-
12th July 2017, 09:43 PM
#11
Junior Member
Devoted Hubber
From Vikatan,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் குறித்து எழுதிய கட்டுரையை பெரும்பாலான வாசகர்கள் படித்திருக்கிறார்கள். குறிப்பாக, சிவாஜி வீட்டுக்கு வந்த இசைக்குயில் குறித்து அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். ஒரு வாசகர் எளிதாக அதைக் கணித்து விட்டார். ஆம். அந்த நாள்களில் சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி பல சினிமா உலக விஐபி-க்கள் வருவதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
மனித நேயர்
சிவாஜி கணேசனின் 88-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லதா மங்கேஷ்கர், சிவாஜி சார் குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “சிவாஜி என்னுடைய சகோதரர் மட்டும் அல்ல. என்னுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரைக் கருதினோம். குறிப்பாக என் தாய் உட்பட அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார். 1960-களில் நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சென்னையில்தான் பதிவு செய்யப்பட்டன. எனவே, அடிக்கடி நான் சென்னைக்கு வருவேன். நான் சென்னை வந்ததும், என்னைத் தேடி சிவாஜி வந்துவிடுவார். தம்முடைய டிரைவரிடம், என்னுடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்வார். அவர் வீட்டில்தான் நான் தங்குவேன். அவர் மிகப்பெரிய மனித நேயராக இருந்தார். ஒரு நாள் நானும், என் குடும்பத்தினரும் வழக்கம் போல் சென்னை வந்தோம். அப்போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் மற்றும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்றும் விரும்பினோம். அப்போது, சிவாஜி சார், அவருடைய மேனேஜர் மற்றும் மூன்று பேரை எங்களுடன் அனுப்பினார். எங்களுக்காக இரண்டு கார்களும் கொடுத்தார். அவருடைய பர்சனல் டிரைவர் சிவாவையும் எங்களுடன் அனுப்பி வைத்தார்.
தங்க சங்கிலி பரிசு!
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், எங்கள் குடும்பத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. பின்னர் ஒரு நாள் அவருடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டோம். அப்போது அவர் நடித்த புதிய தமிழ் திரைப்படத்தையும் அங்கு திரையிட்டார். அதன் பின்னர் 12 நாள்கள் வரை சிவாஜி குடும்பத்தினரின் விருந்தினர்களாக நாங்கள் தங்கி இருந்தோம். மும்பையில் நாடகம் நடிப்பதற்காக சிவாஜி வந்தபோது, என் தாய் அவருக்கு சூப் தயாரித்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அமெரிக்கா செல்லும் வழியில் மும்பையில் எங்கள் வீட்டுக்கு சிவாஜி வந்திருந்தார். என்னுடைய தாய் அவருடைய பூஜை ரூமுக்கு சிவாஜியை அழைத்துச் சென்றார். அப்போது சிவாஜிக்கு ஒரு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்தார். அவர் அமெரிக்கா சென்றுவிட்டு, மீண்டும் மும்பை வழியே வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார்.
சிவாஜி தந்த பரிசு
சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடந்தபோது, நான் ஹோட்டலில் தங்க நேர்ந்தது. ஆனால், வீட்டுக்கு ஒரு முறையாவது வந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். சில நேரங்களில் அவர் உடல்நிலை சரியில்லாதபோதிலும், ஹோட்டலுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார். அவரது மகளை அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்வார். எனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து எனக்குப் பரிமாறுவார்கள். இதை என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாது. நாங்கள் அவருடைய தமிழ்ப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு தனியாக ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். 'தேவன் மகன்' திரைப்படத்தை நாங்கள் அப்படித்தான் பார்த்தோம். ஒவ்வொரு தீபாவளியின் போதும் சிவாஜி சார் எங்களுக்கு புதிய உடைகள் அனுப்பி வைப்பார். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி சாருக்கு ராக்கி கயிறு அனுப்பி வைப்போம்.
அன்னை இல்லத்தின் கடவுள்
ஒவ்வொரு முறை அவர் வீட்டில் தங்கும்போதும், வீட்டில் உள்ளவர்களிடம், ஷூட்டிங் கிளம்பும் முன்பு, எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைச் சொல்லி அதை மட்டும் பரிமாறும்படி சொல்லி விட்டுச் செல்வார். ஷூட்டிங் முடிந்து வீட்டு வந்த உடன், என்னைப் பற்றி அவர் விசாரிப்பார். சிவாஜிசாரின் தாய் இறந்தபோது, நானும், ஆஷாவும் வந்திருந்தோம். சிவாஜியின் அன்னை இல்லத்தின் கடவுளாக அவரது தாயார் இருந்து வந்தார்.
சிவாஜியின் சகோதரர்களும் அவருடைய வீட்டிலேயே வசித்து வந்தனர். அவரது சகோதரர் இறந்தபோது, சிவாஜி மிகவும் துடித்துப் போய்விட்டார். அவரது மரணத்தை பெரிய இழப்பாகக் கருதினார். சண்முகத்தின் இழப்பை சிவாஜியின் மகன் ராம்குமார்தான் சரி செய்தார்.
நடிகர் பிரபுவும் அவரது தந்தையைப் போலவே எங்களிடம் பாசமாக இருக்கிறார். சிவாஜி என் தந்தையைப் போலவே, அவர்களின் குடும்பத்தினர் மீது பாசமாக இருந்தார். கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார்.
சிவாஜி சாருக்கு இந்தி மொழி தெரியும். எனவே, எங்களிடம் பேசும்போது இந்தியில் பேசுவார். ஒரு முறை அவருடைய மனைவி அணிந்திருந்த நெக்கலஸைப் பாராட்டினேன். உடனே அவர், கமலா என்று அவரை அழைத்து, அதை எனக்குக் கொடுக்கச் சொன்னார். இது போன்று எனக்குப் பல பரிசுகளை அவர் கொடுத்திருக்கிறார்.
சிவாஜி சார் இறக்கும் முன்பு அவரை நேரில் சென்று என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு பாடல் பதிவுக்காக, இளையராஜா சார் மும்பை வந்திருந்தார். அவரிடம் சிவாஜி சார் பற்றிக் கேட்டேன். அவர், ‘சிவாஜி சார் உடல் நிலை கவலைக்கு உரியதாக இருக்கிறது. நீங்கள் அவரை சென்று பார்த்து வாருங்கள்’ என்று சொன்னார். ஆனால், அன்று இரவு ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று விட்டேன். நான் மீண்டும் மும்பை வந்த பின்னர், முதலில் சிவாஜி சாரை சென்று பார்க்க வேண்டும் என்று என் சகோதரி மீனாவிடம் சொன்னேன்.
நான் பாரத ரத்னா விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, லண்டனில் இருந்த என்னை அழைத்து சிவாஜி சார் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சிவாஜி சாரிடம் பேசலாம் என்று முயற்சி செய்தோம். முடியவில்லை. ஆனால், அன்று மாலைதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். அவர் மரணம் எங்களிடம் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. அவரைப் போன்ற ஒருவரை இனி எங்களால் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் சிங்கமாக அவர் வாழ்ந்தார். அவரையும், அவரது அன்னை இல்லத்தையும் எங்களால் மறக்கவே முடியாது” என்று லாதா மங்கேஷ்கர் நினைவு கூர்ந்தார்.
Last edited by Barani; 12th July 2017 at 09:46 PM.
-
12th July 2017 09:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks