-
15th September 2015, 12:44 PM
#1
Junior Member
Veteran Hubber
ஜெமினி கணேசனுக்கான எனது மலரும் நினைவலைகள் !
ஒரு சிவாஜி ரசிகன் ஜெமினிக்காக தனி ஒருவன் ஆன கதை !
Part 5
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் BSc வேளாண்மை/தோட்டக்கலை BE வேளாண்மைப் பொறியியல்...என்று
பல்வேறு பிரிவுகளில் நாங்கள் சேர்ந்திருந்தாலும் ஹாஸ்டலில் அறைகளில் கலந்தே இடம் போடுவார்கள் ... மாணவர்கள் ஒற்றுமை வேண்டி!
பிராக்டிகல் வகுப்புக்கள் காலை 7 மணிக்கே ஆரம்பித்துவிடும்! எல்லாப் பிரிவினருக்கும் முதலாண்டு பாடப்பிரிவுகள் பொதுவானவையே! நாங்களும் பாடனி ஜுவாலஜி எல்லாம் படிக்க வேண்டியிருந்தது எங்களுக்கும் 5 சென்ட் நிலத்தில் பல்வேறு பயிர்களை வளர்த்துக்காட்டும் பயிற்ச்சிகளும் பூச்சி பிடித்தலும் உண்டு முதலாமாண்டில் நாங்கள் அனைவருமே சீனியர்களின் நிலங்களில் பாடுபட்டு உழைத்து அவர்களுக்கு உதவுவோம் யாரால் நாங்கள் அவதிக்குள்ளானோமோ அதே சீனியர்கள்தான் அடுத்த நான்கு வருடங்களுக்கும் நல்ல வழிகாட்டிகளாக இருந்து புரபெஷனல் மேன்னர்ஸ் எல்லாம் கற்றுக்கொடுத்தனர்! இன்றுவரை அந்த நல்லுறவு தொடரவே செய்கிறது !! இந்தவிதமாக கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்க்கைசக்கரம் ஓடிக்கொண்டிருந்தது!
ஒவ்வொரு வருடமும் நாடகமன்றத்தின் சார்பாக மூன்று நாட்கள் இயல் இசை நாடக முத்தமிழ் விழா நடத்தப் படும். 1977ல் இறுதியாண்டு பயில்கையில் நானும் மாணவர் மன்ற இணை செயலராக இஞ்சினியரிங் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டேன், நாடகவிழாவுக்கு பெரும்பாலும் புகழ் பெற்ற திரைநட்சத்திரங்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டு அவர்களது கலையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள் அந்த வகையில் எனது சிறுமுயற்சியால் அந்தமுறை காதல்மன்னரையும் சாவித்திரியம்மாவையும் அழைக்க முடிவுசெய்யப்பட்டது ! சென்னையில் சென்று சந்தித்தபோது மிகமிக மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார் ஜெமினி!! சாவித்திரியால் வர இயலவில்லை!!
ஏர்போர்ட்டிலிருந்து எங்கள் பல்கலைக்கழகக் காரில் ஜம்மென்று கோட்சூட்டில் நிஜ ஹீரோவாக பளீரென்ற புன்னகையுடன் வந்திறங்கியவரை வளாக விருந்தினரில்லத்துக்கு அழைத்துச் சென்றோம் ! எப்பேர்ப்பட்ட கனவானுடன் உரையாடுகிறோம் என்பதை அறிவுபூர்வமாக அவர் அளவளாவியதிலிருந்து உணர்ந்து கொண்டோம்!!
கொஞ்சநேர இடைவெளியில் அவரது ரசிகன் என்ற முறையில் அவரது நடிப்பு பாடல்கள் பற்றி உரையாடினோம் ! அவரது பாட்டுப்பாடவா நான் இரண்டு ஸ்டான்சா பாடியதும் அவரும் மகிழ்வுடன் கலந்துகொண்டார் !! வந்த இடத்தில் அவரது திரைக் குரலில் ஒருவர் பாடியதைக் கேட்ட மகிழ்வை அவரால் மறைக்க இயலவில்லை.... மலரும் நினைவுகளில் கொஞ்சம் மூழ்கினார் !! ஜென்டில்மேன் ஜெமினி....என்னவொரு பொருத்தமான அடைமொழி!!
நிகழ்ச்சி ஆரம்பித்தது ....அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதும்போல சில அவலக்கூப்பாடுகள் அவரை சாம்பார் என்று விளித்தன! மனமுதிர்ச்சியும் கல்விப் பண்பும் கொண்ட ஜெமினி புன்னகையுடன் கேட்டுக் கொண்டார் ..பிறகு நடந்தது ....மாயாஜாலம்!! அவர் எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி என்பதை ஆணியடித்தாற்போல ஒரு லெக்சர் அதிரடியாகப் போட்டுத்தாக்கினார்!! கூக்குரல்கள் வலுவிழந்து அவர் பேச்சுக்கு அடிமையாகி கூட்டமே மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அதிர்ச்சியில் உறைந்து அவர் பேச்சை ஆரவாரத்துடன் ரசிக்க ஆரம்பித்த விந்தை !! எந்தவிதமான குறிப்புக்களுமின்றி ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் நுட்பங்களைக் கோடிட்டு அவர் ஆற்றிய உரை அவர் ஒரு தேர்ந்த விரிவுரையாளர் என்பதை அறுதி செய்தது !
இடையிடையே அவரது படங்களிலிருந்து மோனோ ஆக்டிங்கில் கலக்கினார் ! ஆங்கிலத்திலும் தமிழிலும் தங்குதடையற அவர் ஆற்றிய சிறப்புரை பல்கலைக் கழக மனமகிழ் மன்ற வரலாற்றிலேயே வேறு எந்த ஒரு திரைக்கலைஞரும் நெருங்கமுடியாவண்ணம் அவ்வளவு வரவேற்பைப் பெற்றதாகும்! எம்ஜியார் சிவாஜியை மட்டுமே முன்னிறுத்தி வந்த எங்கள் வளாகத்தில் அனைத்துத் தரப்பினரையும் இந்த நிகழ்ச்சி மூலம் மனம் கவர்ந்து இதயங்களில் நிறைந்தார் காதல் மன்னர் ! அடுத்த நாள் ஆசிரியர் மாணவர் பணியாளர் அனைத்துத் தரப்பிலிருந்தும் எனக்கு நன்றிகலந்த வாழ்த்துகள் வந்தன !
ஒரு நல்ல திரைக்கலைஞருக்கு என்னால் முடிந்த மரியாதையை செலுத்தும் பேறு பெற்றமைக்காக மகிழ்ந்தேன் !!
தொடர் நிறைவு பெற்றது
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
sss thanked for this post
-
15th September 2015 12:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks