-
3rd November 2014, 02:30 PM
#11
Senior Member
Seasoned Hubber
[not sure if these (the information in this piece) were shared already............this are excerpts from Gangai Amaran's conversation with Thuglaq readers ]
Q1: ஒரு நல்ல இசை எங்களுக்குக் கிடைப்பதற்குக் காரணம் - இசையமைப்பாளரின் திறமையா, அனுபவமா, பயிற்சியா?
கங்கை அமரன் : அந்தந்த நேரத்தில் இசையமைப்பாளரின் மூடுக்கு என்ன வருகிறதோ, அதுதான் இசை. அது ரசிகர்களின் மூடுக்கும் ஒத்துப் போய் விட்டால், அது நல்ல இசையாகி விடுகிறது. ‘நாயகன்’ படத்திற்காக கம்போஸிங்கில் ‘தென்பாண்டி சீமையிலே...’ என்ற சோகப் பாடலுக்குப் பதிலாக ‘நிலா அது வானத்து மேலே...’ என்ற பாடலின் ட்யூன்தான் முதலில் ஸ்லோவாகப் போடப்பட்டது. திடீரென்று இளையராஜா ‘தென்பாண்டிச் சீமையிலே’ ட்யூனை வாசித்துக் காட்டவும், அது எல்லோருக்கும் பிடித்துப் போனது. உடனே ‘நிலா அது வானத்து மேலே’ ட்யூனை ஃபாஸ்ட் பீட்டிற்கு மாற்றி, அதைக் குத்துப் பாட்டாக ஆக்கி விட்டார் ராஜா. இரண்டுமே சூப்பர் ஹிட்! ‘பாடல்கள் ஒரு கோடி.... எதுவும் புதிதில்லை..’
Q2: உங்களது மௌன கீதங்கள், வாழ்வே மாயம் உட்படப் பல படங்களின் பாடல்களைப் பலர் ‘இளையராஜாவின் பாடல்கள்’ என்று கூறும்போதும், ‘இளையராஜா ஹிட்ஸ்’ சி.டி.க்களில் நீங்கள் இசையமைத்த பாடல்களைச் சேர்த்து விடும்போதும் உங்களுக்கு எப்படியிருக்கும்?
கங்கை அமரன் : மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். ஒருமுறை நானும், இளையராஜாவும் கம்போஸிங்கில் இருந்தபோது வெளியேயிருந்து ‘நீதானா நிசந்தானா... நிக்க வச்சு நிக்க வச்சுப் பார்க்கிறே’ என்ற பாடல் ஒலித்தது. உடனே இளையராஜா ‘இந்தப் பாட்டை எந்தப் படத்துக்குடா போட்டேன்?’ என்று கேட்டார். ‘அது நீ போட்ட பாட்டில்லை. நான் போட்ட பாட்டு’ன்னேன். (சிரிப்பு). அவரை மாதிரி நான் இசையமைச்சிடுவேன். ஆனால், ஆர்கஸ்ட்ரேஷன் அவர் மாதிரி என்னால் பண்ண முடியாது. இரண்டு பேரின் இசையமைப்பும் ஒரே மாதிரி தெரிஞ்சாலும், ஆர்கஸ்ட்ரேஷனைக் கவனிச்சால் வித்தியாசம் கண்டுபிடிச்சிடலாம்.
Q3: மற்றவர்கள் இயக்கிய 187 படங்களுக்கு இசையமைத்த நீங்கள், உங்கள் படங்களுக்கு மட்டும் இளையராஜாவை இசையமைப்பாளராக ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டது என்ன நியாயம்?
கங்கை அமரன் மற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இளையராஜாவை அணுகிச் சம்மதிக்க வைப்பது கடினம். ராஜா அப்போது அவ்வளவு பிஸியாக இருந்தார். ஆனால், நான் பக்கத்திலேயே இருக்கிறவன் என்பதால், எனக்கு அது ஈஸி. இளையராஜாவுக்கு அப்போது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ராஜாவின் இசையிருந்தாலே படங்கள் விற்றுப் போகும் என்கிற அளவுக்குச் செல்வாக்கு நிலவியதால், என்னை இயக்குனராகப் போடும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், நான் இளையராஜாவின் இசையைப் பயன்படுத்திக் கொண்டேன். என் இசை எப்போதும் இளையராஜாவுக்குக் கீழேதானே ஸார்? அவர் இசையைப் பெறும் வாய்ப்பு இருக்கும்போது அதை நான் ஏன் விட வேண்டும்...?
Q4: ‘மௌன கீதங்கள்’ படத்தின் டைட்டிலில் ‘இசை - கங்கை அமரன்’ என்று கார்டு போடும்போது, இளையராஜாவின் நோட்ஸ்களை நீங்கள் திருடித் திருடி நோட்ஸ் எழுதுவது போன்ற கார்ட்டூனைப் போட எப்படி ஒத்துக் கொண்டீர்கள்?
கங்கை அமரன் : அது காமெடிக்காக பாக்யராஜ் செய்தது. அந்த நேரம், இளையராஜா ஸ்வரங்கள் எல்லாம் எழுதி வைக்கும் ஒரு நோட்டு, ரிக்கார்டிங் தியேட்டரில் தொலைந்து போனது. அது நாளிதழ்களில் செய்தியாகவும் வெளியாகி விட்டது. அந்த நேரம் மௌன கீதங்கள் படத்திற்கு, காமெடியான கார்ட்டூன் டைட்டில் கார்டுகளை பாக்யராஜ் ரெடி செய்து கொண்டிருந்தார். இந்தச் செய்தியைப் பார்த்ததும், ‘பாட்டெல்லாம் நம்ம படத்தில் நல்லா வந்திருக்குது. அந்த நோட்டு இவர் கிட்டதான் இருக்குமோ?’ என்று காமெடி செய்தபடி, அப்படி ஒரு டைட்டில் கார்டை வைத்தார் பாக்யராஜ். என் ஒப்புதலோடுதான் அந்தக் கார்ட்டூன் போடப்பட்டது. அதுதான் என் முதல் படம் என்றால், கொஞ்சம் யோசித்திருப்பேன். அதற்கு முன்னாடியே 15 படங்களுக்கு இசையமைத்து, என்னை ஓரளவு நிலை நிறுத்திக் கொண்டதால், அந்தக் கார்ட்டூனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல பேர் என்னை இசையமைக்க அழைத்ததன் காரணமே, இவன்கிட்டே இளையராஜாவின் நோட்ஸ் நிறைய இருக்கும் என்ற நம்பிக்கைதான் என்பது எனக்கும் தெரியும்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
3rd November 2014 02:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks