-
17th January 2016, 05:53 PM
#11
Junior Member
Platinum Hubber
வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும் நாட் அவுட்!
மக்கள் திலகத்தின் புகழ் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைவர் நினைவு நாளில் லட்சக்கணக்கானோர் அந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதும், பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்வதும் அதிகரித்து வருவதே உதாரணம்.
சென்ற டிசம்பர் 24-ம் தேதி மறைந்தும் மறையாத பொன்மனச் செம்மலின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். வெளியூர்களில் இருந்தெல்லாம் சென்னைக்கு வந்துள்ளனர். நமது தொண்டர்களின் அணிவகுப்பால் சென்னையே திக்குமுக்காடியிருக்கிறது. அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் கூட என்னிடம் தெரிவித்தார். காலை 11 மணிக்கு நினைவிடத்தின் வாயிலில் சென்ற அவரது குழுவினர் உள்ளே செல்வதற்கே பிற்பகல் 2 மணி ஆனதாம். ஏற்கனவே உள்ளே இருந்தவர்கள் மற்றும் செல்வகுமார் குழுவினருக்கு முன்பே வந்து காத்திருந்த தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகே இவர்கள் செல்ல வேண்டியிருந்ததால் அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வந்து சென்ற பிறகும் கூட்டம் அப்படியே இருந்திருக்கிறது. கட்சிக்காரர்கள், ஆதாயம் கருதி வருபவர்கள் என்றால் முதல்வர் சென்ற பிறகு அந்த கூட்டம் கலைந்திருக்க வேண்டும். மாலை வரை சாரி சாரியாக மக்கள் நம் புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மக்கள் நினைவு நாளை அனுசரித்தனர்.
அந்த நிகழ்ச்சிகளை சுற்றி அலைந்து படம் பிடித்து நமது திரியில் பதிவிட்ட நண்பர்கள் லோகநாதன். வேலூர் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், மதுரை படங்களை அனுப்பிய எஸ்.குமார், புதுவையில் அஞ்சலி படங்களை பதிவிட்ட கலியபெருமாள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.
அதே நிலைமைதான் நேற்றும். மக்கள் திலகத்தின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் தலைவரின் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்கள் திலகத்தின் சிலைகளுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்தும், சாலைகளில் ஆங்காங்கே அவரது திரு உருவ படங்களுக்கு மாலை சூட்டியும் தேங்காய், பழம் உடைத்து வைத்து தங்கள் அன்பையும் பக்தியையும் காட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் அடித்தும் ஒட்டியுள்ளனர்.
அதுபற்றிய படங்களை நண்பர்கள் பதிவிடுவார்கள். அதற்காக அவர்களுக்கு முன்னதாகவே என் நன்றியை தெரிவிக்கின்றேன்.
தமிழகத்தில் மட்டுமில்லாமல், பெங்களூரிலும் பல இடங்களில் பொன்மனச் செம்மலின் திருஉருவ படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். மக்கள் திலகத்தின் பெயரில் ஃபுட்பால் கிளப் ஒன்று உள்ளது. அவர்களது லோகோ (logo)வே பணம் படைத்தவன் படத்தில் மக்கள் திலகம் ஃபுட்பால் வீரராக தோன்றும் புகைப்படம்தான் வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள புரட்சித் தலைவரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பெங்களூரில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர்கள் உட்பட 200 பேர் டெல்லி புறப்பட்டு சென்று, முறையான அனுமதி பெற்று புரட்சித் தலைவர் சிலைக்கு மாலையும் அணிவித்தனர்.
கட்சியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றால் இப்போது இருக்கும் தலைமையை திருப்திப்படுத்தினால் மட்டும் போதும். ஆனால், உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனபோதும் புரட்சித் தலைவரை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் எந்த பிரதிபலனும் அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரை தெய்வமாக கும்பிடும் கோடிக்கணக்கான மக்களின் அன்புக் கடல்தான் இந்தக் கூட்டம். இந்த கடலின் அலை என்றும் ஓயாது.
வாழும் போது சிலர் கொண்டாடப்படுவார்கள். அவர்கள் மறைந்த பிறகு காலப் போக்கில் மக்கள் அவர்களை மறந்து விடுவார்கள். வாழும் போது சிலரை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், மறைந்த பிறகு அவருக்கு புகழ் பெருகும். எடுத்துக்காட்டாக மகாகவி என்று பாரதியார் இப்போது எல்லாராலும் கொண்டாடப்படுகிறார். ஆனால், வாழும் காலத்தில் அவரை பெரிய அளவில் கொண்டாடவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 11 பேர்.
ஆனால், வாழும் போதும் மக்களால் கொண்டாடப்பட்டு, வரலாறாக வாழ்ந்து, உடலால் மறைந்த பிறகும் இன்றும் மக்களால் நேசிக்கப்படும் பெருமை புரட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டு.
பெங்களூரில் மக்கள் திலகத்தின் பெயரில் ஒரு கிரிக்கெட் சங்கமும் உள்ளது. 99 வது பிறந்த நாளை ஒட்டி அவர்கள் அடித்திருந்த போஸ்டர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அதில் வாசகம் ‘தலைவா! இன்னும் 1 ரன்தான் செஞ்சுரிக்கு, நாட் அவுட்’ என்று இருந்தது. பொதுமக்கள் ரசித்து பாராட்டினர்.
வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும் சகாப்தமாக திகழும் புரட்சித் தலைவர், அவரது படத்தின் பெயரால் சொன்னால் ‘நேற்று இன்று நாளை’ என்றுமே பொன்மனச் செம்மல் ‘ நாட் அவுட்’.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th January 2016 05:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks