-
29th January 2018, 09:32 AM
#31
Senior Member
Seasoned Hubber
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - எஸ்.எஸ்.வாசன் விருது
இளையராஜா
இசையின் திசை. தமிழர்களின் உயிர் நரம்புகளுக்குள் ஊடுருவிய ராக ராஜா. தமிழ்த்திரையுலகில் இசைக்கு ஓர் இருண்டகாலம் இருந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்த இதே தமிழ் மண்ணை, இந்தித் திரைப்பாடல்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. அப்போது விடியலுக்கான புதிய பூபாளம், மலைவாழைத் தோப்புகளின் மத்தியில் இருந்து ஒலித்தது. அந்த ‘அன்னக்கிளி’யின் ஒலி, இருட்டைக் கிழித்த இசையின் ஒளி. இளையராஜா என்ற மகத்தான கலைஞனின் வருகைக்குப் பிறகுதான், தமிழர்கள் பின்னணி இசையின் முழுப்பரிமாணத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொண்டார்கள். சிற்பி, ஒரு சிலைக்குக் கடைசியாய்க் கண்களைத் திறப்பதுபோல, படங்களுக்குப் பின்னணி இசைமூலம் உயிரூட்டினார் ராஜா. ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ கேட்டால், காதலிக்காதவர்களுக்கும் காதலிக்கத் தோன்றும். ‘கற்பூர பொம்மையொன்று’ தமிழில் நனைத்த தாலாட்டு. ‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ புரட்சிப் பாடல் கேட்டால் நம் நரம்புகளுக்குள் தீப்பிடிக்கும். தமிழர்களின் தருணங்கள் அனைத்தையும் இசையால் நிரப்பியவர் இளையராஜா. திரையிசையைத் தாண்டியும் ‘திருவாசகம்’, ‘ஹௌ டு நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’ என்ற இசைஞானியின் ஆல்பங்கள் அவரது மேதமைக்கான அழுத்தமான அடையாளங்கள். சிம்பொனிக்கும் சிறப்பு சேர்த்தவை மேஸ்ட்ரோ மேதையின் விரல்கள். ஆயிரம் படங்களைத் தாண்டியும் தொடர்கிறது பாட்டுப்பயணம். நெடுந்தூரப் பயணம் செய்பவர்களுக்கு எப்போதும் ராஜாவே துணை. தாயின் மடி, தலை கலைக்கும் வளையல் கரங்கள், குழந்தையின் மென்மை, பூக்களின் மலர்ச்சி... இன்னும் எத்தனை எழுதினாலும் நிறைவுபெறாத நித்தியக் கலைஞனின் மகத்தான பணிகளுக்கு எஸ்.எஸ்.வாசன் விருது தந்து வணங்கி மகிழ்கிறான் விகடன்!
https://www.vikatan.com/anandavikata...ards-2017.html
-
29th January 2018 09:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks