-
3rd November 2009, 03:35 AM
#11
Moderator
Diamond Hubber
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது!
"தங்கம்' தொலைக்காட்சி தொடரில் ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்துகொள்ளும் கலெக்டர் வேடத்தில் நடித்திருப்பவர் கே.கே. அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது சுவாரஸ்யமான ஒரு தகவல். அது என்ன என்பதை அவரே சொல்கிறார்.
""நான் "பாலாஜி டெலிஃபிலிம்ஸ்' நிறுவனத்துக்கு போயிருந்தேன். அப்போ எனக்கு ஃபோன் வந்தது. நான் ஃபோன் எடுத்துப் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அந்த ஆள் நம்மளையே பார்க்கிறாரேன்னு நான் வேறு பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தேன். அப்போதும் அவர் என்னை கவனித்துக் கொண்டிருந்தார். நான் பேசி முடித்ததும் அந்த ஆள் என் அருகே வந்து, ""உங்களுக்கு நடிக்க விருப்பமா?''னு கேட்டார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இருந்தது எனக்கு! தலையாட்டினேன்.
""நீங்க இப்பவே ஒருத்தரை போய் சந்திக்கணும்''னு சொல்லி ஒரு முகவரி கொடுத்துட்டு அவர் ஃபோன்ல யாரிடமோ, ""நமக்கு ஹீரோ கிடைச்சாச்சு'' என்றார். எனக்கு ஒன்னும் புரியல. நம்மளை வைத்து காமெடி கீமெடி பண்றாங்களா?ன்னு முழிச்சேன். இருந்தாலும் அவங்க கொடுத்த முகவரிக்குச் சென்றேன். அங்கே ரம்யாகிருஷ்ணனின் தங்கை வினயா கிருஷ்ணன் இருந்தார். டி.வி.நிறுவனம் என்றதும் எனக்கு பக்குன்னு இருந்தது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வராதா?ன்னு முயற்சி செய்துகிட்டிருந்த எனக்கு டி.வி. சீரியல் என்றதும் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. ஆனால் பெரிய நடிகையான ரம்யாகிருஷ்ணனுடன் நடிக்கும் வாய்ப்பு என்றபோது மறுக்கவும் மனம் வரவில்லை. உடனே ஒத்துக்கிட்டேன்.
நான் நடித்த கேரக்டருக்காக ஒன்றரை மாதக் காலம் தேடியிருக்காங்க. யாரும் பொருத்தமா அமையல. அதனால் என்னைக் கிடைத்த மறு நாளே ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க. என்னைப் பார்த்து, ""நடிக்க விருப்பமா?''ன்னு கேட்டவர் ஸ்கிரிப்ட் ரைட்டர் அசோக் குமார். என்னை நடிக்கத் தேர்வு செய்தவர் ரம்யாகிருஷ்ணனின் தங்கை வினயா கிருஷ்ணன்.
இன்னைக்கு எங்கே போனாலும் ரசிகர்கள், ""நீங்க கலெக்டர்தானே?''னு கேட்கிறாங்க. மக்களுக்கு என்னை நல்லா அடையாளம் தெரியுது. அந்தளவுக்கு அந்தப் பாத்திரம் மக்களிடம் "ரீச்' ஆகியிருக்கு. இதுவரைக்கும் பதிமூன்று நாள்தான் நடிச்சிருக்கேன். அதுக்குள்ள இவ்வளவு புகழ் கிடைக்கும்ன்னு நான் எதிர்பார்க்கல.
""நீங்க ஐ.ஏ.எஸ். படிச்சவரா?''ன்னு சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ஒருத்தர் கேட்டார். உண்மையில் நான் படிக்கும்போதிலிருந்தே நடிப்புன்னு இருந்ததால எம்.ஏ.எக்கனாமிக்ஸ் வரைதான் படிச்சேன். அவர் அப்படி கேட்டதும் நான் ஐ.ஏ.எஸ். படித்த மாதிரி இருந்தது.
மலையாளத்தில் வில்லன், அண்ணன், தம்பின்னு நாற்பத்தி ரெண்டு படங்களில் நடித்து விட்டேன். தமிழில் வில்லனாக நடிக்கணும்னு வந்திருக்கேன். கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் கண்களில் பட மாட்டோமா? நமக்கு வாய்ப்பு கிடைக்காதா? என்று முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். அதற்குள் இந்த கலெக்டர் வாய்ப்பு வந்து என்னை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கு. இருந்தாலும் சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்து வர்றேன். என் திறமையை நிரூபிக்கக் கூடிய நல்ல வேடங்கள் கிடைத்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்'' என்றார் கே.கே. என்ற கிருஷ்ணகுமார்.
இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. காரணம், நடிகர் ஜெயராம் போன்று நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். பிழைத்துக் கொள்வார்.
-
3rd November 2009 03:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks