
 Originally Posted by 
makkal thilagam mgr
					
				 
				பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 19வது திரைப்படம் "மோகினி" -  கதைச்சுருக்கம்  ==================================================  ==================================================  ===========
மன்னன் சதியபாலனுக்கு மோகினி என்றொரு மகள்.  மோகன் என்றொரு மகன்.  மன்னனுக்கு அதிசயப் பொருள்களின் மீது அலாதியான ஒரு மோகம். .... மகள் மோகினி, நாட்டின்  படைவீரன் விஜயகுமாரை காதலித்ததை அறியவோ, அறிந்து அதற்கு ஆவன செய்யவோ அவருக்கு அவகாசமில்லை.  ..........  அவகாசமில்லை என்பது மட்டுமல்ல... அவர்களின் தூயக் காதலுக்கு அவரே ஆபத்தாக மாறினார்.
ஆண்டுதோறும் அரசனின் பிறந்த தின விழா ஆடம்பரமாக நடக்கும்.   அப்போது அவருக்கு அதிசய பொருட்கள் பரிசளிப்பதும், பதிலுக்கு அவர் தகுதியான சன்மானங்கள் வழங்குவதும் வாடிக்கை. 
இந்த வருஷ பிறந்த தின விழாவின் போது கொண்டுவரப்பட்டது உலகத்தின் மிகப் பெரிய அதிசயமென்று யாவரும் கருதிய ஒரு விநோதப் பொருள்.....  விண்ணிலே பறக்கும் ஓர் மண் குதிரை... அதன் சிருஷ்டி கர்த்தா அந்த ஊரைச் சேர்ந்த காளிநாதன்.  
இளவரசி மோகினியை இதற்கு முன் அவன் பார்த்திருந்ததால் இன்று தன் குதிரைக்கு சன்மானமாக அரசனிடம் அவளையே கேட்கிறான்.  காளிநாதன்  குதிரைக்கு கூறிய விலையைக் கேட்டதும் கட்டழகி மோகினி மூர்ச்சித்து விடுகிறாள்.  மறு தினம் வரையில் அவை கலைக்கப்படுகிறது 
இந்த இடைவேளையிலே வெளியூர் சென்றிருந்த இளவரசன் மோகன் திரும்பி விட்டான்.  தங்கையின் காதலை அவன் ஆதரித்து ஆமோதித்தவன்,  எனவே, அதற்கு இடையூறாக நின்ற பறக்கும் குதிரையையும் அதன் கர்த்தா காளிநாதனையும் இல்லாமல் செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.  
அடுத்த தினம் அவை கூடியபோது, குதிரையை தானே பரிஷிக்க வேண்டுமென்ற காரணம் கூறி குதிரையுடன் ஆகாயத்தில் தாவினான் இளவரசன் மோகன். .... அஸ்வத்தை (குதிரையை)  அதிக தூரம் கொண்டு போய் சுக்கு நூறாக நொறுக்கி விடுவது என்பது அவன் திட்டம்.   புறப்படும் முன் ஒரு விஷயம் தெரிய மறந்து விட்டான் மோகன்.  ...........ஆகாயத்திலே பறக்கும் குதிரையை, மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதெப்படி என்பதை அவனும் தெரிந்து கொள்ளவில்லை......  காளிநாதனும் வேண்டுமென்றே அதனை அவனிடம் சொல்லவுமில்லை. 
பறக்கிறான் பறக்கிறான் பறக்கிறான் ...... முடிவு என்னாகும் என்பதே தெரியாமல் பறக்கிறான் மோகன். 
அரண்மனையிலே காத்திருந்து பார்த்தார்கள்.   மோகன் திரும்ப வில்லை.  மன்னனுக்கு கலக்கம்.  மகன் திரும்ப வில்லையே என்று.  காளிநாதனுக்கு களிப்பு ...  ஆத்திரக்காரன் எங்கேயாவது கற்பாறையிலே மோதி அழிந்து  போவான் என்று. 
தெய்வாதீனமோ ... மோகனின் நல்லென்ணந்தானோ தெரியவில்லை.  அணுகி வந்த அபாயம் விலகிற்று. .... விலகி,  மனோஹரமான ஒரு மாளிகையின் உப்பரிகையிலே  அவனைக் கொண்டு வந்து சேர்த்தது.  ...... உள்ளிருந்து வந்த மதுர கீதம் கேட்டு, மோகன் கானத்தின் திசை நோக்கி சென்றான்.  ஒரு வினாடி சந்தேகித்தான்.  .... தான் காண்பது மனதை மயக்கும் ஸ்வர்க்கமோவென்று  ......  அலங்காரமான  மாளிகை,  தேவமாதுகள் போன்ற தோகையர்.  பிறகுதான் புரிந்தது அங்கே நடம் புரிந்தது அந்நாட்டு மன்னன் மகள் குமாரியும் அவள் தோழிகளுமென்று.
மோகனும், குமாரியும், ஒருவரையொருவர் பார்த்தனர்  மறு கணம் ஒருவர் உள்ளத்தை மற்றவர் பகிர்ந்து கொண்டனர்.                   காதலிலே கனிந்து கனிரசமான வார்த்தைகள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வந்து விட்டான் குமாரியின் தந்தை          
தன் சேனாசைன்யங்களோடு (படை பரிவாரங்களுடன்).  ஆடவர்களையே தன் மகன் பார்க்கலாகாதென்ற ஆணித்தரமான        ஏற்பாடுகள் செய்திருந்த அவன் குமாரி இருந்த நிலை கண்டு குமுறினான்  அப்பப்பா ............  அங்கிருந்து தப்பிப் போவது    
அரும் பாடாகி விட்டது மோகனுக்கு.   
 எதிர்பார்த்தற்கு மேல்  நாட்கள் பல ஆகி விட்டதினால், மோகினிக்கும் விஜயகுமாருக்கும் மோகனைப் பற்றி திகில் ஏற்பட ஆரம்பித்து விட்டது.  விஜயன் (விஜயகுமார்) மோகனோடு அல்லாமல் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்ற சங்கல்பத்தோடு புறப்பட்டு விட்டான்.
சற்று தாமதித்திருந்தால்,  விஜயன் புறப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது.  மோகன் திரும்பி விட்டான்.  திரும்பியவன் காளிநாதனை நாடு கடத்த வழி செய்து விட்டான். ஆனால் தங்கை  மோகினியிடம் மட்டும் உண்மை சொன்னான் - குதிரை நொறுக்கப்படவில்லை என்பதை.  குதிரையின் உதவியால் குமாரியை கண்டதை,  குதிரையை ஊருக்கடுத்த மலைக்கோவிலில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருப்பதை.  ரகசியமாக தங்கையிடம் சொன்ன இந்த வார்த்தைகளை மறைந்திருந்து கேட்டு விட்டாள் காளியம்மா.  காளியம்மா ஒரு அரண்மனை தோழி.  ஜம்புவின் மேல் அபாரமான காதல். ஜம்பு காளிநாதனின் நம்பிக்கை மிகுந்த சிஷ்யன்.  குரு நாதா, குரு நாதா என்று ஜம்பு காளிநாதனுடன் சுற்றுவது அவளுக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை 
ஜம்பு தன்  எஜமானனோடு நாட்டை விட்டு வெளியேற உறுதி கொண்டு விட்டதால்,  அவனை தடுக்கும் எண்ணத்தோடு குதிரையைப் பற்றி அவள் (காளியம்மா)  தெரிந்த ரகசியத்தை அவனிடம் (ஜம்புவிடம்) சொல்ல என்ன்ணினாள். 
இராப் பொழுதினிலே...... மோகனுக்கு தூக்கம் வர வில்லை. குமாரியைப் பற்றி ஓயாத நினைவுகள் வந்தன.  பறக்கும் குதிரையின் உதவி கொண்டு யாருமறியாமல் மீண்டும் அவளைப் பார்த்துவிட்டு திரும்புவதேன்று புறப்பட்டான்.                                
குமாரியைக் கண்டதும் தகுந்த காரணம் சொல்லி அவளுடன் தன் தேசம் வந்தான்  வந்தவன் அதே மலைக்கோவிலில் குதிரையையும், குமாரியையும் விட்டு விட்டு அரண்மனை போனான். ஏராளமான பரிவாரங்களுடன், மேள தாளத்துடன் குமாரிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு தர வேண்டுமென்ற எண்ணத்தோடு. 
குதிரை மலைக்கோவிலில் இருப்பது காளியம்மா மூலம் தெரிந்திருக்கவே,  நாடு கடத்தப்பட்ட ஜம்புவும், காளிநாதனும் அங்கே வர,  குதிரையுடன் குமாரியும் இருப்பதை கண்டார்கள்.....  தந்திரமாக அவளிடம் வார்த்தையாடி அவளை அழைத்துக் கொண்டு ஆகாயத்திலே பாய்ந்து விட்டான் காளிநாதன்.  ஜம்புவும் கூடவே போய் விட்டான்  
மோகன் மலைக்கோவிலுக்கு வந்தான்.  குமாரியுமில்லை குதிரையுமில்லை.  மனமிடிந்து போனான்.  குமாரி இல்லாமல்  இனி நாடு திரும்புவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டு, தங்கை மோகினியையும், காளியம்மாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான். 
மோகனை தேடச் சென்ற விஜயகுமார் கள்ளர் கூட்டம் ஒன்றினால் கைப்பற்றப்பட்டான்.   
முற்றிலும் அன்னியாயமான ஒரு நாட்டிலே, குமாரியுடனும், ஜம்புவுடனும் பறக்கும் குதிரையிலே எந்த வினாடியில் காளிநாதன் வந்து இறங்கினானோ தெரிய வில்லை.  அது முதல் அவனுக்கு ஆரம்பமாயிற்று அளவில்லாத அவஸ்தைகள்.  அந்நாட்டு மன்னன் ஜெயசிங்கிடம் அவனும் குமாரியும் பிடித்துச் செல்லப்பட்டார்கள்  நல்ல வேளையாக ஜம்பு தப்பித்துக் கொண்டான்...... வேந்தன் முன் விசித்திரமான விசாரணை நடந்தது.  விளைவு,  காளிநாதன் காராகிரகத்திலும், குமாரி அரண்மனை அந்தப்புரத்திலும் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்.   பாதுகாப்பில் வைக்கப்பட்ட பெண்ணிடம்   பக்குவமாக பேசி அவளை தன் 
ஆசை நாயகியாக்க எண்ணியிருப்பதை ஜெய்சிங் குமாரியிடம் வெளியிடுகிறான்.  அவ்வளவுதான்.  பயித்தியம் பிடித்து விடுகிறது அவளுக்கு. 
ஜம்புவுக்கு குரு பக்திதானே வாழ்க்கை லட்சியம்,  காளிநாதன் சிறைப்பட்டதிலிருந்து, அவனை விடுவிக்க வேண்டும் என்று ஒரே ஏக்கம்.  ஒரே துடிப்பு.  ஆனால் அதற்கு தேவையாக இருந்தது ஆயிரம் பொன் நாணயங்கள்.  .... எங்கே போவான் ஜம்பு ?  பாவம்.
அந்த சமயத்தில்தான் அந்த ஊர் வந்து சேர்ந்தார்கள் மோகனும், மோகினியும், காளியம்மாவும்.  அவர்களைக் கண்டான் ஜம்பு.  காளியம்மவிடம் குதித்தோட வெண்டுமென்று துடித்தது அவன் மனம்.  ஆனால் நெருங்க அவனுக்கு  தைரியமில்லை மாறு வேடத்தில் மறைந்து கொண்டான்.  மறுபடியும் அவர்களை வந்து பார்த்தான், வயது முதிர்ந்த ஒரு கிழவனாக.  குமாரியும், பறக்கும் குதிரையும் அரண்மனையிலே இருக்கும் விபரம் மோகினியிடம் சொன்னான்.    
  .                                      
இவர்களுக்காக உணவுப் பொருள் வாங்கி வரப் போன ஜம்புவுக்கு இரண்டு பிரதானமான பிரச்சினைகள். ....... எஜமானை விடுவிப்பது எப்படி?  காளியம்மாவைக் கண் குளிரக் கண்டு அவளுடன் மனம் குளிரப் பேசுவதெப்படி ?  சிந்தித்துக் கொண்டே சிறிது தூரம் போனவன் காதிலே கேட்டது -  இப்படி ஒரு பேச்சு.  "ஆயிரம் பொன் தானே -  வாங்கி கொள்ளுங்கள்" என்று.  சப்தம் வந்த இடத்தை உற்று  கவனித்தான்.  ஆயிரம் பொன்னுக்காக, ஒரு பெண்ணை விற்கும் காஷி அவன் கண்ணிலே பட்டது.  உடனே அவனது பேய் மூளை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.  
ஜம்பு திரும்பியதும்,  முதல் வேலையாக மோகனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான்.  மோகினியும்,  காளியம்மாளும் நன்கு தூங்கும்போது, காளியை எழுப்பி தனியாக அழைத்துப் போய் தன் திட்டங்களை வெளியிடுகிறான்.  .... எஜமானத் துரோகம் செய்ய காளியம்மா கண்டிப்பாக மறுத்து விடவே,  அவளை ஒரு கம்பத்திலே கட்டி விட்டு மோகினியிடம் கள்ள மொழியாடி, அவளைக் கொண்டு போய் ஆயிரம் பொன்னுக்கு மாற்றி விடுகிறான்  மறு வினாடி தன் எஜமனனையும் விடுதலை             
செய்கிறான்.  
அரண்மனைக்கு சென்ற மோகன், பக்கிரி வேஷம் பூண்டு, பக்குவமாக அரசனை ஏமாற்றி, குமாரியின் பயித்தியம் நீக்க, அவளையும் அவள் பயித்தத்துக்கு காரணமான பறக்கும் குதிரையையும் வைத்து பெரியதோர் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறான்.  பூஜையின்போது ஒரு புகை மண்டலம் எழுப்பி அதன் மறைவிலே குமாரியுடன் தப்பி விடுவதென்பது அவன் திட்டம்.
அவன் நினைத்தது நடக்க வில்லை.  வெறி பிடித்தவன் போல மாறு வேடத்தில் வெளியே சுற்றிக் கொண்டிருந்த காளிநாதன் அந்த ஏற்பாட்டுக்கு யமனாக மாறுகிறான்.  மோகன் நினைத்தது நடக்க வில்லை என்பது மட்டுமல்ல, குமாரி மறுபடியும் கூண்டில் அடைபட்டாள் என்பதுடன் மோகனும் சிறை புக வேண்டியதாயிற்று. எந்த காளிநாதன் அவனுடைய எண்ணங்களுக்கு எதிரியாக விளங்கினானோ  அந்த காளிநாதன் ஜெயசிங் அரண்மனையிலே இன்று சர்வாதிகாரி.  
மோகனின் கதி என்னவாயிற்று ?  விஜயகுமார் என்னவானான் ?   மோகினியும்,.குமாரியும் தத்தம் காதலர்களை      அடைந்தார்களா ?   கல்நெஞ்சக் காளிநாதனுக்கு என்ன முடிவு ?    ஜம்பு செய்த துரோகங்களுக்கு அவன்  அனுபவித்தது என்ன ?            
என்றெல்லாம் கேள்விகளைப் போட்டு எல்லாவற்றையும் திரையிலே காணுங்கள் என்ற ஒரு   பதிலும் எழுதுவதுதான்    
கதைச்சுருக்கங்களின் கடைசிக் கட்டம்.
நல்லோர் சுகம் பெற, தீயோர் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதுதான் இந்தக் கதையும்.  எப்படி ?.. என்பதுதான் இந்தக் கதையிலும் மிக சுவாராஸ்யமான பாகம்.  எழுதி தெரியக் கூடியதல்ல.  பார்த்து பரவசப் பட வேண்டிய பாகம்.  
- சுபம் - .  
                  
==================================================  ============================================
இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது. 
அன்பன் : சௌ. செல்வகுமார் 
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன்
			
		 
	
Bookmarks