாக ஊர்வசி பட்டம் பெற்ற நடிகை சாரதாவிடம் தந்துவிட்டார் எம்ஜிஆர்.
ராம் அவுர் ஷ்யாம் இந்தப் படத்தில் இந்தியில் நடித்தவர் திலீப்குமார். நடிப்புலக ஜாம்பவான் எனப் பெயர் பெற்ற அவரே தமிழில் எடுக்கப்பட்ட எங்க வீட்டுப்பிள்ளையில் எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரைப் போல தம்மால் நடிக்க முடியாது என பெருந்தன்மையுடன் பாராட்டினார்.
ஜன்ஜீர்- அமிதாப்பச்சனுக்கு இந்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தந்த படம். சல்மான் கானின் தந்தை சலீம் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் இணைந்து சலீம்-ஜாவேத் என்ற இரட்டையராக கதைவசனம் எழுதிய படம் இது. பின்னர் இதே ஜோடிதான் ஷோலே, தீவார் போன்ற வெற்றிப்படங்களை அளித்தது. தமிழில் இப்படத்தை எம்ஜிஆர் சிரித்து வாழ வேண்டும் என எடுத்தார். கதாநாயகனுக்கு இணையான மற்றொரு பாத்திரத்தில் இந்தியில் பிரான் நடித்தார். அந்த வேடத்தையும் எம்ஜிஆர் ஏற்று முஸ்லீம் பத்தானாக நடித்து மேரா நாம் அப்துல் ரகுமான் எனப்பாடி இஸ்லாமிய ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.
ஜிக்ரி தோஸ்த்- இந்தியில் ஜித்தேந்திரா நடித்த இந்தப் படத்திலும் இரட்டை வேடம் ஏற்று தமிழில் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக மாட்டுக்கார வேலனாக நடித்தவர் எம்ஜிஆர். ஒரு பக்கம் பார்க்குறா என்ற நயமான பாடல்காட்சியில் எம்ஜிஆரின் நளினமான நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்கது.
ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் இந்தியில் தர்மேந்திராவும் அவரால் காதலிக்கப்பட்டு கைவிடப்பட்ட மீனாகுமாரியும் நடித்தது. தமிழில் மீனாகுமாரியின் வேடத்தில் சவுகார் ஜானகி நடித்தார். ஒளிவிளக்கு என பெயர் மாறிய இப்படத்தில்தான் முதல்முறையாக எம்ஜிஆர் குடிகாரனாக நடித்தார். அந்தப் படம் இரட்டை வேடம் இல்லை என்பதால் அவரே தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்று பாடி குடி குடியை கெடுக்கும் என்ற தனது கொள்கையையும் பிரச்சாரம் செய்தார்.
இந்தப்படத்தில்தான் இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு என்ற பாடலில் உயிருக்குப் போராடும் எம்ஜிஆருக்காக சவுகார் பாடுவார். புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் போதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இந்தப்பாடல் ஒலித்தது.
ஜீனே கீ ராஹா இந்தப் படத்தை தமிழில் எம்ஜிஆர் நான் ஏன் பிறந்தேன் என மாற்றினார். இரு பெண்களுக்கு இடையில் பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு ஆண் என்ற கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரம். எம்ஜிஆரின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லாத குடும்பக்கதை ஆயினும் நான் ஏன் பிறந்தேன், சித்திரச் சோலைகளே, தம்பிக்கு ஒரு பாட்டு போன்ற பாடல்களில் எம்ஜிஆர் தனது கொள்கைகளை பதிவு செய்துவிட்டார். இந்தியில் ஜித்தேந்திரா நடித்த மென்மையான காதலனின் அப்பாவித்தனமான தோற்றம் எம்ஜிஆருக்கும் அழகாகப் பொருந்தி விட்டது. இப்படத்தில் இசையமைத்த சங்கர்-கணேஷ் தனிப்புகழ் பெற்றனர்
சைனா டவுண்- இதுதான் தமிழில் குடியிருந்த கோவில். இந்தியில் ஷம்மி கபூர் நடித்தது. தமிழின் முதல் பெண் பாடலாசிரியரா ரோஷனரா பேகம் அறிமுகம் ஆனது இப்படத்தில்தான். பின்னர் இதே கதையை தமிழிலிருந்து இந்திக்கு உல்டா செய்த இயக்குனர் மகேஷ் பட் இதனை இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கினார்.
யாதோங்கி பாரத் தர்மேந்திரா நடித்த இந்திப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக இதை எடுத்த எம்ஜிஆர் முற்பகுதியில் மற்றொரு கதாநாயகனான விஜய் அரோராவே பாதிக்கதையை ஆக்ரமித்ததால் அந்தப்பாத்திரத்தையும் தானே நடித்து இரட்டை வேடம் ஏற்றார். லதாவின் தூக்கலான கவர்ச்சியுடன் இனிமையான பாடல்களுடன் உருவான இப்படத்தில் மூன்றாவது தம்பியாக தெலுங்கு நடிகர் சந்திரமோகன் நடித்தார்.
உல்ஜன்- இதயக்கனியாக மாறிய இந்தப்படம் இந்தியில் சஞ்சீவ்குமார், சுலக்சனா பண்டிட்டின் பக்குவமான நடிப்பாலும் கிஷோர்- லதா பாடல்களாலும் மெருகேற்றப்பட்டது. இதனை தமிழில் மிக அழகாக மாற்றம் செய்தார் இயக்குனர் ஏ.ஜகன்னாதன். தோ ரஹா படத்தில் கற்பழிப்புக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ராதா சலூஜாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர். ராதா சலூஜா எம்ஜிஆருடன் இன்றுபோல் என்றும் வாழ்க படத்திலும் நடித்து எம்ஜிஆருடன் நடித்த ஒரே இந்தி நடிகை
ஹாத்தி மேரே சாத்தி தேவர் பிலிம்சின் இந்தப் படம் தமிழில் நல்லநேரமாக எடுக்கப்பட்டது. இந்தியில் ராஜேஷ் கன்னா ஹீரோ. தமிழுக்கும் இந்திக்கும் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் முகமது ரபி குரலில் யானையின் மரணத்திற்காக ஒலிக்கும் பின்னணி பாடல் தமிழில் இல்லை.
அப்னா தேஷ்- இதுவும் ராஜேஷ் கன்னா நடித்த படம். தமிழில் நம் நாடு என மாற்றினார் எம்ஜிஆர். இந்தியில் கவர்ச்சிப் புயல் மும்தாஜின் நடிப்பு ராஜேஷ்கன்னாவையே சில இடங்களில் ஓரம் கட்டியது. தமிழில் ஜெயலலிதா தமிழ்ப்பண்பாட்டை மனத்தில் கொண்டு உடலை மறைத்து நடித்தார்.
கோரா அவுர் காலா- ராஜேந்திரகுமார் நடித்த இந்தப்படமும் இரட்டைவேடம் கதைதான். இந்தியில் இந்தப் படம் பெற்ற வெற்றியை தமிழில் பெறவில்லை, கரி பூசிய எம்ஜிஆரை ரசிகர்கள் ஏற்கவில்லை. உருவத்திலும் பொன்மனச்செம்மலாகவே பார்த்துப்பழகி விட்டார்கள்.
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே......
எம்ஜிஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் போடும் டைட்டான சட்டையை இன்றும் விரும்பி அணிகிறேன். நேர்மை, நியாயத்திற்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் உழைப்பாளிகளுடன் தோழமை, குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் லீலைகள், தத்துவம், போன்ற எம்ஜிஆரின் முத்திரைகள் தெரிந்தோ தெரியாமலோ என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆண்களின் அடையாளமாகி விட்டுள்ளது.
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
என்ற வரிகள் யாவும் எனக்காக எழுதப்பட்டது போல் தோன்றுகின்றன. இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலித்தது.
எம்ஜிஆரை நான் ஒருமுறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு பதின்பருவம். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர். கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். எனது அரசியல் அரிச்சுவடி அதுதான்.
அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு எம்ஜிஆர் மலர் வளையம் வைக்க வருகிறார் என அறிந்து காலை 6 மணிக்கே கடற்கரைக்கு போய்விட்டேன். கையில் மாலை வாங்கிய மக்கள் குரல் இருந்தது. 8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தபடி வந்தார் எம்ஜிஆர். ஒளியே ரூபமெடுத்து நடந்துவருவது போல் இருந்த்து. வெள்ளை கரை வேட்டி சட்டையுடன் வழக்கமான தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்த எம்ஜிஆர் தொண்டர்களிடம் வணக்கம் கூறியபடியும் கைகளை உயர்த்தி ஆட்டியபடியும் சென்றுக்கொண்டிருந்தார். ஆரவாரமும் கரவொலிகளும் அடங்கவே இல்லை.இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் என்கையில் இருந்த மக்கள் குரலை பார்த்துவிட்டார் எம்ஜிஆர். நான் அதனை கையில் பிடித்து அவரை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த அவர் என் கன்னத்தைத் தொட்டு தடவி சிரித்தபடி சென்றுவிட்டார். எனக்கு சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு
எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான். எம்ஜிஆரின் சுறுசுறுப்பும் நடன அசைவுகளும் டிஎம்எஸ் சின் கம்பீரமான குரலும் வாலியின் வைர வரிகளும் கொண்ட பாடல் அது. இந்தப் பாட்டு எனக்கு மட்டுமின்றி என்னை விட 40 வயது குறைந்த விக்கிக்கும் பிடித்த பாட்டாக இருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.
எம்ஜிஆரின் புகழ் தலைமுறைகளைக் கடந்து தொடர்வதற்கான சாட்சி எனக்கு என் வீட்டிலேயே இருக்கிறது.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி.தானுங்க.....
தமிழ்த்திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜிஆரும் ஜெயல லிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இதில் முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில், ராமன் தேடிய சீதை, அன்னமிட்டகை, ஒருதாய் மக்கள், தாயைக் காத்த தனயன், ரகசிய போலீஸ்115, காவல்காரன், மாட்டுக்கார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை, முகராசி, புதிய பூமி. முகராசி ஆகிய படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. குமரிக்கோட்டம் படத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் ஆணவக்காரியாக சித்தரித்து பாடுவார் என்பதால் அப்படமும் பாடலும் கலைஞர் டிவியில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.
அரசியலை விட சினிமாவில்தான் ஜெயலலிதா மனம் கவர்கிறார். அதுவும் எம்ஜிஆர் படங்களில் அவரது திறமை மிக அற்புதமாக வெளிப்படுகிறது. சிவாஜியுடன் நடித்த சில படங்களும் அருமை.
ரகசிய போலீஸ் 115ல் கணவன்-மனைவியாக எம்ஜிஆர்-ஜெயல லிதா சண்டை போடும் காட்சியும் குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என ஊஞ்சலில் ஆடிப்பாடுவதும் எனக்கு மிகவும் பிடித்த திரைக்காட்சிகள்.
அதெல்லாம் விடுங்கள் .ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை என்று ராமன் தேடிய சீதையில் எம்ஜிஆரும் எனது மடியில் வா ராமா என எம்ஜி ராமச்சந்திரனை ஜெயலலிதா அழைப்பதும் பரவசமான காதல் காட்சிகளில் ஒன்று
திரைவாழ்வைப் போல எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிஜவாழ்விலும் ஜோடி சேர வேண்டும் என விரும்பிய ரசிகர்களில் நானும் ஒருவன்தான்.நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று ஒளிவிளக்கில் அவர்கள் ஆடிப்பாடினார்கள். ராமன் தேடிய சீதையில்தான் எம்ஜிஆரும் ஜெயல லிதாவும் மணக்கோலத்தில் வரும் காட்சி வரும். அது வரலாற்றால் பதிவு செய்யப்பட்ட அற்புதக் காட்சியாகும்.
----------------------------------------------------------------------------------------------------
courtesy - net
Last edited by esvee; 20th August 2016 at 09:44 PM.
-
20th August 2016, 10:31 PM
#1865
Junior Member
Regular Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
தற்போது முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம்
ஒளிபரப்பாகி வருகிறது .
மக்கள் திலகம் நடித்த நவரத்தினம் திரைப்படம் இன்று ஒரே நாளில் 2 முறை ஒளிபரப்பாகியுள்ளது. காலையில் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இப்போது முரசு டி.வியில் ஒளிபரப்பாகிறது. இப்போது பார்த்தாலும் படம் நன்றாகத்தான் இருக்கிறது.
போலீஸ் என்ற பேரைக் கேட்டாலே மக்கள் திலகம் பயப்படுவது, முழு இந்தி பாட்டு, சி சென்டர் ரசிகர்களை அதிகம் கவராத கச்சேரி பாட்டு, ஏ.பி.நாகராஜனின் படங்களுக்கு அந்த சமயத்தில் தொடர்ந்து இசை அமைத்துவந்த குன்னக்குடி வைத்தியநாதன் என்ற வயலின் சங்கீத வித்துவான் இந்தப் படத்துக்கும் இசை. இவர் உயிரோடு இருந்தவரை திருவையாறு தியாகராஜசாமிகள் விழாவை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த விழா கமிட்டிக்கு அய்யா ஜி.கே.மூப்பனார் தலைவர். செலவு எல்லாம் அய்யா மூப்பனார்தான். அவர் வீட்டில் இருந்து விழாவுக்கு மூட்டை மூட்டையாக அரிசி போகும்.
வைத்தியநாதன் இசையில் மக்கள் திலகத்தின் மற்ற படங்களில் உள்ளது போல சூப்பர் ஹிட்டாக பாடல்கள் அமையாதது, (குருவிக்கார மச்சானே பாட்டும் மக்கள் திலகத்தின் நடனமும் ரசிக்க வைக்கும். உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாட்டுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் டி.எம்.எஸ். போல எழுச்சி இல்லை) போன்றவை காரணமாக படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்றாலும் படம் வெளியான சமயத்தில் சென்னையில் (மட்டும்) ரூ.9 லட்சம் ரூபாயை வசூல் செய்தது.
தமிழ்நாடு பூராவும் மறுவெளியீட்டில் நல்ல வசூல் கொடுத்தது. சில மாதத்துக்கு முன் கோயமுத்தூரில் படம் வெளியானது. தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. இன்று இரண்டுமுறை ஒளிபரப்பாகியது.
படத்துக்கு கதாபாத்திரப்படி காட்சிக்கு தேவை என்றால் உடைகளோ, நகையோ தயாரிப்பாளரிடம் புரட்சித் தலைவர் எதிர்பார்க்க மாட்டார். தன்னிடம் உள்ளதையே அணிந்து கொள்வார். பணக்கார வீட்டைச் சேர்ந்தவர் என்பதால் கையில் தங்க சங்கிலி அணிந்திருப்பார். இங்கே பதிவு செய்துள்ள படத்தை பார்த்தால் தெரியும். அதில் எம்.ஜி.ஆர். என்ற எழுத்துக்கள் பொறித்திருக்கும். அது புரட்சித் தலைவருக்கு சொந்தமான தங்க சங்கிலி.
ஒரு காட்சி சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்.
லதாவும் மக்கள் திலகமும் பேசிக்கொண்டிருப்பார்கள். மக்கள் திலகத்திடம் லதா, இந்த உலகத்திலே ரொம்ப அழகு யாருய்யா? என்று கேட்பார். அதற்கு மக்கள் திலகம் சொல்வார், உலகமே இருட்டாயிடுச்சுன்னா எல்லாருமே அழகுதான் என்பார்.
லதா: நமக்கு வந்தா மாதிரி இது வந்துச்சுன்னா அதுக்கு பேர் என்னய்யா?
மக்கள் திலகம்: இதுன்னா எது?
லதா: அதான்யா இது.
மக்கள் திலகம்: ஓ.. அதுவா? அன்புன்னு சொல்லுவாங்க. (படுத்தபடி சொல்லிக் கொண்டே கண்ணை மூடித் தூங்க முயற்சிப்பார். இயல்பான அழகாக இருக்கும்)
லதா: அன்பு அதிகமாச்சுன்னா?
மக்கள் திலகம்: காதல்!
லதா: காதல் அதிகமாச்சுன்னா?
மக்கள் திலகம்: (முகத்தில் கொஞ்சம் வெறுப்புடன் கோபத்தை மறைக்கும் பொறுமையை காட்டியபடி) காமம்!
லதா: காமம் அதிகமாச்சுன்னா?
மக்கள் திலகம் : (பயங்கர எரிச்சல் தொனிக்க வெடுக்கென்று) நாமம்!
.
எவ்வளவு உயர்ந்த உணர வேண்டிய உண்மை. அதை ரசிக்கும்படி எளிமையாக காதலியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியின்போதே மக்கள் திலகம் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். .
-
20th August 2016, 10:35 PM
#1866
Junior Member
Regular Hubber
இன்று அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள். புரட்சித் தலைவர் மீது ராஜீவ் காந்தி உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தார். பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் கொண்டு வர புரட்சித் தலைவர் விரும்பினார். தமிழக திட்டத்துக்காக டெல்லிக்கு போய் ராஜீவுடன் பேசினார். அடுத்த திட்ட காலத்தில் இதை பார்க்கலாம் என்று ராஜீவ் காந்தி சொல்லிவிட்டார். உடம்பு சரியில்லாத நிலைமையிலும் தமிழ் நாட்டுக்கு மானியமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு புரட்சித் தலைவர் எழுந்து வந்துவிட்டார்.
தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருந்த பாவலர் முத்துசாமியிடம் தமிழ்நாட்டு மக்களிடம் நிதி நிலையை விளக்கி வீட்டுக்கு வீடு ஒரு ரூபாய் வாங்கியாவது இலவச சீருடை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று சொல்லிவிட்டு சென்னை புறப்பட தயாரானார்.
தமிழ்நாடு இல்லத்தில் இருந்த புரட்சித் தலைவரை ஆர்.கே.தவான் மூலம் ராஜீவ்காந்தி மீண்டும் அழைத்து அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இது அப்போது பத்திரிகைகளைில் செய்தியாக வந்தது. அந்த அளவுக்கு புரட்சித் தலைவர் மீது ராஜீவ் காந்தி அவர்கள் மரியாதை வைத்திருந்தார்.
-
21st August 2016, 04:00 PM
#1867
Junior Member
Platinum Hubber
இன்று சென்னை தேவி பாரடைஸில் மக்கள் திலகம் நடித்த "ரிக்க்ஷகாரன்" ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது அனைவரும் வருக.
-
22nd August 2016, 07:52 AM
#1868
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " திரைப்பட
ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா , பல தடைகளை , சோதனைகளை
முறியடித்து , தேவி பாரடைஸ் திரை அரங்கம் நிறைந்து வழிந்து , மாபெரும்
இமாலய சாதனையை பதித்து பெரும் வெற்றி பெற்றது .
நிகழ்ச்சி பற்றிய செய்திகளுடன் புகைப்படங்கள் விரைவில் பதிவிடப்படும்.
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
-
22nd August 2016, 07:55 AM
#1869
Junior Member
Platinum Hubber
-
22nd August 2016, 08:01 AM
#1870
Junior Member
Platinum Hubber
Bookmarks