Why couldn't a girl be queenly, and give the gift of herself- DH Lawrence (Lady Chatterley's Lover)
ராணியை ராணியாகவே இருந்துகொண்டு ரசிக்க ராஜா வேண்டுமே.
அது சரி, எனக்கு இங்கு என்ன வேலை?
என் இசை ரசனை கொஞ்சம் மட்டு என்று பலமுறை அங்கலாய்த்திருக்கிறேன். இதைக் கேட்டக் கேட்டு எரிச்சலடைந்த நண்பர்கள் தவிற, புதுஅறிமுகமாக கிடைக்கும் (சிக்கும்?) meesicalகள்
'இசையை ரசிக்க இரு காதுகள் இருப்பதே போதுமான தகுதி' என்பது போன்ற தாட்சண்யமான வார்த்தைகள் சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
'படிப்பதற்கு இரு கண்கள் போதும்' என்று நான் யாரையாவது மனமாற சொல்லமுடிந்தால்தான் பிரபஞ்சம் சமநிலை எய்தும். நல்லிலக்கியம், உலக சினிமா என்று என் கழிவிரக்கப் பட்டியல் நீளமான ஒன்று. அவ்வத்திரிகளில் வெளிப்படையாகவும், க்ரூரமாகவும், பூடகமாகவும் இதைத் தெரிவித்துக்கொண்டு வருகிறேன். என் ரசனையின் நிறைகுறைகளைப் பற்றி படிப்பவர்களுக்கு அக்கறை உண்டு என்று ஏனோ எனக்கொரு நம்பிக்கை.
இசையைப் பற்றிப் பேச போதுமான vocabulary என்னிடம் இல்லாத நிலையில், அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியே ஓரளவேனும் சொல்ல இயலும். அதிலும் சாகரத்தில் மூழ்காமல் அலைகளில் மட்டுமே கால்நனைத்தவனின் lack of proportionஇலிருது தப்புவதற்கில்லை. இவற்றையெல்லாம் மீறி இங்கே எழுதக் காரணம்: ரோஜாப் பூ ஆடிவந்தது (அக்னி நட்சத்திரம்).
போதுமான அளவு ராஜா பாடல்களைக் கேட்காதவர் மட்டுமே செய்யக்கூடிய செயலான 'ஆகச்சிறந்த பாடற்தொகுப்பு என்று ஒன்றை தேர்வு செய்வது', என்று வந்தால் என் தேர்வு: அக்னி நட்சத்திரம். அதில் 'ரோஜாப்பூ ஆடிவந்தது' இவ்விழையில் குறிப்பிடந்தகுந்த ஒன்று.
ceteris paribus, தலைவனுக்காக தலைவி ஏங்குவது என்பது தலைவிக்காக தலைவனுக்காக ஏங்குவதைக் காட்டிலும் கண்ணியக்குறைவானது என்ற எண்ணம் பொதுபுத்தியில் உள்ளது (என்னமோ அப்புத்தியிலிருந்து எனது மிக வித்தியாசமான ஒன்று என்று காட்டிக்கொள்ள முனைகிறேன் வாசகரே, கவனம்). சிறப்பாம்சத்தில் கவனமிலாது, பரவலை விரும்பும் ஆண்மனத்திற்கும், சிறப்பான ஒன்றை தேடும் கூர்நோக்கான பெண்மனத்திற்கும் சொல்லப்படும் உடலியல்/ பரிணாமவளர்ச்சி சார்ந்த காரணங்கள் புரிந்துகொள்ளத்தக்கதே. இங்கே கொதிப்படையும் பெண்ணியவாதிகள் மேலே படிக்காமல் கொஞ்ச நேரம் நற்றிணையில் லயித்திருங்கள்.
பெண்ணை எளிதான கிடைபொருளாகச் சித்தரிப்பதிலுள்ள பொய்யும், முரணுமே Erotica-வின் வேர்.
அதி நெருக்கத்தில் மட்டும் திறக்கும் மடையை அடைக்கும் சமூகத் தாழை, பொதுவில் விலக்கும் பாவனை செய்யும் படைப்புகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. (இவ்விடத்தில் சங்ககாலம், விக்டோரிய ஒழுக்கக்கோட்பாடு பற்றியெல்லாம் அளக்கவேண்டியது கட்டுரையாளனின் கடமை. ஆனால், அவற்றைப் பற்றி உறுதியான ஒற்றைப் பரிமாண வரலாற்றுப் புரிதல்களை எட்டிவிடும் நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் நீங்கள் பிழைத்தீர்கள்.) நெருக்கத்தில் வெளிப்படும் தன்மையை இயல்புச்(!) சமநிலையிலிருந்து நோக்கும்போது கிடைக்கும் தோற்றம் வேறானது. பல சமயம் அருவருப்பானது. ஆண் தன்னைப் பற்றியே மிக வித்தியாசமாகமாக உணரக்கூடிய சிந்தனைப்பாதை அது. ஆனால் அந்த சுயநோக்கு (introspection) மூலம் அவனது 'பெண்ணின் தன்மைமுரணை'ப்பற்றித் தோன்றும் சிந்தனைகள் மட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மிகையே
Life is Elsewhere என்ற புதினத்தில் மிலன் குந்தெரா இப்படிச் எழுதுவார்: a great love, which abruptly arrives like a lightning bolt, frees a woman at one stroke from all shame and inhibition.... love frees in her such a powerful source of unexpected inspiration that her spontaneous behavior can resemble the expert procedures of a depraved woman.
இதில் உள்ள depraved woman என்கிற பதத்தைக் கூட ஒரு ஆணீயப் பார்வை என்று இன்று சொல்லலாம் தான்.
நெருக்கமற்ற சூழல்களில் 'வேட்கை அழைப்பாக' தொனிக்கும் பாடல்களில் உள்ள மிகைக்கற்பனை/அதீத சித்தரிப்பு இருப்பது ஏன்? அதன் கண்ணியமின்மையும் ரசிகானுபவத்தின் பகுதியாக இருப்பதால் தான்.
'எண்ணுள்ளே என்னுள்ளே' பாடலை கண்ணியக்கொழுந்தாகவும் முனகல்மிகு 'ஏகாந்த வேளை' பாடலை கண்ணியலோபமாகவும் நாம் கருதுவது இயற்கைதானே. இரண்டாம் வகைப் பாடல்களை ஆத்மார்த்தமாக ரசித்தவர்கள் அரிதாக இருக்கலாம். என்னதான் இசை, 'புத்தியின் குறுக்கீடு இல்லாமல் ரசிக்கப்படக்கூடிய ஒரே கலை' என்றாலும், ஏதோ ஒரு வகையில் இரண்டாம்வகைப் பாடல்களை ரசிப்பதில் ஒரு குறுக்கீடு இருக்கத் தான் செய்கிறது. செய்நேர்த்தியை, அதன் patently trashy-தன்மையை மிகுந்த பிரக்ஞையுடன் தான் ரசிக்கிறோம்.
இவ்வகைப் பிரிவினைகளில் தெரிவது நமது மேற்பூச்சு மாயைதான். நாகரீகம் என்பது மேற்பூச்சு சம்மந்தப்பட்டது என்பதால், இதை ஒதுக்கிவிடமுடியாது. இப்போது பாட்டுக்கு வருகிறேன் (ஒரு வழியாக!)
ரோஜாப்பூ முதல்வகை வேடம்பூண்ட ஒரு இரண்டாம்வகைப் பாடல். "தாகம் தீருமா" என்ற சீண்டும் வரியைத் தவிற தொனியில் வெளிப்படையான சுண்டியிழுப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பலமான வாத்திய அமைப்புள்ள பாடல் என்பதால் மிக ஆழ்ந்து கேட்டால் மட்டுமே வரிகள் பிடிபடும். வரிகள் (மெட்டுடன் மிகச்சிறப்பாக இணைபவை் அனால்) நேரடியானவை. எவ்வித பூடகமான குறிப்புணர்த்துதல்களும் கையாளப்படவில்லை. வேகமான மெட்டு, தாளவாத்தியங்கள் , இடையிசைச் சரங்களில் (interludes) உள்ள ஒரு வித துள்ளல் தன்மை (celebratory) எல்லாம் ஒரு வித 'சுத்திகரிப்பை' சாத்தியப்படுத்துகின்றன.
நமது கண்ணியத்தயக்கத்தை bypass செய்து 'நேரடியாக' ரசிக்க செய்திருக்கிறார்.

ராஜா
பின்குறிப்பு
1) இத்தன்மை இப்பாடலுக்கு பிரத்யேகமானது என்று சொல்லவில்லை. இதுபோல பற்பல இருக்கலாம். சமீபத்தில் இப்பாடல் பற்றி இவ்வாறு தோன்றியது. இங்கே இறக்கி வைத்து விட்டேன்.
2) இத்தன்மை இப்பாடலின் attribute அல்ல, எனது மிகைவாசிப்பே என்பீர்களாயின: நிச்சயமாக இருக்கலாம். 'பிடித்துப்போவதற்கெல்லாம் வியாக்கியானம் தேடக்கடவது' என்றொறு ரிஷி போன ஜென்மத்தில் என் மீது கமண்டலநீர் எரிந்திருக்கலாம். என்னைச்சொல்லி குற்றமில்லை. ரிஷிபத்தினி இதுபோல ஒரு பாடலப் பாடியிருந்திருக்கலாம். :P
Bookmarks