-
26th December 2015, 08:26 AM
#11
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன் என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!
வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!
அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 27 ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!
எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!
ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!
அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.
courtesy - vallamai
-
26th December 2015 08:26 AM
# ADS
Circuit advertisement
Bookmarks