விஜய் டி.வியை ஸ்டார் நிறுவனம் வாங்கிய பிறகு பல புதிய நிகழ்ச்சிகள், குறிப்பாக தொடர்கள், லைவ் ஷோக்கள் மூலம் முதல் இடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. புதிய படங்களை திரையிடுவதிலும் மற்ற சேனல்களை முந்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் டி.வியிலிருந்து, விஜய் பிளஸ் என்ற புதிய சேனல் விரைவில் வர இருக்கிறது.
புதிய சேனலின் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் பிளஸ் ஒளிபரப்பை துவங்குவதாக இருந்தது. ஆனால் புதிய சேனலுக்கு லைசென்ஸ் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் ஒளிபரப்பும் தள்ளிப்போகிறது. வருகிற தீபாவளிக்கு முன்னதாக விஜய் பிளஸ்சை கொண்டு வர நிர்வாகம் பணிகளை முடுக்கி விட்டுள்ளது
"விஜய் பிளஸ் முழுக்க முழுக்க பொழுபோக்கை மையமாக கொண்டிருக்கும், குறிப்பாக இளைஞர்களை கவரும் அம்சங்கள் நிறைய இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் முக்கிய விளையாட்டு போட்டிகள் தமிழ் வர்ணனையுடன் விஜய் பிளஸ்சில் இடம் பெறும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் டி.வி நேரடி ஒளிபரப்பு செய்தபோது அதன் வழக்கமான நிகழ்ச்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. ஸ்டார் பிளஸ் தொடங்கப்பட்டால் இதுபோன்ற நேரடி நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பாகும், அடுத்த ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தையும் ஸ்டார் குரூப் வாங்க இருக்கிறது. அப்போது விஜய் பிளஸ்சில் அது நேரடியாக ஒளிபரப்பும். என்கிறது விஜய் பிளஸ் வட்டாரம்.
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கைராசி குடும்பம் தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். நிறைய நட்சத்திரங்கள் தொடரில் இருந்தாலும் தனது வில்லத்தனமான கேரக்டரில் நடித்து பெயரை தட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவித்யா.
கடைசியாக நடித்த சித்திரம் பேசுதடி சீரியலிலும் வில்லியாகத்தான் நடித்திருந்தார். இதிலும் வில்லி கேரக்டர்தான். தென்றல், பொன்னூஞ்சல் போன்று கைராசி குடும்பமும் ஸ்ரீவித்யாவின் பெயர் சொல்லும் குடும்பமாக இருக்கும் என்று நம்புகிறார்.
"கூட்டுக் குடும்பங்களில் அன்றன்றைய மனநிலையே வில்லத்தனமாக அமையும். அது மாதிரி அடிக்கடி வில்லத்தனம் செய்யும் கேரக்டர் என்னுடையது. எனது பார்வையில் சரி என்று படுகிற விஷயங்கள் மற்றவர்களுக்கு வில்லத்தனமாக தெரியும். ஆடியன்சிடம் திட்டு வாங்கினாலும் அவர்கள் மனதில் பதிவது வில்லி வேடங்கள்தான்" என்கிறார் ஸ்ரீவித்யா.
கேரள தேசத்திலிருந்து தமிழ் சினிமாவின் ஹீரோயினாக வந்தவர் ஸ்ருதிராஜ், ராமகிருஷ்ணா, ஜெர்ரி உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் ஹீரோயினாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. அதனால் கேரளாவுக்கே திரும்பிச் சென்று விடாமல் சின்னத்திரை நடிகையானர். இன்று சின்னத்திரை நடிகைகளில் முதல் 5 இடத்துக்குள் இருக்கிறார் ஸ்ருதி.
தென்றல் சீரியல்தான் ஸ்ருதிக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. 5 ஆண்டுகள் தென்றல் தொடரில் நடித்தார். அது முடிந்ததும் கேரளாவிலேயே செட்டிலாகி மலையாள சீரியல்களில் நடிப்பது என்றுதான் முடிவு செய்திருந்தார். ஆனால் தென்றல் படப்பிடிப்புகள் முடிந்த மறு மாதமே அவருக்கு அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால் தன் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார்.
அன்னக்கொடி தொடரில் ஐந்து பெண்களில் மூத்த பெண் கவுரியாக நடித்து வருகிறார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் உற்சாகமாக நடித்து வருகிறார். "கூட்டுக் குடும்பத்தின் கதை. படப்பிடிப்பு தளமும் கூட்டுக் குடும்ப கலகலப்புடன் இருக்கிறது. தென்றல் தொடருக்கு பிறகு சொந்தங்கள் விட்டுபோனமாதிரி கவலையில் இருந்தேன். ஆனால் அன்னக்கொடி என் கவலையை போக்கி விட்டாள்" என்கிறார் ஸ்ருதி.
திருமுருகன் தற்போது குலதெய்வம் என்ற தொடரை இயக்கி வருகிறார். இதில் திருமுருகன் இதற்கு முன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் நடித்த பலர் நடிக்கிறார்கள். சில புதுமுகங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஐஸ்வர்யா. இவர் நாதஸ்வரம் ஷூட்டிங் பார்க்க வந்து அதன் மூலம் நடிகையானவர்.
நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த கீதாஞ்சலி ஐஸ்வர்யாவின் அக்கா. அவர் நடிப்பதை சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையில் பார்க்க வந்துவிடுவார் ஐஸ்வர்யா. அப்போது யூனிட்டில் உள்ள எல்லோருக்குமே அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் சுறுசுறுப்பும், அழகும் பிடித்துப்போன இயக்குனர் திருமுருகன் அடுத்த தொடரில் உன்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன்படி குலதெய்வம் தொடரில் மவுலியின் பேத்தியாக நடிக்கிறார். கதையில் 8ம் வகுப்பு மாணவியாக நடிக்கும் ஐஸ்வர்யா நிஜத்தில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். படித்துக் கொண்டே தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்
புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் வந்திதா மோகன். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ள வந்திதா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அடிப்படையில் ஒரு பல் மருத்துவர் என்பதால் அந்த பணியையும் தனியாக செய்து வருகிறார்
ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது அனைவருமே "நீங்க அழகா இருக்கீங்க நடிக்கலாமே" என்று சொல்ல ஆரம்பித்தனர். கவுதமி இவரது நிகழ்ச்சியை பார்த்து விட்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடிக்க அழைத்தபோது அன்பாக மறுத்துவிட்டார். ஈராஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாடகத்தை தயாரித்து அதனை யூ டியூப்பில் வெளியிடும் புராஜக்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வந்திதாவுக்கு அழைப்பு விடுத்தது அதையும் தவிர்த்து விட்டார்
வந்திதாவின் ஆசையெல்லாம் நடனத்திலும், மருத்துவத்திலும் சாதிக்க வேண்டும் என்பதுதான். அடுத்ததாக டூரிஸம் பெஸ்டிவெல் நிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுக்க நடைபெற இருக்கும் டான்ஸ் பெஸ்டிவெல் இது. ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை முதலில் நடத்திய அபிராமி சினிமாவில் நடிப்பதற்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வந்திதா சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக டாடி எனக்கு ஒரு டவுட்டு என்ற நிகழ்ச்சியில் டாடியாக திண்டுக்கல் சரவணனும், மகனாக செந்திலும் நடித்து வருகின்றனர். டாடி பழமொழி அல்லது தத்துவம் சொல்வது. அதைக்கேட்கும் மகன், அதை கலாய்ப்பதோடு, சந்தேகம் கேட்பது போன்ற இந்நிகழ்ச்சி டிவி நேயர்களிடையே பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி இந்த மாதத்தோடு நிறைவு பெறுகிறதாம்.
அதனால் ஜூலை மாதத்தில் இருந்து, பழைய சோறு Vs பர்ஹர் என்றொரு புதிய நிகழ்ச்சியை வழங்குகிறார் திண்டுக்கல் சரவணன். இந்த நிகழ்ச்சியில் டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து நடித்த செந்திலுக்கு பதிலாக வினோத்பாபு என்றொரு டான்சர் இணைந்து கலக்கப்போகிறாராம்.
இந்த புதிய நிகழ்ச்சியைப்பற்றி திண்டுக்கல் சரவணன் கூறும்போது, இதில் கிராமம்-நகரத்து பழக்க வழக்கங்களை ஒப்பிடுவது. என்னதான் நாகரீகம் மாறிவிட்டபோதிலும் இப்போது நமது பழைய வாழ்க்கைமுறைகளை நவீன காலத்து மக்கள் எப்படி பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லப்போகிறேன்.
மேலும், டாடி எனக்கு ஒரு டவுட்டு நிகழ்ச்சியில் டயலாக்காக விசயங்களை கூறினேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு விசயத்தையும் விசுவலாகவே நடித்துக் காட்டப்போகிறேன். அதனால் இது இன்னும் புதுமையாக இருக்கும். அதோடு, இன்றைக்கு கிராமத்தில் உள்ள ஒருவர் சைக்கிளில் அலுவலகம் சென்று வருகிறேன் என்று சொன்னால், சைக்கிளில்தான் போய் வருகிறீர்களா? என்று கேட்பார்கள்.
ஆனால் இன்றைக்கு நகரத்தில் வாழ்பவர்கள், வீட்டில் இருந்து காரில் போய் பீச்சில் இறங்கி அங்கே ஒரு சைக்கிளை எடுத்து ஓட்டுகிறார்கள். அந்த சைக்கிள் விலையே 5 ஆயிரம்தான். ஆனால் இங்கே மாத சைக்கிள் வாடகை 12 ஆயிரம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற இன்றைய வாழ்க்கை முறைகளை காமெடியாக சொல்லப்போகிறேன். அதேசமயம் இவை சிந்திக்கும்படியாகவும் இருக்கும் என்கிறார் திண்டுக்கல் சரவணன்.
சரவணன் மீனாட்சி தொடரின் முதல் பகுதி, காஞ்சனா, காத்து கருப்பு தொடர்களை இயக்கிய அழகர் தற்போது ஏழாம் உயிர் என்ற தொடரை இயக்கி வருகிறார். இது வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திரைப்படங்களில் வரும் பேய், திகில் படம் மாதிரி இதுவும் மர்மம் கலந்த ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
பாசமலர் ஹீரோயின் லட்சுமி, வில்லி நடிகை சூசன், ரவி, ஸ்டாலின் உள்பட பலர் நடிக்கிறார்கள். 7 ஊர்களில் வாழும் 7 பெண்களுக்கு ஒரு தீய சக்தியால் ஆபத்து வருகிறது. அந்த தீய சக்தியை அழித்து நல்ல சக்தி அவர்களை எப்படி காப்பாற்றுகிறது என்பதுதான் கதை. தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரி, காசி உள்ளிட்ட 7 ஊர்களில் 7 பெண்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மாவட்ட ஊர்களில் குறிப்பாக குற்றாலத்தைச் சுற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட 7 ஊர்களும் கதையில் ஒரு கேரக்டராக வருவதால் அந்த ஊரைப் பற்றிய பல சிறப்பு தகவல்களும் காட்சி வழியாக வெளிப்படுத்தப்படுவது இதன் சிறப்பு அம்சமாகும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமையை பரப்பும் முயற்சியில் இருக்கிறார். அதையொட்டி வெளிநாட்டு சேனலான டிஷ்கவரி சேனல், ";ஸ்டோரி ஆஃப் யோகா" என்ற நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்புகிறது. இமயமலையில் தொடங்கி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் முடிகிறது இந்த தொடர். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், ஆசிரமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல யோக முனிவர்களின் வாழ்க்கை வரலாறும், யோகா மூலம் அவர்கள் இறைவனை தரிசித்த கதையையும் காட்டுகிறார்கள்.
யோகாகுரு ராம்தேவ், ஆர்ட் ஆப் லிவ்விங் ரவிஷங்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் யோகா பற்றி பேசுவதோடு செயல் விளக்கமும் அளிக்கிறார்கள். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் யோகா மரபுகள் காட்டப்படுகிறது. இந்தியாவில் யோகா உருவான விதம், வளர்ந்த விதம் தற்போதுள்ள நிலவரம் போன்றவவை நிகழ்ச்சியில் முக்கியத்துவம் பெறுகிறது. யோகாவின் மிக நுணுக்கமான விஷயங்கள் கற்றுத் தரப்படுகிறது.
யோகாவை கடைபிடிக்கும் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் யோகா பற்றி பேசுவதோடு செய்தும் காட்டுகிறார்கள். தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. டிஷ்கவரி தமிழில் வருகிற 21ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இராமானுஜர் சீரியல் யூனிட்டை ஆச்சர்யப்பட வைக்கும் கருணாநிதி!"
1947ல் ராஜகுமாரி என்ற படத்திற்கு வசனம் எழுதத் தொடங்கியவர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா, பாசப்பறவைகள், மண்ணின் மைந்தன், நியாய தராசு, பெண் சிங்கம், பொன்னர் சங்கர் உள்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
அப்படி அவர் எழுதிய வசனங்கள் காலத்தால் அழியாமல் இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதோடு பல படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார் கருணாநிதி. இந்த நிலையில், சமீபகாலமாக சின்னத்திரையிலும் அவரது பேனா இடம் பெற்று வருகிறது. அந்த வகையில், தென்பாண்டி சிங்கம் உள்பட பல சீரியல்களுக்கு ஏற்கனவே கதை வசனம் எழுதியுள்ள கருணாநிதி, தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இராமானுஜர், ரோமாபுரி பாண்டியன் ஆகிய தொடர்களுக்கும் கதை வசனம் எழுதி வருகிறார்.
இதில் இராமானுஜர் என்ற இந்து மார்க்கத்தின் தொடருக்கு முதன்முதலாக தனது பேனாவை பயன்படுத்தி வருகிறார் கருணாநிதி. குறிப்பாக இந்த சீரியலின் கதை வசனங்கள் அவரது ஆலோசனையின் பேரில்தான் எழுதப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்த பிறகும், கடைசியில் மொத்த ஸ்கிரிப்டையும் படிக்கும் கருணாநிதி, ராமானுஜர் பற்றிய தான் அறிந்த பல விசயங்களையும் இணைத்து அனுப்புகிறாராம்.
92 வயதிலும் கருணாநிதிக்கு இருக்கிற ஞாபகசக்தி மற்றும் எழுத்து மீது கொண்ட ஆர்வத்தினை இராமானுஜர் சீரியல் யூனிட்டில் உள்ளவர்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்கிறார்கள்.
Bookmarks