-
23rd July 2014, 03:02 PM
#471
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
6. "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்
இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.
மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.
பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.
இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.
பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).
இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!
இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.
முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.
முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!
"எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!
திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.
இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.
கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!
பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.
இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!
நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?
நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd July 2014 03:02 PM
# ADS
Circuit advertisement
-
23rd July 2014, 03:06 PM
#472
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
3. "சுந்தரி சௌந்தரி"; படம்:- தூக்குத் தூக்கி (1954); இயக்கம்:- r.m. கிருஷ்ணஸ்வாமி
இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொள்ளும் பாடல்கள் அனைத்தும் - ஒன்று தமிழ் சினிமாவில், முதல் முறையாகக் கையாளப்பட்டவை; இல்லை, மரபை உடைத்தவை. இப்படியும் ஒரு விஷயத்தைக் கையாளலாம்; சொல்லலாம்; அதன் மூலம் சொல்ல வந்த விஷயத்தை, ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்கிற கலை தாகத்தை உள்ளடக்கிய பாடல்கள்.
இந்தப் படத்தின் கதாநாயகன் சுந்தராங்கதன் (நடிகர் திலகம்) , ஒரு நாட்டின் மூன்று இளவரசர்களில் ஒருவன்; ஒரு விசித்திரமான ஆய்வுக்காக நெடிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது சந்தர்ப்ப வசத்தால், மனைவியாலேயே, சிரச்சேத தண்டனையை அடைந்து, தப்பி விடுகிறான். மற்றவர் கண்ணில் இருந்து தப்புவதற்காக, ஒரு விதமான கோமாளி (சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போல) வேடம் தாங்கி, வேறொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டிலுள்ள ஒரு கோவிலில், அந்த நாட்டைச் சேர்ந்த இளவரசி மற்றும் அவரது தோழி (மந்திரி மகள்) (பத்மினி-ராகினி) நுழையும் போது கூடவே நுழைந்து விடுவார்.
இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் முதன்மையானது, நடிகர் திலகத்தின் ஒப்பனை மற்றும் நகைச்சுவை உணர்வு கலந்த நடிப்பு. இதற்கு சற்று முன்னர் தான், நடிகர் திலகம் அந்தக் கோமாளி வேடத்துடன் அறிமுகமாவார். அதுவும், "பெண்களை நம்பாதே" பாடலோடு. ஆக, அப்போது தான் ஒரு பாடல் முடிந்திருக்கும்; பாடல் முடிந்த கையோடு மற்றொரு பாடல். இருப்பினும், நடிகர் திலகத்தின் அற்புதமான, டைமிங் கலந்த நகைச்சுவை நடிப்பினாலும், பத்மினி-ராகினி நடிப்பாலும், பாடலின் இனிமையாலும், சலிப்பே ஏற்படாது. அரங்கமே சிரிப்பலையில் மூழ்கும்.
பாடல் துவங்கிய சில நேரத்தில், காவலாளி (என்னத்தே கன்னையா - வரும் ஆனா வராது என்பவர்) துரத்தத் துரத்த கோவிலினுள் நுழைபவர், "சூலி எனும் உமையே குமரியே" என்று பத்மினியும் ராகினியும் பாடியவுடன், "குமரியே சூலி எனும் உமையே" என்று தொடர்ந்து பாட ஆரம்பிப்பார்.
முதல் சரணத்தில், "அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே" என்று அவர்கள் சொன்னவுடன், தானும் அதையே திரும்பச் சொன்னவுடன், சகோதரிகள் இவரை நீயே பாடு என்று சைகை செய்தவுடன், இவரும் "நீயே பாடு" என்று அதையும் திரும்பச் செய்வார். இந்த இடத்தில், ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்தது இன்னமும் என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. சரணம் முடியும்போது, "மாயே" என்று அவர்கள் நீண்டதொரு ஆலாபனை செய்தவுடன், இவரும் அதை அப்படியே திரும்பச் சொல்லும் விதம் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.
இரண்டாவது சரணத்தில், "தீரமும் வீரமும் சீரும் செல்வமும்" என்று சகோதரிகள் பாடியதும், இவர் தீரமும் வீரமும் என்று சொல்லும்போது ஒவ்வொரு முறையும், வாயைக் கோணிக் கொள்வது மறுபடியும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். பத்மினியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துத் தொடருவார்.
பாடல் அப்படியே தொடர்ந்து முடிந்து, சகோதரிகள் இருவரும் கோவிலை விட்டு வெளியில் சென்றவுடன் தான், நடிகர் திலகம் அதை கவனிப்பார். உடனே, பின்னாலேயே தொடர்வார்.
இந்தப் பாடல் நடிகர் திலகத்தின் அத்தனை சேட்டைகளையும் தாங்கியிருந்தாலும், அந்தப் பாடலில் தொனிக்கும் ஒரு விதமான தெய்வீகத் தன்மை பார்க்கும் போதும், அழியாமல் இருக்கும். அதுதான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு. அதாவது, நடிகர் திலகத்தின் தனித்தன்மையான நடிப்பால் அமைந்த தனிச்சிறப்பு. தன்னுடைய பங்களிப்பு, ஒரு காட்சியையோ, பாடலையோ, படத்தையோ, மேலும் நிமிரச் செய்யுமே தவிர, அதன் தரத்தை எள்ளளவும் குறைக்காது.
இதே படத்தில், மேலும், பல பாடல்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும் - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், அபாய அறிவிப்பு, ஏறாத மலைதனிலே (இது தான் அத்தனை பாடல்களிலும் மிகவும் புகழ் பெற்ற பாடல்). இருப்பினும், இந்தப் பாடலை நான் தேர்ந்தேடுத்ததற்க்குக் காரணம், பாடல் மரபை மீறி எடுக்கப் பட்ட பாடல் - அதாவது நடிப்பின் மூலம் - இருப்பினும், பாடலின் தெய்வீகத் தன்மை குறையாமல் இருந்தது.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd July 2014, 03:07 PM
#473
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
4. பனி படர்ந்த மலையின் மேலே; படம்:- இரத்தத்திலகம் (1963); இயக்கம்:- தாதா மிராசி
மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கப்பட்டு எடுக்கப் பட்ட பாடல்கள். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்றால் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 40 வருடங்கள், தமிழ் சினிமாவின் முக்கிய கதாசிரியர்களும் இயக்குனர்களும், ஏன் தயாரிப்பாளர்களும், நடிகர் திலகத்தின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால், அவற்றை செயலாக்கினார்கள். அவர்கள் நினைத்ததை அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மேல் இவரால் வடிக்க முடிந்தது; அதை வைத்து அவர்களால் காசு பண்ணவும் முடிந்தது.
இரத்தத் திலகத்தில் இடம் பெறும் இந்தப் பாடலின் சூழலே அருமையாகவும், அமைதியாகவும், அலாதியாகவும் இருக்கும். போர்க்களத்தில், ஒரு இரவு நேரத்தில் ஒரு போர்த் தளபதியின் (கேப்டன் - நடிகர் திலகம்) கூடாரத்தின் வெளியே, அவனுடைய குழுவினர் உட்கார்ந்து கொண்டிருக்க, அந்த கூடாரத்தினுள்ளிருந்து வெளியே வரும் அந்த கேப்டன் பாடுவதாய் - அதாவது தன் தாய்த் திருநாட்டையும், பாரதத் தாயையும் நினைத்துப் பாடுவதாய் வரும் பாடல்.
பாடல் துவங்கும் போது, கூடாரத்திலிருந்து பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்தவாறே நடிகர் திலகம் ஸ்டைலாக அதே சமயம் ஒரு வித அமைதியான மன நிலையோடு வெளிப்படும் விதமே, அந்தப் பாடல் எத்தகையது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி விடும். இதை எழுதும்போதே புல்லரிக்கிறதே, பார்த்தால்?
பாடல் நெடுகிலும், அவரது க்ளோசப்பில் அதற்கேற்ற முக பாவங்களுடன் பாடுவதாயும், பின்னணியில் அவர் பாரதத் தாயைப் பார்த்து சொல்வதாயும் வரும்.
இந்தப் பாடல் மிகவும் வித்தியாசமான டியூனில் வரும், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது மகத்தான இசையமைப்பில். கவியரசரின் பாடல் வரிகளில் கல் நெஞ்சையும் கரைத்து விடும். நீண்ட பாடல்.
முதல் சரணம் - "குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்" என்று துவங்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தினின்று வெளிப்படும் கனிவு ... "கண்ணீரின் சின்னம் பார்த்தேன்" என்று முடியும் போது இலேசான சோகத்துடன் முடியும்.
இப்போது முதல் தொகையறா "கலங்கினேன்...துடித்தேன்..." அவரது நாடி நரம்புகள் வெறும் முகத்தால் மட்டுமே துடிக்கும் ... நாமும் தான். சோகம் மேலிட "கானகமும் கலங்குதம்மா" என்று கூறி "காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன்" எனும் போது காட்டும் துடிப்பு; "ஊர்வலமாய் உன்னை உடனழைத்து நான் வருவேன்" எனும் போது காட்டும் உணர்வு... அப்படியே மெல்லக் கனிந்து "சொல்லம்மா சொல் என்றேன் தூய மகள் தலை நிமிர்ந்தாள்" எனும்போது அமைதி கலந்த உற்சாகம்.
இரண்டாவது சரணம் - "அமைதி தேடி உருகி நின்றேன்....... இமயம் முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன்" எனும் போது வெளிப்படுத்தும் நம்பிக்கை... அபாரம்.
இப்போது இரண்டாவது தொகையறா. இதுதான் பாடலின் முக்கிய அம்சம். அப்போது, சீன தேசத்திலிருந்து நட்புறவோடு இந்தியா வந்து, நயவஞ்சகமாக, இந்தியாவுடன் போர் புரிந்த சீனத் தலைவரைப் பற்றிப் பாடுவதாக வரும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உள்ளக் குமுறலையும் சத்தம் போட்டு இயம்பும். "உண்டு பசியாற உலகம் வரட்டும் என்று......" அவரது அகன்ற, பெரிய ஒளி வீசும் கண்களை கவனியுங்கள்..."பசியாற ஓடி வந்த பத்து பேர் மத்தியிலே பகையாற ஒருவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்!" எனும் போது வெளிப்படுத்தும் சோகம் கலந்த குமுறல்! "யாரை அடித்தேன்? யார் குடியை நான் கெடுத்தேன்?" என்று வெடித்து கடைசியில், அமைதியாக, "அன்னை உரைத்த மொழி அத்தனையும் கேட்டிருந்தேன்" என்று நிறுத்தி, "பின்னர் மனதில் பெறும் துணிவு மோதி வர" என்று நிமிர்ந்து எழுந்து "வீரம் உண்டு தோள்கள் உண்டு..." என்று உற்சாகமடைந்து நம்பிக்கையுடன் "தர்மம் மிக்க தலைவன் உண்டு" என்று முடிப்பார்.
இப்பொழுது கடைசி தொகையறா. "அன்பு நிறைந்த மகன் அருள் நிறைந்த கருணை மகன் பண்பு நிறைந்த மகன் பழ நாட்டின் மூத்த மகன்" - என்ன ஒரு கனிவு அந்த முகத்தில் என்ன ஒரு நம்பிக்கை அந்தக் கண்களில் - பண்டித நேருவைக் குறித்து தான் சொல்வார் - "இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைப்பேன்" என்று கூறி "அன்னை சிரித்தாள் அடடா... ஒ! அச்சிரிப்பில் முன்னைத் தமிழ் மணமே முளைத்தெழுந்து நின்றதம்மா" என்று கூறி "என்னை மறைந்தேன் இரவுலகில் சேர்ந்து விட்டேன்" என்று மெதுவாகக் கூறி "கண்ணை மெல்ல மறைத்து ......" என்று ஒருவாறு இனிமையாக டி.எம்.எஸ். இழுத்து அற்புதமாகப் பாடியதர்க்கேற்றாற்போல் இவரும் அற்புதமாக முடித்து மறுபடியும் பல்லவியைப் பாடி முடிக்கும் போது, அவர் மட்டுமல்ல, பார்க்கும் ஒவ்வொரும் தங்களை மறந்து நடிகர் திலகத்துடன் ஒன்றி விடுவார்கள்.
தேசப் பற்று, தேசியம் என்று வரும் போது, நடிகர் திலகம் தொட்ட அளவுக்கு வேறு ஒரு கலைஞரும் இந்த உலகத்தில் அந்த விஸ்தீரணத்தை தொட்டதில்லை. இந்தப் பாடலும் அந்த வகையில் அற்புதமான ஒரு பாடல். அதற்கு உயிர் கொடுத்த அந்த யுகக் கலைஞனை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியுமா?
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd July 2014, 07:13 PM
#474
Senior Member
Diamond Hubber
படிக்கும் போது புல்லரிக்குது
https://www.facebook.com/notes/10150321884983462/
நடிகர் திலகம்
1 அக்டோபர் 2011 இல் 04:00 PM
மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
(அவருடைய அனுபவங்களின் தொகுப்பிலிருந்து)
தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd July 2014, 07:22 PM
#475
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd July 2014, 07:23 PM
#476
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd July 2014, 07:25 PM
#477
Junior Member
Veteran Hubber
-
23rd July 2014, 07:26 PM
#478
Junior Member
Veteran Hubber
-
23rd July 2014, 07:27 PM
#479
Junior Member
Veteran Hubber
-
23rd July 2014, 07:27 PM
#480
Junior Member
Veteran Hubber
Bookmarks