-
24th March 2009, 01:50 PM
#11
Senior Member
Seasoned Hubber
குரலும் உடம்பும் நடிகனின் கருவிகள்!
2009 வருடத்திற்கான கலைமாமணி நாடகாசிரியர், நடிகர் ந.முத்துசாமிக்கும், பசுபதிக்கும் வழங்குவதாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அறிவித்திருப்பது, ‘கூத்து' என்ற உயர்ந்த கலைப் பண்பாட்டின் மகத்துவத்தை மேலும் உயர்த்திக் காட்டியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புஞ்சையில் பிறந்த முத்துசாமி, கலை உலகில் உதித்தது ஒரு சிறுகதை எழுத்தாளராக. பின்னர், நவீன நாடக இயக்குநரான இவரது படைப்புப் பட்டியல் 60 நாடகங்களைக் கொண்டது. ‘நாற்காலிக்காரர்', ‘அப்பாவும் பிள்ளையும்', ‘குப்பை மேடு', ‘விறகு வெட்டி' போன்ற சமூக விமர்சன நாடகங்கள், ‘ப்ரகலாதன்', ‘பாஞ்சாலி சபதம்', ‘படுகளம்', ‘அர்ஜுனன் தபஸு' என்னும் இதிகாச குறியீட்டு நாடகங்கள், ப்ரெக்ட், கார்ஸியா, லென்ஸ் போன்ற வெளிநாட்டவரின் நாடகங்களைத் தழுவிய படைப்புகள் என இயங்கி வருகிறார் முத்துசாமி.
‘கூத்துப்பட்டறை'யில் (வைகாசி தெரு, சின்மயா நகர்) நாடக ஒத்திகையின் இடையே அவரைச் சந்தித்தபோது..
‘‘சென்னை வாசிகளுக்குக் கூத்தைக் காணும் வாய்ப்பு இருந்திருக்கிறது. தெருக்கூத்து பற்றி ஆராய்ச்சி செய்த ரிச்சர்ட் ஃப்ரெஸ்கா என்ற அமெரிக்கருடனும், புரிசை கண்ணப்ப தம்பிரானுடனும் இந்நகரத்திலேயே பல கூத்து நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். புரிசை கண்ணப்ப தம்பிரானுடன் எனக்குள்ள உறவைச் சொல்லத் தொடங்கினால் அதுவே ஒரு நெடுங்கதையாகிவிடும். கண்ணப்ப தம்பிரான் உயிரோடு இருந்தவரை எங்களுடன் நெருக்கமாக இருந்தார். கூத்துப்பட்டறை 1977-ல் ஆரம்பிக்கப்பட்டது. எனது நண்பர் வீராசாமிதான் இதற்குப் பெயர் சூட்டியவர். எந்த எழுத்தாளருமே கூத்தை ஒரு உன்னதக் கலைவடிவமாக எண்ணி எழுத முற்படவில்லை. தமிழ் சமூகத்தில் கூத்துக்கு மதிப்பு ஏற்பட்டது எப்பொழுது? மரபுக் கலை பற்றி நிறைய பல்கலைக் கழகங்களில் முறையான படிப்பும் ஆராய்ச்சியும் மேற்கொண்ட பிறகுதான்.
நிஜத்தில் இந்திய நாடகம் என்று மொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்தக் கூத்து என்பது யக்ஷ கானத்துடனும் கதகளியுடனும் வேறு பல பிராந்தியக் கலை வடிவங்களுடன் பொது அம்சங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது; விசேஷ நடைகளில், அதாவது ஸ்டைலில், வட்டாரத்திற்கே உரித்தான சில மாறுபாடுகளையும் உணர்த்திக் காட்டுகிறது. நாட்டிய சாஸ்திரத்தில், இசைஞர்கள் எங்கே அமர்வார்கள், நடிகர்கள் எங்கே வேஷம் கட்டினார்கள், பார்வையாளர்கள் எங்கே அமர்வார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அது போலக் கூத்திலும் நிலவியிருக்கிறது. சுவாரஸ்யமான கதையம்சத்தை ஒரு சடங்குத் தன்மையுடன் இணைத்துக் கொடுத்திருக்கிறது இந்தக் கூத்து.
இங்கே, ஏதோ நடிகன் என்றில்லாமல் ஒரு முழு மனிதனை உருவாக்க முயற்சிக்கிறோம். உடம்பின்-மனதின் செயல்பாட்டிற்கு எல்லை உண்டென்றால் அந்த எல்லையை அறிந்து, அதை மீறிச் சொல்கிறோம். பூபாளன் என்ற யுத்தக் கலை நிபுணர் இங்குள்ளவர்களுக்கு உடம்பைக் கையாளும் முறைகளைக் கற்பிக்கிறார். இதனால் பல விதங்களில் உடம்பைப் பயன்படுத்தி, உடம்பு மூலம் தரவல்ல பல வித வடிவங்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சியும் தேர்ச்சியும் பெறுகிறார்கள். இதன் காரணமாக சிருஷ்டித் திறன் பெருகி அவர்களின் உடம்பே பார்வையாளருடன் தொடர்பு கொள்கிறது. நடிகர்கள் வெறுமனே உட்கார்ந்திருந்தாலும் உடம்பானது தொடர்பை நடத்திக் கொண்டு இருக்கும். ஒரு நடிகனுடைய கருவிகள் என்றால் அது அவனுடைய உடம்பும் குரலும் தானே? பசுபதி, கலைராணி, அண்ணாமலை, ஜெயகுமார் -இங்கே உருவானவர்கள் -யாவருமே ஒரு தெளிவும் நிர்வாகப் புத்தியும் உடையவர்களாகத் திகழ்கிறார்கள்.
என் நாடகங்களின் மையக் கருத்து என்று எடுத்துக் கொண்டால், ‘நாற்காலிக்காரர்' ஒரு ‘பொலிடிகல் ஸடையர்' அரசியலில் சம்பந்தப்படாதவரும் அரசியலால் தாக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டியது. எதையுமே தானாகத் தெரிந்து கொள்வதுதான் உசிதம், எல்லாவற்றையும், எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்து வேறு ஒரு நாடகத்தின் மையப் பொருளானது. இப்படி பல ரகம். நவீன நாடகம் எல்லா பிரச்னைகளையும் சொல்லுவதற்கு ஏற்ற களமாகத்தான் இயங்கி வருகிறது.
யுனெஸ்கோ அமைப்பின் கீழ் ஜெர்மனி, இஸ்ரேல், கோஸ்டா ரீக்கா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து வந்த கலையார்வலர்கள் கூத்துப்பட்டறையில் தங்கி எங்களுடன் செயல்பட்டது ஒரு கலாச்சாரப் பரிமாற்றம் எனலாம்.
இந்திய அரசின் கலாசாரப் பிரிவு எங்களுக்கு நாடகம் நிகழ்த்த உதவி அளித்துள்ளது. பொதுவாகவே கலைக்குழுக்களுக்கு வகைமுறையான ஆதரவு கொடுத்துள்ளது. ஃபோர்ட் ஃபௌண்டேஷனும் எங்களை அங்கீகாரம் செய்து நிதிஉதவி வழங்கி கௌரவித்திருக்கிறது. இவையாவும் எங்களது செலவுகளைப் பார்த்துக் கொண்டதோடன்றி எங்களை ஜீவித்திருக்கவும் வைத்தது. போன மாதம் அறிவித்த கலைமாமணி அவார்ட் ஒரு பாப்புலர் ஆன விருது. நிறைய பேர் கூப்பிட்டு வாழ்த்தினார்கள். தேவிகா ராணி அவர்களும் டேபோரா தியாகராஜன் அவர்களும் ‘மெட்ராஸ் க்ராஃப்ட்ஸ் ஃபௌன்டேஷன்' மூலம் பள்ளிக்கு கூத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
http://www.dinamani.com/sunday/sunda...=C%5B%FBU+TdLm
-
24th March 2009 01:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks