-
13th October 2009, 09:54 PM
#11
Moderator
Diamond Hubber
பாசப் போராட்டம்
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் திங்கள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `தாயம்.'
எல்லா விளையாட்டுகளுமே வெற்றியைத் தேடித்தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் மன்னர்கள் பணக்காரர்கள் ஆடும் சூதாட்டத்தின் முடிவில் வாழ்வின் அஸ்திவாரங்களே சுண்டிப் பார்க்கப்படுகிறது. தாயம் விளையாடும்பொழுது உருட்டப்படுவது காய்களை அல்ல, மனிதர்களைத்தான். அந்த தாயக் கட்டைகளை உருட்டுவது தனிமனிதர்களின் கைகள் அல்ல- காலம்.
உண்மை குணங்களை மனதுக்குள் மறைத்துக்கொண்டு பொய் முகங்களுடன் வாழும் பலதரப்பட்ட மனிதர்களைக் கண்டுணர்ந்து உருவாக்கப்பட்டது இந்த படைப்பு.
மகாபாரதக் கதாபாத்திரங்களில் கிராமக் கதைக்கு தேவையான அளவு சுருக்கி வேறு சித்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது கதை.
தொடருக்கான கதை பிறந்த கதை பற்றி கதாசிரியர் ஆர்.செல்வராஜ் கூறியதாவது:-
``போரில் தோல்வியடைந்து அழிந்து போனவர்களை விட வெற்றி பெற்று வாழ்பவர்கள் தான் அதிகம் வேதனையடைவார்கள் என்று கவுதமபுத்தர் சொன்னார்.இந்த வார்த்தைகளை கேட்டுத்தான் கலிங்க யுத்தத்தில் வென்றும் மனநிம்மதியில்லாமல் தவித்த மாமன்னன் அசோகன் புத்தமதத்தை நோக்கி நகர்ந்து சென்றான்.
கவுதமரின் அதே வார்த்தைகளில் உள்ள உண்மை நிறைந்த சொல்லே தாயம் என்ற நெடுந்தொடரை உருவாக்க முனைப்படுத்தியது... அதற்கு நிகழ்வாக ஆசை- பேராசை- தியாகம் என்ற வார்த்தைகளுக்கு அளவுகோல் தெரியாமல், ரத்தத்தை தவிர வேற எந்த மருந்திலும் குணமாகாத பங்காளி காய்ச்சலை இதில் முன்னிலைப்படுத்தியிருக்கிறேன்.
வயல்வரப்புக்களுக்கு மட்டுமல்ல, மனதிற்குள்ளும் சீனாவின் நெடுஞ்சுவரைப் போல் உறவுகளையும் உண்மைகளையும் பிரித்துக் கொண்ட கிராம பெருங்குடி மக்களின் கதை இது.
சூதாட்டத்தில் வஞ்சகமாக தோற்கடிக்கப்பட்ட பின்பும்..
ஐந்து கிராமங்கள்... இல்லாவிட்டால் ஐந்து வீடுகள்...அதுவும் இல்லையா...ஒரு வீடு...ஒரு கைப்பிடி மண்... என்று நீதி கேட்ட ஐந்து சகோதரர்கள் எதுவும் கிடைக்காததால் தன்மானத்தை, பூர்வீகச் சொத்துரிமையை மீட்க நடத்திய போராட்டத்தில் அநீதியை தோற்கடித்து வெற்றி பெற்றாலும், வன்முறை உயிர்ச்சேதம் என்று ஆனதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார்கள்.
தண்டனை முடிந்து வெளியே வந்த பின்புதான், வீரம் விளைந்த பூமியில் வெண்தாமரை பூக்களாய் விதவைப் பெண்கள் தொலைந்து போன குடும்ப வாழ்க்கையை கண்ணீரில் தேடிக் கொண்டிருப்பதை பார்த்து துடித்துப் போனார்கள். யுத்தம் வேண்டாம் என்று அறுந்து போன வம்சநூல்களைப் பார்த்து கதறியழுதார்கள்.
பெருந்தேவி பட்டம்மா என்ற வயதான தாயும் சோளப்பூ என்ற ஆண்டாள் நாச்சியாரும் ஐந்து சகோதரர்களும்...அவர்களின் குடும்பங்களும் இறந்தவர் குடும்பங்களாலும் பிரிந்தவர்கள் குடும்பங்களாலும் சந்தித்த பாசப் போராட்டம்தான் தாயம்..''
தொடரில் ராஜேஷ், வடிவுக்கரசி, சுதாசந்திரன், காவேரி, பூரணி, சாக்ஷி சிவா, கரிகாலன், அஜய்ரத்னம், அஷோக், ஓ.ஏ.கே.சுந்தர், பி.ஆர்.இளவரசன், அன்பு நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் : `அன்னக்கிளி' ஆர். செல்வராஜ்.
இயக்கம்: ஜே.பன்னீர்
ஒளிப்பதிவு : ஜி.கனகராஜ்
பாடல்கள்: வைரமுத்து
இசை: ராஜேஷ் வைத்யா
கிரியேட்டிவ் ஹெட் : நித்யானந்தம்,
`மீடியா ஒன்' குளோபல் எண்டர்டெயின்மென்ட் சார்பில் தொடரை தயாரிப்பவர்: சூரியராஜ்குமார்.
[html:b22dfb533d]<div align="center">[/html:b22dfb533d]
நன்றி: தினமலர்
-
13th October 2009 09:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks