-
22nd July 2021, 07:58 AM
#1
Senior Member
Devoted Hubber
நன்றி :
பத்திரிக்கையாளர், சினிமா தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் என்று பன்முகத்தன்மை உடைய திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் காணொளியிலிருந்து....
--------------------------------------------
சிவாஜிக்கும் அவரோட ரசிகர்களுக்கும் இருக்கற பந்தம் இருக்கே, அது அலாதியான ஒரு பந்தம்.
சிவாஜி தன்னுடைய ரசிகர்களை என்றைக்குமே ரசிகர்களாகப் பார்த்ததே இல்லை.
தன்னுடைய குடும்பத்திலே ஒரு அங்கத்தினராகத்தான் தன்னுடைய ஒவ்வொரு ரசிகனையும் சிவாஜி பார்ப்பது வழக்கம். அதே மாதிரித்தான் சிவாஜி ரசிகர்களும்.
சிவாஜி ரசிகர்களுக்கு, சிவாஜி ஒரு நடிகர் மட்டும் அல்ல..சிவாஜி ஒரு கடவுள்.
இன்னைக்குக் காலைல, சிவாஜியோட சகோதரியின் மகனான குமாருடன் பேசிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போ, ரசிகர்களுக்கும் சிவாஜிக்கும் உள்ள உறவைப் பற்றி, ஒரு மறக்க முடியாத சம்பவத்தைச் சொன்னார் குமார்.
'முதல் மரியாதை' படத்தை நீங்க பார்த்திருப்பீங்க.. அந்தப் படத்தின் உச்ச பட்சக் காட்சியில, சிவாஜி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருப்பார்.
எந்த நேரம் இறந்திடுவாரோ என்ற பரிதவிப்புடன், வெளியில் நிறையப் பேர் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்ப, ராதா ஒரு படகுல அந்த ஊருக்கு வந்து இறங்குவார். படகுல இருந்த எறங்கி, ராதா அந்த மண்ணுல காலடி எடுத்து வைப்பார்.. அப்போ சிவாஜியோட கை இருக்கே.. அப்படியே துடிக்க ஆரம்பிக்கும்..
அந்தக் காட்சியைப் பார்த்த பல ரசிகர்கள், அப்போது வியப்பில ஆழ்ந்து போனார்கள் என்றாலும், இன்னொரு பக்கம் அந்தக் காட்சியைப் பற்றி ஒரு சாரார் விமர்சனமும் செய்தார்கள், "இது கொஞ்சம் ஓவரான கற்பனையாக இல்லையா" என்று ..
ஆனால், சிவாஜியோட வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நெஜமாவே நடந்திருக்கு என்று கேட்டபோது, நான் அதிர்ந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தக் காட்சியை முதல் மரியாதை படத்தில படமாக்கும் போது, பாரதிராஜாவுக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், எப்படியோ தன்னுடைய கற்பனையில் அப்படி ஒரு அற்புதமான காட்சியை வைத்தார்.
இப்போ, குமார் சொன்ன சம்பவத்துக்கு வருவோம்.
ஒரு நாள் சிவாஜி குமாரைக் கூப்பிட்டு, "நாளைக்குக் காலைல கொஞ்சம் வேலூர் போகனும், தயாரா இரு" என்று சொன்னார்.
"சரிப்பா.." என்று சொல்லியிருக்கிறார் குமார்.
மறுநாள் காலைல ஆறு மணிக்கு ரெடியாகிப் புறப்பட்டுட்டார் சிவாஜி.. எங்கே ? வேலூருக்கு.
போகும் போதுதான் தான் எதற்காக வேலூர் போறோம்ங்கறதைக் குமார் கிட்டச் சொல்லியிருக்கிறார் சிவாஜி.
அப்போது வேலூர்ல ரசிகர் மன்றத் தலைவரா இருந்தது, 'பாலாஜி'ங்கற ஒரு இளைஞன். கல்யாணமாகி, ஏழெட்டு வருசம் இருக்கும். அந்த இளைஞன் கொஞ்ச காலமா உடல் நிலை சரியில்லாம இருந்தான். அவனைப் பார்க்கறதுக்காகத்தான் சிவாஜி வேலூர் போறார்.
தன்னுடைய ரசிகர் மன்றத்துப் பையன் ஒருத்தன், அவனுக்கு உடம்புக்கு சரியில்லைங்கற காரணத்துனால அவனைப் பார்க்கறதுக்கு, இந்த மாபெரும் நடிகர் அதிகாலைல ஆறு மணிக்குப் புறப்பட்டு வேலூர் போறார். ஆறு மணிக்குப் புறப்படனும்னா, சிவாஜி காலைல எத்தனை மணிக்கு எழுந்திருக்கனும் ? அதிகாலைல எந்திருச்சுக் குளிச்சுத் தயாராகி வேலூர் கிளம்பறார்.
போற வழியில் சிவாஜி ரசிகர் மன்றத்துப் பிள்ளைகள் சிலர் சிவாஜி கிட்டச் சொல்றாங்க.." பேச்சு மூச்சே இல்லைங்க அந்தப் பையனுக்கு... சாப்பிட்டே ரெண்டு மாசம் ஆச்சு.." ன்னு.
வேலூர்ல சந்து பொந்தெல்லாம் சுத்திப் போயி, அந்தக் கார் பையனுடைய வீட்டு வாசல்ல நிக்குது.
சிவாஜி அந்தப் பையனைப் பார்க்க வரப் போறார்ங்கற விசயம் அந்த ஊர்ல உள்ள சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவங்களுக்கும் அந்த ஊர்ல இருந்தவங்களுக்கும் தெரியும்கறதால, அந்தப் பையன் வீட்டு வாசல்ல ஒரு பெரிய கூட்டம்.
சிவாஜி காரை விட்டு இறங்கி.. சின்ன வீடு... குறுகலான அந்த வீட்ல.. குனிஞ்சு காலடி எடுத்து வைக்கும் போது, சிவாஜி சாதாரணமா கனைப்பார் இல்ல, அது மாதிரி, ஙெஹே ன்னு கனைச்சிட்டு, "பாலாஜி" அப்படீன்றார்..
அந்தப் பையன் உள்ளே படுத்திருக்கானே, அவனோட கை லேசா ஆட ஆரம்பிச்சது...இதைப் பார்த்த அவனோட உறவினர்கள் எல்லாம் ஆச்சர்யத்தில உறைஞ்சு போயிட்டாங்க..
உள்ளே போன சிவாஜி அந்தப் பையன் பக்கத்துல உட்கார்ந்து, "டே பாலாஜி.. அண்ணன் வந்திருக்கன்டா...பாலாஜி.. அண்ணன் வந்திருக்கேன்"ன்னு சொன்ன உடனே, அந்தக் கை தானாவே ஆடத் தொடங்கிடுச்சு.
அதுக்கப்புறம் ஒரு அஞ்சு நிமிசம் அங்கே இருந்துட்டு, " உடம்பைப் பார்த்துக்க... புரியுதா ? அண்ணன் திரும்பியும் இங்கே வரும்போது, நீ எழுந்து நின்னு அண்ணன் கிட்டப் பேசனும்.."ன்னு அந்தப் பையனைப் பாத்துச் சொல்லிட்டு அந்த ஊர்ல இருந்து கிளம்பிட்டார்.
இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, திருத்தணியில, சிவாஜி மன்றத் தலைவரான பூமிநாதன், ஒரு கேஸ் நிறுவனத்தைத் தொடங்க, அதன் திறப்பு விழாவுக்கு சிவாஜியை அழைக்கிறார். சிவாஜி அந்த விழாவுக்குப் போனார்.
அப்போ , அந்த ஊருக்குப் பக்கத்துல, நகரியில, சிவாஜி ரசிகர் மன்றத்தினர், "ஒரு கோயில் திருவிழா.. இங்கே திருத்தணி வரைக்கும் வர்றீங்க.. நகரி வரைக்கும் வந்துட்டுப் போங்க" ன்னு சிவாஜி கிட்ட சொல்றாங்க.
அதனால், நகரிக்கு, அந்தக் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் சிவாஜி போகிறார்.
சிவாஜி போற இடத்துல, எந்தப் பையனைப் பார்க்கறதுக்காக சிவாஜி வேலூர் போனாரோ, எந்தப் பையன் மூச்சுப் பேச்சு இல்லாமப் படுத்துட்டு இருந்தானோ, அவன், சிவாஜியைப் பார்க்கறதுக்கு அந்த நகரியில துள்ளித் துள்ளிக் குதிக்கறான்.
அவனைத் தூரத்தில இருந்து பாத்துடறார் சிவாஜி.
"பாலாஜி... உனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதானே உடம்புக்கு சரியில்லாம இருந்தது ? ஏன் நீ இங்கே வந்தே ? நீ இங்கெல்லாம் சுத்தக் கூடாது.. வீட்டுக்குப் போ " அப்படின்னு சொல்லி, அந்தப் பையனைப் பாசத்துடன் கண்டிக்கிறார்.
இந்தச் சம்பவத்தைக் குமார் சொன்னபோது, அப்படியே திகைச்சுப் போயிட்டேன் நான்.
என்ன ஒரு பந்தம் பாருங்க ?
அந்த முதல் மரியாதை சம்பவம், இப்ப நூத்துக்கு நூறு சரின்னுதானே ஆகுது ?
சிவாஜிக்கும், ரசிகர்களுக்கும் உள்ள இன்னொரு தொடர்பையும் குமார் என்கிட்டச் சொன்னார்.
சிவாஜி மாதிரி, அவரோட ரசிகர் மன்றத்துல இருக்கற பசங்க இருக்காங்களே, அவங்களோட திருமணத்துல கலந்துகிட்ட நடிகர் வேறு யாருமே இருக்க மாட்டாங்க.
ஆயிரக்கணக்கான ரசிகர்களின் திருமணங்களுக்குச் சிவாஜி சென்றிருக்கிறார்.
இன்னிக்கும் சிவாஜி ரசிகர்களோட மனங்கள்ல சிவாஜி குடியிருக்கார்னா, அதுக்கு முக்கியமான காரணம் அதுதான்.
"அந்தப் பையன் சின்னப் பையனா இருக்கும்போது கல்யாணம் பண்ணியிருப்பான்.. அந்தக் கல்யாணத்துக்கு சிவாஜி வந்து போனார்ங்கற நினைவு, இன்னைய வரைக்கும் அந்தப் பையன் மனசுல இருக்கத்தானே இருக்கும் ? அப்படி இருக்கும் போது, அவனால எப்படி சிவாஜியை மறக்க முடியும்?"ங்கறார் குமார்.
சிவாஜியின் நினைவைப் போற்றுகின்ற இந்த நாளில், இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
கோடானு கோடி சிவாஜி ரசிகர்கள் இருக்காங்களே, அதில நானும் ஒருத்தன்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம்.
-------------------------------------------------
காணொளியை எழுத்து வடிவமாக உருவாக்கியது....
நாகராஜன் வெள்ளியங்கிரி.
நன்றி
நாகராஜன் வெள்ளியங்கிரி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd July 2021 07:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks